|
|||||
ரஷ்யா- இந்தியா ஒப்பந்தம்: சீனா- பாகிஸ்தான் பீதி! |
|||||
ரஷ்யாவுடன், இந்தியா ராணுவ தளவாட ஒப்பந்தம் செய்வதன் மூலம் இந்தியாவின் ராணுவ பலம் அதிகரிப்பது, அண்டை நாடுகளான, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே, அதிக அளவு ராணுவத் தளவாடங்களை வாங்கும் நாடுகளில், இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவும், சிறப்பான முறையில் உள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தகம் மற்றும் ராணுவ உறவுக்கு, இந்தியா எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதிக அளவு ஆயுதம் வாங்கும் நாடுகளில், அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், ரஷ்யா விடம் இருந்து தான், அதிக அளவு ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. இந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து, எஸ் -400 ரக ஏவுகணைகள் உள்ளிட்ட, பல்வேறு ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்குவதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியா, ரஷ்யா இடையேயான ஒப்பந்தங்கள் தொடர்பாக, இரு தரப்பும், ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து பேசுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான இரு தரப்பு பேச்சில் பங்கேற்க, ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடின், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். இதில், ஆயுதங்கள் வாங்குவதற்கான, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்த ஒப்பந்தம், மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது, சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதால், பல்வேறு நாடுகள் மிகவும் ஆர்வத்துடன், இதை கூர்ந்து கவனித்து வருகின்றன. 'ரஷ்யாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்தால், பொருளாதார தடை விதிக்கப் படும்' என அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்து உள்ளது. சமீபத்தில், ரஷ்யாவிடம் இருந்து, எஸ்- 400 ஏவுகணைகள் வாங்க, ஒப்பந்தம் செய்ததால், சீனா மீது பொருளாதார தடையை, அமெரிக்கா விதித்தது தற்போது, ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய உள்ளதால், இந்தியா மீதும் பொருளாதார தடையை, அமெரிக்கா விதிக்குமா... என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்காவிடம், தன் நிலைப்பாட்டை மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. சமீபத்தில், இந்தியா மற்றும் அமெரிக்காவின் ராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்வது குறித்து, மத்திய அரசு, தன் நிலை மற்றும் தேவையை உறுதியுடன் தெரிவித்து உள்ளது சீனா, தொடர்ந்து வளர்ச்சி அடைவதை, அமெரிக்கா விரும்பவில்லை. அதனால், இந்தியாவுக்கு அதிக ஆதரவு தெரிவித்து வருகிறது. அதனால், இந்த ஒப்பந்தத்தை எதிர்க்க அமெரிக்கா விரும்பவில்லை. இதற்காகவே பொருளாதார தடை விதிக்கும் சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்வது குறித்து, அமெரிக்கா விவாதித்து வருகிறது. இந்த நிலையில், ஒரே நேரத்தில், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன், இந்தியாவின் நட்புறவு வேகமாக வளர்ந்து வருவது, அண்டை நாடுகளான, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன. ஆசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் சீனாவுக்கும், தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் பாகிஸ்தானுக்கும், இந்த ஒப்பந்தம் செய்யப்படுவது, மிகப் பெரிய பீதியை ஏற்படுத்தி உள்ளது. |
|||||
by Mani Bharathi on 05 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|