LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )-பொய்மான் கரடு

பதினாறாவது அத்தியாயம்

 

போலீஸ்காரர் அங்கே அந்தச் சமயத்தில் எப்படி வந்தார் என்று சொல்வதற்குக் கொஞ்சம் கதையை பின்னால் கொண்டுபோக வேண்டும். கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டர் முன்னம் சேலத்தில் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி அவர் 'கை காட்டி மரவேலை செய்ய வேண்டியதாயிருக்கும். அதாவது வீதி முனையில் நாற்சந்தியின் நடுவில் நின்று வண்டிகள் போகவும் நிற்கவும் கைகாட்ட வேண்டி வரும். அப்படி நின்றிருந்த நாட்களில் ஒருநாள், நடுப்பகலில் ஓர் இளம்பெண் அவரிடம் வந்து, "போலீஸ்கார ஐயா! நேற்று முதல் சாப்பிடவில்லை! பசியினால் பிராணன் போய்விடும்போல் இருக்கிறது. ஒரு நாலு அணாக் கொடுத்தால் ஓர் அநாதைப் பெண்ணைக் காப்பாற்றிய புண்ணியம் கிடைக்கும்" என்றாள். போலீஸ்காரருக்குப் பாவ புண்ணியத்தில் அவ்வளவு நம்பிக்கையில்லை. ஆயினும் அந்தப் பெண்ணின் அநாதைத் தோற்றத்தைப் பார்த்துப் பரிதாபங் கொண்டார். "நீ யார், அம்மா! ஏன் உன்னை அநாதை என்று சொல்லிக்கொள்கிறாய்" என்றார். "ஆம் ஐயா! நான் அநாதைதான். நாங்கள் மலாய் நாட்டில் கிள்ளானில் இருந்தோம். அப்பா பெரிய வியாபாரி. யுத்தம் ஆரம்பித்த சில நாளைக்கெல்லம் புறப்பட்டு ஓடி வந்து விட்டோ ம். வழியிலே கப்பலிலேயே அப்பா செத்துப்போய் விட்டார். நானும் என் தம்பியும் அம்மாவும் மட்டும் இங்கே வந்து சேர்ந்தோம். இங்கே நாங்கள் எதிர்பார்த்து வந்த பந்துக்கள் யாரும் இல்லை. மலாய் நாட்டிலிருந்து சொத்து வருவதற்கும் வழியில்லை. ஜப்பான்காரன் பறிமுதல் செய்து விட்டான். நாங்கள் கையோடு கொண்டு வந்த நகை நட்டுக்களை விற்று இத்தனை நாள் காலட்சேபம் செய்தோம். எல்லாம் தீர்ந்துவிட்டது! இப்போது பிச்சை வாங்கிப் பிழைக்க வேண்டியதாயிருக்கிறது!" என்று சொன்னாள்.
     "ஐயோ! பாவம்! நீ படித்த பெண் மாதிரி தோன்றுகிறதே! ஏதாவது வேலை பார்த்துக்கொள்வதுதானே?" என்றார் போலீஸ் கான்ஸ்டேபிள்.
     "வேலைக்கு நான் எவ்வளவோ பிரயத்தனம் செய்தேன்; கிடைக்கவில்லை. வேலை கேட்கப் போன இடத்தில் ஆண் பிள்ளைகளாயிருந்தால் கண்ணை அடித்து துன்மார்க்கத்துக்குக் கூப்பிடுகிறார்கள். பெண்களாயிருந்தால் நன்றாகத் திட்டி அனுப்புகிறார்கள். நான் என்ன செய்யட்டும்!" என்றாள் அந்தப் பெண்.
     "வாஸ்தவந்தான்; உலகம் அப்படிக் கெட்டுப் போய்க் கிடக்கிறது. மனிதர்களுடைய நெஞ்சில் இரக்கம் என்பதே இல்லை!" என்றார் போலீஸ்காரர். இப்படிச் சொல்லி விட்டு நாலு அணாவுக்கு எட்டு அணாவாகக் கொடுத்து அனுப்பினார்.
     அந்தப் பெண் போய் விட்டாள். ஆனால் போலீஸ்காரருடைய மனத்திலிருந்து அவள் போகவில்லை. சில நாளைக்கெல்லாம் மறுபடியும் அந்தப் பெண், போலீஸ்காரரை சந்தித்தாள். சாப்பாட்டுக்கு நாலு அணாக் கொடுக்கும்படி கேட்டாள். போலீஸ்காரர் ஒரு ரூபாய் கொடுத்தார். அவர்களுக்குள் மேலும் கொஞ்சம் பழக்கமும் சிநேகமும் ஏற்பட்டன. பெண்ணின் பெயர் பங்கஜம் என்று தெரிந்து கொண்டார். ஒழிந்த நேரங்களில் அந்தப் பெண்ணின் வீட்டுக்குப்போய் அவளுடனும் அவள் அம்மாவுடனும் பேசிக் கொண்டிருப்பதில் அவர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.
     போலீஸ்காரருடைய முதல் மனைவி காலமாகி விட்டாள். இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணமே அவருக்கு இருக்கவில்லை. ஆனால் குமாரி பங்கஜாவைப் பார்த்த பிறகு அவருடைய மனம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டு வந்தது.
     இன்னொரு நாள் வழக்கம்போல் போலீஸ்காரர் கைகாட்டி உத்தியோகம் செய்த இடத்துக்குக் குமாரி பங்கஜா வந்து "வீட்டில் அரிசி ஆகிவிடது. ஒரு ரூபாய் தர முடியுமா? உங்களை அடிக்கடி கேட்க வெட்கமாயிருக்கிறது" என்றாள். போலீஸ்காரர், "ஏன் வெட்கப்படவேண்டும்? கூடிய சீக்கிரத்தில் நான் மாதா மாதம் வாங்கும் சம்பளத்தை அப்படியே உன்னிடம் கொண்டு வந்து மொத்தமாகக் கொடுக்கும் காலம் வரலாம், இல்லையா? உன் தாயாரைக் கூடக் கேட்டாகிவிட்டது. உனக்குச் சம்மதம் என்றால் உடனே கலியாணந்தான்!" என்றார்.
     "சீ! நீங்களும் மற்றவர்களைப் போலத்தானா?" என்றாள் பங்கஜா.
