LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள் Print Friendly and PDF
- விவசாயம் பேசுவோம்

தற்சார்பு மரபுகளையெல்லாம் மீறி டெல்லி கிரிஷி பவன் அதிகாரிகள் கைகளில் விவசாயம் போனால் இந்தியா எப்படி உருப்படும்.

பசுமைப் புரட்சி 1960களில் இந்தியாவை பாதுகாக்கும் மாபெரும் திட்டமென்று தவறாக பறைசாற்றப்பட்டது. ஏற்கனவே ஆங்கிலேயர்கள் ஆண்டபொழுது தங்களுடைய சுயநலக் காரணங்களுக்காக செயற்கையான உணவுத் தட்டுப்பாட்டையும், பஞ்சங்களையும் சிறிதாக இருந்தாலும் அதை பெரிதாக ஏற்படுத்தியதுண்டு. நாட்டு விடுதலைக்குப் பின்னும் இதுமாதிரியான போக்கு நிலவியது. பஞ்சம், வறட்சி என்று அதிலிருந்து விடுபட இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அன்றைக்கு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் போன்றவர்கள் இது குறித்து கடுமையாக நாட்டு மக்களிடம் பசுமைப் புரட்சித் திட்டத்தை முன்வைத்தனர். 


நவீன செயற்கை உரங்கள், தற்சார்பற்ற, பிறரை நம்பி விவசாயம் செய்யக் கூடிய நிலைமை என்பது சிறிது சிறிதாக நுழைந்து பின்னர் மரபு ரீதியான விவசாயத்தை சிறிது சிறிதாக தொலைத்தோம். ஆர்.எச். ரிச்சாரியா போன்றவர்கள் முன்னெடுத்த திட்டத்தை மாற்றி பசுமைப் புரட்சி என்று பயணித்தோம். விடுதலைப் பெற்ற பின் வறட்சியின் காரணமாக உணவுப் பிரச்சனையில் தட்டுப்பாடானது உண்மைதான். 


அதை சரி செய்ய வேளாண்மை சீரமைப்பு என்ற பெயரில் மரபுரீதியான கட்டமைப்பை நாசப்படுத்திவிட்டு இரசாயன முறையான விதைகளையும், உரங்களையும் பயன்படுத்த தூண்டப்பட்டோம். பண்டித நேருவும், விவசாயத்தைவிட தொழிற்துறை வளர்ச்சியில் தான் ஆர்வம் காட்டினார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் விவசாயிகளின் பிரச்சனைகளை சீரமைக்க அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய ஒரு உயர்மட்ட ஆலோசனைக்குழுவை அமைத்தார். அதனுடைய நோக்கம் தேவைக்கேற்ப நம்முடைய மரபுரீதியான சுயசார்பு விவசாயத்தினை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்று தான் அமைக்கப்பட்டது. உணவுக்காக எந்த நாட்டிடமும் கையேந்தக் கூடாது. சுயமாக இருக்க வேண்டுமென்ற நிலையில் அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 


இயற்கையான மரபுரீதியான சுயசார்பு வேளாண்மை, மண்ணின் விவசாயம், காந்திய சிந்தனைகளோடு சுயசார்பும், பூர்த்தியும் அடையும் கிராமியப் பொருளாதாரம் ஆகியவற்றை நிறுவ வேண்டுமென்று சில ஆலோசனைகளும் இந்தக் குழுவில் வைக்கப்பட்டது. ஆனால் அந்த குழுவில் சொல்லப்பட்ட அறிக்கைகளை மத்திய அரசு அன்றைக்கு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதே காலக்கட்டத்தில் ஜே.சி.குமரப்பா, வினோபாவே போன்ற காந்தியவாதிகள், காந்திய பொருளதாராத்தை வாதிட்டு கிராமங்களை மேம்படுத்தல் போன்ற கடமைகளை ஆற்றினர். பூமிதான இயக்கம், நிலம் இல்லாதோருக்கு நிலங்கள் வழங்கல் போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

நாடு விடுதலைக்குப் பின் அத்தியாவசியப் பொருட்களுடைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, அதன் விலைகளும் படிப்படியாக குறையவும் தொடங்கியது. 


காந்திய பொருளாதாரத்தின் நிபுணர் குமரப்பா, தன்னுடைய ஆய்வு நூலில் விவசாயத்திற்கு இயந்திரங்களை ஊக்குவித்தால், வசதியுள்ள விவசாயிகளால் மட்டுமே அதை வாங்க முடியும். சிறுவிவசாயிகளால் வாங்கவே முடியாது. இந்தியாவில் சிறுவிவசாயிகள் தான் அதிகம். அவர்கள் பிழைப்பு கேள்விக்குறியாகிவிடும். அவர்கள் விவசாயத்தை விட்டுவிட்டு பெருவிவசாயிகளிடம் கூலி வேலைக்கு செல்வதற்கு மட்டுமே இது வழிவகுக்கும். எனவே கிராம அளவில் சிறிய அளவோ, பெரிய அளவோ என்றில்லாமல் அனைவரும் ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைப்பாக விவசாயத்தை செய்தால் அதுவே கிராமியப் பொருளாதாரத்திற்கு சிறந்தது என்று கூறியுள்ளார். 


நேரு காலத்தில் வகுக்கப்பட்ட முதல் 2 ஐந்தாண்டு திட்டங்களில் விவசாயத்தைக் குறித்து நிலச் சீரமைப்பு, குத்தகைதாரர்களின் உரிமை, விவசாய அடிப்படைத் தேவைகளை மட்டுமே வகுக்கப்பட்டது. நவீன இயந்திரங்கள் வந்தபின் விவசாயத்தினுடைய போக்கும் திசைமாறியது. இதற்கு அரசாங்கமும் ஊக்குவித்து நம்முடைய மண்சார்ந்த விவசாயம் நாசப்படுத்தப்பட்டது.


என்னுடைய கிராமத்தில் எனக்கே நினைவுகள் உள்ளன. குறிப்பாக சம்பா வகை நெல்வகைகள் அப்போது பயிரிடப்பட்டன. அந்த நெல் பயிரிடுவதற்கு முன், நாற்றுப் பாவதற்கு முன்னால் ஆவரை, கொழிஞ்சி இலைகளை கொண்டு தண்ணீர் நிரப்பி கலப்பையால் மண்ணை பக்குவப்படுத்தி சம்பா நெல் நாற்றை நட்டுவதுண்டு. இன்றைக்கு அந்த கொழிஞ்சி இலைகளோ ஆவரை இலைகளே இல்லாமல் பிஏபி, யூரியா, பொட்டாஷ் ஆகியவற்றை மண்ணில் கலந்து நெல் நாற்றை நட்டுகிறார்கள். இது மண்ணுக்கும், விளைவிக்கும் நெல்லுக்கும் நஞ்சைத்தான் பரப்பும். ஆட்டு கிடைகளையும் புறம் தள்ளி விட்டோம் . சம்பா பயிரோடு நிறுத்திவிட்டு 1968 காலக்கட்டங்களில் இந்தோனேசியா நெல் ரகத்தோடு இணைந்து கலப்பு நெல் விதையான ஐஆர் 8 என்ற நெல்வகை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுப்பட்டது.

 

இந்த அறிமுகம் எங்கள் ஊரில் அருகில் உள்ள கோவில்பட்டி உள்ள அரசு விவசாயப் பன்ணையில் இருந்து (இன்றைக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக விவசாயிகள் ஆராய்ச்சி மையமாக மாறிவிட்டது.) அதிகாரிகள் வந்து ஒவ்வொரு கிராமமாக இந்த ஐ.ஆர் 8 வகையை பிரபலப்படுத்தினார்கள். இதே மாதிரி சேலம் ஆத்தூர் விவசாயப்பன்னையும், தஞ்சை மாவட்டம் ஆடுதுறை விவசாயப்பன்னையும் இதற்கான முக்கியப் பணிகளை மேற்கொண்டதால் நம்முடைய பாரம்பரிய நெல்விதைகளுடைய அன்றைக்கு தான் வெளிப்படையாக தொலைக்க ஆரம்பித்தோம். அதற்கு பிறகு இன்றைக்கு பலவிதமான கலப்பின நெல் விதைகள் வந்துவிட்டன.

இந்த 1968 காலக்கட்டத்தில் எங்கள் ஊர் அருகேயுள்ள கழுகுமலை சர்வோதய மண்டலத்தின் சஞ்சாலக் பொறுப்பில் இருந்த என்னுடைய உறவினர் இராமானுஜம் அவர்கள் வினோபாவின் சீடராவார். அவர் 1964இல் தமிழ்நாட்டிலேயே சர்வோதய மாநாட்டினை ஜெயப்பிரகாஷ் நாராயணனை அழைத்து கழுகுமலையில் எழுச்சியாக நடத்தியவர். அவர் ஊர்ஊராக சென்று ஐ.ஆர் 8 வகையை பயன்படுத்தாதீர்கள். எதிர்காலத்தில் நமக்கு ஆரோக்கியத்தையும், மரபு ரீதியான விவசாயத்தையும் அழித்துவிடும் என்று பிரச்சாரத்தை மேற்கொண்டதெல்லாம் எனக்கு நினைவில் உள்ளன. எங்களுடைய கிராமத்தின் ஒரு பகுதி குளத்துப் பாசனம், கிணற்று பாசனம், மானாவரி நிலங்களும் உண்டு. அந்த நீர் வசதியில்லாத மானாவரி நிலங்களிலேயே அந்த காலத்தில் புழுதிபிரட்டி என்ற நெல்லை உற்பத்தி செய்தோம். இன்றைக்கு அப்படியான மானாவரி விவசாயம் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி. 


ஏனென்றால் நமது மரபுரீதியான விவசாயத்தை விட்டுவிட்டு பாரம்பரிய பழக்கவழக்கங்களை தொலைத்துவிட்டோம். இதற்கு அரசும் ஒரு காரணம்.

நேருவின் அமைச்சரவையில் இருந்த உணவு அமைச்சர், காந்தியின் சகாவுமான கே.எம்.முன்ஷி தொடர்ந்து இயற்கை, மரபுரீதியான விவசாயத்தை பாழ்படுத்திவிடாதீர்கள் என்று நேரு தலைமையில் நடந்த ஒவ்வொரு மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் வாதிட்டார். இவர் ஒரு சிறந்த கல்வியாளர். பாரதிய வித்யா பவனை நிறுவியவர். அரசியலமைப்புச் சாசனத்தை எழுதும்போது முக்கியப் பங்கு வகித்தவர். கே.எம்.முன்ஷி கீழிருந்து மேலாக வளர்ந்து செல்ல வேண்டியது தான் விவசாயம், மண்ணும், நிலமும் தான் அடிப்படை ஆதாரம் என்று வலியுறுத்தினார். அந்த மண்ணும், நிலமும் தான் கிராமம். கிராமம் தான் நாடு என்று பிரகடனப்படுத்தினார். அந்த கிராமங்களில் இருந்து தான் உபரியையும், சந்தையையும் அமைக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தினார். தற்போது நடக்கும் விவசாயம் முக்கியமாக சந்தையை வைத்தே வியாபாரமாக நடக்கின்றது. நிரந்தரமான விவசாயம் இல்லை என்று 72 ஆண்டுகளுக்கு முன்னாலேயே எச்சரித்தார்.

 

முன்ஷி சொன்ன கருத்தை தான் சற்று விசாலமான பார்வையில் இயற்கை விவசாய ஆர்வலர்கள் இன்றைக்கு இந்த அரிய பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நிரந்தர வேளாண் அமைப்பு
பெர்மாகல்ச்சர்

1. நிரந்தர வேளாண் அமைப்பு செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் மீண்டும் உழவு செய்யத் தேவை இருக்காது. தொடர்ந்து
விதைத்தலும், அறுவடை செய்தலுமே செயல்பாடாக இருக்கும்

2. நீர், காற்று, சூரிய ஒளி மூன்றையும் சரியான முறையில் பயன்படுத்துவது இதன் சிறப்பு.

பெர்மாகல்ச்சர் எனும் சொற்பிரயோகத்தை ஆஸ்திரேலிய வேளாண் விஞ்ஞானி திரு. பில்மொலிஸன் தான் முதலில் கொண்டு வந்தார். 


அதன் தமிழக வடிவமே திரு டாக்டர். கோ. நம்மாழ்வார் சொல்லும் வட்டப் பாத்தி, சதுரப் பாத்தி, மடிப்பாத்தி வகைகள்.

விவசாய மண் சார்ந்து இப்போது விவசாயம் நடக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இன்றைக்கு விவசாயத்தின் அடிமட்டமான நிலம், மண், கிராமம் என்றில்லாமல் நகர்புறத்தில் உள்ள சந்தையில் இருந்து துவங்கினால் அது எப்படி உண்மையான விவசாயமாக இருக்க முடியும். ஒவ்வொரு வட்டார கிராமப் பகுதிகளுக்கு, தட்ப வெட்ப நிலை, சுற்றுச் சூழல், நிலவளம், நீர்வளம், பயிர்வளம் என்பது மரபுரீதியாக வித்தியாசப்படும். கடற்கரைப் பகுதியில் வாழை பயிர் செய்யமுடியாது. புஞ்சை, நஞ்சை என்று நிலங்களுக்கேற்ற பயிர்களைத் தான் நாம் மரபு ரீதியாக பயிர் செய்ய முடியும். அந்த மரபுகளையெல்லாம் மீறி டெல்லியில் உள்ள கிரிஷி பவனில் உள்ள அதிகாரிகளின் கைகளில் விவசாயம் போனால் இந்தியா எப்படி உருப்படும். நீர் சுழற்சி, பயிர்களுக்கு ஊட்டச்சத்து சுழற்சி இரண்டும் இருந்தால்தான் தானியங்களும், விளைப் பொருட்களும் சத்தாக இருக்கும். மாறாக இன்றைக்கு இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் அதில் விளையும் பொருட்களை உண்டு நமக்கு நாமே நோய்களை உருவாக்கிக் கொள்கிறோம். 


இந்த நிலையில் நவீன விவசாயம் என்று ரசாயன உரங்களை அள்ளி நிலங்களில் வீசுவதால் மண்ணின் இயற்கைத் தன்மையும் மாறி நம்முடைய மண் வாசனையை நாசப்படுத்துகிறோம். இது நியாயம் தானா என்று நினைக்க வேண்டும். இந்த அத்துமீறல்கள் அரசாங்கத்தின் ஆதரவாலும், ஒத்துழைப்பாலும், தீவிரப் பிரச்சாரங்களாலும் நமது மரபு ரீதியான விவசாயங்களை தூக்கி எறிந்துவிட்டு நம் மண், நிலத்தையும் நாசப்படுத்திவிட்டு நம்முடைய உடம்பையும் கெடுத்துக் கொள்கிறோம். அதுபோக பாரம்பரியமான விதைகளையும் அழித்துவிட்டோம். ஆயிரக்கணக்கான பண்டைய நெல் ரகங்கள் இன்றைக்கு நம்மிடையே இல்லை. ஒரு சில நெல் நீர்ப்பாசன வசதி இல்லையென்றாலும் குறுகிய காலத்தில் 110 நாட்களில் ஒரு ஏக்கருக்கு மரபு ரீதியான நெல்வகைகள் கடந்த 1960வரை 2100 கிலோ நெல் தானியத்தை அறுவடை செய்யப்பட்டது. இது வானம் பார்த்த இராமநாதபுரம் மாவட்டத்திலும் இந்த மாதிரி நெல் ரகங்கள் விளையும். அவற்றில் சில,“புழுதிபுரட்டி, பாற்கடுக்கன், பனைமூக்கன், சிறைமீட்டான், மலைமுண்டன், கருஞ்சூரை, யானைக்கொம்பன், போரிறங்கல், வாள்சுருணை வாலன், தென்னரங்கரன், செம்பாளை, கறுத்ததிக்கராதி, கண்டசாலி, திருக்குறுங்கை, காடைக்கழுத்தன், குடவாழை, முத்துவெள்ளை, திருப்பதிசரம்” என நூற்றுக்கணக்கில் உள்ளது. இதற்கெல்லாம் பாசன வசதி குறைவு தான். அன்றைக்கு நம் முன்னோர்கள் எல்லாம் இது மாதிரி இரசாயன உரங்களை பயன்படுத்தாமல் தங்களுக்கான உரங்களை பாரம்பரிய முறைப்படி எரு, கொழிஞ்சி இலை, மண்புழு போன்றவற்றை கொண்டு விவசாயம் மேற்கொண்டார்கள். இன்றைக்கு இதே இராமநாதபுரம் பெரியகுளம் நிரம்பினால் தான் நெல் விவசாயம் செய்ய முடியும் என்கிற நிலைமை. இதற்கு காரணம் என்ன? 
மரபு ரீதியான விவசாயத்தினை தொலைத்தோம், மண்ணைத் தொலைத்தோம், நிலத்தை தொலைத்தோம், நம் ஆரோக்கியத்தை தொலைத்தோம். இது தான் நவீன விவசாயம். இதற்கு ஆதரவாக டெல்லியிலுள்ள கிரிஷி பவனும், நம்முடைய பாரம்பரியத்தை தொலைத்துக் கட்ட கடுமையாக பாடுபடுகிறது.

 

விதியே, விதியே தமிழ் சாதியே!!!
வேறென்ன சொல்ல முடியும்.

 

 

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05-09-2018

by Swathi   on 08 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கருங்காலி மரத்தின் அற்புத பயன்கள்.. கருங்காலி மரத்தின் அற்புத பயன்கள்..
ஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் ஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்
வேளாண் பகுதி - இயற்கை வேளாண்மை – உரமிடுதலில் ஒருநெருடல்: வேளாண் பகுதி - இயற்கை வேளாண்மை – உரமிடுதலில் ஒருநெருடல்:
பாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும் பாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும்
விவசாய பழமொழிகள்.. விவசாய பழமொழிகள்..
நம்பிக்கை பஞ்சாயத்துகள்  1. திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி நம்பிக்கை பஞ்சாயத்துகள் 1. திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி
வனத்துக்குள் தமிழ்நாடு வனத்துக்குள் தமிழ்நாடு
கொரோனாவிற்கு பின் நாம் செல்லவேண்டிய தற்சார்பு வாழ்வியல் திசை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு.. கொரோனாவிற்கு பின் நாம் செல்லவேண்டிய தற்சார்பு வாழ்வியல் திசை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.