|
||||||||
சம்மதம் தா கற்பகத்தருவே |
||||||||
பூத்தமுகத் தாமரையில் பூசும் மதியெழிலில் கோத்த அனிச்சயிதழ்ப் புன்னகையில் – மாத்தமிழே நேஞ்சம் நிறைந்தாய் இரவெல்லாம் உன்நினைவில் தஞ்சம் புகுந்தேன் தவித்து ! மொட்டவிழ்ந்த பூமரமே மொய்க்கும் விழிவண்டைக் கட்டவிழா கொங்கைக்குள் கட்டிவைத்த – கற்பகமே பட்டத் தழகேஉன் பார்வைக் கடிபணிந்தேன் எட்டத்தில் கொல்லுவதோ நின்று ! பாரென்னும் பூம்பருவம் பக்கம்வா வென்னுமிதழ் தேரென்னும் மேனிதழு வென்றுரைக்கச் – சீரென்னும் நாணம் இடையில் தலைகவிழ்க்க வேகின்றேன் காமன் கணைமலரால் காண் ! கச்சை நகில்மூடிக் காணும் விழியீர்த்தே இச்சை பெருக இடையசைத்தாய் – நச்சிமனம் அன்ன நடைபின்னே அன்பு குடைபிடித்தேன் என்னைக் குழைவாகத் தைத்து ! கண்ணின் இமைக்குள்ளே காதற்பூ உன்முகத்தை தண்ணீருள் மீனாகக் காத்ததனால் – மண்ணில் குருடாய் நடக்கின்றேன் துள்ளும்பூ மானே திறந்தால்நீ போயிடுவாய் என்று ! கண்திறந்த போதே வரும்கனவு நாயகியே என்னிதய ஏக்கத்தை எண்ணிப்பார் – உன்மீது வீசுமிளங் காற்றுவந்து பட்டாலும் என்மேனி தீசுமந்து போவதுதான் ஏன் ! சந்தனத் தேன்கலசம் சாயாத கோபுரத்தை முந்தானை மேகத்தால் மூடிவரும் – சுந்தரியே ஆலய வாசலில் அன்பிற்காய் ஏங்கும்என் கோலத்தில் நல்லருளைக் கூட்டு ! நாதம் இயற்றும்உன் நாமொழி சொல்கேட்டால் ஓதமுறு தென்றலுக்கே போதைவரும் – சீத நிலவொளியும் சொக்கிவிழும் ; நித்திலமே காதல் நிலவுமொழி நான்வாழச் செப்பு ! காலைக் கதிர்செம்மை கண்ணில் எடுத்துன்றன் மாலைப் பிறைநுதலில் பொட்டிடுவேன் – கோதையுன் கார்குழலின் மீதினிலே நட்சத் திரப்பூவை பார்வியக்க வைப்பேன் பறித்து ! வீட்டருகில் வந்தபோது வாயிற் படிநின்றே பாட்டிதழில் நீசொன்ன பாகுமொழி – கேட்டசெவி இன்பத்தை வேற்றொலிகள் ஈர்த்திடாமல் கைபொத்தி நின்றேன் நினைவில் நினைத்து ! பாதம் பெயர்க்கும்உன் பாங்குதனைப் பார்த்துவிட்டால் வேத முனிவருக்கும் ஆசைவரும் – காதல் ரதியாளைக் காமனுமே கைவிடுவான் ; வீட்டுப் படியிறங்கி வாராமற் பார் ! செந்தூர மாலையிலே சித்திரமே நீநடந்தால் வெந்துருகி மாலும் கணைதொடுப்பான் – இந்திரையின் கண்சிவப்பில் சாம்பலாவோம் ; கண்மணியே நாமிணைய என்பார்வைக் குள்ளே இரு ! பார்வையிலே மின்சாரம் பாய்ச்சுகின்ற பூச்சரமே ஊர்சனங்கள் மெச்சுகின்ற அச்சாரம் – தார்சரமாய் நான்சூட்டித் தந்திடுவேன் நாள்மலரே தாகத்தைத் தேன்ஊற்றித் தீர்க்கவா இன்று ! தங்கமே உன்னைவர தட்சணை வாங்காமல் மங்கலநாண் இட்டு மகிழ்விப்பேன் – இங்குலவும் எம்மதம் ஆனாலும் என்னுடலின் பாதிநீயே சம்மதம் உன்நாவால் தா ! விண்மீன்கள் புள்ளியிடும் வானவில்லோ கோலமிடும் வெண்ணிலவும் ஆதவனும் தோரண – கற்பகங்கீழ் குத்து விளக்காய் ஒளிகூட்டும் ; என்னவளாய் இத்தரையில் நீயாகும் போது !
- பாவலர் கருமலைத்தமிழாழன் |
||||||||
by Swathi on 01 Nov 2014 0 Comments | ||||||||
Tags: Sammatham Karpaga Tharuve சம்மதம் கற்பகத்தருவே கருமலைத்தமிழாழன் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|