சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் புலி. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய், நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி கபூர், அட்டக்கத்தி நந்திதா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இயக்குனர் சிம்பு தேவன் உள்ளிட்ட படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், டி.ராஜேந்தர், தரணி, எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் ஜீவா, தம்பி ராமையா, விஜய் சேதுபதி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதில், படத்தின் நாயகன் விஜய் பேசும்போது, ரொம்ப நாளாவே ஒரு சரித்திரப் படத்தில் நடிக்கனும், ஆனா அதே நேரம் கமர்சியல் காட்சிகளோட நடிகனும் என்று நினைத்திருந்தேன்.
பொதுவா பரீட்சை எழுதுறவங்க அதிகமாகவும், மார்க் போடுறவங்க குறைவாகவும் தான் இருப்பாங்க. இங்க பரீட்சை எழுதுறவங்க குறைவாகவும், மார்க் போடுற நீங்க அதிகமாவும் இருக்கீங்க. புலிக்கு எத்தனை மார்க்குனு பரிட்சை எழுதுன நாங்க சொல்ல கூடாது. மார்க் போடுற நீங்க தான் சொல்லனும்.
ஒரு தயாரிப்பாளர் கடன் வாங்கி பணத்தை போடுறார். எத்தனையோ நபர்கள் உழைக்கிறாங்க. எந்த உழைப்புமே போடாம திருட்டுத் தனமா போனில் எடுத்து இணையத்தில் பரப்பி எங்க எல்லோரையும் குழப்பி, மண்ணை போட்டுப் போய்டுவாங்க.
எனக்காக மட்டும் பேசவில்லை. எல்லா ஹீரோக்களுக்கும் சேர்த்து தான் பேசுறேன். திருட்டுத் தனமா வெளியிடுவது, வயிற்றில் ஆரோக்கியமா வளர்ந்திட்டு வர குழந்தையை சுகப்பிரசவம் ஏற்படுறதுக்கு முன்னாடியே சிசேரியன் பண்ணி சாகடிக்கிற மாதிரி இருக்கு.
எனக்கு உண்மையா ஒருத்தரை வெறுக்கத் தெரியும். பொய்யா ஒருத்தரை நேசிக்கவே தெரியாது. நமக்குப் பின்னாடி பேசுறத நினைத்து கவலைப் படக்கூடாது. அடுத்த நிமிஷம் நிச்சயமில்லாதது நமது வாழ்க்கை. இருக்குற வரைக்கும் எல்லாரையும் சந்தோஷப் படுத்தனும். எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்களை வாழ வச்சிதான் பழக்கம்.
பொதுவா வெற்றிக்குப் பின்னாடி ஒரு பெண்ணோ ஆணோ தான் இருப்பாங்க. ஆனா என் வெற்றிக்கு பின்னாடி நிறைய அவமானங்கள்தான் இருக்கிறது. அதான் உங்க எல்லாருக்கும் தெரியுமே. பின்னாடி பேசறவங்களை பத்தி எனக்கு கவலை இல்லை. நான் என்னுடைய தோல்வியில் இருந்து நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டேன்
பில்கேட்ஸ் வாழ்க்கையில் அவரை சுற்றி இருக்குறவங்க அவரை குறை சொல்லிக்கொண்டும், திட்டிக்கொண்டுமே இருப்பார்களாம். அவரும் அந்த குறைகளையெல்லாம் சரிபண்ணிட்டே இருப்பாராம். இன்று உலகத்திலேயே பெரிய தொழிலதிபரா பில்கேட்ஸ் இருக்காரு. அவரை குறை சொன்னவங்க எல்லோரும் அவரின் கம்பெனியில் ஊழியரா இருக்காங்க. நீ என்ன பெரிய பில்கேட்ஸானு தான கேக்குறீங்க. எப்போவோ படிச்சது. ஏன் இதையெல்லாம் உங்களிடம் பேசுகிறேன் என்று தெரியவில்லை. நியாபகத்துக்கு வர உங்களுடன் பகிர்ந்துகொண்டேன் அவ்வளவுதான்.
கடவுள் முன்னாடி மண்டிப்போட்டா யார் முன்னாலும் எழுந்து நிற்கலாம். நமக்கு தான் எல்லாம் தெரியும். மற்றவர்களுக்கு ஏதும் தெரியாதுனு மட்டும் நினைச்சிடாதீங்க. நமக்கு சொல்லித் தருவதே மற்றவர்கள் தான் என்று பேசினார் விஜய்.
இந்த விழாவில் டி.ராஜேந்தர் பேசும்போது, ‘‘விஜய் ஒரு உண்மையான தமிழன். என்னுடைய மகன் சிம்பு வேறொரு நடிகரின் ரசிகன் என்று தெரிந்தும் தனது சகோதரனாக நினைத்து அவனுடைய படம் வெளிவர உதவி செய்துள்ளார். அவரது உதவியை நான் எப்போதும் மறக்கமாட்டேன். தம்பி விஜய் உன்னிடம் இல்லை தலைக்கணம். நீ பேசமாட்ட வசனங்கள் கத்தி, நீ நடிச்ச படம் பேரு கத்தி, இதுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி என தனது பஞ்ச் டயலாக்குகளை வரிசையாகக்கொட்டி வாழ்த்தினார்.
அவர் பேசிய வசனங்களையெல்லாம் மேடைக்கு கீழே அமர்ந்து இருந்த விஜய் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் டி.ராஜேந்தரின் வசனங்களில் அனல் பறக்கவே, விஜய் உட்கார முடியாமல் உற்சாகத்தில் நேராக மேடையேறி சென்று டி.ராஜேந்தரை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் அவருக்கு சால்வை போத்தி மரியாதை செலுத்தினார்.
இருப்பினும், டி.ராஜேந்தர் தொடர்ந்து விஜய்யை பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தார். அவரது பேச்சு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்தது. அவரின் ஒவ்வொரு பஞ்ச் வசனங்களுக்கும் ரசிகர்கள் விசில் அடித்தும், ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுததினர். இதனால் விழாவே களைகட்டியது. அவரைத் தொடர்ந்து விழாவுக்கு வந்திருந்த அனைத்து சிறப்பு விருந்தினர்கள் மேடையேறி படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்
|