|
||||||||
இராசராசசோழன் உலா - மூவருலா-2 |
||||||||
பேதை
பேதைக் குழாத்தொரு பேதை சிலபழங்
காதற் குழாத்தோர்தங் கையடைளாள் - மீது 115
பிறந்தணிய கிள்ளை பெறாத்தாயர் கொங்கை
மறந்தணிய செவ்வி மடமான் - புறந்தணியத் 116
தோகை தொடாமஞ்ஞை தோற்றத்தாற் சுற்றத்தார்க்
கோகை விளைக்கு மொருகரும்பு - பாகைத் 117
தொடைபோய முல்லைத் தொடையலே போல
இடைபோய தூய வெயிற்றாள் - உடையோன் 118
செறிந்து விடாத திருத்தோற்ற முற்றும்
அறிந்து பிறந்த வறிவோ - நெறிந்தகுழல் 119
எம்பாவை யெங்கொல்லிப் பாவை யெனப்பாடும்
அம்பாவை பாடும் படியறிவாள் - உம்பர் 120
வெருவக் கரையை மிகும்பொன்னி யன்றிப்
பருவத்து வேறு படியாள் - உருவக் 121
குறைவனை யென்றெழுதுங் கோலத்து ஞாலத்
திறைவனை யல்லா லெழுதாள் - இறைவன் 122
முழங்கேழ் கடல்கொடுத்த முத்தேழு மல்லால்
கழங்கேழு மாடக் கருதாள் - வழங்கிய 123
முற்றி லெடுத்துக் கொழித்து முழுமுத்தால்
சிற்றி லிழைக்கின்ற செவ்விக்கண் -சுற்றும் 124
பனிநீங்கத் தோன்றும் பகலவன் போல் வையம்
துனிநீங்கத் தோன்றிய தோன்றல் - முனியும் 125
பொறைவிட் டெயில்விட்டுப் பொய்கை கவிக்குச்
சிறைவிட்ட சோளேந்த்ர சிங்கம் - நறைவிட்ட 126
அந்தாமச் செங்கழுநீர் மார்ப னழகிய
செந்தா மரைக்கட் டிருநெடுமால் - வந்தானை 127
ஓகைய ராகி யுலப்பில் பலகோடித்
தோகைய ரோடத் தொடர்ந்தோடித் - தாகம் 128
தணியத் தணியத் தமரும் பிறரும்
பணியப் பணியப் பணிந்தாள் - மணிமார்பில் 129
ஆரந்தான் கண்டா ளயிரா பதந்தொழுதாள்
கோரந் தெரியவுங் கும்பிட்டாள் - வீரன் 130
படாகைப் பெரும்புலியும் பார்த்தொழிந்தா ளண்ட
கடாகத் ததிர்முரசுங் கண்டாள் - அடாதனவும் 131
சொல்லி யறியா தொழிந்தாள் சுருப்புநாண்
வில்லி யறியாது விட்டதே - நல்லார்சூழ் 132
பெதும்பை
மற்று மொருத்தி வலம்புரி யாயிரம்
சுற்றுஞ் சலஞ்சலம்போற் றோன்றுவாள் - சுற்றுடன் 133
அன்ன நடக்க நடந்தா ளருங்கிள்ளை
பின்ன ருடன்பேசப் பேசினாள் - இன்னிசையாழ் 134
பாட வதனுடனே பாடினாள் பைந்தோகை
ஆட வதனுடனே யாடினாள் - கூடிய 135
நல்லிள மானோக்க நோக்கினா ணாணிரம்பி
முல்லை முகிழ்க்க நகைமுகிழ்த்தாள் - கொல்லும் 136
மழகளிற்றின் கோடேழுச்சி யென்று மரவின்
குழவி யெயிறெழுச்சி யென்றும் - பழகி 137
எறியு மழையெழுச்சி யென்று முலகம்
அறியு முலையெழுச்சி யன்னம் - செறியும் 138
வரையேழி லுள்ள வயிரமும் வாங்கும்
திரையேழின் முத்தின் றிரளும் - தரையேழிற் 139
பொன்னும் பிலனேழிற் போகா விருள்போக
மின்னுஞ் சுடிகை வெயின்மணியும் - பின்னும் 140
பொழிலேழிற் போதும் புனையப் புனைவாட்
கெழிலேறும் நாளையே யென்னக் - கழிய 141
உழப்போ மினியென் றுடலுள்ள போழ்தே
எழப்போக வெண்ணு மிடையாள் - மழைத்துப் 142
புடைபோ யுளகம் பொதுக்குவதன் முன்னே
கடைபோ யுலகளக்குங் கண்ணாள் - உடையதன் 143
சேரிச் சிறுசோறுஞ் சிற்றிலும்போய்ச் சில்லணிபோய்ப்
