அடியவர் உளத்திருள் அகற்றலின் விளக்கும் எழுமலை பொடித்தலின் அனல்தெறும் அசனியும் கருங்கடல் குடித்தலின் பெருந்தழற் கொழுந்தும் மரவுயிர் வௌவலின் தீவிழிக் கூற்றும் என்னுளம் இருத்தலின் இயைந்துணர் உயிரும் (5)
நச்சின கொடுத்தலின் நளிர்தரு ஐந்தும் கருவழி நீக்கலின் உயர்நிலைக் குருவும் இருநிலம் காத்தலின் மதியுடை வேந்தும் ஆகிய மணிவேல் சேவலம் கொடியோன் வானக மங்கையும் தேன்வரை வள்ளியும் (10)
இருபுறம் தழைத்த திருநிழல் இருக்கும் ஒரு பரங் குன்றம் மருவிய கூடல் பெருநதிச் சடைமிசைச் சிறுமதி சூடிய நாயகன் திருவடி நண்ணலர் போல பொய்பல புகன்று மெய்ஒளித்து இன்பம் (15)
விற்றுணும் சேரி விடாதுறை ஊரன் ஊருணி ஒத்த பொதுவாய்த் தம்பலம் நீயும் குதட்டினை ஆயின் - சேயாய்! நரம்பெடுத்து உமிழும் பெருமுலைத் தீம்பாற்கு உள்ளமும் தொடாது விள்ளமுது ஒழுக்கும் (20)
குதலைவாய் துடிப்பக் குலக்கடை உணங்கியும் மண்ணுறு மணியெனப் பூழிமெய் வாய்த்தும் புடைமணி விரித்த உடைமணி இழுக்கியும் சுடிகையும் சிகையும் சேர்ந்துகண் பனித்தும் பறையும் தேரும் பறிபட்டு அணங்கியும் (25)
மறிக்கண் பிணாவினர் இழைக்கும் சிற்றிலில் சென்றழி யாது நின்றயர் கண்டும் உறுவதும் இப்பயன் அன்றேல், பெறுவது என்பால் இன்றுநின் பேறே. (29)
|