திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நோதக்க நட்டார் செயின் - தாம் வெறுக்கத் தக்கவனவற்றை நட்டார் செய்தாராயின்; பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க - அதற்குக் காரணம் ஒன்றில் பேதைமை என்றாதல் ஒன்றின் மிக்க உரிமை என்றாதல் கொள்க. ('ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல். 'செயின்' எனவே, தம் இயல்பால் செய்யாமை பெற்றாம். இது வருகின்றவற்றுள்ளும் ஒக்கும் இழவூழான் வரும் பேதைமை யாவர்க்கும் உண்மையின் தமக்கு ஏதங்கொண்டாரென்றாதல், ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒற்றுமை மிகுதி பற்றி அவரின் வந்ததென்றாதல் கொள்வதல்லது. அன்பின்மையென்று கொள்ளப்படாது என்பதாம். கெடும் வகை செய்யின் அதற்குக் காரணம் இதனான் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தாம் நோவத்தக்கனவற்றை நட்டோர் செய்வாராயின் அதற்கு முனியாது ஒன்றில் அறியாமையாலே செய்தாரென்று கொள்க: ஒன்றில் பெரிய உரிமையாலே செய்தாரென்று கொள்க.
தேவநேயப் பாவாணர் உரை:
நட்டார் நோதக்க செயின் பழைமையான நண்பர் தாம் வருந்தத்தக்கவற்றைச் செய்தாராயின்; பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க-அதற்குக் கரணியம் அவரது அறியாமை மட்டுமன்றி அவர் கொண்ட பேரூரிமையுமாகும் என்று அறிந்து பொறுத்துக்கொள்க. நுண்ணிய நூல்பல கற்றார்க்கும் பேதைப்படுக்கும் இழவூழால் இடையிடை பேதைமை தோற்றுதலின், அதனாற் செய்யப்படும் தீச்செயலை அவர் விரும்பிச் செய்யும் பகைவினையாகக் கொள்ளற்க என்பதாம். 'ஒன்றோ' என்பது ஒன்றுதானோ என்னும் பொருளதாம்; ஆதலாற் பரிமேலழகர் கருதியவாறு எண்ணிடைச் சொல்லன்று. 'செயின்' என்பது இயல்பாற் செய்யாமையை உணர்த்திற்று. இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'நோதக்க' என்றதனால் நட்டார் தீச்செயற்கு அவரது இழவூழன்றித் தமது இழவூழும் கரணியமாகும் என்று கருதுக என்பது குறிப்பாற் பெறப்படுவதாம். பேதைமை யொன்றே போதிய கரணியமாயிருக்கவும், அதனோடு பெருங்கிழமையுங் கூடிக்கொண்டதனால், நட்டார் தீச்செயல் பற்றி அவரை எள்ளளவும் வெறுக்கற்க என்பது கருத்து. "செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார் மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசை வாழ்நர் வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு."(நாலடி: 221)
கலைஞர் உரை:
வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக
Translation
Not folly merely, but familiar carelessness,
Esteem it, when your friends cause you distress.
Explanation
If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy.