LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- நீல.பத்மநாபன்

அரிசி

சற்றுத் தொலைவில் நீரில் துடுப்புகள் சலசலக்கும் ஓசை...

காலூன்றி நின்ற வையத்திலும், அண்ணாந்து பார்த்த வானிலும் இருள்தளம் கெட்டி நிற்கையில், விருட்சங்களுக்கு மட்டும் எப்படித் தோற்றம் இருக்க முடியும்?

மண்ணிலும் காற்றிலும் ஈரம் சொட்டுகிறது. அடுத்த மழை எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம்...

மேற்குவான்மூலையில் அடிக்கடி மின்னலின் மின்சார வீச்சு... அதோடு இடியோசையும் சடசடவென்கிறது.

நெய்யாற்றில் மழை வெள்ளம் குமுறிக் கொந்தளித்து, ஆர்ப்பரித்து ஓடி, இங்கே பூவாறில் வந்து சேருகையில் சமுத்திரம் போல், பரந்து படர்ந்து அலையெழுப்பி ஓடிக் கொண்டிருக்கிறது...

சற்றுத் தொலைவில் கடல் இரைந்து கொண்டிருந்தது.

பரந்து கிடந்த ஆறே இருள் அரூபியாக இருக்கையில், காதரின் தோணிக்கு மட்டும் ரூபம் எப்படி இருக்க முடியும்...? துடுப்புத் துழையும் சத்தம் மட்டும் காட்டாற்று வெள்ளத்தின் இரைச்சலின் இடையில், மெல்லியதாய்க் கேட்டுக் கொண்டிருந்தது.

கரி பிடித்த லாந்தரின் முணுமுணுக்கும் மங்கிய வெளிச்சம்கூட இல்லாமல், இந்த மழை வெள்ளத்தில் அனாயாசமாக படகைச் செலுத்திக் கொண்டிருக்கும் காதர் காக்காவை நினைத்த போது, இருளுடன் இருளாக கரையில் நின்று கொண்டிருந்த மூக்கனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

கேரள எல்லைக்குள் எந்நேரத்தில் வேண்டு மானாலும் பிரவேசிக்க, பிரத்யேக அனுமதி பெற்று ரோந்து சுற்றிக் கொண்டிருக்கும் தமிழக ஊர்க்காவற்படை எப்போது, எங்கிருந்து, எப்படி, எங்கே தோன்றிவிடுமென்று நிர்ணயிக்க முடியாது... பீடியின் மினுமினுப்புக் கூட ஆபத்தானது...!

பீடியை ஒரு தடவை கூட தீர்க்கமாய் இழுத்துவிட்டு, கீழே எறிந்தான் மூக்கன். ஈரத்தில் புசுபுசுத்து தீமுனை அணைந்தது.

வேறு ஒரு சில பேர்கள் கூட சைக்கிளில் அங்கே வந்திறங்குகிறார்கள்...

''ஆரு மூக்கனா...?''

''ஆமா... ஆரு சைமனா?''

''ஆரு உம்மறா?''

''ஆரு ராமனா?''

அங்கே சப்தங்களுக்கு உருவமும், தோற்ற வேறு பாடுகளும் இருந்தன போலும்! குரலின் வித்தியாசங்களில் இருந்து ஆட்கள் பரஸ்பரம் அறிமுகமாகிறார்கள்; இனம் கண்டு கொள்கிறார்கள்...

எல்லோரும் ஒரு முகமாக - ஒற்றுமையாகக் குளிரைச் சபித்தார்கள்...

ஒருவருக்கும் தரையில் கால் பாகவில்லை... எங்கோ அவர்களுக்கு முற்றிலும் அஞ்ஞானமான மூலைகளில் இருந்து - முனைகளில் இருந்து, அபாயம் அவர்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது; முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்த நொடியில் என்று சொல்வதற்கில்லை. அது அவர்கள் மீது பைசாச வெறியோடு பாய்ந்து பிய்த்துப் பிடுங்கி நசுக்கிவிடும்!

ஒரு பத்த இலை உதிர்ந்து விழும் ஒலிகூட சிறைத் தண்டனையின் அபாய அறிவிப்பாக அவர்களை விழித்துப் பார்த்துப் பயமுறுத்துகிறது.

டெமாக்ளஸின் கட்கம் போல், தலைக்கு மேல் நூலிழையில் அசைந்தாடிக் கொண்டிருந்த அபாயத்திலிருந்து, எந்தக் கணத்திலும் ஓடித் தப்பிக்க தாயரெடுத்தவாறு, நாலாபுறமும் பரக்க பரக்கப் பார்த்தவாறு, இருளில் பிசாசுக்களைப் போல் அந்த ஏ¦ழுட்டுப் பேர்களும் நிற் கிறார்கள்.

அப்பாடா...! இருளில் இழையும் ஒரு ஆமையைப் போல் தோணி கரையை அடைந்தது... காதர் எறிந்த கயிற்றை இழுத்து கரையில் நின்ற மரத்தில் மூக்கன் கட்டியதும், கட்டம் ரொம்ப சுறுசுறுப்பாகி விட்டது...

சைக்கிள் கேரியரில் வைத்து அவர்கள் கொண்டு வந்திருந்த மரவள்ளிக் கிழங்கு மூட்டைகள் படகுக்கும், படகில் இருந்த அரிசிச் சாக்குகள் ஒவ்வொருவர் சைக்கிள் கேரியருக் கும் இடம் மாறிக் கொள்ளும் பரபரப்பு.

எல்லோருக்கும் பயம் கலந்த ஒரே துடிதுடிப்பு.

படகு கிடந்து தத்தளிக்கிறது...

''லே... கவனம்... கவனம்... மலைவெள்ளத்துக்க பயங்கர ஒழுக்கு... இங்கணெயானா அசல் கசம்... வெப்பராளப் பட்டூட்டு தண்ணீலே விளுந்துட்டா பொறவு பிணம் கூட கிடைக்காது.... சொல்லிப்போட்டேன்...''

இப்படி அடிக்கடி அடித்தொண்டை கர கரக்கச் சொல்லியவாறு டார்ச்சை மின்ன வைத்து மின்ன வைத்து அணைக்கிறார் காதர். அதற்கிடையில் மடியிலிருந்து டயரியை வெளிய எடுத்து ஒவ்வொருத்தர் கணக்கையும் தனித்தனியாக அதில் எழுதிக் கொள்வதோடு சிலரிடமிருந்து பணம் வாங்குவதும், வேறு சிலருக்கு எண்ணிக் கொடுப்பதுமாகச் சுறுசுறுப்பாக இயங்குகிறான் அவன்.

இத்தனை நேரமாய் குமுறிக்கொண்டிருந்த மழையும், இதுதான் சமயமென்று சடசடவென்று பெய்யத் தொடங்கியது.

''எல்லாரும் கொஞ்சம் கவனியுங்கோ... காருக்க சத்தம் கேக்குல்ல...? என்று சடக்கென்று காதர் சொன்னானோ இல்லயோ, எல்லோருக்கும் வயிறு கலங்கியது.

கைகால்களுக்கு ஏன் இந்த திடீர் சோர்வு?

எல்லாரும் ஸ்தம்பித்துப் போய்விட்டார்கள்.

மழையில் சத்தத்தின் இடையில், இப்போது எல்லாருக்கும் அந்த ஒலியைத் தெளிவாய்க் கேட்டு, இனம் கண்டு கொள்ள முடிகிறது.

''போலீஸ்வேனேதான்...''

''இடி வண்டி...!''

எல்லாருக்கும் பொறி கலங்கியது... ஒரே ஒரு க்ஷணம் தான்! ''உம்... சட்டுணு சட்டுணு... தோணிக்கயத்தை அவுத்துடு... நா அப்படி ஒதுங்கிப் போயிரட்டும்...'' என்று முண்டாசை இறுக்கிவிட்டு, லுங்கியை மடக்கி உடுத்தியவாறு காதர் சொன்னதும், எல்லாரும் பரபரப்போடு சுறுசுறுப்பானார்கள்.

விளாசு விளாசென்ற மழை அடித்து நொறுக்கிப் பெய்கிறது....

படகில் ஏற்ற வேண்டியதும், படகிலிருந்து இறக்க வேண்டியதும் முடிந்துவிட்டிருந்தது.

சிலர் சைக்கிள் கேரியரில் முழுச் சாக்கை வைத்து கட்டிக்கொண்டிருந்தார்கள். வேறு சிலர் சைக்கிளுக்கும் தோணிக்கும் இடையில் மூட்டையுடன் நிற்கிறார்கள்.

கயிறை அவிழ்த்துவிட்டு நீரோட்டத்தோடு ஓட்டமாக, கரையோரமாய் படகைச் செலுத்தியவாறு தண்ணீரில் சரிந்து வெள்ளத்தின் ஓட்டத்தில் சலசலத்தவாறு மூடிக் கிடந்த மரங்களின் ராட்சசக்கிளைகளின் இடையில் சென்று மறைந்தான் காதர்.

சைக்கிளில் வைத்துக் கட்டியது பாதி, கட்டாதது பாதியாக சிலர் பக்கத்துப் புதர்களுக்கு சைக்கிளை உருட்டியவாறு மரணப் பாய்ச்சல் பாய்கிறார்கள்.

இயக்கவேகம் கொண்ட பயங்கர நிமஷங்கள்... அகப்பட்டுக்கொண்டால்...?

போச்சு... எல்லாம் போச்சு...! பிடிப்பவர்கள் உடனடித் தரும் 'கைநீட்டத்'தின்கூட, ஏழோ எட்டோ மாசம் கம்பி எண்ண வேண்டி வந்துவிட்டால்...

வீட்டில் பெண்டாட்டி புள்ளைகள் கதி...? அப்பா அம்மாவின் கதி? மூக்கனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை...

எங்கே ஓடுவது? எப்படிப் பதுங்குவது?

காரின் வெளிச்சம் தெரிகிறது. போலீஸ் வேனா... இல்லை ஜீப்பா?

நினைத்துப் பார்க்கவோ, நிதானிக்கவோ துளிகூட நேரமில்லை; அவகாசமில்லை.

உடனடி முடிவு செய்ய வேண்டும்...!

கூட்டாளிகள் யாவரும் சைக்கிளில் இருக்கும் அரிசி மூட்டையுடன் பத்திரமாய் ஒளிந்து கொண்டு விட்டார்கள.

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

கேரியரில் வைத்து பலமாய்க் கட்டியிருந்த ஒரு சாக்கு அரிசியோடு, சைக்கிளை, செடி கொடிகள் உள்ள ஆற்றோரமாய கொஞ்சம் தூரம் உருட்டிக் கொண்டு வெகு வேகமாய் ஓடினாள்... சடக்கென்று சைக்கிளை தண்ணீரில் இறக்கி கரையோடு கரையாய்ச் சேர்த்து அழுத்தி பலமாகப் பிடித்தபடி, அவனும் ஆற்றில் இறங்கினான்.

ஏற்கெனவே மழை வெள்ளத்தாலும், வியர்வை யாலும் தொப்புத்தொப்பென்று நனைந்து போயிருந்த உடம்பில் ஆற்று நீரின் பனிக்கட்டியைப் போன்ற குளிர், உறைக் காமலிருக்கவில்லை.

சைக்கிளில் குறுக்கேச் சட்டத்தின் உள்வழியில் இருகைகளையும் நுழைத்து, தரையின்மீது வந்து விழுந்து கிடந்த மரக்கிளைகளை உடும்புப் பிடியாகப் பிடித்தவாறு ஆற்றின் ஆழம் தெரியாத அடிமட்டத்து மண்ணில் போய்ச் சேராத கால்களோடு, அரிசி மூட்டை நீரில் மூழுகி விடாமலிருக்க தன் கை புஜங்களில் தொங்கும் சைக்கிளை தூக்கலான கரை மண்ணோடு மண்ணாகத் தன் முழு உடம்பால் அழுத்தித் தாங்கியவாறு, தண்ணீரில் கழுத்தளவுக்கு முழுகி அந்தரத்தில் நின்றான் அவன். கரையின் மண் விளிம்பு தலைக்கு மேல் நாலைந்து அடி உயரத்தில் இருந்தது.

பிராணபயம்... உயிரைக் காக்கும் வெறி...

அபாயத்தை நேருக்குநேர் சந்திக்கையில் மனிதனுக்கு வந்துவிடும் அபார - அசாதா ரணமான தைரியம்தான் மூக்கனிடமும் முழுமூச்சாய் வேலை செய்தது.

உயிருக்கே ஆபத்தான வினாடிகள்... புஜங்களில் சைக்கிளும் அரிசி மூட்டையும் கீ§ழு அழுத்த, உடம்பை நீரோட்டம் வலுக்கட்டாய மாக பக்கவாட்டில் இழுக்கிறது.

பிராண ரட்சைக்காக மரக்கிளையை வீறோடு பற்றியிருக்கும் கரங்கள் மட்டும் ஓய்ந்து விட்டால்?

அன்போடு அரவணைத்து இறுகத் தழுவித் தன்னில் ஒன்று கலக்கச் செய்ய ரொம்ப நெருங்கி வந்து கொட்டுக் கொட்டென்று அவனையே பார்த்துக் கொண்டு நிற்கிறது மரணம்...

அது எந்த உருவில்...?

நீரில் முழுகி துர்மரணமாகவா?

இது என்ன உயிர் வாழும் சமரா: இல்லை; உணவைக் காத்து உணவைத் தேடி, ஒரு குடும்பத்தின் பட்டினிச் சாவைச் சமாளிக்கும் புண்ணிய வேள்வியா?

தமிழக போலீஸ் வேன் ஆர்ப்பாட்டமாகச் சற்றுத் தொலைவில் வந்து நிற்கிறது.

சடசடவென்ற மழை இன்னும் ஓயவில்லை.

திமுதிமுவென்று வேனிலிருந்து இறங்கி யவர்கள் டார்ச் ஒளியைப் பாய்ச்சி அங்குமிங்கும் பாய்ந்து இரையைத் தேடுகிறார்கள்.

தன் தலைக்கு மேல் கரையில் காலடி யோசை...

குலதெய்வங்களை எல்லாம் பிரார்த்தித்துக் கொண்டு, இமைகளை மூடி ஒருவித மோன தியானத்தில் அவன் மூழ்கினான்.

பார்த்துவிடுவார்களா?

பார்த்துவிட்டால்...?

பாவம்... வேலம்மை தேடித்தேடி இருப்பாள்... அம்மைக்கு சீக்கு எப்படி இருக்கோ? வீட்டிலிருந்து இறங்கும்போது அவளுக்கு நல்ல நினைவுகூட இல்லை...

கோமுவுக்குக் காய்ச்சல் எப்படி இருக்கோ? இந்த நெருக்கடியான நாளில், வீட்டில் தான் மட்டும் இல்லாவிட்டால்...? என்னாண்ணு மூண்டு கேக்க வேறெ ஆரு இருக்கா? ஆறோ ஏழோ மாசம் ஜெயில் விருந்தெல்லாம் கழிஞ்சு, திரும்பிவரும்போது குடிசையில் யார் யார் மிஞ்சுயிருப்பார்களோ என்னவோ!

''ஐயோ...''

யாரது? மேலே யாரோ அகப்பட்டுக்கொண்டு விட்டார்கள் போலிருக்குது.

''லே... இப்படி வாலே... எவ்வளவு நாளாட்டு இந்த வேலை நடக்கூ...? திருட்டு ராஸ்கல்..."

"ஐயோ... பொன்னு யசமானே... இனி மாட்டவே மாட்டேன்..."

"ஐயோ..."

"ஐயோ..."

பாவம்... நொண்டி ராமன்தான்.

செத்தான்!

இனி அடுத்தது யாரோ?

'நான்தானா...?'

காலில் என்னவோ வழுவழுக்கிறது.... நீர்ப்பாம்பா...? எதுவாக இருந்தாலும் என்ன செய்ய முடியும்! கைகள் இரண்டும் மேலே அல்லவா தொங்குகிறது... அதை விட்டு விட்டால்.

பாவம் ராமன்...! இடது காலை கொஞ்சம் இழுத்தது .

திருவனந்தபுரத்துக்கு வந்து கொண்டிருந்த ஒரு கேரளா பஸ், களியிக்காவிளை செக் போஸ்டின் முன் வந்ததும், நிற்கிறது.

திமுதிமுவென்று பஸ்ஸ¤க்குள் நாலைந்து பேர்கள் நுழைகிறார்கள்... துப்பாக்கி தாங்கிய போலீஸ் ஜவான்கள் வெளியில் தயாராக நிற்கிறார்கள்.

பஸ் பிரயாணிகளின் பெட்டி படுக்கைகளை, பைகளை எல்லாம் பிடித்திழுத்துத் திறந்து உள்ளே இருந்தவைகளைத் தலைகீழாக கவிழ்க்கிறார்கள்... ஏழ்மையின் தரித்திர முத்திரையோடு பரிதாபமாகத் தெரிந்தவர் களிடம் முற்றுகை பலமாக இருக்கிறது...

சில பைகளில் அழுக்குத் துணிகள்... சில பைகளிலிருந்து வடசேரிச்சந்தைக் காய்கறிகள் உருண்டோடுகின்றன... சில பைகளில் கன்யாகுமரி கலர் மண்ணு...! சில கிராமத்துப் பெண்களின் பைகளில் இருந்து, கந்தலாகிப் போன கண்டாங்கி, எண்ணைச்சிக்கு வாடை கொண்ட சவரி, இவைகளுடன் கூட கீழே சிதறிய சம்பா அரிசிமணிகளும் கைப்பற்றப் படுகின்றன.

அப்போதான், பார்க்க பிச்சைக்காரன் போலிருந்த ஒரு நொண்டி, "ஐயோ... பொன்னு எசமானே... தர்ம தொரையே... விட்டுரும்... விட்டுரும்... நா வீடுவீடா ஏறி இறங்கி, பிச்சை எடுத்து சம்பாரிச்சது... விட்டுரும்... விட்டுரும்..." என்று கண்ணீர் வடித்துக் கதறியதை ஒன்றும் பொருட்படுத்தாமல், கந்தலாகிப்போன அவன் வேட்டியின் உள்ளிருந்து ஒரு சின்ன அழுக்குத் துணி மூட்டையை முரட்டுத்தனமாய் கைப்பற்றி இழுத்தான், பரிசோதனைச் சிப்பந்தி.

பஸ்ஸில் ஒரே பரபரப்பு...

பிரயாணிகள் இரு கட்சிகளாக பிரிகிறார்கள்... "அடடா...! இப்படியுண்டா அநியாயம்? இவுனிகளுக்கெல்லாம் எவ்வளவு துணிச்சல் இருக்கணும்? சார்... இப்படிப்பட்ட ராஜத் துரோகிகளை எல்லாம் தூக்கிலே ஏத்தணும்... அப்பம்தான் நாடு நல்லாவும்!" என்றார் கோட்டும் ஸ¥ட்டுமாக கம்பீரமாய் காட்சியளித்த ஒருவர், அழகாய் இருந்த தன் தோல் பையை மடியில் பத்திரப்படுத்தியவாறு.

"எனக்கு நாகர்கோவிலில் சொந்த வயலி ருந்தும்கூட, என் குடும்பம் இருக்கும் திருவனந்தபுரத்துக்கு நெல்லுக் கொண்டு போக முடியாமே தட்டளியேன்" என்றார் ஒரு மூக்குக் கண்ணாடி ஆசாமி.

"கேரளா பஸ்ஸல்லவா...! இந்த டிரைவருக்கும், கண்டக்டருக்கும் கூட பங்கு இருக்கும் சார்... இவுனுகளை எல்லாம் டிஸ்மிஸ் செய்யணும்..."

இப்படி ஒருவர் ஆக்ரோஷமாக அலறியதும், பரிசோதனை அதிகாரி, டிரைவரையும் கண்டக்டரையும் பஸ்ஸை விட்டு கீழே இறங்கச் சொல்லி அதிகாரத் தோரணையில், "பிரயாணி களின் பைகளில் அரிசி ஏதாவது இருக்காண்ணு செக் பண்ணாமல் எப்படி ஓய் பஸ்ஸில் ஏற்றலாம்...? உம்.. உம்ம லைஸன்சை எடும்.. பாட்ஜ் எங்கே? பேரைச் சொல்லும்?" என்று சத்தம் போட்டார்.

"சார் நாங்க பாத்துத்தான் ஏத்தினோம்... ஏறும்போது இதையொண்ணும் நாங்க காணவே இல்லை சார்..."

அழமாட்டாக் குறையாக கண்டக்டர் அவரிடம் சொல்கிறான்.
அழுகையும் கதறலையும் ஒன்றும் பாராட்டாமல் அந்தப் பிச்சை அரிசி பறிமுதல் செய்யப்படுகிறது.

வயிற்றுப்பாட்டுக்கான குலத்தொழிலை இழந்து, பிழைப்பைத் தேடி, திருவனந்த புரத்துக்குக் குடும்பத்தோடு யாத்திரை செய்து கொண்டிருந்த மூக்கனுக்கு, இந்த களேபரத்தை கண்ட போது பொறுக்கவில்லை.

''என்னத்துக்கு இந்த பகளம்? பாவம்... கொஞ்சம் அரிசி வீடுவீடாகப் போய் எரந்து வாங்கிக்கொண்டு போறான்... எரந்து திங்கப் பட்டவனைத் தொரந்து வாங்கியா நாடு நல்லாவாப் போவுது? லாரிக் கணக்கில் அரிசியும் சோறும் மொத்தமாகக் கொண்டு போறா... அதைக் கேப்பாரில்லே...!''

அவன் வார்த்தைகள் அங்கே எடுபடுமா? போனது போனதுதான்...?

பிறகு பஸ் விட்டபின், மூக்கைச் சிந்திப் போட்டு அழுதவாறு உலகத்தையே சபித்துக் கொண்டிருந்த ராமனைத் தேற்ற மூக்கன் ஒருவன் மட்டும்தான் அந்த பஸ்ஸில் இருந்தான். ''போட்டும் ஓய்... இந்த சட்டமான சட்ட மெல்லாம் கடேசீலே பாவங்களுக்க வயத்தைத் தான வந்து அடிக்கு ... உம்... ஆருட்டெச் சொல்ல...!''

பட்டம்தாணுபிள்ளை முதல் மந்திரியாக இருந்த காலத்தில் கன்யாகுமரி ஜில்லாவை, தாய்த் தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்று கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிய பிரயோகத்தில், தன் இடதுகால் முடமான செய்தியையும் அப்போது தான் ராமன் அவனிடம் வெளியிட்டான்...

இப்படித்தான் நொண்டி ராமனுடன் தனக்குப் பழக்கம் நேர்ந்தது. இதோ அவன் பிடிபட்டு விட்டான்....

இனியாரு...?

'நான் தானா...?''

அப்பப்பா! இந்தக் கைகளுக்குத் தான் என்ன வ... தோளில் இருந்து விடுபட்டுப் போய் விடப் போகிறதோ என்னமோ...! உச்சி முதல் உள்ளங்கால்வரை உடம்பு முழுதும் மரத்துப் போய்விட்டது போலிருந்தது.

எத்தனை யுகங்களாக இந்தக் குளிர்ந்த நீரில் கிடக்கிறோம்...! இன்னும் எத்தனை யுகங்கள்...?

அதற்குள்... தன் ரத்தமும் சதையும் எல்லாம் பனிக்கட்டியாய் உறைந்து போகாதா? கடவுளே...!

மேலே காலடியோசைகள்...

பிடிபட்டுவிட்டால்...?

அவனால் நினைத்துப் பார்க்கவே முடிய வில்லை. மூளையில் தெளிவில்லாத என்ன வெல்லாமோ நினைவுகள்

பாலக்காட்டில் இருந்து கோயம்புத்தூருக்கும், பொள்ளாச்சிக்கும், அரிசியும் மரவள்ளிக் கிழங்குத் தூளும் கடத்திய நாட்களில் இப்படியொரு சித்ரவதைக்கு ஆளாக வில்லை. உம்... இந்த வாதநோய் பிடிச்ச அம்மாவை ஆயுர்வேத தர்ம ஆஸ்பத்திரியில் காட்ட வேண்டி திருவனந்தபுரத்துக்குத் திரும்பிவர நேர்ந்தது ஆபத்தாக முடிந்தது.

இனி என்ன செய்ய...?

இதெல்லாம் இந்த மூணுநாலு வருஷங்களுக் கிடையில் அண்ணைக்கு நான் நாகர்கோவிலில் இருந்து இங்கே வந்தம் பொறவுதானே...!

குலத்தொழிலைச் செய்ய அனுமதிக்கப் பட்டிருந்தால் இப்படி ஏதாவது வந்திருக்குமா? அப்பா குமாரசாமி ஆசாரிதான் எவ்வளவு பெரிய பொன் வேலைக்காரர்...! எனக்கும் பிரமாத மாகத்தான் அவரு வேலை படிப்பிச்சுத் தந்திருந்தாரு... சின்னப் பயலா நா இருக் கையில் நுண்ணிய வேலைப் பாடுகளுக் கிண்ணே நீளமாய், மெல்லியதாய் அமைஞ்சிருக் குண்ணு, அப்பா என் விரல்களை எத்தனை தடவை தடவியவாறு புகழ்ந்திருக்கிறார்...!

உம்... அந்த விரல்கள் இப்போ படும்பாடு...!

கடைசியில்...? அப்பா உயிரோடு இருக்கை யில் இப்படி விபரீதம் ஏதாவது உண்டா? அப்போது எல்லோரும் இதைவி செழிப்பாகத் தான் இருந்தார்கள்.

பிறகுதான், தங்கக்கட்டுப்பாடு சட்டத்தால் குடும்பமே நாசமானது... அப்படி இருந்தும் வயிற்றுப்பாட்டை நடத்த, கள்ளக்களவில் தொழிலைச் செய்து கொண்டுதானிருந்தேன். ஆனால் இரண்டு தடவை உருப்படி(நகை) செய்ய ஆளுகளிடமிருந்து வாங்கிக் கொண்டு வந்திருந்த தங்கத்தோடு போலீஸில் பிடிபட்டு பணமும் மானமம் நாசம் அடைந்த பின், என்னை நம்பி யாரு பொன்னைத் தருவார்கள்...?

அதனால்தான் குடும்பத்தைக் காக்க என்னவெல்லாமோ தொழில் செய்து வேறு வழியில்லாமல் கடைசியில் இந்தத் தொழிலில் வந்து சரணாகதி அடைந்தேன்.

இப்போ... அகப்பட்டுக் கொள்வேனோ...?

கடவுளே... இந்த ஒரே ஒரு தடவை மட்டும் இவர்கள் கையில் சிக்கிவிடாமல்என்னைக் காப்பாற்றி விட்டு விடு... இனி இந்த அபாய விளையாட்டுக்கு நான் வரவில்லை.

இல்லவே இல்லை. இது சத்தியம்.

மேலே இன்னும் ஆள் அரவம் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது.

டார்ச் விளக்கின் ஒளிவட்டம், மேலிருந்து ஆற்றின் வெள்ளத்தில் சரிந்து விழுந்து, அதன் தங்க நிறத்தைக் காட்டிச் சிதறுகிறது.

ஆற்றுநீருடன் மழை நீர்... மழை நீருடன் வியர்வை...!

கடவுளே! அகப்பட்டுக் கொள்ளக்கூடாதே...! நித்ய கண்டம் பூர்ணாயிசான இந்தத் தொழிலை இனிமேல் வேண்டவே வேண் டாம்.... பழவங்ஙாடி பிள்ளையார் கோவிலுக்க இண்ணைக்கே ஒரு தேங்காய் உடைக்கிறேன்.

நிமிஷங்கள் இழைகின்றன...

சைக்கிள் வாடகை, அங்கே இங்கே கமிஷன், வழியில் செலவு இதெல்லாம் போக, திருவனந்தபுரத்தில் வாடிக்கை ஹோட்டலில் கொண்டு போய்க் கொடுத்தால், இந்த ஒரு சாக்கு அரிசியில்இருந்து கூடிப் போனால் பத்து பதினைஞ்சு ரூபாதான் கிடைக்கும்!

அதுவும் என்றும் கிடையாது... இந்தக் கடல் வழியையும் அதிகாரிகள் கண்டு பிடித்து விடுவார்கள்...! போலீஸ் பந்தோபஸ்து தீவிரமாய் இருந்தால், சேர்ந்தாற் போல் ஒரு மாசம் வரை தொழிலே இருக்காது... இதுக்குப்படும் பிராணாவஸ்தை என்னா, சித்ரவதை என்னா...! இப்போதான் பார்க்கவில்லையா, கரணம் தப்பினால் மரணம்தானே...

ஆனால் இந்த வரும்படியும் இல்லாவிட்டால்., தான், அம்மா, பொண்டாட்டி, மூணு குழந்தைகள் எல்லாம் எப்படிக் காலம் கழிப்பது...?

தெரிந்த குலத்தொழிலையே செய்ய முடியாத பரிதாபம்... ஏனையத் தொழில்கள் யாவற்றிலும் போட்டியும் பொறாமையும்....

இந்தத் தொழிலையும் விட்டுவிட்டால், பின் எப்படித்தான் உயிர் வாழ்வது? குடும்பத்தை வாழ்விப்பது? இல்லை பட்டினிபோட்டே அழித்து விடுவதா?

எது எப்படியானாலும் இதுதான் கடேசி... கடைசிமுறை...! இப்போ தப்பித்துக் கொண் டால் இனி இந்த நகர வேதனை அனுபவிக்க முடியவே முடியாது... இது கடவுள் மீது சத்தியம்...!

உடம்பு குளிரில் மரத்துப் போகப்போக, அவனது மானசீக சபதத்தின் தீட்சண்யம் தீவிரமாகிக் கொண்டே இருந்தது.

ஆனா... தப்பித்துக் கொள்வேனா...?

எவ்வளவு யுகங்கள் கழிந்தனவோ தெரிவதற் கில்லை... கிடைத்த இரையைக் கவ்வியவாறு போலீஸ் வேன் போய்விட்டது போலிருந்தது.

அடைமழை தூறலாகி விட்டது.

மேலே சூறாவளி ஓய்ந்த ஒரு அமைதி.

எப்படியோ முக்கி முனங்கி கரையேறி, மண்ணல் படுத்துக்கொண்டு சைக்கிளை அரிசி மூட்டையோடு இழுத்துக் கரையில் ஏற்றினான்.

கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது.

நேரம் விடியும் முன் திருவனந்தபுரம் போய்ச் சேர்ந்தாக வேண்டும்... அதற்கிடையில் இன்னும் எத்தனை எத்தனை தடைகளோ! சாதாரணமாக இந்த நேரத்தில், அரிசியைச் சேர்க்க வேண்டிய இடத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு, அவன் வீடு போய்ச் சேர்ந்திப்பான்... உம்... இன்று சகுனம் சரி யில்ல... அப்பப்பா... எவ்வளவு பயங்கரமான பிராணாவஸ்தை...!

