|
|||||
அமெரிக்காவில் மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணை நியமித்து அதிபர் டிரம்ப் உத்தரவு! |
|||||
அமெரிக்காவில் மேல்முறையீடு நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான வக்கீல் நியோமி ராவை நியமித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த மாதம் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரட் கவனா, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பாக, கொலம்பியா சர்க்கியூட் நீதிமன்றத்தில் இவர் நீதிபதியாக பணியாற்றி வந்தார். அமெரிக்காவில் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்தபடியாக அதிக அதிகாரம் படைத்த மேல்முறையீட்டு நீதிமன்றமாக இது கருதப்படுகிறது. இதில், காலியாக உள்ள நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வக்கீல் நியோமி ராவை (45) நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் இதை அவர் அறிவித்தார். இதையடுத்து, செனட் சபையின் ஒப்புதலுக்காக நியோமியின் நியமன உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நியோமி ராவின் பெற்றோர் இந்தியாவை சேர்ந்த ஜெரின் ராவ், ஜஹாங்கிர் நரியோசாங் ராவ். பார்சி இன தம்பதியான இவர்கள், அமெரிக்காவில் குடியேறினர். அங்கு பிறந்த நியோமி, மிச்சிகனில் உள்ள பள்ளியில் படித்தார். யேல் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், சிகாகோ சட்டக் கல்லூரியில சட்டம் பயின்றார். தொடர்ந்து, ஜார்ஜ் மேஷன் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறை பேராசிரியையாக பணியாற்றினார். இவர் தற்போது அமெரிக்காவில் தகவல் தொடர்பு மற்றும் ஒழுங்குமுறை விவகார அலுவலக நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை செனட் சபை உறுதி செய்தால், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக வாழ்நாள் முழுவதும் இவர் பணியாற்றலாம். முன்னதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த சீனிவாசன் இந்த நீதிமன்றத்தில் ஒபாமா ஆட்சியின்போது நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Mani Bharathi on 17 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|