காமெடியனாக தமிழ் சினிமாவில் கலக்கி வந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். படமும் பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும் ஓரளவுக்கு ஓடியது.
இதனைத் தொடர்ந்து இனிமேல் ஹீரோவாக தான் சந்தானம் நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், லிங்கா, நன்பேண்டா, ஆம்பள, அரண்மனை ஆகிய படங்களின் மூலம் மீண்டும் காமடியனாக தனது மார்கெட்டை சீராக்கி கொண்டார் சந்தானம்.
ஒரு புறம் காமெடியனாக பல படங்களில் நடித்து வந்தாலும், இன்னொரு பக்கம் ஹீரோவாகவும் தனது படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகளை முடித்து விட்டாராம். இந்த படத்தை முருகானந்த் இயக்கி வருகிறார். படத்தில் நாயகிகளாக ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் நாயகி அகிலா கிஷோர், மற்றும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் ஹீரோயின் ஆஷ்னா ஸாவேரி என இரு நாயகிகள் நடிக்கின்றனர். இவர்கள் தவிர்த்து தம்பி ராமையா, ரோஹினி, கருணாகரன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இந்த படத்திற்கு பல தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டாலும் ’இனிமே இப்படிதான்’ என படத்திற்கு தலைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாம். படத்தின் பெரும்பாலான பகுதிகள் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|