திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பொறி இன்மை யார்க்கும் பழியன்று - பயனைத்தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது. (அறிய வேண்டுவன - வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை', என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாதுமுயல்க என்பது குறிப்பெச்சம்.)
மணக்குடவர் உரை:
யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது. அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது.
அறிவு- காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ என்றார்க்கு, இது கூறப்பட்டது.
தேவநேயப் பாவாணர் உரை:
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று -மேன்மைக்கு ஏதுவாகிய ஊழின்மை ஒருவர்க்கும் குற்றமாகாது ; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டியவற்றை யறிந்து செய்யவேண்டிய வினைகளை விடாமுயற்சியொடு செய்யாமையே குற்றமாவது.
அறியவேண்டுவன நால்வகைவலி , காலம் , இடம் முதலியன. ஒருவன் முற்பிறப்பிற் செய்தவினை செய்தவனாலும் அறியப்படாமையாலும் , பெரும்பாலும் நல்லோர் வறியநிலையிலும் தீயோர் செல்வ நிலையிலும் இருப்பதாலும் , சிலவினைகட்கு ஒரே முயற்சியும் , சிலவினைகட்குப் பலமுயற்சியும் சிலவினைகட்கு விடாமுயற்சியும் வேண்டியிருப்பதனாலும் ,ஊழ்பற்றியன்றி வினைபற்றியே மக்கட்குப் புகழும் பழியும் உண்டாம் என்பதாம்.
கலைஞர் உரை:
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை
அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.
Translation
'Tis no reproach unpropitious fate should ban;
But not to do man's work is foul disgrace to man!.
Explanation
Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.