திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) கைம்மாறா நோயும் பசலையும் தந்து - பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து; சாயலும் நாணும் அவர் கொண்டார் - என் மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போயினார். (எதிர் நிரல் நிறை. 'அடக்குந்தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை உளவாகலும் இவை இலவாகலும் கூடா', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
மென்மையும் நாணமும் அவர் கொண்டு போனார்; அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து. மென்மை- பெண்மை. இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மையும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமைற் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(அழகும் நாணும் அழியாமல் நீயாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) நோயும் பசலையும் கைம்மாறாத் தந்து- நம் காதலர் நம்மைவிட்டுப் பிரியும் போதே இக்காம நோயையும் பசலையையும் எதிரீடாகத் தந்துவிட்டு; சாயலும் நாணும் அவர் கொண்டார்-என் மேனியழகையும் நாணையும், தம்முடன் கொண்டுபோய் விட்டார். அவர் திரும்பி வந்தாலொழிய என் மேனியழகும் நாணும் திரும்பாவென்பதாம்.சாயலுக்குப் பசலையும் நாணுக்கு நோயும் ஈடாதலால் எதிர்நிரனிறை.
கலைஞர் உரை:
காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.
Translation
Of comeliness and shame he me bereft,
While pain and sickly hue, in recompense, he left.
Explanation
He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness.