|
|||||
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக்குறைவால் காலமானார் |
|||||
சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மறைவிற்கு வலைத்தமிழ் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகில் தனியிடம் பிடித்தவருமான பிரபஞ்சன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் துயர் அடைகின்றோம். அவரது இழப்பு தமிழ் எழுத்துலகிற்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பு ஆகும். தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு தனித்தன்மையை உருவாக்கி புகழ்பெற்ற எழுத்தாளராக வலம் வந்தவர் பிரபஞ்சன் அவர்கள். ஆங்கிலேய அதிகாரிகளிடம் அதிகாரியாக பணியாற்றிய ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பினைத் தழுவி அவர் எழுதிய 'வானம் வசப்படும்' என்ற புதினம் உலகப்புகழ் வாய்ந்தது. இந்தப் புதினத்திற்காக அவர் 1995ம் வருடம் சாகித்திய அகாடமி விருது பெற்றார். தனது நூல்களுக்காக தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றவர் பிரபஞ்சன் அவர்கள் தமிழ் எழுத்துலகில் அசைக்க முடியாத இடத்தில் திகழ்ந்தவர். அவர் எழுதிய மானுடம் வெல்லும், மகாநதி சந்தியா, ஆண்களும் பெண்களும் போன்ற பல புதினங்களும், நேற்றைய மனிதர்கள், விட்டு விடுதலையாகி போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் தமிழ் எழுத்துலகிற்கு கிடைத்த மாபெரும் பரிசுகளாகும். பிரபஞ்சன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் எழுத்துலகிற்கும் 'வலைத்தமிழ்' சார்பில் ஆழ்ந்த அஞ்சலியையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். |
|||||
by Mani Bharathi on 21 Dec 2018 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|