தமிழகத்தில் 5,125 புதிய பெட்ரோல் பங்க்குகள் திறக்கவும், விண்ணப்பிப்பதை எளிதாக்கவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முடிவு செய்து உள்ளது.
இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குனர் சித்தார்த்தன், இந்துஸ்தான் மண்டல சில்லறை வர்த்தக தலைமை அதிகாரி சந்தீப் மகேஷ்வரி, பாரத் பெட்ரோலியம் மாநில சில்லறை வர்த்தக அதிகாரி நாகராஜன், இந்தியன் ஆயில் தலைமை மேலாளர் அண்ணாமலை, இந்தியன் ஆயில் முதன்மை தலைமை மேலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் லிமிடெட் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து தமிழகம் முழுவதும் 5125 பெட்ரோல் பங்க்குகளையும், புதுச்சேரியில் 135 பெட்ரோல் பங்க்குகளையும் திறக்க முடிவு செய்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாடு ஆண்டு தோறும் 8 சதவீதம் மற்றும் 4 சதவீதமாக அதிகரித்து கொண்டே வருகிறது.
இனி அமையவிருக்கும் பங்குகள் நெடுஞ்சாலைகள், விவசாய மையப் பகுதிகள் மற்றும் தொழில்துறை மையப் பகுதிகள் ஆகியவற்றில் அதிகரித்து வரும் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்யவும், வாடிக்கையாளர்களின் வசதிகளை நிறைவேற்றுவதற்கும் சில்லறை விற்பனை பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும்.
எனவே பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்காக விண்ணப்ப படிவம் மற்றும் ஆவணத்தை சமர்ப்பிக்கும் முறை எளிதாக்கப்பட்டு உள்ளது. விதிகளும் தளர்த்தப்பட்டு உள்ளன.
விண்ணப்பதாரர்களுக்கு நிலம் இருப்பது முக்கியமானது. மேலும் நிலம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். முதன் முறையாக வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் விதத்தில் தனிப்பட்ட ஏஜென்சி மூலமாக கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் முறை, ஒப்பந்த புள்ளி திறப்பு முறைகள் செயல்படுத்தப்படுகிறது.
தானியங்கி வசதி உட்பட அதிநவீன தொழில்நுட்பத்துடன் அனைத்து சில்லறை விற்பனை மையங்களும் கட்டமைக்கப்படும். எனவே பெட்ரோல் பங்க்குகள் அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் www.petrolpumdealerchayan.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த முறை மூன்று நிறுவனங்கள் இணைந்து ஒரே இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும். 21 வயது பூர்த்தியடைந்து 60 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் முன்னாள் ராணுவத்தினருக்கு விதிவிலக்கு உண்டு.
மேலும் ராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், விளையாட்டு வீரர்கள், ஊனமுற்றோர்கள் என பல்வேறு பிரிவினருக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தகுதி விவரங்களை இணையதளம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 24.12.2018 விண்ணபிக்க கடைசி நாளாகும்.
|