     "மற்றவர்களையும் என்னையும் ஒப்பிட்டுப் பேசுகிறாயே! மற்றவர்கள் உன்னைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னார்களா?" என்று கேட்டார்.
     "ஆமாம், பின்னே என்ன? எல்லோரும் என்னைக் கந்தர்வமணம் செய்துகொள்வதாகத்தான் சொன்னார்கள். ஓர் அநாதைப் பெண் அகப்பட்டால் நீங்கள் ஆண்பிள்ளைகள் என்ன வேணுமானாலும் செய்வீர்கள்! சீ சீ! உன்னுடைய பணம் எனக்கு வேண்டாம்!" என்று ரூபாயை விட்டெறிந்துவிட்டுக் குமாரி பங்கஜா நடையைக் கட்டினாள்.
     போலீஸ்காரர் மிக்க ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும் அவள் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவள் பத்து அடி தூரம் போனதும் ஒரு விசித்திரமான சம்பவம் ஏற்பட்டது. அந்த வழியே வந்த சைக்கிள்காரன் ஒருவன் குமாரி பங்கஜாவின் மீது தன் வண்டியை மோதினான். அந்த வேகத்தில் அவள் கையில் இருந்த சிறிய பெட்டி தவறிக் கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அதன் கதவு திறந்தது. திறந்த பெட்டிக்குள் கான்ஸ்டேபிள் பார்த்தார். ரூபாய் நோட்டுக் கத்தைகளாகக் குவித்து வைத்திருந்தது. சில நோட்டுகள் வெளியிலும் சிதறி விழுந்தன. குமாரி பங்கஜா அவசர அவசரமாக அந்த நோட்டுகளைப் பொறுக்கி எடுத்துப் பெட்டியில் வைத்து மூடிப் பூட்டினாள். அதே சமயத்தில் கடைக் கண்ணால் போலீஸ்காரர் தன்னைக் கவனிக்கிறாரா என்று பார்த்துக் கொண்டாள். இப்படிப் பூட்டியதும் அவசரமாக நடையைக் கட்டினாள்.
     போலீஸ்காரர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். பெட்டி நிறைய ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு தன்னிடம் அரிசி வாங்கப் பணம் இல்லை என்றாளே? இது என்ன விந்தை? ஆரம்பத்திலிருந்தே என்னை ஏமாற்றிக்கொண்டு வருகிறாளா? அல்லது இன்றைக்குத்தானா? திடீரென்று இவ்வளவு பணம் இவளுக்கு எப்படிக் கிடைத்தது?
     மறுநாள் குமாரி பங்கஜா அவரைத் தேடிக்கொண்டு வந்தாள். "நேற்றே ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். ஆனாலும் உங்கள் மனத்தைச் சோதிக்க விரும்பியதால் சொல்லவில்லை. மலாய் நாட்டில் எங்கள் வீட்டையும் தோட்டங்களையும் விற்றுப் பணம் அனுப்பியிருக்கிறார்கள். நேற்றுத்தான் வந்தது. ஒரு சினேகிதர் வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்தேன்!" என்றாள்.
     அவ்வளவு பணத்தை நம்பிக் கொடுக்கும்படி அப்படிப்பட்ட சிநேகிதர் உனக்கு இருக்கிறாரா? அதைவிட பாங்கியில் போட்டு வைப்பதுதானே?" என்றார் போலீஸ்காரர்.
     "பாங்கியிலே போட்டால் வட்டி எங்கே கொடுக்கிறார்கள்? நான் கொடுத்தது பங்காருசாமி என்பவரிடம். நல்ல இடத்தில் கடன் கொடுத்து நிறைய வட்டி சம்பாதித்துக் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்."
     பங்காருசாமி என்பவன் 'கே. டி.' ஜாபிதாவில் இல்லையே தவிர, மற்றபடி அவன் பேரில் போலீஸ் இலாக்காவுக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. அப்படிப் பட்டவனிடமா இவள் பணத்தை நம்பிக் கொடுத்திருக்கிறாள்? ஐயோ! விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவானே? இன்னொரு சந்தேகமும் போலீஸ்காரரின் மனத்தில் தோன்றியது. அதைக் கேட்டுவிட்டார்:
     "நேற்று எதற்காக என்னிடம் பணம் கேட்க வந்தாய்?" என்றார்.
     "அதுவா? உங்களிடம் ஏதாவது ஒரு வியாஜத்தை வைத்துக்கொண்டு பேச வேண்டும் என்று இருந்தது. அதனாலே தான் வந்தேன். மன்னித்துக் கொள்ளுங்கள். நான் கஷ்ட தசையில் இருந்தபோது நீங்கள் செய்த உதவிகளுக்காக மிக்க வந்தனம். ஒரு நாள் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்துக் கொடுத்துவிடுகிறேன்!" என்று சொல்லிவிட்டு, விடு விடு என்று போய்விட்டள்.
     போலீஸ்காரருக்கு அவள் சொன்ன சமாதானத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை. இந்தப் பேதைப் பெண்ணை அந்தப் பங்காருசாமி ஏதோ குழியில் கவிழ்க்கப் பார்க்கிறான் என்று சந்தேகித்தார். ஆகையால் குமாரி பங்கஜாவையும் பங்காருசாமியையும் கவனிக்கத் தொடங்கினார்.
     திடீரென்று சேலத்திலிருந்து பங்காருசாமி, குமாரி பங்கஜா இருவரும் காணாமற் போனார்கள். பங்கஜாவின் தாயாரைப் போய்ப் பார்த்துக் கேட்டதிலும் தகவல் தெரியவில்லை.
     போலீஸ்காரரின் மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது. இந்த நிலையில் அவரைச் சேலத்திலிருந்து சின்னமநாயக்கன் பட்டிக்கு மாற்றினார்கள். 
     அங்கே பங்காருவையும் பங்கஜாவையும் கண்டு போலீஸ்காரர் ஆச்சரியப்பட்டார். பங்கஜா ஒரு நாள் அவரைத் தனிமையில் சந்தித்துத் தன்னைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடினாள். போலீஸ்காரர் அப்படியே வாக்களித்தார். ஆயினும் இங்கே ஏதோ கிருத்திரிமம் நடக்கப்போகிறது என்ற சந்தேகம் அவர் மனத்தில் உதித்தது. ஆகையால் மேற்படி ஆசாமிகளுக்குத் தெரியாமலேயே அவர்களைக் கவனித்துக்கொண்டு வந்தார்.