கைகால்களை உதறி தயார் எடுத்துக் கொண்டான். கேரியரில் இருக்கும் ஒரு சாக்கு அரிசியோடு இன்னும் இருபது, இருபத்தி ஐந்து மைல்களுக்கு மேல், சைக்கிளை விட வேண்டாமா?

வழக்கம்போல், எந்த க்ஷணத்திலும் பிடிபட்டு விடுவோம் என்ற அச்சத்தின் மன அவசரத்தோடு, அசாதாரணமான அன்றைய ராட்சஸ பிரயத்தனத் தால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை விண்விண் என்று வேதனை தெறிக்க சர். சி. பி.யின் காலத்தில் போட்ட முக்கிய கான்கிரீட் ரோட்டைத் தவிர்க்க, பலவித சின்னச்சின்ன ஊடுவழிகள் வழியாக சைக்கிளை விட்டும், உருட்டியும், தூக்கி எடுத்துக் கொண்டு நடந்தும், அவன் திருவனந்தபுரம் போய்ச் சேரும் போதும், சேர்க்க வேண்டிய இடத்தில் பத்திரமாய் அரிசியைக் கொண்டுபோய் சேர்க்கும்போதும், பின் பழவங்காடி பிள்ளையார் கோவிலில் தேங்காய் வாங்கி உடைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் பரமுவின் குடிசையில் நுழைந்து கொஞ்சம்'போட்டு'விட்டு வீட்டில் வந்து படுத்த போதும் - எல்லா நிமிஷங்களிலும், ''இதுதான் கடேசி, இனி இந்தத் தொழிலுக்கு நான் இல்ல... இல்லை...'' என்றெல்லாம் தீர்மானமாய் மனத்தில் தன் சத்தியத்தை ஆத்மார்த்தமாகப் புதுப்பித்துக் கொண்டே இருந்தான் அவன்.

முதல் நாள் களைப்பில், அடித்துப்போட்டது போல் தூங்கிக் கொண்டிருந்த மூக்கன், பழக்க தோஷத்தால் தானோ என்னமோ, இரவு இரண்டு மணிக்கு வழக்கம்போல் பாயிலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.

வெளியில் என்னவோ ஆள் அரவம்.

அவனுக்கு முன்னாலேயே எழுந்து குடிசை நடையில் நின்றவாறு வெளியே பார்த்துக் கொண்டிருந்த வேலம்மை, அவன் எழுந்து உட்கார்ந்ததைக் கண்டு அவனிடம் ஓடி வந்தாள்.

''அறிஞ்சேளா சங்கதியை...! முந்தா நேற்று தான் ஜெயிலில் இருந்து வெளீலே வந்த பரமுவை கையும் களவுமா போலீஸ் வந்து பிடிச்சிட்டுப் போவுது... அவன் பொண்டாட்டி, புள்ளைய எல்லாருக்கும்கூட கள்ளச்சாராயம் காய்ச்சத் தெரியுமாம்... உம்.''

பெருமூச்சு விட்டுவிட்டு அவளே சொன்னாள்.

''உம் பாவம்... பரமுவைச் சொல்லவும் குத்த மில்லை... ஏளெட்டுப் பேருக்கு வயத்துப்பாடு களியாண்டமா...?''

மூக்கனின் மூளை விழிப்படைந்தது... அவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வேறு வந்தது... உட்கார்ந்து கொண்டே சுற்று முற்றும் பார்த்தான்...

முக்கி முனங்கி கொண்டு கிடக்கும் அம்மாவும், போர்க்களத்தில் தாறுமாறாய்ச் சாய்ந்து கிடக்கும் உடல்களைப் போல் அவனைச்சுற்றி பட்டினிக்கோலங்களாய்த் தூங்கிக் கொண்டி ருக்கும் குழந்தைகளும், முன்னால் கந்தலின் பிரத்யட்ச வடிவாய் எழுந்து நிற்கும் பெண்டாட் டியும் அவன் நேற்றுச் செய்த பிரதிக்ஞையை சத்தியத்தைப் பார்த்து வெவ்வெவ்வே காட்டுகிறார்களா?

திக்பிரமை பிடித்தவன்போல் ஒரு நிமிஷம் இருந்த அவன் ஒரு கர்மவீரனைப் போல் சடக்கென்று எழுந்தான்...

சற்றுத் தொலைவிலிருந்து வந்து கொண் டிருந்த நீரில் துடுப்புகள் சலசலக்கும் ஓசை யைக் கேட்டவாறு, நின்று கொண்டிருந் தான் மூக்கன்.

by Swathi   on 25 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.