|
|||||
எழுமின்-The Rise மூன்றாம் உலகத்தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு!!! சென்னை மகளிர் கிறித்துவ கல்லூரி, நவம்பர் 14-16, 2019 |
|||||
35 நாடுகளில் இருந்து வருகை தந்த 800+ தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் "The Rise - எழுமின்" எனும் ஒற்றைக்குடையின் கீழ் ஒன்று கூடி 3 நாட்கள் தமிழ் வணிகம் சார்ந்த மாநாடு அருட்தந்தை திரு.ஜெகத் காஸ்பர் சிந்தனையில், தலைமையில், மேற்பார்வையில், ஒருங்கினைப்பில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மூன்று நாள் மாநாட்டில் பல சுவராசியங்களை அனுபவித்தேன், அதில் முக்கியமான சில நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு. அய்யா திரு.பாலகிருஷ்ணன் IAS அவர்களின் துவக்க உரையில் "தமிழர்கள் வணிகத்தில் மேலோங்கியவர்கள்" என்பதை சிந்து, கீழடி அகழ்வாராய்ச்சியில் தக்கச் சான்றுடன் உள்ளது எனவும், சங்கப் பாடல்கள், புறநானுறு, திருக்குறள் இன்னும் சில படைப்புகளை மேற்கோள் காட்டி "வணிகத்தால் வளம் பெற்றவர் தமிழர்" என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். முனைவர். முகம்மது ஆசிப் அலி அவர்கள் தனது உரையில் "ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் எங்ஙனம் தமிழகம் சிறந்த மதநல்லினக்கனத்துடன் இருந்திருக்கிறது" என்பதை பற்பல வரலாற்று சான்றுகள் மூலம் எடுத்துரைத்தார். குறிப்பாக மயிலை கபாலீசுவரர் கோயில் தெப்பக்குளம் நிலம் இசுலாமியர்கள் கொடையாக வழங்கியது என்பது ஒரு ஆச்சர்ய தகவல். உலக நாடுகளில் தமிழர்களை எப்படி உயர்வாக மதிக்கிறார்கள், ஆனால் சொந்த நாட்டில் அந்த அளவிற்கு இல்லை என மிகவும் ஆதங்கப்பட்டார். அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த திரு.சிவா நடராசன் "செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence)" பற்றி மிக எளிமையாக பேசினார், இதில் தமிழகம் முதன்மை பெற்று விளங்கினால், பல தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்பு பெருகும் என கூறினார். தமிழகம் இத்துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். Flextronics நிறுவன இந்திய தலைவர் தமிழர் திரு. ஜோஷ் ஃவோல்கர் கைப்பேசி மற்றும் இதர மின்னனு சாதனங்கள் தயாரிப்பதில் தமிழகம் முன்னோடி என்பதை சுட்டிக்காட்டி அதை இன்னும் பன்மடங்கு உயர்த்த சாத்தியகூறுகள் உள்ளது என திட்டவட்டமாக பேசினார். அதிலும் இத்துறையில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுவருவது கூடுதல் சிறப்பு. ETA மற்றும் Crescent கல்வி குழுமத்தின் தலைவர் திரு.அகமது புகாரி பேசுகையில் வட தமிழகத்தில் கோவை, கிழக்கில் சென்னை பகுதியில் வணிகம்+தொழில் இருக்கிறது. திருச்சி முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இன்னும் பரவவேண்டும் என சொல்லி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் இந்த பரந்த மனம் படைத்தவர். குறிப்பாக மின் உற்பத்தி பற்றி உரையாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தமிழகம் தொழில் முனைவோர் மாநிலமாக உருமாற வேண்டும். அதற்கான தளம் நமக்கு சாதகமாக உள்ளது எனவும், தமிழகக் கல்வி கொள்கை, பெண் கல்வி, சமூக நீதி, இருமொழி கொள்கையின் வெற்றியால் இந்தியாவுக்கே வழிகாட்டி மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குவதைப் பற்றி புள்ளி விவரத்தோடு விவரித்து வசீகரித்தார் நண்பர் "Orangescape" நிறுவன அதிபர் திரு.சுரேசு சம்மந்தம். இம்மாநாட்டில் பல விருதுகள் வழங்கப்பட்டன. அதிலும் குறிப்பாக "20 காளைகளை அடக்கிய சல்லிக்கட்டு வீரர் மற்றும் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு நிலம் தந்தவர்களுக்கு" விருது வழங்கிய போது அரங்கமே எழுந்து நின்று கைத்தட்டி, ஆர்ப்பரித்து, மனதார தங்களது உற்சாகமான உணர்வை வெளிப்படுத்தினர். புதிய, நலிந்த, மாற்றுதிறானாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்குவதால் இசையமைப்பாளர் இமானுக்கு சிறப்பு விருது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் சுமார் 90 நிமிடங்கள் இன்னிசை மழையில் அனைவரையும் மனமகிழச் செய்தார். திருக்குறள், சங்கப்பாடல், புறநானூற்று கவிதை, பாரதிதாசன் பாடல்களுக்கு தனது இசையால் புத்துணர்ச்சி தந்தார். ஒரு சேர 75+ பேர் பாட இசைக்குழுவின் ஒருங்கிணைந்த இசை மழை! ஆகா, பிரமாதம்..! பொதுவாக வணிக மாநாடுகளில் குறிப்பிட்ட ஒரு துறை, தலைப்பு, இடம் மற்றும் ஒத்த சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே ஒன்று கூடுவார்கள். அதிலும் குறிப்பாக நுனி நாக்கு ஆங்கிலம் விளையாடும் மற்றும் ஒரு அளவிற்கு மட்டுமே பேசவோ, பழகவோ முடியும். ஆனால் எழுமின் அதைத் தகர்த்து உலகத் தமிழ் தொழில் முனைவோர் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கூடி தொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்களும், சிறிய அளவில் தொழில் செய்பவர்களையும் உத்வேகப்படுத்தி ஒன்றிணைக்க பல கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. அடுத்தப் பாகத்தில் இந்த அருமையான மாநாட்டை நிகழ்த்திக் காட்டிய அருட்தந்தை திரு.ஜெகத் காஸ்பர் பற்றியும், ஓரு கல்வியாளராகவும், தொழில் முனைவோராக நான் பெற்ற அனுபவத்தை பற்றியும் இன்னும் சில தகவல்களுடன் பகிர்கிறேன். உயர்க தமிழர்! வெல்க தமிழ்!
-ஆலடி எழில்வாணன் |
|||||
by Swathi on 21 Nov 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|