     போலீஸ்காரருடைய சந்தேகத்தை அதிகப்படுத்தும்படியான சம்பவம் ஒன்று ஒரு நாள் நேரிட்டது. நாமக்கல் சாலையில் அவர் போக நேரும்போதெல்லாம் பொய்மான் கரட்டையும் அந்தக் கரட்டின் சந்தில் தெரிந்த பொய் மானையும் பார்த்து வியக்காமல் போவதில்லை. 'அருகிலே போய்ப் பார்த்தால் இருட்டைத் தவிர ஒன்றுமில்லை; சாலையிலிருந்து பார்த்தால் தத்ரூபமாக அழகிய மான் தெரிகிறதே? இது என்ன விந்தை? எப்படி நேருகிறது?' என்று அடிக்கடி அவர் யோசிப்பதுண்டு. ஒரு நாளைக்குத் திடீரென்று மேற்படி குன்றின் குகையில் பொய்மானுடைய முழுத் தோற்றத்தையும் காண முடியாமற்போகவே, அவருக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது. ஒரு காலும் ஒரு காதும் முகத்தில் பாதியும் மட்டும் தெரிந்தன. மானின் முழு உருவத்தைக் காணவில்லை. இந்த அதிசயத்தைக் கண்டுபிடிக்க எண்ணிக் குன்றின் மீது ஏறிப் பார்த்தார். பொய்மான் குகையில் ஒரு சாக்கு மூட்டையும் ஒரு கள்ளிப் பெட்டியும் வைக்கப்பட்டு இருந்தன. 'மானின் நிழல்தோற்றத்தின் மேல் இச்சாமான்களின் நிழல் எப்படியோ விழுந்திருக்கிறது! ஆகையினாலேதான், முழுமானின் அழகிய தோற்றம் கீழேயிருந்து பார்க்கும்போது காணப்படவில்லை' என்று தெரிந்து கொண்டார்.
     அதிசயத்தின் காரணத்தைக் கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால் குகையில் வைத்திருக்கும் சாமான்களின் மர்மங்களைக் கண்டுபிடித்தாக வேண்டும். அந்தச் சாமான்கள் யாருடையவை? எதற்காக அங்கே வைத்திருக்கிறார்கள்? சாமான்களை உடனே பரிசோதித்துப் பார்க்கப் போலீஸ்காரர் விரும்பவில்லை. மற்றவர்கள் யாரும் கவனிக்க முடியாத சமயத்தில் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வைத்தவர்கள் யார் என்றும் கவனித்து வரவேண்டும்.
     பங்காருசாமி, பங்கஜா, எஸ்ராஜ்-அவர்களைச் சுற்றிக் கொண்டிருந்த செங்கோடன் ஆகியவர்கள் மீது போலீஸ்காரருக்குச் சந்தேகம் தோன்றியிருந்தது. பொய் மானை மறைந்த பொருள்களை அவர்களில் யாராவது வைத்திருக்க வேண்டும் என்றும், அவை திருட்டுப் பொருள்களாகயிருக்கலாம் என்றும் எண்ணினார்.
     ஒரு நாள் பங்கஜா போலீஸ்காரரைத் தேடிப்பிடித்து "எனக்காக ஓர் உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டாள். செங்கோடனிடம் தன் கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுக்கச் சொன்னாள். கூழைக்காலன் புதையல் இருக்குமிடம் செங்கோடனுக்குத் தெரியும் என்றும், அவனிடமிருந்து அந்த இரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே அவனிடம் சிநேகங்கொண்டதாக நடிப்பதாகவும் கூறினாள். புதையல் கிடைத்தால் போலீஸ்காரருக்கும் பங்கு கொடுப்பதாகச் சொன்னாள். போலீஸ்காரர் மர்மம் இன்னதென்று கண்டு பிடிக்கும் நோக்கத்துடன் கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுக்கச் சம்மதித்தார்.
     மறுநாள் பொய்மான் கரட்டுக் குகையில் மானின் முழு உருவமும் தெரிந்தது. ஆகையால், தான் செங்கோடக் கவுண்டனுக்குக் கடிதம் கொடுக்கப் போன சமயத்தில் ஆசாமிகள் அச்சாமான்களை எடுத்துக் கொண்டு விட்டார்கள்! அவை என்னவாயிருக்கும்?
     மறுபடியும் போலீஸ்காரர் ஏமாற விரும்பவில்லை. செங்கோடன் பொய்மான் கரடுக்குப் பின்னால் குமாரி பங்கஜாவைச் சந்தித்ததும் செங்கோடனுடைய குடிசையை நோக்கிச் சென்றார். மற்ற இரண்டு மனிதர்களும் அங்கே வருவார்கள் என்பது நிச்சயம். ஆகையால் முன்னாலேயே போய்க் கேணிக்கரை மேட்டில் தென்னை மரத்தின் பின்னால் மறைந்து கொண்டார். அங்கிருந்து பார்த்தால் குடிசையின் சமீபத்தில் சுற்றுப்புறமெல்லாம் நன்றாய்த் தெரியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் எதிர்பாராதது ஒன்று நிகழ்ந்துவிட்டது. போலீஸ்காரர் போன திசையை மோப்பம் பிடித்துக்கொண்டு அவருடைய நாயும் செங்கோடனுடைய குடிசையை நோக்கி வந்தது. குடிசைக்குச் சமீபத்தில் அதன் குரைப்புச் சத்தமும், மரண ஓலமும் போலீஸ்காரருக்குக் கேட்டது. அவருடைய இரத்தம் கொதித்தது. ஆனாலும் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டருக்கு டியூடி என்றால் டியூடிதான்; வேலை என்றால் வேலைதான்! ஒரு பெரிய மர்மத்தைக் கண்டுபிடிக்கப் போகிற கட்டத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, காரியத்தைக் கெடுத்துவிட விரும்பவில்லை! நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வெளிப்பட வேண்டிய சமயத்தில் வெளிப்பட்டு வந்தார்.
