|
||||||||
தமிழ் இலக்கியமும் அறிவியலும்- 1 (திரு. R. ராஜராஜன் ) |
||||||||
பண்டைத் தமிழர்கள் வானியல் ஆராய்ச்சியில் நுட்பமான புலமை பெற்றிருந்தனர். பருவங்கள், விண்மீன்கள், கோள்கள் இவை பற்றிய செய்திகள் பல இலக்கியங்களிலும், இலக்கண நூல்களிலும் விரவிக் கிடக்கின்றன.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் நிலத்தை ஐவகையாகப் பிரித்த தொல்காப்பியர், ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ற காலங்களைப் பிரித்தும், ஓராண்டை ஆறு பருவங்களாகப் பிரித்து, கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில், முதுவேனில் என்றும் பகுத்துள்ளார்.
பனிரெண்டு ஆண்டுகள் கொண்டது ஒரு மாமாங்கம். வியாழன் கோள் வட்டம், ஐந்து மாமாங்கம் கொண்டது அறுபது ஆண்டு. இந்த அறுபதாண்டுகள் தமிழர்கள் தொல்காப்பியர் காலத்திலிருந்து பின்பற்றிய ஒன்று. இவ்வாறு கோள்களின் இயக்கத்தைக் கொண்டு ஆண்டுகளைக் கணக்கிடுவதும் பழந்தமிழரின் வானியல் ஆராய்ச்சியின் நுட்பத்தைத் தெளிவுபடுத்துகிறது.
காலவுரிமை யெய்திய ஞாயிற்றுக்குரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்குரிய கடற்கடகவோரை ஈறாக வந்து முடியும் துணையும் ஓராண்டாமாதலின், அதனை அம்முறைமையானே அறுவகைப்படுத்தி இரண்டு திங்கள் ஒரு பருவமாக்கினார் என்று நச்சினார்க்கினியர் கூறுவதிலிருந்து, சந்திரன் மற்றும் சூரியனின் இயக்கங்களையும், அதனோடியங்கும் கோள்களின் இயக்கத்தையும் எந்த ஒரு தொலைநோக்கியையும் கண்டறியாக் காலத்திலேயே உற்று நோக்கலின் மூலம் உணர்ந்து அதனை ஆண்டாகவும், ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயரிட்டு வழங்கியும், இவ்வாண்டில் இக்கோள்களின் இயக்கம் இவ்வாறு அமையும் என்ற அவர்களது கணிப்பும் வியத்தற்குரியதொன்று தானே!
தானே ஒளிர்வன நாண்மீன்கள், பெற்றொளிர்வன கோண்மீன்கள், சந்திரன் முதல் அனைத்துக் கோள்களும் கோண்மீன்கள், ஞாயிறு நாண்மீன் என்பதனைப் புறநானூறு மற்றும் பட்டினப்பாலை யின் பல பாடல்களில் சான்றுகள் காணக்கிடக்கின்றன.
மதிர்சேர் நாண்மீன் போல (புறம் 100)
நின்று நிலை இயர் நின் நாண்மீன் (புறம் 24)
இவை மட்டுமின்றி வெண்ணிறம் உடையது வெள்ளி, செந்நிறம் உடையது செவ்வாய் என்றும், வெள்ளி விடியலில் தோன்றும் என்பதனை,
வெள்ளி தோன்ற புள்ளுக் குரலியம்ப (புறம் 385)
என்பது போன்ற பல பாடல்களினின்றும் இவ்வுண்மைகளை உணரலாம்.
வானவியலைக் கணித்துக் கூறுபவர்களைக் கணியர் என்று கூறுவர். கோள்களின் நிலைகளை இவர்கள் துல்லியமாகக் கணித்ததால்
கணியன் பூங்குன்றனார், பக்குடுக்கை நன்கணியார் என்பது போன்ற பெயர் பெற்றனர் போலும். இவர்களின்றி முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் இயற்றியப் புறநானூற்றுப் பாடலொன்றில்
செஞ்ஞாயிற்றுச் செலவுஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறினது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந் தறிந்தார் போல என்றும்
இனைத்தென்பாரும் உளரே (புறம் 30)
வானியலைப் பற்றிய மிகப் பெரிய ஒரு ஆராய்ச்சியே நடந்தேறியுள்ளது, அவை
ஞாயிற்றுக்கு ஒரு பாதையுண்டு
ஞாயிறு அப்பாதையில் இயங்குகின்றது
பரிப்பு என்பது இத்தனை நாழிகைக்குள்
இவ்வளவு யோசனை (தொலைவு) செல்லும்.
வானம் யாதொரு தாங்குதலுமின்றி நிற்கிறது என்ற உண்மைகளை நேரில் கண்டறிந்தவர் போலக் கூறும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் இருந்துள்ளனர், அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்பது எண்ணி எண்ணி வியத்தற்குரியது.
இவையேயன்றி, இக்காலத்தில் இப்பகுதியினின்று காற்று வீசும் என உணர்ந்து கலம் செலுத்தினர். எந்தக் காலத்தில் எந்த திசையிலிருந்து வீசும் என உணர்ந்து அதற்க்கு வாடை, தென்றல், கொண்டல் என்றுப் பெயரிட்டு அழைத்தனர்.
கோள்களின் நிலை மாற்றத்தினால் கிரகணம் தோன்றும் எனக் கண்டுணர்ந்து கூறினர் என்பதையெல்லாம் அறயும்போது இவர்கள் வானத்தை வெறும் கண்ணால் உற்று நோக்கினார்களா? அல்லது இன்றைய தொலைநோக்கியைப் போல அக்காலத்தில் ஏதேனுமொரு கருவி இருந்ததா என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.
கட்டுரையாளர்: திரு R.ராஜராஜன், ஸ்டன்ட் விஷன் அகாடெமி என்ற நிறுவனத்தை நடத்திவருபவர். தமிழில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களை நன்கு கற்றவர். தமிழில் தமிழ் இமயம், திருக்குறளில் அறிவியல், தமிழ் அகராதி என பல பங்களிப்பை தமிழுக்கு வழங்கிவருப்பவர்.
பண்டைத் தமிழர்கள் வானியல் ஆராய்ச்சியில் நுட்பமான புலமை பெற்றிருந்தனர். பருவங்கள், விண்மீன்கள், கோள்கள் இவை பற்றிய செய்திகள் பல இலக்கியங்களிலும், இலக்கண நூல்களிலும் விரவிக் கிடக்கின்றன.
இவை மட்டுமின்றி வெண்ணிறம் உடையது வெள்ளி, செந்நிறம் உடையது செவ்வாய் என்றும், வெள்ளி விடியலில் தோன்றும் என்பதனை, வெள்ளி தோன்ற புள்ளுக் குரலியம்ப (புறம் 385) என்பது போன்ற பல பாடல்களினின்றும் இவ்வுண்மைகளை உணரலாம்.
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறினது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தார் போல என்றும் இனைத்தென்பாரும் உளரே (புறம் 30)
|
||||||||
by Swathi on 03 Oct 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|