பேரிற் பெருஞ்சோற்றுப் பேரணியாள் - ஒரையில் 144
தன்னாய நிற்பத் தனிநா யகன்கொடுத்த
மின்னாயஞ் சேவிப்ப வீற்றிருப்பாள் - மென்மலர் 145
மேய சிறுமுல்லைப் பந்தர் விடவெடுக்கும்
பாய பருமுத்தின் பந்தராள் - நாயக 146
உச்சியிற் கொண்டை முடிப்பி னுலகுடையோன்
முச்சியிற் சூட்டு முடிக்குரியாள் - நிச்சமும் 147
நல்லுயிர்ப் பாவை துணைபெற நாயகன்
கொல்லியிற் பாவை கொளவிருப்பாள் - மெல்லியற் 148
பாங்கிக்கு நங்கோமன் விந்தைப் பசுங்கிளியை
வாங்கித் தரப்போய் வணங்கென்பான் - ஆங்கொருத்தி 149
மாயமான் வேண்ட மறாதானை வான்மதியின்
மேயமான் வேண்டி விடப்பெறுவாள் - சேயவொளி 150
தென்பா லிலங்கைவாழ் தெய்வ மணிபணிப்பீர்
என்பாவை பூண வினிதென்பாள் - அன்பால் 151
உயிர்த்துணைப் பாங்கி யொருநோன் புணர்த்த
எயிர்புறத் தெல்லாருஞ் சூழ - அயிற்படை 152
வீரனை யெய்த வியன்காவிற் சென்றெய்தி
மாரனை நோக்கி வழிபட - மாரன் 153
படியில் கடவுட் பணைமுழங்க வென்றிக்
கொடியின் மகரங் குமுற - நெடிய 154
அலகி லசோக நிழற்ற வடைய
உலகில் மதுகரமூதக் - கலகித் 155
தலங்க லடவிக் குயிற்குல மார்ப்ப
விலங்கன் மலயக்கால் வீசக் - கலந்தெழும் 156
ஆவி யகிலொடு நீரோ டரமகளிர்
தூவிய தண்ணறுஞ் சுண்ணமும் - காவில் 157
விடவிட வந்துயிர் மீதடுத்துப் போன
வடிவும் பழம்படியே வாய்ப்பக் - கொடியிடை 158
எண்ணிய வெண்ண முடிப்ப வவளெய்தும்
புண்ணியம் போலப் பொழில்புகுந்தான் - அண்ணல் 159
சரம்போலுங் கண்ணி தனக்கனங்கன் றந்த
வரம்போல் வளமறுகில் வந்தான் - வரும்போதில் 160
ஏன்று மதன னியமியம்ப வேயனகன்
மூன்று முரசு முழங்கின - தோன்றாத 161
வாரிக் களிறு முழங்கவே மானதன்
மூரிக் களிறு முழங்கியது - வேரித்தார் 162
கற்கு மசோக நிழற்றவே பார்கவித்து
நிற்குங் கவிகை நிழற்றியது - முற்கொண்டு 163
மற்றை யலகின் மதுகர மூதவே
ஒற்றை வலம்புரி யூதியது - முற்றாத 164
சொற்குதலைக் கோகுலங்க ளார்க்கவே சோளேசன்
அற்கமணிக் காகளங்க ளார்த்தன - தெற்கெழுந்த 165
மல்லன் மலயக்கால் வீசவே மானதன்
மெல்லென் கவரிக்கால் வீசியது - மெல்லியலும் 166
காமன் பெருநோன்பு கைவந்த தென்றெதிரே
கோமைந்தன் வேழங் குறிகினாள் - கோமனும் 167
மல்கு மூவகைக் கலுமி வரவரப்
பில்கு மதர்வைப் பெரும்பரப் - பல்குலும் 168
கொங்கைப் புதுவரவுந் தோளுங் குறைநிரம்ப
மங்கைப் பருவத்தை வாங்கினாள் - மங்கை 169
திருக்கொள்ளு மார்பற்குக் காமவேள் செவ்வேள்
வெருக்கொள்ளுஞ் செவ்வி விளைத்தாள் - பெருக்க 170
ஒருவ ரொருவர்க் குருகி யுருகி
இருவரு மீடழிய நோக்கி - வருகாமன் 171
செஞ்சாயல் வல்லியையுஞ் செந்தா மரைத்தடங்கண்
மஞ்சாய கோல மணாளனையும் - அஞ்சாதே 172
கொய்யும் பகழி கரும்பிற் சுரும்பிற்கோத்
தெய்யுந் தரமே யெழப்போனான் - தையல் 173
மங்கை
ஒருத்தி தரள மிருநிரைகொண் டொப்பித்
திருத்தி யனைய வெயிற்றாள் - கருத்தின் 174
நிலையிற் சிறந்த நிகரிலா மேரு
