பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி காந்தியவாதி சசி பெருமாள் ஒரு மாதத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை செயல் படுத்த கோரி, கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் சசிபெருமாள். இதையடுத்து, அவர் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார், அவர், அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. அதனால் கடந்த 22-ஆம் தேதி அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு, சசிபெருமாளுக்கு ஜாமின் பெற்றுத் தரப்பட்டது. மருத்துவமனையிலிருந்து வந்த சசிபெருமாள் சனிக்கிழமை மீண்டும் மெரினா கடற்கரையில் காந்தி சிலையின் கீழ் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். தற்போது வரை அவரது உண்ணாவிரதம் தொடர்ந்து வருகிறது.
|