அதிவேக ரயில்-18 க்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதனை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்து உள்ளார். இந்திய ரயில்களின் வேகத்தை அதிகரித்து வெளிநாடுகளில் உள்ளதைப்போல் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் அதிவேக ரயில் சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டில் பல வழித்தடங்களில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக அதிவிரைவு ரயில் பெட்டிகள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. ஆனால், வெறும் 315 பெட்டிகளை தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வராததால் வெளிநாட்டு தொழில் நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக ரூ.200 கோடி மதிப்பீட்டில் இரு ரயில்களுக்கான பெட்டிகளை சென்னை ஐ.சி.எப். இணைப்புப் பெட்டி தொழிற் சாலையில் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது. இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி நகரில் உள்ள இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில் ரூ. 97 கோடி செலவில் 16 பெட்டிகளை கொண்ட அதிவிரைவு ரயிலும் 18 மாதங்களில் தயாரிக்கப்பட்டது. முன்னதாக ‘ரயில் 18’ என பெயரிடப்பட்டு இருந்த இந்த ரயில் டெல்லி-வாரணாசி நகரங்களுக்கு இடையில் செயல்பட உள்ளது. இந்த ரயிலின் முதல் பயணிகள் சேவையை பிரதமர் மோடி விரைவில் கொடியசைத்து தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முற்றிலுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ள இந்த ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார்
|