     குடிசைக்கு வெளியில் செங்கோடனை நிற்கச் சொல்லி விட்டுப் போலீஸ்காரர் உள்ளே போனார். சுற்றுமுற்றும் பார்த்தார். கீழே விழுந்து கிடந்தவனையும் லாந்தர் வெளிச்சத்தில் கூர்ந்து கவனித்தார். கவனித்துவிட்டு அவர் வெளியில் வந்து செங்கோடனைப் பார்த்து, "ஏனப்பா! நீயா கொலை செய்தாய்? யாரோ பெண்பேய் தன்னைக் கொன்றதாகவல்லவா உள்ளே கிடக்கிறவன் பழி சொல்லுகிறான்?" என்றார்.
     "ஐயோ! என்பேரிலா பழி சொல்லுகிறான்? எனக்கு ஒன்றும் தெரியாதே? நான் உள்ளேயே போகவில்லையே?" என்று பங்கஜா கூவினாள்.
     "கொலைகாரி! ஏன் பொய் சொல்லுகிறாய்? என்னையும் இந்தக் கவுண்டனையும் சண்டைபோட விட்டுவிட்டு நீதானே குடிசைக்குத் தனியாகப் போனாய்?" என்றான் எஸ்ராஜ்.
     "இப்படி அபாண்டமாய்ப் பொய் சொல்லுகிறாயே?" என்று பங்கஜா ஓவென்று அலறி அழத் தொடங்கினாள்.
     சேலத்திலிருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலிய மேலதிகாரிகள் இரவுக்கிரவே வந்து சேர்ந்தார்கள். போலீஸ் அதிகாரிகள் மட்டும் அல்ல. அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் ஜனங்கள் வந்து கூட ஆரம்பித்து விட்டார்கள். செங்கோடனுடைய புதையலை யாரோ திருடன் அடித்துக் கொண்டு போகப் பார்த்தான் என்றும் அதற்காகச் செங்கோடன் அவனைக் கொன்று விட்டான் என்றும் அக்கம் பக்கங்களில் வதந்தி பரவி விட்டது.
     ஜனங்களையெல்லாம் தடுத்துக் குடிசைக்குத் தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டுப் போலீஸ் இன்ஸ்பெக்டரை மட்டும் கான்ஸ்டேபிள் உள்ளே அழைத்துச் சென்றார்.
     பங்காருசாமியின் உதடுகள் இன்னும் ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தன. "அந்தப் பெண் பிள்ளையை விடாதீர்கள்! அவள்தான் கொலைகாரி" என்ற வார்த்தைகள் இன்ஸ்பெக்டரின் காதிலும் விழுந்தன.
     பிறகு காயம் பட்ட அந்த மனிதனை எடுத்துப் போவதற்கு இன்ஸ்பெக்டர் ஏற்பாடு செய்தார். செங்கோடன், எஸ்ராஜ், குமாரி பங்கஜா ஆகிய மூவரையும் கைது செய்து கையில் விலங்கு போட்டுக் கொண்டு போனார்கள்.
     இதற்குள்ளே சிவராமலிங்கக் கவுண்டரின் குடும்பமெல்லாம் அங்கே வந்துவிட்டது! செம்பவளவல்லி செங்கோடனைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் பெருக்கினாள். அவளுடைய மனத்தில் சொல்ல முடியாத வேதனை குடிகொண்டிருந்தது என்பதை அவளுடைய முகக்குறி தெரியப்படுத்தியது. வேதனை இல்லாமல் எப்படி இருக்கும்? இரண்டு நாளைக்கெல்லாம் கலியாணத்துக்குத் தேதி வைத்திருக்கிறபோது இந்த மாதிரி கொலைக் குற்றம் சாட்டி மாப்பிள்ளை கையிலே விலங்கு போட்டுக் கொண்டு போனால் கலியாணப் பெண்ணின் உள்ளம் துடிக்காமல் என்ன செய்யும்?
     வேதனைக்கு உள்ளாகியிருந்த செம்பவளவல்லிக்குச் செங்கோடக் கவுண்டன் ஜாடைமாடையாகவும் வாய் வார்த்தை மூலமாகவும் பலவிதமாக ஆறுதல் கூறினான்.
     "நீ கொஞ்சங்கூடக் கவலைப்படாதே! என்னை ஏழு வருஷம் ஜெயிலில் போட்டாலும் சரி, திரும்பி வந்து உன்னையே கட்டிக் கொள்கிறேன்!" என்று அவன் சொன்னதைக் கேட்டவர்கள் சிரித்தார்கள்.
     "எதற்காகச் சிரிக்கிறீர்கள்? சிரிப்பதற்கு என்னத்தைக் கண்டுவிட்டீர்கள்?" என்று செங்கோடன் அதட்டிவிட்டு, மறுபடியும் செம்பாவைப் பார்த்துச் சொன்னான்: "நான் இல்லாதபோது நீதான் வயல் காடுகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும். எல்லாவற்றையும் நீதான் கவனித்துக் கொள்ளவேண்டும். தெரிகிறதா? உன் அப்பா கவனிக்க மாட்டார்; அலட்சியமாய் இருந்துவிடுவார்; நீயும் அலட்சியமாய் இருந்துவிடாதே! என் சொத்தெல்லாம் இனிமேல் உன்னுடையதுதான். கேணி வற்றும்படி தண்ணீர் இறைத்துவிடப்போகிறார்கள்; ஒட்ட இறைத்துவிட்டால் தண்ணீர் ஊறாது. ஜாக்கிரதை! உன் அழகான தம்பிமார்கள் சோளக் கொண்டைகளைத் தீர்த்துவிடப் போகிறார்கள். கொல்லையில் கால் வைக்காமல் பார்த்துக்கொள். அப்படி ஏதாவது உன் தம்பிகள் செய்தார்களோ, தூக்கு மேடைக்குப் போனாலும் திரும்பி வந்து அவர்களுடைய முதுகுத் தோலை உரித்துப் போடுவேன்! ஜாக்கிரதையாய் இருக்கும்படி சொல்லிவை...!"
     இப்படிச் செங்கோடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனைப் போலீஸ்காரர்கள் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள்!
     செம்பா அங்கேயே விம்மிக் கொண்டு நின்றாள். அவளுக்குச் சமாதானம் சொல்லவே முடியவில்லை! 

