|
||||||||
சேவல் விருத்தம் |
||||||||
முருகப் பெருமானின் சேவல் கொடியை மையமாக வைத்து அருணகிரிநாதர் பாடியது சேவல் விருத்தம் ஆகும். பதினோரு பாடல்களை உடைய இப்பகுதி பயம் நீக்கும். ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு முதலியவற்றால் ஏற்படும் ஏதங்களை விரட்டும் தன்மை வாய்ந்தது. எம பயத்தையும் போக்கும் வல்லமை இதற்கு உள்ளது. இவ்வகையில் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய நிலையில் பெருமை பெற்றது சேவல் விருத்தம் ஆகும். இதனுள் பல அரிய கருத்துகளைத் தொகுத்து் வைத்துள்ளார் அருணகிரிநாதர்.
காப்பு
கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல் கொண்டேழ் இசைமருள
குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி குமரன் இதம்பெறு பொற்
செந்தாமரை கடம் நந்தா வனமுள செந்தூர் எங்குமுளான்
திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு சேவல் தனைப்பாட
வந்தே சமர்ப்பொரு மிண்டாகிய கய மா முகனைக் கோறி
வன் கோடொன்றை ஒடித்துப் பாரதம் மா மேருவில் எழுதி
பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு பணி சிவ லிங்கம் அதை
பார்மிசை வைத்த வினாயகன் முக்கட் பரமன் துணையாமே
(முக்கட் பரமன் துணையாமே வினாயகன் பரமன் துணையாமே)
பூங்கொத்துக்கள் சூடியுள்ள கூந்தலில், இசை பாடும் வண்டினங்கள், ரீங்காரம் செய்யும், அந்த இலக்கணத்திற்கு நிகராகவும் (அதே போல்), சங்கீதத்தில் வரும் 'ஸ ரி க ம ப த நி' என்கின்ற ஏழு சுரங்களும் தோற்று பின் வாங்கவும், மழலைச் சொற்கள் பேசி அடியவர்களுக்கு அருள் புரியும் பொன் நிற வடிவினள், எவரிடத்தும் வசப்படாமல் தன்னிச்சையாக செயல் படுபவள் ஆகிய உமா தேவியின், குமாரனாகிய முருகக் கடவுள் (வீற்றிருக்கும்), நன்மைகளைத் தரும், அழகான, தாமரைக் காடுகளும், அழியாத சோலைகளும் உள்ள, திருச்செந்தூர், மற்ற பல தலங்களிலும் குடிகொண்டு உள்ள குமார மூர்த்தியின், சிறப்பு வாய்ந்த (திலகம் போன்ற) மயில் வாகனத்தில் வரும் முருகப் பெருமானின், சிறப்பு வாய்ந்த, சேவலை நான் துதித்து பாடுவதற்கு, எதிர்த்து போருக்கு வந்த, மதம் பிடித்த, கஜமுகமாசுரனை கொன்று, தனது வலிமை பொருந்திய ஒரு தந்தத்தை ஒடித்து, பாரதக் கதையை மேரு மலையில் வைத்து எழுதினவரும், பசுமையான அன்று பூத்த பல மலர் மாலைகளைக் கொண்டு ராவணன் வழிபட்டு பூஜை செய்த சிவ லிங்கம் ஆன மஹாபலேஸ்வரரை, கோகர்ணத்தில் பூமியில் வைத்த, கணபதியாகிய, மூன்று கண்களை உடைய பரம தெய்வம் எனக்கு துணை புரியட்டும்.
