இன்றைய சூழ்நிலையில், மக்களை தியேட்டர்களுக்கு வரவழைப்பது பெரிய விஷயமாக மாறிவிட்டது. இதனால், நல்ல படங்கள் கூட ஒரு வார படங்களாகவே மாறி வருகிறது. இந்த ஒரு வார படங்களிலும் பார்வையாளர்கள் இல்லாமல் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது. இதற்கு காரணம் திருட்டி வி.சி.டி புழக்கம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இதற்க்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சண்முகா திரையரங்க நிர்வாகம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி ஒரு முறை ரூ.1000 கொடுத்து டிக்கெட் வாங்கினால், அந்த ஒரு வருடம் முழுவதும் அத்தியேட்டரில் ரிலீஸாகும் 40 படங்களை ஒரு முறை பார்க்கலாம். பார்க்க விரும்பவில்லை என்றால் அந்த டிக்கெட்டை வேறொருவருக்குக் கொடுத்து அந்தப் படத்தை ஒருமுறை பார்க்க சொல்லலாம். இந்தப் புதிய திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறதாம்..இதன்மூலம் இதுவரை 2000 த்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது தியேட்டர் நிர்வாகம். இதில் கிடைக்கும் தொகையிலிருந்து புதிய படங்களை வாங்கி திரையிடவும்,இந்த முன்பதிவு திட்டத்தைப் பரவலாக்கவும் தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருட்டு வி.சி.டி. களை ஒழிக்கவும், அதிக அளவில் ரசிகர்களை ஈர்க்கவும் திரையரங்கு தரப்பினர் இந்த நடைமுறையைக் கொண்டு வந்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு தியேட்டரில் பெண்களுக்கு 33 சதவிகிதம் கட்டணத்தில் குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இவ்வாறு தியேட்டர் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதுமையை புகுத்த திட்டமிட்டு வருகின்றனர்.
|