கடலூர் மாவட்டத்தில் உள்ளது பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் ஆசியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது . இந்து வங்கக் கடலை ஒட்டிய பகுதியில் உள்ளது. பித்தர்புரம் என்றே முதலில் இந்த காடுகள் அழைக்கப்பட்டது. அதுவே மருவி பிச்சாவரம் என்று மாறியது.
இவ்வூரில் அலையாத்திக் காடுகள், சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் தில்லை மரங்கள்அதிகம் உள்ளன.இந்த தில்லை மரங்களே சிதம்பரம் கோயிலின் தல மரமாகும். இதனால் சிதம்பரத்திற்கு தில்லை எனப் பெயர் உண்டு. இக்காடுகள் முற்காலத்தில் தற்போதைய சிதம்பரம் வரைவளர்ந்திருந்தது என்று கூறப்படுகிறது.
ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் நிலம் சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது. அத்தகைய அலையாத்தி தாவரங்கள் கொண்டதே பிச்சாவரம் காடு. இந்தக் காட்டில் சுரபுன்னை மரங்கள் அடர்ந்திருக்கின்றன. இம்மரத்தின் காய்கள் முருங்கைக்காய் போல் நீண்டிருக்கும். இந்தக் காய்கள் சேற்றில் விழுந்து செடியாகி, சில ஆண்டுகளில் மரமாக வளர்ந்து விடும். பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி, உணவாகக் கிடைப்பதால், இங்கு மீன், இறால்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பறவைகள் இங்கு வலசை வருகின்றன. செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் வரவு அதிகமாக இருக்கும். குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரை பிச்சாவரம் வரும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். மேலும் வெளிநாடுகளில் இருந்து வலசை வர பறவைகள் எடுத்துக்கொள்ளும் கால அளவும் வருடம்தோறும் இங்கு குடியேறும் பறவைகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது.
பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான பறவையினங்கள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
பிச்சாவரம் காடு கடலூர் மாவட்டம் 'கிள்ளை' என்னும் ஊரில் அமைந்திருக்கிறது. சிதம்பரம் நகரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பிச்சாவரத்துக்கு, பேருந்தில் செல்ல கட்டணம் பத்து ரூபாய். சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம். பிச்சாவரம் வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க, அரசு சார்பில் படகு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
|