எரிதெறக் கருகிய பொடி பொறுத்து இயங்கினை முகில்தலை சுமந்து ஞிமிறெழுந்து இசைக்கும் பொங்கருள் படுத்த மலர்கால் பொருந்துக! கடுங்கடத்து எறிந்த கொடும்புலிக்கு ஒடுங்கினை வரிஉடற் செங்கண் வராலினம் எதிர்ப்ப (5)
உழவக் கணத்தர் உடைவது நோக்குக கொலைஞர் பொலிந்த கொடித்தேர்க்கு அணங்கினை வேதியர் நிதிமிக விதிமகம் முற்றி அவபிர தத்துறை ஆடுதல் கெழுமி பொன்னுருள் வையம் போவது காண்க (10)
ஆறலை எயினர் அமர்க்கலிக்கு அழுங்கினை பணைத்தெழு சாலி நெருக்குபு புகுந்து கழுநீர் களைநர் தம் கம்பலை காண்க தழல்தலைப் படுத்த பரல்முரம்பு அடுத்தனை சுரிமுகக் குழுவளை நிலவெழச் சொரிந்த (15)
குளிர்வெண் தரளக் குவால்இவை காண்க அலகைநெட் டிரதம் புனல்எனக் காட்டினை வன்மீன் நெடுங்கயல் பொதிவினை யகத்துக் கிடங்கெனப் பெயரிய கருங்கடல் காண்க முனகர்கள் பூசல் துடிஒலி ஏற்றனை (20)
குடுமிஅம் சென்னியர் கருமுகில் விளர்ப்பக் கிடைமுறை எடுக்கும் மறைஒலி சேண்மதி அமரர்கள் முனிக்கணத் தவர்முன் தவறு புரிந்துடன் உமைகண் புதைப்ப மற்றுமையும் ஆடகச் சயிலச் சேகரம் தொடர்ந்த (25)
ஒற்றையம் பசுங்கழை ஒல்கிய போல உலகுயிர்க் குயிரெனும் திருவுரு அணைந்து வளைக்கரம் கொடுகண் புதைப்ப அவ்வுழியே உலகிருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர் பிரமன் உட்பட்ட நிலவுயிர் அனைத்தும் (30)
தமக்கெனக் காட்டும் ஒளிக்கண் கெடலும் மற்றவர் மயக்கம் கண்டவர் கண்பெறத் திருநுதல் கிழித்த தனிவிழி நாயகன் தாங்கிய கூடல் பெருநகர் ஈங்கிது காண்க முத்தெழில் நகைக்கொடியே! (35)
|