அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை இன்னும் 6 மாதத்திற்குள் செய்து தரவேண்டும் என்று மத்திய,மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது(அக்,3 அன்று). சுற்றுச்சூழல்-நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின்(Environmental and Consumer Protection Foundation) சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான, புள்ளிவிவரங்களை – களநிலவரங்களை தொகுக்கும் பணியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. அடிப்படை வசதியான, கழிவறைகளைக் கட்டித்தருவது கூட உச்சநீதிமன்றத்தின் நெருக்குதலால்தான் செய்யப்படவேண்டியிருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. இருப்பினும், இம்முறையாவது முறையாக இது செய்யப்படவேண்டும், இதுகுறித்து லோக் சத்தா கட்சி கீழ்காணும் பரிந்துரைகளை முன்வைக்கிறது:
1. கழிவறைகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு? கழிவறை சுத்தம் செய்வது யார் பொறுப்பு என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும். (இப்போதைய நிலையில் யாருமில்லை.) அதற்குத் தேவையான ஆட்கள், பிற வசதிகள் செய்து தரப்பட வேண்டும். ( உள்ளாட்சி மன்ற துப்புரவுத் தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்வது போன்ற ஏற்பாடுகளில் தெளிவான வரையறை வேண்டும்)
2. கழிவறைகளின் பராமரிப்பு குறித்து உடனடி கவனம் தேவை : - கழிவறைகளில் பழுது( தண்ணீர் வரவில்லை, தேங்குதல், உடைப்பு போன்ற) ஏற்பட்டால் அதை உடனடியாக சரிசெய்வதற்கு ஏற்பாடுகள் இருக்க வேண்டும். கழிவறை கட்டப்படும்போதே அதற்கான தண்ணீர் வசதி, கழிவுநீர் செல்லும்வசதி ஆகியவை குறித்த திட்டமிடல் முறையாக இருக்க வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தனித்தனி கழிவறைகள் என்றிருக்கும் நிலையை மாற்றி அனைவருக்கும் ஒரே கழிப்பிடம் என்ற நிலை வந்தால் பள்ளிக் கழிவறைகளின் பராமரிப்பு இன்னும் மேம்படும் 3. முறையான மேற்பார்வை: கழிவறைகளை மேற்பார்வையிட்டு சுத்தமாக உள்ளதா என்று மேற்பார்வையிடும் பொறுப்பு பள்ளியளவில் ஆசிரியர் ஒருவருக்குத் தரப்பட வேண்டும். இல்லையேல், பராமரிப்பிற்கு யாரையும் பொறுப்பேற்கச் செய்யமுடியாது. அதேபோல், திடீர் ஆய்வுகள் மூலம் கழிவறைகளின் சுத்தம் குறித்து கல்வித்துறை, மேலதிகாரிகள் ஆய்வுநடத்த வேண்டும்.
4. கழிப்பறைகளை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுக்க: விடுமுறை நாட்கள், இரவு நேரங்களில் பொதுமக்கள் கழிவறைகளை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுக்க தக்க ஏற்பாடுகள்(காவலர்கள், தடுப்புச்சுவர்.. போன்ற) செய்யப்படவேண்டும்.
5. பெண்கள் பள்ளியில் சிறப்புக் கவனம்: நாடு முழுதும் நடந்த பல்வேறு ஆய்வுகளில் பெண் குழந்தைகள் இடைநிற்றலுக்கு கழிப்பறை வசதி இல்லாததும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டும், வளர் இளம் பெண்குழந்தைகளுக்கான தனிப்பட்ட பிரச்னைகளையும் கருத்தில் கொண்டும் பெண்கள் பள்ளியில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். ( திருப்பூரில், நாங்கள் நடத்திய கள ஆய்வில் பல ஆயிரம் பெண்கள் பயிலும் பள்ளி ஒன்றில் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததை நேரில் கண்டு, அதைச் சரிசெய்ய மாவட்ட நிர்வாகத்தோடு போராடி வருகிறோம்.) 6. புகாரளிக்க தனி கட்டணமற்ற தொலைபேசி எண்: கழிவறைகள் உள்ளிட்ட பள்ளிகளில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்து அரசின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச்செல்ல கட்டணமற்ற தொலைபேசி எண் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். PISA(Program for International Student Assesment) என்ற அகில உலக மாணவர்களுக்கான தரமறியும் தேர்வில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாடு, ஹிமாச்சல் பிரதேஷ் ஆகிய இரு மாநிலங்களே பங்கேற்றன(ஒப்பீட்டளவில் இந்த மாநிலங்களில் மனிதவள மேம்பாடு சிறப்பாக இருக்கிறது என்று கருதி). இத்தகைய சிறப்புப் பெற்ற தமிழகத்திலேயே இன்னும் 42%(ASER 2011 Report) பள்ளிகளில் கழிவறைகள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் உள்ளது; 9.6% பள்ளிகளில் கழிவறைகளே இல்லை; ஆக, பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை. அப்படியானால், நாட்டின் பிற மாநிலங்களின் நிலை ? கவலையளிக்கிறது. அடுத்தமுறை உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது கழிப்பறை, குடிநீர் வசதிகள் வழங்குவதில் தமிழகத்தை முன் உதாரண மாநிலமாக நீதிபதிகள் சுட்டிக்காட்டும் நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்ற முனைப்போடு தமிழக அரசும், அதிகாரிகளும் செயல்படவேண்டும் என்பதே லோக் சத்தா கட்சியின் கோரிக்கை, வேண்டுகோள். செந்தில் ஆறுமுகம், மாநில பொதுச்செயலாளர்
|