மலையிற் பிறந்த வயிரம் - அலையிற 175
பழக்கச் சலஞ்சலம் பாற்கடலே போல
முழக்கக் கருவுயிர்த்த முத்தம் - தொழத்தகும் 176
முன்னை யுலக முழுதுந் தருமுரசு
மன்ன னபிடேக மாணிக்கம் - முன்னவன் 177
பாற்கட னீங்குநா ணீங்கப் பழம்படியே
நாற்கட னாயகனை நண்ணுவாள் - மேற்கவின 178
பண்டு கடல்கடைந்தும் பாரெடுத்தும் வில்லிறுத்தும்
கொண்ட துணைவியருங் கூசுவாள் - புண்டரிகத் 179
தாடும் பொழுதினு மன்னப் பெடையயிர்ப்பப்
பாடு மழலைப் பரிபுரத்தாள்- நீடிய 180
தூசுகள் வெள்ளென்று தூயன சேயன
கோசிக மாக்குங் குறங்கினாள்- கூசிப் 181
பணியு மரசுப் பணிச்சுடிகை யேகோத்
தணியு மரைப்பட் டிகையாள் - துணியுங்கால் 182
அற்றுண் டிலதென்று மம்மருங்கு லின்றெமக்குப்
பற்றுண் டெனுமுதர பந்தனந்தாள் - கொற்றவன் 183
சங்க நிதிமுத்தத் தாமத்தாள் பத்மநிதி
துங்க நவரத்னத் தோள்வளையாள் - புங்கம் 184
தொடுக்கு மலரோன் சுறவுக் குறவு
கொடுக்கு மகரக் குழையாள் - அடுத்துப் 185
பணிதந் தலகில் பராவெடுத்துத் சிந்தா
மணிதந்த சூளா மணியாள் - அணியே 186
பரவி விறலியரும் பாணருந் தற்சூழந்
திரவி புகார்பாடு மெல்லை - வரவரக் 187
கொங்கைக்குந் தோளிணைக்கு மாற்றாக் கொடிமருங்குல்
நங்கைக்கு வந்தொருத்தி நாயகியே - கங்கைத் 188
துறைவன் பொறையன் றமிழ்நாடன் சோணாட்
டிறைவன் றிருப்பவனி யென்றாள் - பிறைநுதலும் 189
வேனிற் கணிய குயில்போன்றும் வீழ்தாரை
வானிற் கணிய மயில்போன்றும் - தானே 190
வரவே நினையு மனக்களியா லிற்றை
இரவே நமக்கிடையூ றென்றாள் - இரவில் 191
செயிர்க்கரங்கள் வேண்டா டிருக்குலத்து வெய்யோன்
வெயிற்கரங்க ளூடாட வேண்டும் - உயிர்க்கொலைசூழ் 192
தென்மலயத் தென்றலை யோட்டிப் புலியிருந்த
பொன்மலைய வாடாய் புகுதென்னும் - முன்மலைந்த 193
கார்க்கடல் வாயடங்க நாயகன் கண்வளர்ந்த
பாற்கடல் வாராய் பரந்தென்னும் - மேற்பரந்து 194
கார்பாடும் புள்வாய்க் கடுப்பெய் தமுதிறைவன்
பேர்பாடும் புள்வாயிற் பெய்கென்னும் - ஈர்குரல் 195
அன்றிற் கொழிய மகன்றிற்கே யாக்குமிம்
முன்றிற் பனையு மெனமொழியும் - இன்றிரவை 196
ஊழிக் குயில்காய்ந் தொருபுலரி கூவிய
கோழிக்கே சோலை கொடீரென்னும் - வாழிய 197
பள்ளி யெழுச்சி பவனி யெழுச்சிதரும்
வெள்ளி யெழுச்சி யெனவிளம்பும் - நள்ளிருட் 198
கங்குற் கடற்கெல்லை யிவ்வாறு கண்டுவந்த
மங்கைப் பருவத்து வாணுதலும் - பொங்கொலிநீர் 199
வையகங் காவலற்குப் பெய்யு மலர்மழைக்குக்
கொய்பொழில் சென்று குறுகினாள் - செய்ய 200
கொடுங்குழை மின்னக் குயில்கொழுதக் கோத
விடுங்குழை தேமாவின் மின்ன - நெடுங்குழை 201
வல்லிக் கொடிய முறுவலிப்ப வந்தெதிர்
முல்லைக் கொடியு முறுவலிப்ப - மெல்லியற் 202
பாந்தளுந் தோற்கும் பகட்டல்குல் கைம்மலரக்
காந்தளு நின்றெதிர் கைம்மலரப் - போந்தார் 203
பரவு மரப்பாவை கொள்ளப் பயந்த
குரவு மரப்பாவை கொள்ளப் -புரிகுழற் 204
