பிரபல தொழிலதிபரும், காந்தியவாதியுமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சென்னையில் நேற்று காலமானார்.
மறைந்த நா.மகாலிங்கத்திற்கு வயது 91. காந்தி ஜெயந்தி தினமான நேற்று, சென்னை, ஏ.வி.எம்., ராஜேஸ்வரி மஹாலில், வள்ளலார் குறித்த நிகழ்ச்சி நடந்தது. இதில், பொள்ளாச்சி மகாலிங்கம் பங்கேற்றார். விழா மேடையேற நின்றிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மேடையில் மயங்கிச் சரிந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மறைந்த தொழிலதிபர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் ஆவார். பொள்ளாச்சி நா. மகாலிங்கம், கல்விச் சேவையிலும், ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கியவர். அவருக்கு, 2007ல் பத்ம பூஷண் விருது வழங்கி, மத்திய அரசு கவுரவித்தது. கடந்த 1923ல், பொள்ளாச்சியில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த மகாலிங்கம். 1952 - 67 வரை, காங்கிரசில்., எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவருக்கு பாரதியார் பல்கலை, அண்ணா பல்கலை, சென்னை பல்கலை உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|