சேவல் விருத்தம் - 1
கம்சத்வனி - கண்ட சாபு
உலகில் அனுதினமும் வரும் அடியவர்கள் இடரகல
உரிய பர கதி தெரியவே
உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள்மிடி கெட அருளியே
கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து சிற
கைக்கொட்டி நின்றா டுமாம்
மலைகள் நெறு நெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்
மடிய அயில் கடவு முருகன்
மகுட வட கிரியலைய மலையுமுலை வனிதை குற
வரிசையின மகள் அவளுடன்
சிலைகுலிசன் மகள்மருவு புயன் இலகு சரவண
சிறுவன் அயன் வெருவ விரகிற்
சிரமிசையில் வெகு சினமொட் அடியுதவும் அறுமுகவன்
சேவற் திருத் துவஜமே
(சேவற்திருத் துவஜமே அறுமுகவன் சேவற்திருத் துவஜமே)
இப்பூவுலகில், முருகப் பெருமானின் அடியவர்களுக்கு, நாள்தோரும் ஏற்படும், இடஞ்சல்கள் நீங்கும்படியும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய லட்சியமாகிய, சாயுச்சிய நிலையாகிய முக்தியை, காண்பித்தருளியும், படத்தில் ரத்தினத்தைத் தாங்கி இருக்கும் சர்ப்பங்கள் போல அலைந்து திரிகின்ற, நல்வினை தீவினை இரண்டும் அழியவும், அஞ்ஞான இருளாகிய பொருள் வறுமை அறிவு வறுமை ஆகிய இரண்டும் அழிந்து ஒழியும்படி, அருள் செய்யவும், இடஞ்சல்கள் செய்துவரும், பேய்களும் குட்டிச் சாத்தான்களும், கொடிய பாம்புகள், மிகுந்த பலத்துடன், பெரும் துன்பத்தை தர வந்தால், அவைகளை எல்லாம், கண்களைப் பிடுங்கியும் தேகங்களைப் பிளந்தும், தனது சிறகுகளைக் அடித்துக் கொண்டு வெற்றிக் களிப்புடன் நின்று கூத்தாடும் (அது எது என வினவினால்) உலகில் உள்ள மலைகள் அனைத்தும் பொடிபடவும், சமுத்திரம் வற்றி வறண்டு பொகவும், அரக்கர்கள் அனைவரும் இறந்து மடியவும், வேலாயுதத்தைப் பிரயோகித்த முருகப் பெருமான், சிகரங்களை உடைய மேருமலை தோல்வி அடையும்படி, எதிர்த்து போர் செய்கின்ற, தன பாரங்களை உடைய பெண்ணும், வேடர் குடி மக்களாகிய, புகழ் மிக்க, அந்த குலத்தில் பிறந்த வள்ளிப் பிராட்டியையும், கோபமுடைய வஜ்ராயுதத்தை ஏந்தியுள்ள இந்திரனின் திருமகளாகிய தேவயானையையும், அணைத்திருக்கும் பன்னிரு திருப்புயங்களை உடையவன், விளங்கும் சரவணப் பொய்கையில் உதித்த குமாரன், பிரம தேவன் அஞ்சும்படி, வெகு சாமர்த்தியமுடன், தலையில், மிகுந்த கோபத்துடன் குட்டி அருளிய, சண்முகப் பெருமானின் கொடியில் அமர்ந்துள்ள சேவலே தான் அது.
சேவல் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு
எரியனைய வியனவிரம் உளகழுது பல பிரம
ராக்ஷதர்கள் மிண்டுகள் செயும்
ஏவல் பசாசு நனி பேயிற் பசாசு கொலை
ஈனப் பசாசு களையும்
கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின் உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்
கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர்
கரத் தடர்த்துக் கொத்துமாம்
தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர் கிடு கிடென நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலிங்கலினென சிறிய
சரண அழகொடு புரியும் வேள்
திரிபுரம் அதெரிய நகைபுரியும் இறையவன் மறைகள்
தெரியும் அரன் உதவு குமரன்
திமிர தினகர முருக சரவண பவன் குகன்
சேவற் திருத் துவஜமே
(சேவற்திருத் துவஜமே குகன் சேவற் திருத் துவஜமே)
நெருப்பு போல் தோன்றி, படர்ந்துள்ள, தலை முடிகளை உடைய பேய்கள், பலவகைப்பட்ட பிரம்ம ராட்சதர்கள், குறும்புகள் செய்யும், பிறரால் ஏவப்பட்ட பிசாசுகள், தனித் தன்மைகள் வாய்ந்த பிசாசுகள், கொலைகளைப் புரியும் துஷ்ட பிசாசுகளையும், கரு நிறம் வாய்க்கப்பெற்று, கரடு முரடான, பெரிய மலை போலவும், மூங்கில்கள் போலவும், முயன்று, உயர்ந்து ஆகாச வரையிலும் நிமிர்ந்து நிற்கும், கொடிய பார்வையை உடைய பூதங்களையும், மட மட என்கிற சப்தத்துடன் பயந்து அலறும்படி, கையில் உள்ள நகங்களால் கொத்தித் தாக்கும். (அது எது என வினவினால்) பல மலைப் பிரதேசங்களில் வசித்து வந்த, மதம் பிடித்த காட்டு யானைகள் போலவும், தூண்கள் போலவும், வாழ்க்கை நடத்தி வந்த, அமணர் கூட்டம் கிடு கிடு என நடுங்கும்படி, காலில் அணிந்துள்ள தண்டைகளும் சிலம்புகளும், தனது சின்ன திருவடிகள் அழகு பெறும்படி நர்த்தனம் புரியும் ஞானசம்பந்தப் பெருமான், முப்புரங்களும் எரிந்து சாம்பலாகும்படி புன்முறுவல் பூத்த இறைவரும், வேதங்களால் அறிவிக்கப்படும் சிவபெருமான், உலகத்திற்கு நன்மை செய்யும் பொருட்டு அருளிய குமாரக் கடவுள், அஞ்ஞான இருளை நீக்கும் ஞான சூரியனான முருகன், நாணல் பொய்கையில் அவதாரம் செய்தவன், அடியார்களின் இதயக்குகையில் வீற்றிருப்பவன் ஆகிய குமாரக் கடவுளின், கொடியில் விளங்கும் சேவலே தான் அது.
சேவல் விருத்தம் - 3
சார்ங்கா - கண்ட சாபு
கரி முரட்டடி வலைக் கயிறெடுத் தெயிறு பற்
களை இறுக்கியு முறைத்து
கலகமிட்டி யமன் முற் கரமுறத் துடரும் அக்
காலத்தில் வேலு மயிலும்
குருபரக் குகனும் அப்பொழுதில் நட்புடன் வர
குரலொலித் அடியரிடை
குலத்தலறு முக்கிற்சினப் பேய்களைக் கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்
அரிய கொற்கையன் உடற்கருகும் வெப்பகையை உற்
பனமுறைத் தத மிகவுமே
அமணரைக் கழுவில் வைத்தவரு மெய்ப் பொடிதரித்து
அவனிமெய்த் திட அருளதார்
சிவபுரத் அவதரித் தவமுதத் தினமணி
சிவிகை பெற்றினிய தமிழை
சிவனயப் புற விரித்துரை செய் விற்பனன் நிகற்
சேவற்திருத் துவஜமே
(சேவற்திருத் துவஜமே குருபரன் சேவற்திருத் துவஜமே)
கரிய நிறத்துடனும், முரட்டு குணத்துடனும், பாச வலையான், கயிற்றை ஏந்திக் கொண்டு, கோரைப் பற்களை, நற நற என கடித்துக் கொண்டு, கலக்கத்தைத் தரும், எம ராஜன், என் முன்னால் தொடர்ந்து வந்து, கையால் பிடித்து கொண்டு போகும், அந்த அந்திம காலத்தில், ஞானத்தைத் தரும் சக்தியாகிய வேலாயுதமும் ஓங்கார ரூபமான மயில் வாகனமும், குரு சிரேஷ்டனாகிய குகப் பெருமானும், அந்த அபாயகரமான நேரத்தில் என் முன் கருணையுடன் தோன்றும் படி, கூவி அழைத்து, அடியவர்களின் மரண துன்பத்தை, அடியோடு நீக்கி, உலகேழும் அதிர அரற்றும் மூக்கினால், கோபம் மிக்க பேய்களை, கொத்தி குதறி, சுற்றிச் சுற்றி வட்டமிட்டு முட்ட வரும் (அது எது என வினாவினால்) அருமை மிக்க கொற்கைப் பாண்டியன், தேகத்தைக் கருக்கி விட்ட, மிகவும் வெப்ப நோயை (சுரத்தை), மூல காரணத்தை எடுத்துச் சொல்லி, கொலைச் செயல்களை செய்து வந்த சமணர்களை, வாது புரிந்து கழுவில் ஏற்றி, ஒரு சிலரை உண்மைப் பொருளாகிய சிவத்தைச் சுட்டிக் காட்டும் விபூதியை அணியச் செய்து, உலகம் முழுவதும் உண்மைப் பரம் பொருளை அறியும்படி செய்து, அருள் புரிந்தவரும், சீர்காழி தலத்தில் திரு அவதாரம் செய்து, அமிர்தம் போன்ற குளுமையையும் சூரியனைப் போன்ற பிரகாசத்தையும் உடைய, முத்துப் பந்தலை சத்தி முத்தம் என்ற தலத்தில் பெற்று, இனிமையான தமிழில் தேவாரப் பாக்களை, சிவ பெருமான் விருப்பத்துடன் கேட்கும்படிப் பாடி அருளிய ஞான சம்பந்த மூர்த்தியான ஆறுமுகப் பெருமான், வெற்றியைத் தரும் கொடியிலுள்ள சேவலே தான் அது.
சேவல் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி
அச்சப் படக் குரல் முழக்கிப் பகட்டி அல
றிக் கொட்டமிட்ட் அமரிடும்
அற்பக் குறப் பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி
அறு குழைகளைக் கொத்தியே
பிச்சு சினத்த் உதறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே
பெற்றுச் சுடர் சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக் கொக்கரித்து வருமாம்
பொய் சித்திரப் பலவும் உட்கத் திரை ஜலதி
பொற்றைக் கறுத் அயில்விடும்
புட்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல்
புகழ் செட்டி சுப்ரமணியன்
செச்சைப் புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி
தித்திக்கு முத் தமிழினை
தெரியவரு பொதிகைமலை முனிவர்க் குரைத்தவன்
சேவற் திருத் துவஜமே
(சேவற்திருத் துவஜமே சுப்ரமணியன் சேவற்திருத் துவஜமே)
பகைவர்கள் அஞ்சும் படி, பெருத்த சப்தம் செய்து, விரட்டி, கூக்கரலிட்டு, ஆர்ப்பாட்டத்துடன், போர் செய்யும், அற்பமான சிறு தேவதைகளுக்கு படைத்திருக்கும், பலி வரிசைகளில், வெட்டுக்கள் பட்டு, அந்தச் சிறு தேவதைகள் கடித்துப் போட்டிருந்த, இலைகள் தழைகள் போன்றவைகளை, மூக்கால் கொத்தி, துண்டு துண்டாக பிய்த்தும், நான்கு பக்கமும் தூக்கி வீசி, எட்டு திசைகளிலும் அடைத்து பலி போடுவது போல் பெரும் கிளர்ச்சியுடன் வலிமை பெற்று, ஒளி வீசும் தனது சிறகுகளைத் தட்டிக் கொண்டு, மிகுந்த லட்சணத்துடன் கொக்கரித்துக் கொண்டு வரும் (அது எது என வினாவினால்) பொய்யும் கற்பனைகளும் நிறைந்த புறச் சமயங்கள், நடுங்கி பின் வாங்கவும், அலை வீசும் கடல் மீதும், அவைகள் கருகிக் போகும்படி, ஒளி வீசும் வேலாயுதத்தை செலுத்தியவன், அன்பும் அறிவும் நிறம்பப் பெற்றவன், சகல கலைகளிலும் கடலென திறமை மிக்கவன், புகழ் மிக்க செட்டியாகிய சுப்ரமணியக் கடவுள், வெட்சி மாலையை அணிந்தவன், நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தை அணிந்துள்ளவன், மொழிக்கு மொழி இனிமை மிக்க, இயல், இசை, நாடகம் என்கின்ற மூன்று தமிழையும், அறிந்து கொள்வதற்காக வந்த பொதிகை மலையில் வாழும் முனி சிரேஷ்டரான அகத்தியனுக்கு, உபதேசம் செய்தவருமாகிய குமாரக் கடவுளின், கொடியில் உள்ள சேவலே தான் அது.
சேவல் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்ட சாபு
தான இடும்புசெயு மோகினி இடாகினி
தரித்த வேதாஅள பூதம்
சருவ சூனியமும் அங்கிரியினால் உதறித்
தடிந்து சந்தோட முறவே
கோனாகி மகவானும் வனாள வனாடர்
குலவு சிறை மீள அட்ட
குலகிரிகள் அசுரர் கிளை பொடியாக வெஞ்ஜிறைகள்
கொட்டி எட்டிக் கூவுமாம்
மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவனற் குருபரன்
வானீரம் அவனியழல் காலாய் நவக் கிரகம்
வாழ்னாள் அனைத்தும் அவனாம்
சேனா பதித் தலைவன் வேதாவினை சிறைசெய்
தேவாதி கட் கரசு கட்
டேனான மைக்கடலின் மீனானவற் கினியன்
சேவற் திருத் துவஜமே
(சேவற் திருத் துவஜமே குருபரன் சேவற் திருத் துவஜமே)
ஒருவரின் தூண்டுதல் இல்லாமல், துன்பங்களை விளைவிக்கும், மோகினி எனும் பெண் பேய்களும் (நடு நிசியில் தனி வழியில் செல்லும் ஆடவரை பிடித்துக்கொள்ளும் இவ்வகை மோகினிப் பேய்), பிணங்களைத் தின்னும் இடாகினிப் பேய்கள், இவைகளுடன் கூடி இருக்கும் வேதாளங்கள் பூதங்கள், எல்லாவிதமான ஏவல் சூன்யங்கள் அனைத்தையும், பாதத்தினால் எடுத்து உதறி, அவைகளை தண்டித்து, இந்திரனும், மகிழ்ச்சியுற்று, மீண்டும் தேவலோகத்திற்கு அதிபனாகி, தேவலோகத்தை அரசு ஆளவும், அந்த தேவர்களுக்கு நேர்ந்த சிறை நீங்கவும், எட்டு திசைகளில் உள்ள மலைகள், அரக்கர்களின் கூட்டங்கள் பொடி பொடியாகப் போகவும் கொடிய சிறகுகளை படபடவென அடித்துக் கொண்டு எட்டிக் குதித்து பெருங் குரலிட்டுக் கூவும் (அது எது என வினாவினால்) பெரிய வாசுகி எனும் நாகப் பாம்பு, எலும்பு மாலை, அருகம்புல் இவைகளை அணிந்துகொண்டு, நடனம் செய்யும் பரமேஸ்வரனுக்கு, நல்ல குரு மூர்த்தி, ஆகாயம், நீர், பூமி, நெருப்பு காற்று முதலான பஞ்ச பூதங்களையும், ஒன்பது கிரகங்களையும் காலம் என்று சொல்லப்படும் தத்துவங்கள் அனைத்தும் எல்லாமாய் இருக்கும் முருகக் கடவுள், தேவ சேனாபதி, பிரம்மனை சிறையில் அடைத்தவரும் தேவ லோக சக்ரவர்த்தி, மது, தேன் போன்று இனிமை உடையவன், இருண்ட கடலில் மீன் உருவத்தில் இருந்த நந்தி தேவருக்கு மகிழ்ச்சியை அளித்தவன் இப்பேற்பட்ட குமாரக் கடவுளின் கொடியில் உள்ள சேவலே தான் அது.
சேவல் விருத்தம் - 6
சின்டுப்கைரவி - கண்ட சாபு
பங்கமாகிய விட புயங்கமா படமது
பறித்து சிவத் அருந்தி
பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள் புரி
பச்சை கலாப மயிலை
துங்கமாய் அன்புற்று வன்புற்ற் அடர்ந்துவரு
துடரும் பிரேத பூத
தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்டப் படக் கொத்துமாம்
மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி
வஞ்ஜி நான்முகி வராகி
மலையரையன் உதவு அமலை திருமுலையில் ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்
செங்க் கணன் மதலையிடம் இங்குளான் என்னு நர
சிங்கமாய் இரணியனுடல்
சிந்த உகிரிற்கொடு பிளந்த மால் மருமகன்
சேவற் திருத் துவஜமே
(மால் மருமகன் சேவற்திருத் துவஜமே)
கொடுமையைச் செய்யும் விஷமுள்ள, பாம்பின் பெரிய படத்தை, கொத்தி, சினத்துடன் அதை உணவாகக் கொண்டு, வெளி அண்டங்கள் எல்லாவற்றிலும் பறந்து, களி நடனம் புரியும், பச்சை நிறத் தோகைகளை உடைய மயிலுடன், தூய அன்பு கொண்டு, வலிமையுடன், நெருங்கி வரும், தொடர்ந்து வரும், பிணப் பேய்களின் கூட்டங்கள், பிசாசுகளையும், அசுரர் கூட்டங்கள் அனைத்தையும், துண்டு துண்டாகச் சிதறும்படிக் கொத்தும் (அது எது என வினாவினால்) மங்கையும், யாமளையும், குமாரியும், கங்கையாக இருப்பவளும், மாலைகளை அணிந்திருப்பவளும், பொன்னிறமாக இருப்பவளும், கொடி போன்றவளும், நான்கு முகங்களை உடையவளும், வராகியும், இமவான் தந்த அப்பழுக்கற்றவளும், ஆகிய பார்வதி தேவியின் திருமார்பிலிருந்து ஒழுகிய பாலமுதத்தை, மகிழ்ச்சியோடு உண்ட சிறுவன், (திருஞானசம்பந்தர் .. முருகன்) (கோபத்தால்) சிவந்த கண்களை உடைய திருமால், இதோ தூணில் இருக்கிறான் என்று பிரகலாதனால் சுட்டிக் காட்டப்பட்டவன், நரசிங்க அவதாரம் எடுத்து இரணியன் உடலை, ரத்தம் சிந்த கை நகத்தால் பிளந்து சம்காரம் செய்த மகா விஷ்ணுவின் மருமகன் (ஆகிய) குமாரக் கடவுளின் கொடியில் உள்ள சேவலே தான் அது.
சேவல் விருத்தம் - 7
பீம்பலாச் - கண்ட சாபு
வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கட் குறும்புகள் தரும்
விடு பேய்களே கழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம் பேய்களைத் துரத்தி
பேறான ஏசரவண பவாஏ என்னு மந்திரம்
பேசி உச்சாடனத்தார்
பிடர் பிடித்துக் கொத்தி நகனுதியினால் உற
பிய்ச்சுக் களித் தாடுமாம்
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி
வாத பித்தம் சிலேர்ப்பனம் குட்ட முதலான
வல்ல பிணிகளை மாற்றியே
சீறாத ஓராறு திருமுக மலர்ந் அடியர்
சித்தத் இருக்கு முருகன்
சிலைகள் உரு இட அயிலை விடுகுமர குருபரன்
சேவற் திருத் துவஜமே
(செவற் திருத் துவஜமே குருபரன் சேவற் திருத் துவஜமே)
மிடுக்குடைய, பைரவர் போகும் வழியில், முன்னும் பின்னும் ஓடி தொடர்ந்து வந்து, சிவந்த கண்களை உடையனவாய் சேஷ்டைகள் புரியும், தனித்திருக்கும் பேய்களையும், கொடிய கழுகுகளையும், வன்மையான கொலைகளுக்கும் சாவுகளுக்கும் காரணமான, நெருப்பைக் கக்கும் வாய்களை உடைய, கொடிய போய்களைத் துரத்திச் சென்று, தவத்தால் கிடைப்பதான, சரவணபவா என்கிற சடாட்சர மந்திரத்தை, சொல்லி, உட்சாடத்தினால் பிரயோகம் செய்யும் வகையில், அவைகளுடைய கழுத்தைப் பிடித்து மூக்கினால் கொத்தி, கூர்மையான நகமுனையினால் பிய்த்து, மகிழ்ச்சியுடன் நடனம் புரியும் (அது எது என வினாவினால்) நீங்காத வியாதியான காக்காய் வலிப்பு, வயிற்று வலி, வயிறு உளைப்பு (சூலை நோய்), பெரு வயிறு, பால் வினை நோய்கள், வாதம் பித்தம், சிலேத்துமம், குஷ்டம், இவை போன்ற, கொடிய நோய்களை நீக்குபவரும், அடியவர்களின் கோடி குறைகள் கருதினாலும் வேறு முனிய அறியாதவரும், தனது ஆறு திருமுகங்களும் மகிழ்ச்சியுடன், தியானிக்கும் அடியவர்களின் உள்ளத்தில் வீற்றிருக்கும் முருகன், கிரவுஞ்ச கிரியும் மற்ற ஏழு மலைகளும் உருவிச் சென்று அழித்த, கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய, குமாரப் பரமேஸ்வரனின், கொடியில் வீற்றிருக்கும் சேவலே தான் அது.
சேவல் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு
வந்து அர்ப்பரிக்கும் அம்மிண்டுவகை தண்டதரன்
வலிய தூதுவர் பில்லி பேய்
வஞ்ஜினாற் பேதுற மகாபூதம் அஞ்ஜிட
வாயினும் காலினாலும்
பந்தாடியே மிதித்துக் கொட்டி வடவை செம்
பவளமா அதிகாசாமா
பசும் சிறைத்தலமிசைத் தணியயிற் குமரனை
பார்த் அன்புறக் கூவுமாம்
முந்த் ஆகமப் பலகை சங்காகமத்தர் தொழ
முன்பேறு முத்தி முருகன்
முது கானகத் எயினர் பண்டோ ட் அயிற் கணை
முனிந்தே தொடுத்த சிறுவன்
சிந்தா குலத்தை அடர் கந்தா எனப்பரவு
சித்தர்க் கிரங்க் அறுமுகன்
ஜெய வெற்றிவேள் புனிதன் நளினத்தன் முடி குற்றி
சேவற் திருத் துவஜமே
(சேவற் திருத் துவஜமே)
எதிரே வந்து, பெரும் ஆரவாரத்துடன், அந்த மதத்துடன் நெருங்கித் தொடரும் வகையில், தண்டாயுதம் ஏந்தியுள்ள யமனின் பலமிக்க தூதுவர்கள், பிறரால் ஏவப்படும் பிசாசுகள் (இவைகளை), வலிய சினத்துடன் அவைகளை புத்தி மயங்கும்படி செய்தும் மிகப் பெரிய பூதங்களும் பயந்து நடுங்கும்படி, தன்னுடைய மூக்கினாலும் காலினாலும், கால் பந்து போல் அவைகளை உதைத்து மிதித்து, அடித்து, வடவாமுகாக்கினியை பவளமணி போல் கொத்தி எடுத்து பெரிய நகை புரிந்து, பசிய சிறைகளின்மேல் முதுகில் வீற்றிருக்கும் ஒப்பற்ற வேலாயுதக் கடவுளை, நோக்கி அன்புடன் குரல் கொடுக்கும் (அது எது என வினாவினால்) முற்பட்டு விளங்கும், கல்வியின் அளவை நிர்ணயிக்கும் சங்கப் பலகையின் மேல், கல்வியில் வல்லவர்களான 49 புலவர்களும் வணங்க, முன்பு ஒரு சமயம் ஏறி வீற்றிருந்து மோட்ச சாம்ராஜ்யத்திற்கு வழி காட்டியான முருகன், பழமையான காடுகளில் வசிக்கும் வேடர்கள், முன்பு பின் வாங்கி, கூரிய வேலாயுதத்தை சினத்துடன் செலுத்திய முருகன், மன வியாகுலத்தை நீக்கும் கந்தக் கடவுள், என்று துதிக்கும், உள்ளத்தை உடைய பக்தர்க்கு இரங்கி கருணை புரியும் சண்முகப் பெருமான் வெற்றியையே காணும் முருகன், பரிசுத்த மூர்த்தி, தாமரை மலரில் வசிக்கும் பிரம்மனை சிரசில் குட்டி தண்டித்த முருகப் பெருமானின், கொடியில் விளங்கும் சேவலே தான் அது.
சேவல் விருத்தம் - 9
டுர்கா - கண்ட சாபு
உருவாய் எவர்க்கு நினை அரிதாய் அனைத்துலகும்
உளதாய் உயிர்க் உயிரதாய்
உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட்பொருளதாய்
வரும் ஈசனைக் களப முகன் ஆதரித் திசையை
வலமாய் மதிக்க வருமுன்
வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான் முன்
வைகு மயிலைப் புகழுமாம்
குருமா மணித்திரள் கொழிக்கும் புனற் கடக்
குன்றுதோ றாடல் பழனம்
குலவு பழமுதிர் சோலை ஆவினன் குடி பரங்க்
குன்றிடம் திருவேரகம்
திரையாழி முத்தைத் தரங்கக் கை சிந்தித்
தெறித்திடும் செந்தி நகர் வாழ்
திடமுடைய அடியவர் தொழு பழையவன் குலவுற்ற
சேவற் திருத் துவஜமே
(சேவற் திருத் துவஜமே பழையவன் சேவற் திருத் துவஜமே)
அடியவர்களுக்கு அனுக்ரகம் செய்யும் பொருட்டும் சில திருவிளையாடல்கள் செய்யும் பொருட்டும் நடராஜ மூர்த்தி தட்சிணாமூர்த்தி முதலிய பல வடிவங்களை எடுத்தும், ஆனால் தன்னுடைய சொந்த நிலையான சொரூப நிலையில் எவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதவராயும், சகல உலகங்களில் வாழும் ஜீவன்களின் சொரூபமாயும், அந்தந்த உயிர்களை உள் நின்று இயக்கும் உயிர்ச் சக்தியாயும், அந்த உயிர்களின் அந்தக்கரணமான அறிவு ரூபமாயும், விரித்துச் சொல்வதற்கு அரிதான வேத மொழிகளால் ஆராய்ந்து நிச்சயிக்கப்படும், மேலான அனைத்தையும் கடந்த பிரம்மப் பொருளாய், அருட் பொரும் ஜோதியாய், நின்று விளங்கும் சிவ பெருமானை, யானை முகக் கணபதி, அன்பு பாராட்டி, முன் ஒரு காலத்தில் எட்டு திசையில் உள்ளோரும் மதிக்கும்படி அந்த ஈசனை வலம் வரும் சமயத்தில், விளங்கும் முருகனைத் தன் முதுகில் சுமந்து கொண்டு, பூமியைச் சுற்றி வந்த (அந்த முருகனின்), முன்பாக, வீற்றிருக்கும் மயிலைப் புகழ்ந்து பேசுமாம் (அது எது என வினாவினால்) ஒளி வீசுகின்ற, ரத்னக் குவியல்களை, வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரும், அருவிகளும், காடுகளும் விளங்கும், பல மலைகள், பல வயல்கள், பிரகாசம் பொருந்திய சோலை மலை, திருவாவினன்குடி, திருப்பரங்குன்றிலும், சுவாமிமலை, கடல் அலைகள் முத்துக்களை, சமுத்திரம் தன் கைகளினால், வீசி எறிந்திடும், திருச்செந்தூரில் வாழும் திடமான பக்தியைக் கொண்ட அடியார்கள் போற்றி வணங்குகின்ற, பழம் பொருளாகிய முருகப் பெருமான், கையில் தரித்திருக்கும், கையில் தரித்துள்ள கொடியில் உள்ள சேவலேதான் அது.
சேவல் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு
மகர ஜலனிதி சுவற உரகபதி முடிபதற
மலைகள் கிடு கிடு கிடெனவே
மகுடகுட வடசிகரி முகடு பட படபடென
மதகரிகள் உயிர் சிதறவே
ககனமுதல் அண்டங்கள் கண்ட துண்டப்பட
கர்ஜித் இரைத் அலறியே
காரையாழின் நகரர் மாரைப் பிளந்து சிற
கைக்கொட்டி நின்றாடுமாம்
சுகவிமலை அமலை பரை இமையவரை தரு குமரி
துடியிடை அனகை அசலையாள்
சுதன் முருகன் மதுரமொழி உழைவனிதை
இபவனிதை துணைவன் எனதிதய நிலையோன்
திகுட திகுட திதிகுட தகுடதி தகுட திகுட
செக்கண செகக் கண என
திருனடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவற் திருத் துவஜமே
(துவஜமே, சேவற் திருத் துவஜமே சேவற் திருத் துவஜமே)
மகர மீன்கள் வாழும் கடல் வற்றிப் போகவும், சர்ப்ப ராஜனான ஆதிசேஷனின் ஆயிரம் முடிகளும் பதறவும், மலைகள் கிடு கிடு என நடுங்கவும், சிகரங்களைக் கொண்ட, குடம் போன்ற திரட்சி உடைய, மேரு மலையின், உச்சிகள் படபடென நடுங்கவும், மத யானைகளின் உயிர் பயத்தால் பிரியவும், தேவலோகம் முதல், எல்லா உலகங்களும் துண்டு துண்டாகச் சிதறவும், பெருத்த ஆரவாரம் செய்து, சமுத்திரக் கரையில் உள்ள காரையாழி நகரில் வாழ்ந்த அசுரர்களின், மார்பைப் பிளந்து தன்னுடைய சிறகுகளை அடித்துக்கொண்டு களிப்புடன் நடனம் ஆடுமாம் (அது எது என வினாவினால்) சுக சொரூபியானவள், மலமற்றவள், பராசக்தி, இம ராஜன் தந்தருளிய மடந்தை, உடுக்கை போன்ற இடுப்யை உடையவள், பயமற்றவள், மலை போன்று சலனமில்லாமல் இருப்பவள், இப்பேர்ப்பட்ட பார்வதி தேவி தந்த திருக் குமாரன், ஞானமும் அறிவும் இளமையும் உடையவன், தேன் போன்ற இனிய மொழியை பகரும் மான் மகளான வள்ளிப் பிராட்டி, ஐராவதம் வளர்த்த தேவசேனை, இவர்களின் துணைவன், எனது உள்ளத்தில் என்றும் நிலைத்து இருப்பவன், எனும் ஒலியுடன், நடனமிடும் மயில் வாகனத்தில், பவனி வரும் குமரகுரு மூர்த்தியின் கொடியில் உள்ள சேவலே தான் அது.
சேவல் விருத்தம் - 11
மத்யமாவதி - கண்ட சாபு
பூவிலியன் வாசவன் முர்ரரி முனிவோர் அமரர்
பூசனை செய்வோர் மகிழவே
பூதரமும் எழுகடலும் ஆட அமுதூற அனு
போக பதினால் உலகமும்
தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாள வரு
தானதவ ஞூல் தழையவே
தாள் வலியதான பல பேய்கள் அஞ்ஜ சிறகு
கொட்டிக் குரற் பயிலுமாம்
காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழை கமு
காடவிகள் பரவு நடன
காரண மெய்ன்யானபரி சீரணவ் அர அசன
கனகமயில் வாகனன் அடற்
சேவகன் இரஜத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருக முக
சீதள குமார கிருபாகர மனோகரன்
சேவற் திருத் துவஜமே
(துவஜமே சேவற் திருத் துவஜமே சேவற் திருத் துவஜமே)
தாமரைப் பூவில் வாசம் செய்யும் பிரம்மன், இந்திரன், திருமால், தவம் செய்யும் முனிவோர்கள், தேவர்கள், நித்தம் இறைவனை வழிபாடுகள் புரியும் அடியவர்கள், இவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் பொருட்டு, மலைகளும் ஏழு கடல்களும் ஆட்டம் காணவும், பூவுலகில் இன்பம் நிறைந்து விளங்கவும், எல்லாவித அநுபோகங்களைத் தரும் பதினான்கு உலகங்களிலும், பரந்து கிடக்கும் தனது புகழ் முதன்மையாக விளங்கி நிற்கவும், அரக்கர்கள் மடிந்து அழியவும், விளங்கும் ஒழுக்க நெறிகளைக் கூறும் தர்ம இலக்கிய நூல்கள் தழைத்து ஓங்கவும், கெட்ட வலிமை பொருந்திய செயல்களைச் செய்யும் பல பேய்கள் பயந்து ஓடவும், தனது சிறகுகளைத் தட்டி அடித்துக்கொண்டு பெரிய கூக்குரல் எழுப்பும் (அது எது என வினாவினால்) சோலைகள், நல்ல பழங்களைத் தரும் வாழை மரங்கள், புளிய மரம், மா மரம் இவைகளுடன், வானளாவ உயர்ந்த தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் (இவைகளுடன் கூடிய), அடர்ந்த காடுகளில், பரந்த நடன வகைகளைக் காட்டும், முருகன் ஆட்கொண்ட காரணத்தால் மெய் ஞானத்தை அடைந்த வாகனமானதும், சிறப்பு மிக்கதும், பாம்பை உணவாகக் கொள்வதும் ஆன, செம் பொன் மயிலை வாகனமாகக் கொண்டவன், வலிமை மிக்க மா வீரன், இராசத இலட்சணம் பொருந்திய, பார்வதி தேவிக்கு ஒப்பற்ற சிரோ ரத்னம், தாமரை போன்ற முக அழகு கொண்டவன், தண்மையான குணாளன் என்றும் இளையவன், கருணைக் கடல் அடியார்கள் மனதில் அனுதினமும் மகிழ்ச்சியைத் தருபவன் (ஆகிய கந்தக் கடவுளின்), கொடியில் உள்ள சேவலேதான் அது.
சேவல் விருத்தம் முற்றிற்று.
முருகப் பெருமானின் சேவல் கொடியை மையமாக வைத்து அருணகிரிநாதர் பாடியது சேவல் விருத்தம் ஆகும். பதினோரு பாடல்களை உடைய இப்பகுதி பயம் நீக்கும். ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு முதலியவற்றால் ஏற்படும் ஏதங்களை விரட்டும் தன்மை வாய்ந்தது. எம பயத்தையும் போக்கும் வல்லமை இதற்கு உள்ளது. இவ்வகையில் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய நிலையில் பெருமை பெற்றது சேவல் விருத்தம் ஆகும். இதனுள் பல அரிய கருத்துகளைத் தொகுத்து் வைத்துள்ளார் அருணகிரிநாதர். |
||||||||
by Swathi on 28 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|