சேலம் ஆடிட்டரும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலருமான ரமேஷ் மற்றும் வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையன் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி 'போலீஸ்' பக்ருதீன், சென்னை அருகே, ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் நேற்று மாலை, காவல்துறையினரிடம் பிடிபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலூரில் கடந்த ஜூலை மாதம், 1ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர், வெள்ளையப்பன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, அதே மாதம், 19ம் தேதி, சேலத்தில் பா.ஜ., அலுவலகம் முன் அக்கட்சியின் மாநில பொதுச் செயலர், ஆடிட்டர் ரமேஷை மூவர் கும்பல் வெட்டிச் சாய்த்தது. இந்த வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க, முதல்வர் ஜெயலலிதா, உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து, எஸ்.ஐ.டி., - ஐ.ஜி., மஞ்சுநாதா தலைமையில், 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு,அந்த குழு, சேலம் வந்து விசாரணையை துவக்கியது.இக்கொலை தொடர்பாக, மதுரை திருமங்கலத்தில் 2011ல், பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு மற்றும் கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட வேறு சில வழக்குகளில் தலைமறைவாக இருந்த மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த, "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில், நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஆகியோரை, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர். இவர்களை பற்றி தகவல் தருபவர்களுக்கு 20 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறை அறிவித்தது. இந்நிலையில், தமிழக காவல்துறை போலீஸ் பக்ருதீனை ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் நேற்று மாலை பிடித்துள்ளது.
|