பொழுதுபோக்கு திரைபடங்களாக மட்டுமல்லாமல், சமூக விழிப்புணர்வுடன் கூடிய படங்களையும் எடுக்க வேண்டும் என, திரைபடத்துறையினருக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,அறிவுரை வழங்கினார்.
கடந்த 21ம் தேதி, சென்னையில் தொடங்கிய இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா நேற்று மாலை நேரு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, தமிழக கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, கேரளா முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோர், தலைமை தாங்கினர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 45 பேருக்கு விருது வழங்கினார்.
விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது: முன்பு சமூக பொறுப்புணர்வுடன், திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது இந்நிலை மாறி உள்ளது. பொழுதுபோக்கிற்காக படங்கள் எடுக்கப்படுகின்றன. நம் நாட்டில், சமீப காலமாக, சமூக ஒற்றுமையை குலைக்கும் விதத்தில், ஆங்காங்கே மோதல் ஏற்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றங்கள் அதிகரித்துள்ளது. இச்சூழலில், திரைப்படத் துறையினர், வெறும் பொழுதுபோக்கு படங்களாக மட்டும் எடுக்காமல், சமூக பொறுப்புணர்வுடன் கூடிய படங்களை எடுக்க வேண்டும். மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில், திரைப்படங்களை தயாரிக்க வேண்டும். என பிரணாப் முகர்ஜி கூறினார்.
|