சோலையின் மான்மதஞ் சூழ்வர வேழிலைப்
பாலையின் மான்மதம் பாரிப்பச் - சோலையின் 205
வாங்கும் புதுமது வாணுதல் கொப்புளிப்பக்
கோங்கு மதுவெதிர் கொப்புளிப்ப -ஆங்குத் 206
திருவஞ்சு கோலத்தாள் செவ்வியா லெல்லாம்
பருவஞ்செய் சோலை பயப்பப் - பெருவஞ்சி 207
கொய்தன கொய்தன யாவும் பலகூறு
செய்தனர் செய்தனர் பின்செல்லக் - கொய்யாத 208
பொன்மல ராயம் பொழியப் பொழிற்கொண்ட
மென்மலர் கொண்டு வௌிப்பட்டாள் - மன்னனும் 209
எப்போதிற் போது மொருபோதி லேந்திழை
கைப்போதிற் பெய்தன கண்டருளா - அப்போதே 210
செங்கை தடவந்துஞ் சீறடி தீண்டியும்
கொங்கை கணங்கெறிந்துங் கொப்பளித்தும் - மங்கை 211
பரிசி லுருவம் பயந்தன வென்று
குரிசி லெதிர்கவர்ந்து கொண்டான் - தெரிவரிய 212
தூசுந் துகிலுந் தொடியுங் கடிதடஞ்சூழ்
காசும் பலகாற் கவர்ந்ததற்குக் -கூசி 213
இலகுஞ் சுடர்முடியு மியானையு மீரேழ்
உலகுங் கொடுப்பானே யொப்பப் - பலகாற் 214
கொடாத திருநோக்க முற்றுங் கொடுத்து
விடாது களிறகல விட்டான் - அடாதான்பால் 215
மடந்தை
ஈரடியான் மூவுலகுங் கொண்டானை யெப்பிறப்பும்
ஓரடியு நீங்காதா ளோராணங்கு - சீருடைய 216
மானுங் கலையும் வளர வுடன்வளர்ந்து
தானு மதிய மெனத்தகுவாள் - பானின்று 217
அனலுங் குழைமகர மஞ்சப் புடைபோய்க்
கனலுங் கயலனைய கண்ணாள் - மினலால் 218
இருளுடைய மேனின் றெறிசுடிகைப் பாப்புச்
சுருளுடைய வீங்கிய தோளாள் - அருளொடும் 219
தம்புறஞ் சூழ்போதத் தாயரே வீக்கிய
வம்பற வீங்கும் வனமுலையாள் - பைம்பொனின் 220
பண்ணிறக் காஞ்சியுங் கட்டிய பட்டிகையும்
கண்ணிறப் போய கடி தடத்தாள் - தண்ணுறந்தார் 221
மின்மணி மோலியான் வீதி வரவேற்றுத்
தன்மணி மாளிகைத் தாழ்வரையிற் -பொன்னுருவில் 222
தைத்துத் துகிரு மரகதமுந் தாறாக
வைத்துக் கமுக வளஞ்செய்து - முத்தின் 223
பொலன்றோ ரணநிரைத்துப் பொன்னடுத்த மேக
தலந்தோய் விசால தலத்து - மலர்ந்தபூங் 224
கற்ப தருநிரைக் கற்ப லதைபடர்ந்து
பொற்ப மிசையடுத்த பூம்பந்தர் - நிற்பப் 225
புகரற்ற ரத்ன விதானமேற் போக்கி
நகைவச்ர மாலையே நாற்றி - பகல்விளங்கா 226
மைவிளக்கு வையாதே மாணிக்க வர்க்கமே
எல்விளக்கு மாசு வெதிரெடுத்து - நொல்விய 227
பூநறுஞ் கண்ணப் பொடியடங்க வீசிய
நான நறுநீர்த் தளிநளிய - மேனிலையிற் 228
கங்கையி னீர்முகந்தோ காவிரியி னீர்கொணர்ந்தோ
கொங்கை யினைநீர்க் குடநிரைத்து - எங்கும் 229
அசும்பு பொலன்கொடியா லவ்வெல்லை யுள்ள
விசும்பு தவிர வலிக்கிப் - பசும்பொன்யாழ் 230
முட்ட முயன்ற விறலியர் முன்னிருப்ப
இட்ட தவிசின் மிசையிருந்து -பட்டினஞ்சூழ் 231
பொன்னிக்குங் கோதா விரிக்கும் பொருநைக்கும்
கன்னிக்குங் கங்கைக்குங் காவலனைச் - சென்னியை 232
தானைப் பெருமானை நல்ல சகோடங்கொண்
டியானைப் பெருமானை யேந்தெடுப்பாள் - மேனாள் 233
பேதை |
||||||||
by Swathi on 28 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|