உடம்பின் விலாப் பகுதியில் கம்பியைக் குத்திக் கொண்டு, ஒப்பனையுடன் இசைக்கருவிகளின் தாளத்துக்கேற்ப ஆடும் ஆட்டம் செலாக்குத்தாட்டம் எனப்படும். விலாவில் கம்பியைக் குத்துவதால் இது லாக்குத்து ஆகி செலாக்குத்து ஆனது என்றும் கூறப்படுகிறது. ஆண்கள் மட்டுமே இக்கலையை நிகழ்த்துகின்றனர். இதை நிகழ்த்தும் கலைஞர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தக்கிப்பட்டி, கோவில்பட்டி, ஆண்டிப்பட்டி, திருவெட்பூர், வடசேரிப்பட்டி, பெருமாநாடு, பெருஞ்சுனை, அன்னவாசல், பசுமலைப்பட்டி, துடையூர், தொண்டைமான் நல்லூரி, புத்தாம்பூர், பூங்குடி, உச்சாணை ஆகிய ஊர்களில் வாழ்கின்றனர். இந்த ஆட்டத்தைப் போர்க்கலையில் அடக்கலாம். இன்றைய நிலையில் இக்கலை கோவில்களில் மட்டுமின்றி வேறு சமூகப் பொது விழாக்களிலும், அரசியல் கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும், வயதானவர்களின் இறப்புச் சடங்கிலும் நிகழ்கிறது.
|