காமெடியனாக தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் கலக்கி வந்த சந்தானம், கடந்த ஆண்டு வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகன் என்ற அடையாளத்தைப் பெற்றார்.
தற்போது, லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வரும் சந்தானம், தனது சொந்தத் தயாரிப்பில் தானே கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளாராம்.
இவரின் சொந்த பட நிறுவனமான ஹண்ட் மேட் பிலிம்ஸ் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ஆஷ்னா சாவேரி மற்றும் அகிலா கிஷோர் நடிக்கவுள்ளனர். பெயரிடப்படாத இந்த படத்தை விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கிய முருகா-ஆனந்த் என்கிற இரட்டையர் இயக்குகிறார்களாம். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமானிடம் பயின்ற சந்தோஷ் தயாநிதி அறிமுகமாகிறார்.
படம் பற்றி இவர்கள் கூறும்போது, எங்களை அடையாளம் கண்டு, இன்று எங்களை இயக்குனராக உயர்த்திய சந்தானம் சாருக்கு நாங்கள் என்றென்றும் கடமை பட்டிருக்கிறோம். இப்படம் முழுக்க முழுக்க சந்தானம் படமாகவே இருக்கும். அவர் ரசிகர்கள் அவரிடம் என்ன விரும்புகிறார்களோ அதை நாங்கள் நிறைவு செய்வோம்.
படத்தின் தலைப்பைப் பொறுத்தவரை, அவரது ரசிகர்கள் விரும்பும்வகையில் அவரது முந்தைய படங்களை போலவே நல்ல தலைப்பை வைக்க வேண்டும் என்று தீவிர பரிசீலனையில் இருக்கிறோம் என்றார்.
|