போலீஸ்காரர் அங்கே அந்தச் சமயத்தில் எப்படி வந்தார் என்று சொல்வதற்குக் கொஞ்சம் கதையை பின்னால் கொண்டுபோக வேண்டும். கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டர் முன்னம் சேலத்தில் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி அவர் 'கை காட்டி மரவேலை செய்ய வேண்டியதாயிருக்கும். அதாவது வீதி முனையில் நாற்சந்தியின் நடுவில் நின்று வண்டிகள் போகவும் நிற்கவும் கைகாட்ட வேண்டி வரும். அப்படி நின்றிருந்த நாட்களில் ஒருநாள், நடுப்பகலில் ஓர் இளம்பெண் அவரிடம் வந்து, "போலீஸ்கார ஐயா! நேற்று முதல் சாப்பிடவில்லை! பசியினால் பிராணன் போய்விடும்போல் இருக்கிறது. ஒரு நாலு அணாக் கொடுத்தால் ஓர் அநாதைப் பெண்ணைக் காப்பாற்றிய புண்ணியம் கிடைக்கும்" என்றாள். போலீஸ்காரருக்குப் பாவ புண்ணியத்தில் அவ்வளவு நம்பிக்கையில்லை. ஆயினும் அந்தப் பெண்ணின் அநாதைத் தோற்றத்தைப் பார்த்துப் பரிதாபங் கொண்டார். "நீ யார், அம்மா! ஏன் உன்னை அநாதை என்று சொல்லிக்கொள்கிறாய்" என்றார். "ஆம் ஐயா! நான் அநாதைதான். நாங்கள் மலாய் நாட்டில் கிள்ளானில் இருந்தோம். அப்பா பெரிய வியாபாரி. யுத்தம் ஆரம்பித்த சில நாளைக்கெல்லம் புறப்பட்டு ஓடி வந்து விட்டோ ம். வழியிலே கப்பலிலேயே அப்பா செத்துப்போய் விட்டார். நானும் என் தம்பியும் அம்மாவும் மட்டும் இங்கே வந்து சேர்ந்தோம். இங்கே நாங்கள் எதிர்பார்த்து வந்த பந்துக்கள் யாரும் இல்லை. மலாய் நாட்டிலிருந்து சொத்து வருவதற்கும் வழியில்லை. ஜப்பான்காரன் பறிமுதல் செய்து விட்டான். நாங்கள் கையோடு கொண்டு வந்த நகை நட்டுக்களை விற்று இத்தனை நாள் காலட்சேபம் செய்தோம். எல்லாம் தீர்ந்துவிட்டது! இப்போது பிச்சை வாங்கிப் பிழைக்க வேண்டியதாயிருக்கிறது!" என்று சொன்னாள்.
     "ஐயோ! பாவம்! நீ படித்த பெண் மாதிரி தோன்றுகிறதே! ஏதாவது வேலை பார்த்துக்கொள்வதுதானே?" என்றார் போலீஸ் கான்ஸ்டேபிள்.
     "வேலைக்கு நான் எவ்வளவோ பிரயத்தனம் செய்தேன்; கிடைக்கவில்லை. வேலை கேட்கப் போன இடத்தில் ஆண் பிள்ளைகளாயிருந்தால் கண்ணை அடித்து துன்மார்க்கத்துக்குக் கூப்பிடுகிறார்கள். பெண்களாயிருந்தால் நன்றாகத் திட்டி அனுப்புகிறார்கள். நான் என்ன செய்யட்டும்!" என்றாள் அந்தப் பெண்.
     "வாஸ்தவந்தான்; உலகம் அப்படிக் கெட்டுப் போய்க் கிடக்கிறது. மனிதர்களுடைய நெஞ்சில் இரக்கம் என்பதே இல்லை!" என்றார் போலீஸ்காரர். இப்படிச் சொல்லி விட்டு நாலு அணாவுக்கு எட்டு அணாவாகக் கொடுத்து அனுப்பினார்.
     அந்தப் பெண் போய் விட்டாள். ஆனால் போலீஸ்காரருடைய மனத்திலிருந்து அவள் போகவில்லை. சில நாளைக்கெல்லாம் மறுபடியும் அந்தப் பெண், போலீஸ்காரரை சந்தித்தாள். சாப்பாட்டுக்கு நாலு அணாக் கொடுக்கும்படி கேட்டாள். போலீஸ்காரர் ஒரு ரூபாய் கொடுத்தார். அவர்களுக்குள் மேலும் கொஞ்சம் பழக்கமும் சிநேகமும் ஏற்பட்டன. பெண்ணின் பெயர் பங்கஜம் என்று தெரிந்து கொண்டார். ஒழிந்த நேரங்களில் அந்தப் பெண்ணின் வீட்டுக்குப்போய் அவளுடனும் அவள் அம்மாவுடனும் பேசிக் கொண்டிருப்பதில் அவர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.
     போலீஸ்காரருடைய முதல் மனைவி காலமாகி விட்டாள். இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணமே அவருக்கு இருக்கவில்லை. ஆனால் குமாரி பங்கஜாவைப் பார்த்த பிறகு அவருடைய மனம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டு வந்தது.
     இன்னொரு நாள் வழக்கம்போல் போலீஸ்காரர் கைகாட்டி உத்தியோகம் செய்த இடத்துக்குக் குமாரி பங்கஜா வந்து "வீட்டில் அரிசி ஆகிவிடது. ஒரு ரூபாய் தர முடியுமா? உங்களை அடிக்கடி கேட்க வெட்கமாயிருக்கிறது" என்றாள். போலீஸ்காரர், "ஏன் வெட்கப்படவேண்டும்? கூடிய சீக்கிரத்தில் நான் மாதா மாதம் வாங்கும் சம்பளத்தை அப்படியே உன்னிடம் கொண்டு வந்து மொத்தமாகக் கொடுக்கும் காலம் வரலாம், இல்லையா? உன் தாயாரைக் கூடக் கேட்டாகிவிட்டது. உனக்குச் சம்மதம் என்றால் உடனே கலியாணந்தான்!" என்றார்.
     "சீ! நீங்களும் மற்றவர்களைப் போலத்தானா?" என்றாள் பங்கஜா.
     "மற்றவர்களையும் என்னையும் ஒப்பிட்டுப் பேசுகிறாயே! மற்றவர்கள் உன்னைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னார்களா?" என்று கேட்டார்.
     "ஆமாம், பின்னே என்ன? எல்லோரும் என்னைக் கந்தர்வமணம் செய்துகொள்வதாகத்தான் சொன்னார்கள். ஓர் அநாதைப் பெண் அகப்பட்டால் நீங்கள் ஆண்பிள்ளைகள் என்ன வேணுமானாலும் செய்வீர்கள்! சீ சீ! உன்னுடைய பணம் எனக்கு வேண்டாம்!" என்று ரூபாயை விட்டெறிந்துவிட்டுக் குமாரி பங்கஜா நடையைக் கட்டினாள்.
     போலீஸ்காரர் மிக்க ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும் அவள் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவள் பத்து அடி தூரம் போனதும் ஒரு விசித்திரமான சம்பவம் ஏற்பட்டது. அந்த வழியே வந்த சைக்கிள்காரன் ஒருவன் குமாரி பங்கஜாவின் மீது தன் வண்டியை மோதினான். அந்த வேகத்தில் அவள் கையில் இருந்த சிறிய பெட்டி தவறிக் கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அதன் கதவு திறந்தது. திறந்த பெட்டிக்குள் கான்ஸ்டேபிள் பார்த்தார். ரூபாய் நோட்டுக் கத்தைகளாகக் குவித்து வைத்திருந்தது. சில நோட்டுகள் வெளியிலும் சிதறி விழுந்தன. குமாரி பங்கஜா அவசர அவசரமாக அந்த நோட்டுகளைப் பொறுக்கி எடுத்துப் பெட்டியில் வைத்து மூடிப் பூட்டினாள். அதே சமயத்தில் கடைக் கண்ணால் போலீஸ்காரர் தன்னைக் கவனிக்கிறாரா என்று பார்த்துக் கொண்டாள். இப்படிப் பூட்டியதும் அவசரமாக நடையைக் கட்டினாள்.
     போலீஸ்காரர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். பெட்டி நிறைய ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு தன்னிடம் அரிசி வாங்கப் பணம் இல்லை என்றாளே? இது என்ன விந்தை? ஆரம்பத்திலிருந்தே என்னை ஏமாற்றிக்கொண்டு வருகிறாளா? அல்லது இன்றைக்குத்தானா? திடீரென்று இவ்வளவு பணம் இவளுக்கு எப்படிக் கிடைத்தது?
     மறுநாள் குமாரி பங்கஜா அவரைத் தேடிக்கொண்டு வந்தாள். "நேற்றே ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். ஆனாலும் உங்கள் மனத்தைச் சோதிக்க விரும்பியதால் சொல்லவில்லை. மலாய் நாட்டில் எங்கள் வீட்டையும் தோட்டங்களையும் விற்றுப் பணம் அனுப்பியிருக்கிறார்கள். நேற்றுத்தான் வந்தது. ஒரு சினேகிதர் வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்தேன்!" என்றாள்.
     அவ்வளவு பணத்தை நம்பிக் கொடுக்கும்படி அப்படிப்பட்ட சிநேகிதர் உனக்கு இருக்கிறாரா? அதைவிட பாங்கியில் போட்டு வைப்பதுதானே?" என்றார் போலீஸ்காரர்.
     "பாங்கியிலே போட்டால் வட்டி எங்கே கொடுக்கிறார்கள்? நான் கொடுத்தது பங்காருசாமி என்பவரிடம். நல்ல இடத்தில் கடன் கொடுத்து நிறைய வட்டி சம்பாதித்துக் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்."
     பங்காருசாமி என்பவன் 'கே. டி.' ஜாபிதாவில் இல்லையே தவிர, மற்றபடி அவன் பேரில் போலீஸ் இலாக்காவுக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. அப்படிப் பட்டவனிடமா இவள் பணத்தை நம்பிக் கொடுத்திருக்கிறாள்? ஐயோ! விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவானே? இன்னொரு சந்தேகமும் போலீஸ்காரரின் மனத்தில் தோன்றியது. அதைக் கேட்டுவிட்டார்:
     "நேற்று எதற்காக என்னிடம் பணம் கேட்க வந்தாய்?" என்றார்.
     "அதுவா? உங்களிடம் ஏதாவது ஒரு வியாஜத்தை வைத்துக்கொண்டு பேச வேண்டும் என்று இருந்தது. அதனாலே தான் வந்தேன். மன்னித்துக் கொள்ளுங்கள். நான் கஷ்ட தசையில் இருந்தபோது நீங்கள் செய்த உதவிகளுக்காக மிக்க வந்தனம். ஒரு நாள் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்துக் கொடுத்துவிடுகிறேன்!" என்று சொல்லிவிட்டு, விடு விடு என்று போய்விட்டள்.
     போலீஸ்காரருக்கு அவள் சொன்ன சமாதானத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை. இந்தப் பேதைப் பெண்ணை அந்தப் பங்காருசாமி ஏதோ குழியில் கவிழ்க்கப் பார்க்கிறான் என்று சந்தேகித்தார். ஆகையால் குமாரி பங்கஜாவையும் பங்காருசாமியையும் கவனிக்கத் தொடங்கினார்.
     திடீரென்று சேலத்திலிருந்து பங்காருசாமி, குமாரி பங்கஜா இருவரும் காணாமற் போனார்கள். பங்கஜாவின் தாயாரைப் போய்ப் பார்த்துக் கேட்டதிலும் தகவல் தெரியவில்லை.
     போலீஸ்காரரின் மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது. இந்த நிலையில் அவரைச் சேலத்திலிருந்து சின்னமநாயக்கன் பட்டிக்கு மாற்றினார்கள். 
     அங்கே பங்காருவையும் பங்கஜாவையும் கண்டு போலீஸ்காரர் ஆச்சரியப்பட்டார். பங்கஜா ஒரு நாள் அவரைத் தனிமையில் சந்தித்துத் தன்னைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடினாள். போலீஸ்காரர் அப்படியே வாக்களித்தார். ஆயினும் இங்கே ஏதோ கிருத்திரிமம் நடக்கப்போகிறது என்ற சந்தேகம் அவர் மனத்தில் உதித்தது. ஆகையால் மேற்படி ஆசாமிகளுக்குத் தெரியாமலேயே அவர்களைக் கவனித்துக்கொண்டு வந்தார்.
