சேலம் மாவட்டம் ஆத்தூரில் முதியவர்கள் கலெக்டரின் காலில் விழுந்து மனுக்களை வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்தது. ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு கலெக்டர் ரோகிணி தலைமை வகித்து, 388 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆத்தூர் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறை அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர், வட்ட வழங்கல் துறை, மின்வாரியத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது நீண்ட வரிசையில் காத்திருந்த முதியவர்கள் பலர் மாவட்ட கலெக்டர் காலில் விழுந்து மனுக்களை அளித்தனர்.
சேலம் மாவட்டத்தில் வருவாய்துறையினர் முதல் வி.ஏ.ஓ வரை அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த முகாமில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பிரச்சனை குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனுவாக அளித்தனர்.
|