|
||||||||
ஏழாம் திருமுறை-13 |
||||||||
7.013.திருத்துறையூர்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - துறையூரப்பர்.
தேவியார் - பூங்கோதையம்மை.
123 மலையாரரு வித்திரள்
மாமணி யுந்திக்
குரையாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கலையார் அல்குற் கன்னியர்
ஆடுந் துறையூத்
தலைவாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.
7.013.1
மலையிற் பொருந்திய அருவிக் கூட்டம், பெரிய மணிகளைத் தள்ளிக் கொணர்ந்து கரை நிறைய எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண், நல்லஆடையை அணிந்த அல்குலையுடைய கன்னிப்பெண்கள் மூழ்கி விளையாடும் ஒரு துறையைச் சார்ந்த ஊராகிய திருத்துறையூரின்கண் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
124 மத்தம்மத யானையின்
வெண்மருப் புந்தி
முத்தங்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
பத்தர்பயின் றேத்திப்
பரவுந் துறையூர்
அத்தாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே. 7.013.2
மயக்கங்கொண்ட மதயானைகளின் கொம்புகளைத் தள்ளிக்கொண்டுவந்து அவற்றில் உள்ள முத்துக்களைக் கரையில் எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ள, அடியவர் பலகாலும் வந்து ஏத்தி வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
125 கந்தங்கமழ் காரகில்
சந்தன முந்திச்
செந்தண்புனல் வந்திழி
பெண்ணை வடபால்
மந்தீபல மாநடம்
ஆடுந் துறையூர்
எந்தாய் உனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.
7.013.3
நறுமணம் கமழ்கின்ற கரிய அகில்மரங்களையும் சந்தன மரங்களையும் தள்ளிக்கொண்டு, சிவந்த குளிர்ந்த நீர் இடையறாது வந்து பாய்கின்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண்ணுள்ள, பெண் குரங்குகள் பல வகையான நடனங்களை ஆடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள எம்தந்தையே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
126 அரும்பார்ந்தன மல்லிகை
சண்பகஞ் சாடிச்
சுரும்பாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கரும்பார்மொழிக் கன்னியர்
ஆடுந் துறையூர்
விரும்பாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.
7.013.4
அரும்புகள் நிறைந்தனவாகிய 'மல்லிகை, சண்பகம்' என்னும் மரங்களை முரித்து, அவற்றில் உள்ள வண்டுகள் நிறையக்கிடக்கக் கொணர்ந்து கரையில் எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண், கரும்புபோலும் மொழியினை யுடைய கன்னிப் பெண்கள் மூழ்கி விளையாடும் ஒருதுறையைச் சார்ந்த திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள என் விருப்பத்திற்குரியவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
127 பாடார்ந்தன மாவும்
பலாக்களுஞ் சாடி
நாடாரவந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
மாடார்ந்தன மாளிகை
சூழுந் துறையூர்
வேடாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.
7.013.5
பக்கங்களில் நிறைந்துள்ளனவாகிய மாமரங்களையும், பலா மரங்களையும் முரித்துக்கொணர்ந்து நாடெங்கும் நிறையும் படி எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண் உள்ள, செல்வம் நிறைந்தனவாகிய மாளிகைகள் சூழ்ந்த துறையூரில் எழுந்தருளியுள்ள, பல அருட்கோலங்களை யுடையவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
128 மட்டார்மலர்க் கொன்றையும்
வன்னியுஞ் சாடி
மொட்டாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கொட்டாட்டொடு பாட்டொலி
ஓவாத் துறையூர்ச்
சிட்டாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.
7.013.6
தேன் நிறைந்த மலர்களை யுடையகொன்றை மரம், வன்னி மரம் இவைகளை முரித்து, அரும்புகளோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண், வாச்சிய முழக்கமும், ஆடலும், பாடலும் நீங்காது கொண்டு விளங்குகின்ற திருத் துறையூரில் எழுந்தருளியுள்ள மேலானவனே உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
129 மாதார்மயிற் பீலியும்
வெண்ணுரை யுந்தித்
தாதாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
போதார்ந்தன பொய்கைகள்
சூழுந் துறையூர்
நாதாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.
7.013.7
அழகு நிறைந்தனவான மயிற்பீலியையும், வெள்ளிய நுரைகளையும் தள்ளி, பல மலர்களை மகரந்தத்தோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண், மலர்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழப் பெற்று விளங்கும் திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
130 கொய்யார்மலர்க் கோங்கொடு
வேங்கையுஞ் சாடிச்
செய்யாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
மையார்தடங் கண்ணியர்
ஆடுந் துறையூர்
ஐயாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.
7.013.8
கொய்தல் பொருந்திய மலரையுடைய கோங்க மரம், வேங்கை மரம் இவைகளை முரித்துக்கொணர்ந்து, வயல் நிறைய எறிவதாகிய, ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண், மை பொருந்திய கண்களையுடைய மகளிர் மூழ்கியாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
131 விண்ணார்ந்தன மேகங்கள்
நின்று பொழிய
மண்ணாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
பண்ணார்மொழிப் பாவையர்
ஆடுந் துறையூர்
அண்ணாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.
7.013.9
வானத்தில் நிறைந்தனவாகிய மேகங்கள் நிலைத்து நின்று பொழிவதனால், மலைக்கண் உள்ள பொருள்களை வாரிக் கொணர்ந்து நிலம் நிறைய எறிவதாகிய, ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண், பண்போலும் மொழியினையுடைய மகளிர் மூழ்கியாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்போல் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
132 மாவாய்ப்பிளந் தானும்
மலர்மிசை யானும்
ஆவாஅவர் தேடித்
திரிந்தல மந்தார்
பூவார்ந்தன பொய்கைகள்
சூழுந் துறையூர்த்
தேவாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.
7.013.10
பூக்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழ்ந்துள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள பெருமானே. 'கேசி' என்னும் அசுரன் கொண்ட வஞ்சனை உருவமாகிய குதிரையின் வாயைக் கிழித்த திருமாலும், மலர்மிசையோனாகிய பிரமனும் ஆகிய அவ்விருவரும் உன்னை வழிபட்டுத் தவநெறியை வேண்டிக் கொள்ள மாட்டாது, அந்தோ! உன் அளவினை ஆராய்ந்து தேடியலைந்தனர்; ஆயினும், உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
133 செய்யார்கம லம்மலர்
நாவலூர் மன்னன்
கையால்தொழு தேத்தப்
படுந்துறை யூர்மேல்
பொய்யாத்தமிழ் ஊரன்
உரைத்தன வல்லார்
மெய்யேபெறு வார்கள்
தவநெறி தானே.
7.013.11
வயல்கள் நிறையத் தாமரை மலரும் திருநாவலூருக்குத் தலைவனும், மெய்ம்மையையே கூறும் தமிழ்ப் பாடலைப் பாடுபவனும் ஆகிய நம்பியாரூரன், யாவராலும் கையால் கும்பிட்டுத் துதிக்கப்படும் திருத்துறையூரில் உள்ள இறைவன் மீது பாடியனவாகிய இப் பாடல்களை நன்கு பாடவல்லவர் தவநெறியைத் தப்பாது பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
7.013.திருத்துறையூர் பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - துறையூரப்பர். தேவியார் - பூங்கோதையம்மை.
123 மலையாரரு வித்திரள் மாமணி யுந்திக் குரையாரக்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால் கலையார் அல்குற் கன்னியர் ஆடுந் துறையூத் தலைவாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே. 7.013.1
மலையிற் பொருந்திய அருவிக் கூட்டம், பெரிய மணிகளைத் தள்ளிக் கொணர்ந்து கரை நிறைய எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண், நல்லஆடையை அணிந்த அல்குலையுடைய கன்னிப்பெண்கள் மூழ்கி விளையாடும் ஒரு துறையைச் சார்ந்த ஊராகிய திருத்துறையூரின்கண் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
124 மத்தம்மத யானையின் வெண்மருப் புந்தி முத்தங்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால் பத்தர்பயின் றேத்திப் பரவுந் துறையூர் அத்தாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே. 7.013.2
மயக்கங்கொண்ட மதயானைகளின் கொம்புகளைத் தள்ளிக்கொண்டுவந்து அவற்றில் உள்ள முத்துக்களைக் கரையில் எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ள, அடியவர் பலகாலும் வந்து ஏத்தி வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
125 கந்தங்கமழ் காரகில் சந்தன முந்திச் செந்தண்புனல் வந்திழி பெண்ணை வடபால் மந்தீபல மாநடம் ஆடுந் துறையூர் எந்தாய் உனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே. 7.013.3
நறுமணம் கமழ்கின்ற கரிய அகில்மரங்களையும் சந்தன மரங்களையும் தள்ளிக்கொண்டு, சிவந்த குளிர்ந்த நீர் இடையறாது வந்து பாய்கின்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண்ணுள்ள, பெண் குரங்குகள் பல வகையான நடனங்களை ஆடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள எம்தந்தையே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
126 அரும்பார்ந்தன மல்லிகை சண்பகஞ் சாடிச் சுரும்பாரக்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால் கரும்பார்மொழிக் கன்னியர் ஆடுந் துறையூர் விரும்பாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே. 7.013.4
அரும்புகள் நிறைந்தனவாகிய 'மல்லிகை, சண்பகம்' என்னும் மரங்களை முரித்து, அவற்றில் உள்ள வண்டுகள் நிறையக்கிடக்கக் கொணர்ந்து கரையில் எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண், கரும்புபோலும் மொழியினை யுடைய கன்னிப் பெண்கள் மூழ்கி விளையாடும் ஒருதுறையைச் சார்ந்த திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள என் விருப்பத்திற்குரியவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
127 பாடார்ந்தன மாவும் பலாக்களுஞ் சாடி நாடாரவந் தெற்றிஓர் பெண்ணை வடபால் மாடார்ந்தன மாளிகை சூழுந் துறையூர் வேடாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே. 7.013.5
பக்கங்களில் நிறைந்துள்ளனவாகிய மாமரங்களையும், பலா மரங்களையும் முரித்துக்கொணர்ந்து நாடெங்கும் நிறையும் படி எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண் உள்ள, செல்வம் நிறைந்தனவாகிய மாளிகைகள் சூழ்ந்த துறையூரில் எழுந்தருளியுள்ள, பல அருட்கோலங்களை யுடையவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
128 மட்டார்மலர்க் கொன்றையும் வன்னியுஞ் சாடி மொட்டாரக்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால் கொட்டாட்டொடு பாட்டொலி ஓவாத் துறையூர்ச் சிட்டாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே. 7.013.6
தேன் நிறைந்த மலர்களை யுடையகொன்றை மரம், வன்னி மரம் இவைகளை முரித்து, அரும்புகளோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண், வாச்சிய முழக்கமும், ஆடலும், பாடலும் நீங்காது கொண்டு விளங்குகின்ற திருத் துறையூரில் எழுந்தருளியுள்ள மேலானவனே உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
129 மாதார்மயிற் பீலியும் வெண்ணுரை யுந்தித் தாதாரக்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால் போதார்ந்தன பொய்கைகள் சூழுந் துறையூர் நாதாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே. 7.013.7
அழகு நிறைந்தனவான மயிற்பீலியையும், வெள்ளிய நுரைகளையும் தள்ளி, பல மலர்களை மகரந்தத்தோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண், மலர்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழப் பெற்று விளங்கும் திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
130 கொய்யார்மலர்க் கோங்கொடு வேங்கையுஞ் சாடிச் செய்யாரக்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால் மையார்தடங் கண்ணியர் ஆடுந் துறையூர் ஐயாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே. 7.013.8
கொய்தல் பொருந்திய மலரையுடைய கோங்க மரம், வேங்கை மரம் இவைகளை முரித்துக்கொணர்ந்து, வயல் நிறைய எறிவதாகிய, ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண், மை பொருந்திய கண்களையுடைய மகளிர் மூழ்கியாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
131 விண்ணார்ந்தன மேகங்கள் நின்று பொழிய மண்ணாரக்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால் பண்ணார்மொழிப் பாவையர் ஆடுந் துறையூர் அண்ணாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே. 7.013.9
வானத்தில் நிறைந்தனவாகிய மேகங்கள் நிலைத்து நின்று பொழிவதனால், மலைக்கண் உள்ள பொருள்களை வாரிக் கொணர்ந்து நிலம் நிறைய எறிவதாகிய, ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண், பண்போலும் மொழியினையுடைய மகளிர் மூழ்கியாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்போல் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
132 மாவாய்ப்பிளந் தானும் மலர்மிசை யானும் ஆவாஅவர் தேடித் திரிந்தல மந்தார் பூவார்ந்தன பொய்கைகள் சூழுந் துறையூர்த் தேவாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே. 7.013.10
பூக்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழ்ந்துள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள பெருமானே. 'கேசி' என்னும் அசுரன் கொண்ட வஞ்சனை உருவமாகிய குதிரையின் வாயைக் கிழித்த திருமாலும், மலர்மிசையோனாகிய பிரமனும் ஆகிய அவ்விருவரும் உன்னை வழிபட்டுத் தவநெறியை வேண்டிக் கொள்ள மாட்டாது, அந்தோ! உன் அளவினை ஆராய்ந்து தேடியலைந்தனர்; ஆயினும், உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
133 செய்யார்கம லம்மலர் நாவலூர் மன்னன் கையால்தொழு தேத்தப் படுந்துறை யூர்மேல் பொய்யாத்தமிழ் ஊரன் உரைத்தன வல்லார் மெய்யேபெறு வார்கள் தவநெறி தானே. 7.013.11
வயல்கள் நிறையத் தாமரை மலரும் திருநாவலூருக்குத் தலைவனும், மெய்ம்மையையே கூறும் தமிழ்ப் பாடலைப் பாடுபவனும் ஆகிய நம்பியாரூரன், யாவராலும் கையால் கும்பிட்டுத் துதிக்கப்படும் திருத்துறையூரில் உள்ள இறைவன் மீது பாடியனவாகிய இப் பாடல்களை நன்கு பாடவல்லவர் தவநெறியைத் தப்பாது பெறுவர்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 23 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|