     போலீஸ்காரருடைய சந்தேகத்தை அதிகப்படுத்தும்படியான சம்பவம் ஒன்று ஒரு நாள் நேரிட்டது. நாமக்கல் சாலையில் அவர் போக நேரும்போதெல்லாம் பொய்மான் கரட்டையும் அந்தக் கரட்டின் சந்தில் தெரிந்த பொய் மானையும் பார்த்து வியக்காமல் போவதில்லை. 'அருகிலே போய்ப் பார்த்தால் இருட்டைத் தவிர ஒன்றுமில்லை; சாலையிலிருந்து பார்த்தால் தத்ரூபமாக அழகிய மான் தெரிகிறதே? இது என்ன விந்தை? எப்படி நேருகிறது?' என்று அடிக்கடி அவர் யோசிப்பதுண்டு. ஒரு நாளைக்குத் திடீரென்று மேற்படி குன்றின் குகையில் பொய்மானுடைய முழுத் தோற்றத்தையும் காண முடியாமற்போகவே, அவருக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது. ஒரு காலும் ஒரு காதும் முகத்தில் பாதியும் மட்டும் தெரிந்தன. மானின் முழு உருவத்தைக் காணவில்லை. இந்த அதிசயத்தைக் கண்டுபிடிக்க எண்ணிக் குன்றின் மீது ஏறிப் பார்த்தார். பொய்மான் குகையில் ஒரு சாக்கு மூட்டையும் ஒரு கள்ளிப் பெட்டியும் வைக்கப்பட்டு இருந்தன. 'மானின் நிழல்தோற்றத்தின் மேல் இச்சாமான்களின் நிழல் எப்படியோ விழுந்திருக்கிறது! ஆகையினாலேதான், முழுமானின் அழகிய தோற்றம் கீழேயிருந்து பார்க்கும்போது காணப்படவில்லை' என்று தெரிந்து கொண்டார்.
     அதிசயத்தின் காரணத்தைக் கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால் குகையில் வைத்திருக்கும் சாமான்களின் மர்மங்களைக் கண்டுபிடித்தாக வேண்டும். அந்தச் சாமான்கள் யாருடையவை? எதற்காக அங்கே வைத்திருக்கிறார்கள்? சாமான்களை உடனே பரிசோதித்துப் பார்க்கப் போலீஸ்காரர் விரும்பவில்லை. மற்றவர்கள் யாரும் கவனிக்க முடியாத சமயத்தில் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வைத்தவர்கள் யார் என்றும் கவனித்து வரவேண்டும்.
     பங்காருசாமி, பங்கஜா, எஸ்ராஜ்-அவர்களைச் சுற்றிக் கொண்டிருந்த செங்கோடன் ஆகியவர்கள் மீது போலீஸ்காரருக்குச் சந்தேகம் தோன்றியிருந்தது. பொய் மானை மறைந்த பொருள்களை அவர்களில் யாராவது வைத்திருக்க வேண்டும் என்றும், அவை திருட்டுப் பொருள்களாகயிருக்கலாம் என்றும் எண்ணினார்.
     ஒரு நாள் பங்கஜா போலீஸ்காரரைத் தேடிப்பிடித்து "எனக்காக ஓர் உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டாள். செங்கோடனிடம் தன் கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுக்கச் சொன்னாள். கூழைக்காலன் புதையல் இருக்குமிடம் செங்கோடனுக்குத் தெரியும் என்றும், அவனிடமிருந்து அந்த இரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே அவனிடம் சிநேகங்கொண்டதாக நடிப்பதாகவும் கூறினாள். புதையல் கிடைத்தால் போலீஸ்காரருக்கும் பங்கு கொடுப்பதாகச் சொன்னாள். போலீஸ்காரர் மர்மம் இன்னதென்று கண்டு பிடிக்கும் நோக்கத்துடன் கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுக்கச் சம்மதித்தார்.
     மறுநாள் பொய்மான் கரட்டுக் குகையில் மானின் முழு உருவமும் தெரிந்தது. ஆகையால், தான் செங்கோடக் கவுண்டனுக்குக் கடிதம் கொடுக்கப் போன சமயத்தில் ஆசாமிகள் அச்சாமான்களை எடுத்துக் கொண்டு விட்டார்கள்! அவை என்னவாயிருக்கும்?
     மறுபடியும் போலீஸ்காரர் ஏமாற விரும்பவில்லை. செங்கோடன் பொய்மான் கரடுக்குப் பின்னால் குமாரி பங்கஜாவைச் சந்தித்ததும் செங்கோடனுடைய குடிசையை நோக்கிச் சென்றார். மற்ற இரண்டு மனிதர்களும் அங்கே வருவார்கள் என்பது நிச்சயம். ஆகையால் முன்னாலேயே போய்க் கேணிக்கரை மேட்டில் தென்னை மரத்தின் பின்னால் மறைந்து கொண்டார். அங்கிருந்து பார்த்தால் குடிசையின் சமீபத்தில் சுற்றுப்புறமெல்லாம் நன்றாய்த் தெரியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் எதிர்பாராதது ஒன்று நிகழ்ந்துவிட்டது. போலீஸ்காரர் போன திசையை மோப்பம் பிடித்துக்கொண்டு அவருடைய நாயும் செங்கோடனுடைய குடிசையை நோக்கி வந்தது. குடிசைக்குச் சமீபத்தில் அதன் குரைப்புச் சத்தமும், மரண ஓலமும் போலீஸ்காரருக்குக் கேட்டது. அவருடைய இரத்தம் கொதித்தது. ஆனாலும் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டருக்கு டியூடி என்றால் டியூடிதான்; வேலை என்றால் வேலைதான்! ஒரு பெரிய மர்மத்தைக் கண்டுபிடிக்கப் போகிற கட்டத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, காரியத்தைக் கெடுத்துவிட விரும்பவில்லை! நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வெளிப்பட வேண்டிய சமயத்தில் வெளிப்பட்டு வந்தார்.
