சென்னை அண்ணாநகர், அரினா அரங்கில் இராசராசன் பிறந்த நாள்(சதய) விழா ஆசிய தமிழ்ச்சங்கத் தலைவர் விசாகன் (இந்தோனேசியா) தலைமையில் நடை பெற்றது.
தமிழ் எழுச்சிப் பேரவையின் செயலர் முனைவர் தஞ்சை இறையரசன் வரவேற்றார்.
ஆறாம் வகுப்பு மாணவி தேவிஸ்ரீ (திரு. சுரேஷ் அவர்களின் மகள்)பாரதிதாசன் பாடலை மிக இனிமையாகப் பாடினார்.
சிறப்பு விருந்தினராக, திரு. டி.எஸ். ஸ்ரீதர் இஆப,கூடுதல் தலைமைச் செயலர் (ஓய்வு),விழாவில் கலந்து கொண்டு இராசராசனுக்குப் புகழாரம் சூட்டி, உரையாற்றினார்.
சரவணராஜாவின் நிலா காமிக்ஸ் வெளியீடான'பொன்னியின் செல்வன்' படக்கதை ஆங்கில இணையப் பதிப்பு (முதல் அத்தியாயம்) வெளியிட்டார். திரு. விசாகன் தமிழ்ப் பதிப்பை இணையத்தில் வெளியிட்டார். குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதுடன் தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும் குழந்தைகள் மனத்தில் பதிக்கும் திரு சரவணராஜா அவர்களுக்குப் பல தமிழ் அமைப்புகள் சார்பில் பொன்னாடை போர்த்தினர்.
தமிழகப் பதின்மப் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலர்,கல்வியாளர் இளங்கோவன் தயாளன் முன்னிலையில், திரைப்பட இயக்குநர் திருவள்ளுவர் கலைக் கூடம் வி. சேகர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பன்னாட்டுத் தமிழ்க் கல்வித்துறைப் பேராசிரியர் குறிஞ்சிவேந்தன், கி. ஸ்ரீதரன் தொல்லியல் துறை (ஓய்வு), சு.க.ஸ்ரீதரன், பேரரசன் இராசராசன் வரலாற்று ஆய்வு மையம், சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவின் செயலர் மருத்துவர் உதய்சங்கர் ஆகியோர் சதய விழா உரையாற்றினர்.
தமிழக ஏழை மாணவர்களுக்குக்கல்வி உதவித் தொகைகள் வழங்கியும், குவைத்தில் விபத்துக்குள்ளான தமிழகத் தொழிலாளர்களுக்கு மருத்துவம், விமானப் பயணம், தமிழகத்தில் நிலம் வழங்கியும் சமுதாயத் தொண்டாற்றும் கவிஞர் எழுத்தாளர் வித்யா சாகர்க்குப் பலரும் பாராட்டு தெரிவித்தனர். தமிழ் சொற்பிறப்பியல் களஞ்சியம் 5 ஆம் மடலம் வெளியிட செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார்க்கு உரூபா ஓர் இலட்சம் தமிழ் எழுச்சிப் பேரவையின் மூலம் வித்யாசாகர் வழங்கியிருந்தார். தமிழ் மண் பதிப்பகம் 5 ஆம் மடலம் பதிப்பை அவர்க்கு வழங்கியது.
குவைத்து கவிஞர் எழுத்தாளர் வித்யாசாகர் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் இசைத்து, சதய நாளில் பிறந்த இராசராசன், கவிஞர் யார் கண்ணன், கவிஞர் குவைத் வித்யாசாகர், பொன்னியின் செல்வன் படக்கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வரும் மாணவி நிலா ( திரு. சரவண ராசா மகள்) ஆகியோர்க்கு வாழ்த்து தெரிவிக்கப் பெற்றது.
அறிஞர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கவிஞர்கள் பில்டெக் அருண்மொழி, தஞ்சை சுமி. சுமித்திரா இருவரும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.
ஆசியத் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுச்சிப் பேரவை ஆகியன தமிழ்ப் பல்கலைக் கழகப் பன்னாட்டுத் தமிழ்க் கல்வி மையத்துடன் இணைந்து தமிழ் மாநாடும் இராசராசன் சதய விழாவும் பாலி தீவில் நடத்தப் பெறும் என இறையரசன் அறிவித்தார்.
அரினா இயங்குபட நிறுவனத்தின் தலைவர் சரவணராஜா நன்றியுரையாற்றினார்.
|