பெரியார் ஈ . வெ . ரா . அவர்கள் கூட்டத்தில்பேசுவதற்காக மேடையில் அமர்ந்திருந்தார் . அப்பொழுது கூட்டத்தின் முன் வரிசையில் இருந்த இளைஞர் ஒருவன் சிறிதும் மரியாதை இன்றித் தன் கால்மேல் காலைப்போட்டு உட்கார்ந்திருந்தான் .
மேடையில் இருந்த இன்னொருவர் பெரியாரிடம் , “ அந்த இளைஞனைப் பார்த்தீர்களா ? நாம் எல்லாம் மேடையில் இருக்கிறோம் . கால்மேல் காலைப் போட்டுக்கொண்டு கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் இருக்கிறான் ?” என்றார் .
அதற்குப் பெரியார் “ அவன் கால்மேல் அவன் காலைப் போட்டுக் கொண்டு இருக்கிறான் . இதில் நம்ம மரியாதை எங்கு குறைகிறது ? என்று பதில் சொன்னார் .
இப்படி எதையும் பகுத்தறிவோடு பார்க்கிற பெரியார் பெருந்தலைவரைப் பற்றிப் பெருமிதமாகப் பேசியவர் .
தந்தைப்பெரியாரின் நீண்ட கால ஏக்கம் நிறைவேறியது போல அமைந்தது காமராசர் ஆட்சி .
அந்தக் காலத்தில் சேலம் நகர் மன்றத் தலைவராக சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இருந்தார் . இருவரும் நெருங்கிய நண்பர்கள் . ராஜாஜியின் வேண்டுகோளை ஏற்று பெரியார் அரசியலுக்கு வந்தார் . ராஜாஜி மிதவாதி , பெரியாரோ தீவிரவாதி .
காந்தியின்மேலுள்ள பற்றுதலால் அவரது மதுவிலக்குக் கொள்கையை ஏற்று தன் தோட்டத்துத் தென்னை மரங்களை வெட்டினார் . கதராடைக் கொள்கைக்காக பிரச்சாரம் செய்தார் . காந்தியின் “ ஹரிஜன முன்னேற்றம் ” என்ற கொள்கைக்கு ஆதரவாக வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு “ வைக்கம் வீரர் ” என்ற பெயர் பெற்றார் .
தமிழரிடையே வறுமை , அறியாமை , கல்லாமை , சாதியுணர்வுச் சிறுமை போன்ற குடி கெடுக்கும் “ ஆமைகளை ” ஒழிப்பதற்குப் பொதுவாழ்வே சிறந்தது என உணர்ந்து சொல்லாற்றலை வளர்த்து கொண்டார் .
நாட்டில் அமைந்த மக்களரசுகளின் பிரதமர்களாக பனகல் அரசர் , முனுசாமி ரெட்டியார் , ராஜாஜி ( ஆரியர் ), டி . பிரகாசம் , ஓமந்தூர் ராமசாமி ரெட்டியர் , குமாரசாமி ராஜா போன்றவர்கள் ஆட்சி செய்தார்களே அன்றி தமிழ்நாட்டின் தமிழன் ஒருவன் கூட இல்லையே என்று வருந்திய நிலையில் காமராசர் முதல்வரானதும் பெரியார் மிகவும் மகிழ்ந்தார் .
காமராசரின் எளிமை “ பண்பாடு ” முழு அர்ப்பணிப்பு , செயல்திறன் கண்டு அவரைத் தமிழரின் துயர் துடைக்க வந்த “ பச்சைத் தமிழர் ” என்று பாராட்டினார் . பெரியார் அவர்கள் , “ இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் ஆயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை . மூவேந்தர்கள் , நாயக்கர்கள் , மராட்டியர்கள் , முஸ்லீம்கள் , வெள்ளைக்காரர்கள் , இவர்கள் ஆட்சியில் எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை .
தோழர்களே என்சொல்லை நம்புங்கள் . இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னம் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள் . அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள் . காமராசரைப் பயன்படுத்திக்கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது ” என்று பேசினார் .
காமராசர் திட்டத்துக்கே பெருந்தலைவர் , முதல்வர் பதவியைத் துறக்க முடிவெடுத்த போது எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பெரியார் .
பிறகு காமராசர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடப்போவதாகக் கூறிய உடன் முதலில் ஆதரவு தெரிவித்தவர் பெரியார்தான் .
இப்படி எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட பெரியாரால்போற்றப்பட்ட பெருமை பெருந்தலைவருக்குக் கிடைத்தது .
|