     குடிசைக்கு வெளியில் செங்கோடனை நிற்கச் சொல்லி விட்டுப் போலீஸ்காரர் உள்ளே போனார். சுற்றுமுற்றும் பார்த்தார். கீழே விழுந்து கிடந்தவனையும் லாந்தர் வெளிச்சத்தில் கூர்ந்து கவனித்தார். கவனித்துவிட்டு அவர் வெளியில் வந்து செங்கோடனைப் பார்த்து, "ஏனப்பா! நீயா கொலை செய்தாய்? யாரோ பெண்பேய் தன்னைக் கொன்றதாகவல்லவா உள்ளே கிடக்கிறவன் பழி சொல்லுகிறான்?" என்றார்.
     "ஐயோ! என்பேரிலா பழி சொல்லுகிறான்? எனக்கு ஒன்றும் தெரியாதே? நான் உள்ளேயே போகவில்லையே?" என்று பங்கஜா கூவினாள்.
     "கொலைகாரி! ஏன் பொய் சொல்லுகிறாய்? என்னையும் இந்தக் கவுண்டனையும் சண்டைபோட விட்டுவிட்டு நீதானே குடிசைக்குத் தனியாகப் போனாய்?" என்றான் எஸ்ராஜ்.
     "இப்படி அபாண்டமாய்ப் பொய் சொல்லுகிறாயே?" என்று பங்கஜா ஓவென்று அலறி அழத் தொடங்கினாள்.
     சேலத்திலிருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலிய மேலதிகாரிகள் இரவுக்கிரவே வந்து சேர்ந்தார்கள். போலீஸ் அதிகாரிகள் மட்டும் அல்ல. அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் ஜனங்கள் வந்து கூட ஆரம்பித்து விட்டார்கள். செங்கோடனுடைய புதையலை யாரோ திருடன் அடித்துக் கொண்டு போகப் பார்த்தான் என்றும் அதற்காகச் செங்கோடன் அவனைக் கொன்று விட்டான் என்றும் அக்கம் பக்கங்களில் வதந்தி பரவி விட்டது.
     ஜனங்களையெல்லாம் தடுத்துக் குடிசைக்குத் தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டுப் போலீஸ் இன்ஸ்பெக்டரை மட்டும் கான்ஸ்டேபிள் உள்ளே அழைத்துச் சென்றார்.
     பங்காருசாமியின் உதடுகள் இன்னும் ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தன. "அந்தப் பெண் பிள்ளையை விடாதீர்கள்! அவள்தான் கொலைகாரி" என்ற வார்த்தைகள் இன்ஸ்பெக்டரின் காதிலும் விழுந்தன.
     பிறகு காயம் பட்ட அந்த மனிதனை எடுத்துப் போவதற்கு இன்ஸ்பெக்டர் ஏற்பாடு செய்தார். செங்கோடன், எஸ்ராஜ், குமாரி பங்கஜா ஆகிய மூவரையும் கைது செய்து கையில் விலங்கு போட்டுக் கொண்டு போனார்கள்.
     இதற்குள்ளே சிவராமலிங்கக் கவுண்டரின் குடும்பமெல்லாம் அங்கே வந்துவிட்டது! செம்பவளவல்லி செங்கோடனைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் பெருக்கினாள். அவளுடைய மனத்தில் சொல்ல முடியாத வேதனை குடிகொண்டிருந்தது என்பதை அவளுடைய முகக்குறி தெரியப்படுத்தியது. வேதனை இல்லாமல் எப்படி இருக்கும்? இரண்டு நாளைக்கெல்லாம் கலியாணத்துக்குத் தேதி வைத்திருக்கிறபோது இந்த மாதிரி கொலைக் குற்றம் சாட்டி மாப்பிள்ளை கையிலே விலங்கு போட்டுக் கொண்டு போனால் கலியாணப் பெண்ணின் உள்ளம் துடிக்காமல் என்ன செய்யும்?
     வேதனைக்கு உள்ளாகியிருந்த செம்பவளவல்லிக்குச் செங்கோடக் கவுண்டன் ஜாடைமாடையாகவும் வாய் வார்த்தை மூலமாகவும் பலவிதமாக ஆறுதல் கூறினான்.
     "நீ கொஞ்சங்கூடக் கவலைப்படாதே! என்னை ஏழு வருஷம் ஜெயிலில் போட்டாலும் சரி, திரும்பி வந்து உன்னையே கட்டிக் கொள்கிறேன்!" என்று அவன் சொன்னதைக் கேட்டவர்கள் சிரித்தார்கள்.
     "எதற்காகச் சிரிக்கிறீர்கள்? சிரிப்பதற்கு என்னத்தைக் கண்டுவிட்டீர்கள்?" என்று செங்கோடன் அதட்டிவிட்டு, மறுபடியும் செம்பாவைப் பார்த்துச் சொன்னான்: "நான் இல்லாதபோது நீதான் வயல் காடுகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும். எல்லாவற்றையும் நீதான் கவனித்துக் கொள்ளவேண்டும். தெரிகிறதா? உன் அப்பா கவனிக்க மாட்டார்; அலட்சியமாய் இருந்துவிடுவார்; நீயும் அலட்சியமாய் இருந்துவிடாதே! என் சொத்தெல்லாம் இனிமேல் உன்னுடையதுதான். கேணி வற்றும்படி தண்ணீர் இறைத்துவிடப்போகிறார்கள்; ஒட்ட இறைத்துவிட்டால் தண்ணீர் ஊறாது. ஜாக்கிரதை! உன் அழகான தம்பிமார்கள் சோளக் கொண்டைகளைத் தீர்த்துவிடப் போகிறார்கள். கொல்லையில் கால் வைக்காமல் பார்த்துக்கொள். அப்படி ஏதாவது உன் தம்பிகள் செய்தார்களோ, தூக்கு மேடைக்குப் போனாலும் திரும்பி வந்து அவர்களுடைய முதுகுத் தோலை உரித்துப் போடுவேன்! ஜாக்கிரதையாய் இருக்கும்படி சொல்லிவை...!"
     இப்படிச் செங்கோடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனைப் போலீஸ்காரர்கள் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள்!
     செம்பா அங்கேயே விம்மிக் கொண்டு நின்றாள். அவளுக்குச் சமாதானம் சொல்லவே முடியவில்லை! 

by Swathi   on 22 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.