திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும். (காரணமாகிய பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார்.' அற்றது பற்றெனில், உற்றது வீடு' (திருவாய் 1-2-5)என்பதூஉம் அது பற்றி வந்தது. இவை இரண்டு பாட்டானும்அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்: அதனை விடாதபோது நிலையாமை காணப்படும்.
இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும்- ஒருவனுக்கு இருவகைப் பற்றும் நீங்கியபொழுதே அப்பற்று நீக்கம் அவன் பிறப்பை ஒழிக்கும் ; மற்று நிலையாமை காணப்படும் - அவை நீங்காத பொழுது அவற்றால் மாறிமாறிப் பிறந்திறந்து வருகின்ற நிலையாமையே காணப்படும்.
கரணகம் (காரணம்) நீங்கின் கருமகமும் (காரியமும்) நீங்குமாதலால் 'பற்றற்ற கண்ணே' என்றார். மற்று - மற்றப்படி
கலைஞர் உரை:
பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள்
வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய
நிலையாமை தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.
Translation
When that which clings falls off, severed is being's tie;
All else will then be seen as instability.
Explanation
At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.