LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 660 - அமைச்சியல்

Next Kural >

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் - அமைச்சன் தீய வினைகளாற் பொருள் படைத்து, அதனால் அரசனுக்கு ஏமஞ்செய்தல்; பசுமட்கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று - பசிய மட்கலத்துள்ளே நீரைப் பெய்து அதற்கு ஏமஞ்செய்ததனோடு ஒக்கும். (முன் ஆக்கம் பயப்பன போல் தோன்றிப் பின் அழிவே பயத்தலால், அவை 'சலம்' எனப்பட்டன. 'ஏமமார்த்தல்' என்பது 'ஏமார்த்தல்' என்றாயிற்று, ஏமத்தை அடையப் பண்ணுதல் என்றவாறு, இருத்துதல் - நெடுங்காலம் இருப்பச் செய்தல். அரசனும் பொருளும் சேரப் போம் என்பதாம். பிறரெல்லாம், 'ஏமார்த்தல்' என்று பாடமோதி, அதற்கு மகிழ்தல் என்றும், 'இரீஇயற்று' என்பதற்கு வைத்தாற்போலும் என்றும் உரைத்தார், அவர் அவை தன்வினையும் பிறிதின் வினையுமாய் உவமையிலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர். இவை நான்கு பாட்டானும் அதற்குக் காரணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
வஞ்சத்தாலே பொருள்தேடி மகிழ்ந்திருத்தல், பசுமட்கலத்திலே நீரை முகந்து வைத்த தன்மைத்து. இது தானும் பொருளுங் கூடிக் கெடு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
சலத்தான் பொருள் செய்து ஏமார்த்தல்-அமைச்சன் வஞ்சனையாற் பொருளீட்டி அதனால் அரசனுக்குப் பாதுகாப்புச் செய்தல்; பசுமண் கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று - ஈரம் புலராத பச்சைமட் கலத்துள் நீரை வார்த்து அதற்குப் பாதுகாப்புச் செய்ததனோ டொக்கும். நீரோடு பசுமட்கலங் கெடுவது போல் வஞ்சனைப் பொருளோடு அரசன் கெடுவான் என்பதாம். ஆக்கஞ் செய்வது போல் முன் தோன்றிப் பின்பு அழிவைச் செய்வதால். 'சலத்தால்' என்றார். 'சலம்' வடசொல். ஏமாத்தல் என்பது ஏமாத்தல் என ரகரங்கெட்டு நின்றது. ஏமம்-பாதுகாப்பு. ஆர்தல்-பொருந்துதல், ஆர்த்தல்-பொருத்துதல். 'இரீஇ' இருத்தி யென்று பொருள் படும் சொல்லிசையளபெடை. இருத்துதல் நீண்டகாலம் இருக்கச் செய்தல்.
கலைஞர் உரை:
தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.
சாலமன் பாப்பையா உரை:
தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.
Translation
In pot of clay unburnt he water pours and would retain, Who seeks by wrong the realm in wealth and safety to maintain.
Explanation
(For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water.
Transliteration
Salaththaal Porulseydhe Maarththal Pasuman Kalaththulneer Peydhireei Yatru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >