|
||||||||
ஏழாம் திருமுறை-100 |
||||||||
7.100.திருநொடித்தான்மலை
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
1017 தானெனை முன்படைத்தான் அத
றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயி
னேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த
யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்
தான்மலை உத்தமனே.
7.100.1
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தானே முன்பு என்னை நிலவுலகில் தோற்றுவித்தருளினான்; தோற்றுவித்த அத்திருக் குறிப்பினையுணர்ந்து அவனது பொன்போலும் திருவடிகளுக்கு, அந்தோ, நான் எவ்வளவில் பாடல்கள் செய்தேன்! செய்யாதொழியவும், அப்புன்மை நோக்கி ஒழியாது, என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்தெண்ணி, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு, பெரியதோர் யானை யூர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வுபெறச் செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1018 ஆனை உரித்தபகை அடி
யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி
யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தமரர் வலஞ்
செய்தெனை யேறவைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித்
தான்மலை உத்தமனே.
7.100.2
யான், கருவி கரணங்களை அறிவினால் அடக்கி, அறிவே வடிவாய் உள்ள தன்னை உள்கியிருத்தலாகிய ஒன்றே செய்தேன்; அவ்வளவிற்கே, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் அம் முதல்வன், வானுலகத்தையே பெரிதாக மதித்துள்ள தேவர்கள் வந்து என்னை வலம்செய்து ஏற்றிச் செல்லுமாறு, ஓர் யானையூர்தியை எனக்கு அளித்தருளினான்; அஃது, அவன் முன்பு யானையை உரித்ததனால் நிலைத்து நிற்கும் பகைமையை அடியேனால் நீங்கச்செய்து, அதற்கு அருள்பண்ணக் கருதியதனாலோ; அன்றி என்மாட்டு வைத்த பேரருளாலோ!
1019 மந்திரம் ஒன்றறியேன் மனை
வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரி
சேசெயுந் தொண்டன்எனை
அந்தர மால்விசும்பில் அழ
கானை யருள்புரிந்த
துந்தர மோநெஞ்சமே நொடித்
தான்மலை உத்தமனே.
7.100.3
நெஞ்சே, அடியேன், மறைமொழிகளை ஓதுதல் செய்யாது இல்வாழ்க்கையில் மயங்கி, அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது, அழகைத் தரும் வேடங்களைப் புனைந்து கொண்டு, இவ்வாறெல்லாம் பொருந்தாதனவற்றையே செய்து வாழும் ஒரு தொண்டன்; எனக்கு, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், வெளியாகிய பெரிய வானத்திற் செல்லும் அழகுடைய யானையூர்தியை அளித்தருளியதும் என் தரத்ததோ!
1020 வாழ்வை உகந்தநெஞ்சே மட
வார் தங்கள் வல்வினைப்பட்
டாழ முகந்தவென்னை அது
மாற்றி அமரரெல்லாம்
சூழ அருள்புரிந்து தொண்ட
னேன் பரமல்லதொரு
வேழம் அருள்புரிந்தான் நொடித்
தான்மலை உத்தமனே.
7.100.4
உலக இன்பத்தை விரும்பிய மனமே, பெண்டிரால் உண்டாகும் வலிய வினையாகிய குழியில் விழுந்து அழுந்திக் கிடந்த என்னை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், அந்நிலையினின்றும் நீக்கி, தேவரெல்லாரும் சூழ்ந்து அழைத்து வருமாறு ஆணையிட்டு, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்டதாகிய ஓர் யானை யூர்தியை அருளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1021 மண்ணுல கிற்பிறந்து நும்மை
வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறுதல் தொண்ட
னேன்இன்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர்கள் விரும்
பவெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்
தான்மலை உத்தமனே.
7.100.5
'மண்ணுலகில் மக்களாய்ப் பிறந்து நும்மைப் பாடுகின்ற பழவடியார், பின்பு பொன்னுலகத்தைப் பெறுதலாகிய உரையளவைப் பொருளை, அடியேன் இன்று நேரிற்கண்டேன்' என்று தன்பால் வந்து சொல்லுமாறு, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தேவரும் கண்டு விருப்பங்கொள்ள, என் உடம்பை வெள்ளை யானையின்மேல் காணச் செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1022 அஞ்சினை ஒன்றிநின்று அலர்
கொண்டடி சேர்வறியா
வஞ்சனை யென்மனமே வைகி
வானநன் னாடர்முன்னே
துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட
னேன்பர மல்லதொரு
வெஞ்சின ஆனைதந்தான் நொடித்
தான்மலை உத்தமனே.
7.100.6
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், ஐம்புலன்களைப் பொருந்தி நின்று, பூக்களைக் கொண்டு தனது திருவடியை அணுக அறியாத வஞ்சனையை யுடைத்தாகிய என் மனத்தின்கண்ணே வீற்றிருந்து, எனக்கு இறப்பை நீக்கி, தேவர்களது கண்முன்னே, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்ட, வெவ்விய சினத்தையுடைய யானையூர்தியை அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1023 நிலைகெட விண்ணதிர நிலம்
எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழி
யேவரு வேனெதிரே
அலைகட லால்அரையன் அலர்
கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம் நொடித்
தான்மலை உத்தமனே.
7.100.7
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், விண்ணுலகம் தனது நிலைகெடுமாறு அதிரவும், நிலவுலகம் முழுதும் அதிரவும் மலையிடைத்திரியும் யானை மீது ஏறி, தனது திரு மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணன், பூக்களைக் கொண்டு, யாவரினும் முற்பட்டு வந்து வணங்குமாறு, உடல் அழியாதே உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1024 அரவொலி ஆகமங்கள் அறி
வார்அறி தோத்திரங்கள்
விரவிய வேதஒலி விண்ணெ
லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந்து வழி
தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந்தான் நொடித்
தான்மலை உத்தமனே.
7.100.8
'அரகர' என்னும் ஒலியும், ஆகமங்களின் ஒலியும்,அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும், பல்வேறு வகையாகப் பொருந்திய வேதங்களின் ஒலியும் ஆகாயம் முழுதும் நிறைந்து வந்து எதிரே ஒலிக்கவும், மேன்மை நிறைந்த, 'வாணன்' என்னும் கணத்தலைவன் வந்து, முன்னே வழிகாட்டிச் செல்லவும், ஏறத்தக்கதொரு முதன்மை நிறைந்த யானையை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1025 இந்திரன் மால்பிரமன் னெழி
லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்
ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித்
தான்மலை உத்தமனே.
7.100.9
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், எழுச்சி பொருந்திய மிக்க தேவர் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு, எனக்கு யானை யூர்தியை அளித்தருளி, அங்கு, மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள், 'இவன் யார்' என்று வினவ, "இவன் நம் தோழன்; 'ஆரூரன்' என்னும் பெயரினன்" என்று திருவாய் மலர்ந்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1026 ஊழிதொ றூழிமுற்றும் உயர்
பொன்நொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும்பின் சுவை
நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமிழால் இசைந்
தேத்திய பத்தினையும்
ஆழி கடலரையா அஞ்சை
யப்பர்க் கறிவிப்பதே.
7.100.10
ஆழ்ந்ததாகிய கடலுக்கு அரசனே! உலகம் அழியுங்காலந்தோறும் உயர்வதும், பொன்வண்ணமாயதும் ஆகிய திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனை, திரு நாவலூரில் தோன்றியவனாகிய யான், இசை நூலிற் சொல்லப்பட்ட, ஏழாகிய இசையினையுடைய, இனிய தமிழால், மிக்க புகழை யுடையனவாகவும், கரும்பின் சுவை போலும் சுவையினை யுடையனவாகவும் அப்பெருமானோடு ஒன்றுபட்டுப் பாடிய இப் பத்துப் பாடல்களையும், திருவஞ்சைக்களத்தில் வீற்றிருந்தருளும் பெருமானுக்கு, நீ அறிவித்தல் வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
7.100.திருநொடித்தான்மலை பண் - பஞ்சமம் திருச்சிற்றம்பலம்
1017 தானெனை முன்படைத்தான் அத றிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந்தோ நாயி னேனைப் பொருட்படுத்து வானெனைவந் தெதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய்தான் நொடித் தான்மலை உத்தமனே. 7.100.1
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தானே முன்பு என்னை நிலவுலகில் தோற்றுவித்தருளினான்; தோற்றுவித்த அத்திருக் குறிப்பினையுணர்ந்து அவனது பொன்போலும் திருவடிகளுக்கு, அந்தோ, நான் எவ்வளவில் பாடல்கள் செய்தேன்! செய்யாதொழியவும், அப்புன்மை நோக்கி ஒழியாது, என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்தெண்ணி, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு, பெரியதோர் யானை யூர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வுபெறச் செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1018 ஆனை உரித்தபகை அடி யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி யானை நினைந்திருந்தேன் வானை மதித்தமரர் வலஞ் செய்தெனை யேறவைக்க ஆனை அருள்புரிந்தான் நொடித் தான்மலை உத்தமனே. 7.100.2
யான், கருவி கரணங்களை அறிவினால் அடக்கி, அறிவே வடிவாய் உள்ள தன்னை உள்கியிருத்தலாகிய ஒன்றே செய்தேன்; அவ்வளவிற்கே, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் அம் முதல்வன், வானுலகத்தையே பெரிதாக மதித்துள்ள தேவர்கள் வந்து என்னை வலம்செய்து ஏற்றிச் செல்லுமாறு, ஓர் யானையூர்தியை எனக்கு அளித்தருளினான்; அஃது, அவன் முன்பு யானையை உரித்ததனால் நிலைத்து நிற்கும் பகைமையை அடியேனால் நீங்கச்செய்து, அதற்கு அருள்பண்ணக் கருதியதனாலோ; அன்றி என்மாட்டு வைத்த பேரருளாலோ!
1019 மந்திரம் ஒன்றறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்களால் துரி சேசெயுந் தொண்டன்எனை அந்தர மால்விசும்பில் அழ கானை யருள்புரிந்த துந்தர மோநெஞ்சமே நொடித் தான்மலை உத்தமனே. 7.100.3
நெஞ்சே, அடியேன், மறைமொழிகளை ஓதுதல் செய்யாது இல்வாழ்க்கையில் மயங்கி, அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது, அழகைத் தரும் வேடங்களைப் புனைந்து கொண்டு, இவ்வாறெல்லாம் பொருந்தாதனவற்றையே செய்து வாழும் ஒரு தொண்டன்; எனக்கு, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், வெளியாகிய பெரிய வானத்திற் செல்லும் அழகுடைய யானையூர்தியை அளித்தருளியதும் என் தரத்ததோ!
1020 வாழ்வை உகந்தநெஞ்சே மட வார் தங்கள் வல்வினைப்பட் டாழ முகந்தவென்னை அது மாற்றி அமரரெல்லாம் சூழ அருள்புரிந்து தொண்ட னேன் பரமல்லதொரு வேழம் அருள்புரிந்தான் நொடித் தான்மலை உத்தமனே. 7.100.4
உலக இன்பத்தை விரும்பிய மனமே, பெண்டிரால் உண்டாகும் வலிய வினையாகிய குழியில் விழுந்து அழுந்திக் கிடந்த என்னை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், அந்நிலையினின்றும் நீக்கி, தேவரெல்லாரும் சூழ்ந்து அழைத்து வருமாறு ஆணையிட்டு, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்டதாகிய ஓர் யானை யூர்தியை அருளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1021 மண்ணுல கிற்பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுல கம்பெறுதல் தொண்ட னேன்இன்று கண்டொழிந்தேன் விண்ணுல கத்தவர்கள் விரும் பவெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித்தான் நொடித் தான்மலை உத்தமனே. 7.100.5
'மண்ணுலகில் மக்களாய்ப் பிறந்து நும்மைப் பாடுகின்ற பழவடியார், பின்பு பொன்னுலகத்தைப் பெறுதலாகிய உரையளவைப் பொருளை, அடியேன் இன்று நேரிற்கண்டேன்' என்று தன்பால் வந்து சொல்லுமாறு, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தேவரும் கண்டு விருப்பங்கொள்ள, என் உடம்பை வெள்ளை யானையின்மேல் காணச் செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1022 அஞ்சினை ஒன்றிநின்று அலர் கொண்டடி சேர்வறியா வஞ்சனை யென்மனமே வைகி வானநன் னாடர்முன்னே துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட னேன்பர மல்லதொரு வெஞ்சின ஆனைதந்தான் நொடித் தான்மலை உத்தமனே. 7.100.6
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், ஐம்புலன்களைப் பொருந்தி நின்று, பூக்களைக் கொண்டு தனது திருவடியை அணுக அறியாத வஞ்சனையை யுடைத்தாகிய என் மனத்தின்கண்ணே வீற்றிருந்து, எனக்கு இறப்பை நீக்கி, தேவர்களது கண்முன்னே, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்ட, வெவ்விய சினத்தையுடைய யானையூர்தியை அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1023 நிலைகெட விண்ணதிர நிலம் எங்கும் அதிர்ந்தசைய மலையிடை யானைஏறி வழி யேவரு வேனெதிரே அலைகட லால்அரையன் அலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச உலையணை யாதவண்ணம் நொடித் தான்மலை உத்தமனே. 7.100.7
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், விண்ணுலகம் தனது நிலைகெடுமாறு அதிரவும், நிலவுலகம் முழுதும் அதிரவும் மலையிடைத்திரியும் யானை மீது ஏறி, தனது திரு மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணன், பூக்களைக் கொண்டு, யாவரினும் முற்பட்டு வந்து வணங்குமாறு, உடல் அழியாதே உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1024 அரவொலி ஆகமங்கள் அறி வார்அறி தோத்திரங்கள் விரவிய வேதஒலி விண்ணெ லாம்வந் தெதிர்ந்திசைப்ப வரமலி வாணன்வந்து வழி தந்தெனக் கேறுவதோர் சிரமலி யானைதந்தான் நொடித் தான்மலை உத்தமனே. 7.100.8
'அரகர' என்னும் ஒலியும், ஆகமங்களின் ஒலியும்,அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும், பல்வேறு வகையாகப் பொருந்திய வேதங்களின் ஒலியும் ஆகாயம் முழுதும் நிறைந்து வந்து எதிரே ஒலிக்கவும், மேன்மை நிறைந்த, 'வாணன்' என்னும் கணத்தலைவன் வந்து, முன்னே வழிகாட்டிச் செல்லவும், ஏறத்தக்கதொரு முதன்மை நிறைந்த யானையை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1025 இந்திரன் மால்பிரமன் னெழி லார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த யானை யருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான் நந்தமர் ஊரனென்றான் நொடித் தான்மலை உத்தமனே. 7.100.9
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், எழுச்சி பொருந்திய மிக்க தேவர் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு, எனக்கு யானை யூர்தியை அளித்தருளி, அங்கு, மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள், 'இவன் யார்' என்று வினவ, "இவன் நம் தோழன்; 'ஆரூரன்' என்னும் பெயரினன்" என்று திருவாய் மலர்ந்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1026 ஊழிதொ றூழிமுற்றும் உயர் பொன்நொடித் தான்மலையைச் சூழிசை யின்கரும்பின் சுவை நாவல ஊரன்சொன்ன ஏழிசை இன்றமிழால் இசைந் தேத்திய பத்தினையும் ஆழி கடலரையா அஞ்சை யப்பர்க் கறிவிப்பதே. 7.100.10
ஆழ்ந்ததாகிய கடலுக்கு அரசனே! உலகம் அழியுங்காலந்தோறும் உயர்வதும், பொன்வண்ணமாயதும் ஆகிய திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனை, திரு நாவலூரில் தோன்றியவனாகிய யான், இசை நூலிற் சொல்லப்பட்ட, ஏழாகிய இசையினையுடைய, இனிய தமிழால், மிக்க புகழை யுடையனவாகவும், கரும்பின் சுவை போலும் சுவையினை யுடையனவாகவும் அப்பெருமானோடு ஒன்றுபட்டுப் பாடிய இப் பத்துப் பாடல்களையும், திருவஞ்சைக்களத்தில் வீற்றிருந்தருளும் பெருமானுக்கு, நீ அறிவித்தல் வேண்டும்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 24 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|