|
||||||||
ஏழாம் திருமுறை-85 |
||||||||
7.085.திருக்கூடலையாற்றூர்
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. இது திருப்புறம்பயமென்னுந் தலத்தினின்று மெழுந்தருளித் திருக்கூடலையாற்றூருக்குச் சமீபமாகச்செல்லுகின்றவர், அந்தத் தலத்துக்குள் செல்லாமல், திருமுதுகுன்றை நோக்கிச்செல்லுங் கருத்தினராக, அந்தமார்க்கத்தில் பரமசிவம் ஒரு பிராமணராய் நிற்கக்கண்டு ஐயரே திருமுதுகுன்றுக்கு மார்க்கமெதுவென்ன, இந்தக் கூடலையாற்றூர் மார்க்கமாச் செல்லுகின்றதென்று சொல்லி வழிகாட்டிப் பின்செல்ல, சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்சென்று கூடலையாற்றூருக்குச் சமீபமாகச் சார்ந்தபோது பின்வந்த பிராமணர் மறையக்கண்டு அதிசயங்கொண்டு ஓதியபதிகம்.
சுவாமிபெயர் - நெறிகாட்டுநாயகர்.
தேவியார் - புரிகுழலாளம்மை.
862 வடியுடை மழுவேந்தி
மதகரியுரி போர்த்துப்
பொடியணி திருமேனிப்
புரிகுழ லுமையோடும்
கொடியணி நெடுமாடக்
கூடலை யாற்றூரில்
அடிகள்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.1
கூர்மையையுடைய மழுப்படையை ஏந்தி, மதத்தையுடைய யானையினது தோலைப் போர்த்துக்கொண்டு, பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடும், கொடிகள் நாட்டிய உயர்ந்த மாடங்களையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற, திருநீற்றை யணிந்த பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
863 வையக முழுதுண்ட
மாலொடு நான்முகனும்
பையர வகலல்குற்
பாவையொ டும்முடனே
கொய்யணி மலர்ச்சோலைக்
கூடலை யாற்றூரில்
ஐயன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.2
உலகம் முழுதையும் உண்ட திருமாலோடும் பிரமதேவனோடும், அரவப் படம்போலும் அல்குலையுடைய, இளைய, பாவைபோலும் உமாதேவியோடும் உடனாகி, கொய்யப்படுகின்ற அழகிய பூக்களையுடைய சோலைகளையுடைய திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவன், இவ்வழியிடை என் முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃது என் ஏழைமை இருந்தவாறு!
864 ஊர்தொறும் வெண்டலைகொண்
டுண்பலி யிடும்என்று
வார்தரு மென்முலையாள்
மங்கையொ டும்முடனே
கூர்நுனை மழுவேந்திக்
கூடலை யாற்றூரில்
ஆர்வன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.3
ஊர்தோறும் சென்று, வெள்ளிய தலையோட்டை ஏந்தி, 'பிச்சை இடுமின்' என்று இரந்துண்டு, கச்சணிந்த, மெல்லிய தனங்களையுடையவளாகிய உமாதேவியோடும் உடனாய், கூரிய முனையையுடைய மழுவை ஏந்திக்கொண்டு, திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற, பேரன்புடையனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
865 சந்தண வும்புனலுந்
தாங்கிய தாழ்சடையன்
பந்தண வும்விரலாள்
பாவையொ டும்முடனே
கொந்தண வும்பொழில்சூழ்
கூடலை யாற்றூரில்
அந்தணன் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.4
பிறை முதலிய பிறவற்றோடு அழகு பொருந்திய நீரையும் தாங்கியிருக்கின்ற, நீண்ட சடைமுடியையுடையவனாய், பந்தின்கண் பொருந்திய விரலை யுடையாளாகிய, பாவைபோலும் உமையோடும் உடனாகி, பூங்கொத்துக்கள் பொருந்திய சோலை சூழ்ந்த திருச்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற, அழகிய கருணையை யுடையவனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் போந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
866 வேதியர் விண்ணவரும்
மண்ணவ ரும்தொழநற்
சோதிய துருவாகிச்
சுரிகுழ லுமையோடும்
கோதிய வண்டறையுங்
கூடலை யாற்றூரில்
ஆதிஇவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.5
அந்தணரும், தேவரும், மக்களும் வணங்கி நிற்க, நல்ல ஒளியுருவமாய், சுரிந்த கூந்தலையுடைய உமாதேவியோடும் பூக்களில் மகரந்தத்தைக்கிண்டிய வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வன், இவ்வழி யிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
867 வித்தக வீணையொடும்
வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல்
மங்கையொ டும்முடனே
கொத்தல ரும்பொழில்சூழ்
கூடலை யாற்றூரில்
அத்தன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.6
தான் வல்லதாகிய வீணையோடும், வெள்ளிய முப்புரி நூலை அணிந்து, முத்துப்போலும் வெள்ளிய நகையினை யுடைய உமாதேவியோடும் உடனாகி, பூக்கள் கொத்தின்கண் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற எந்தை, இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
868 மழைநுழை மதியமொடு
வாளர வுஞ்சடைமேல்
இழைநுழை துகிலல்குல்
ஏந்திழை யாளோடும்
குழையணி திகழ்சோலைக்
கூடலை யாற்றூரில்
அழகன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.7
மேகத்தில் நுழைகின்ற சந்திரனையும், கொடிய பாம்பையும் சடைக்கண்வைத்து, நுண்ணிய இழைபொருந்திய உயர்ந்த உடையை அணிந்த அல்குலையும், தாங்கிய அணிகலங்களையும் உடைய உமாதேவியோடும் உடனாகி, தளிர்களது அழகு விளங்குகின்ற சோலைகளையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகன், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
869 மறைமுதல் வானவரும்
மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும்
பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங்
கூடலை யாற்றூரில்
அறவன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.8
வேதத்திற் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும், அத்தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும், பேய்க்கூட்டமும் சூழ்ந்திருக்க, பிறைபோலும் நெற்றியையுடைய உமாதேவியோடும், பூதப் படையோடும், திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃதே என் அறியாமை இருந்தவாறு!
870 வேலையின் நஞ்சுண்டு
விடையது தான்ஏறிப்
பாலன மென்மொழியாள்
பாவையொ டும்முடனே
கோலம துருவாகிக்
கூடலை யாற்றூரில்
ஆலன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.9
கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்டு விடையை ஊர்ந்து, பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமாதேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக்கொண்டு, திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான், இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் அறியாமை இருந்தவாறு!
871 கூடலை யாற்றூரிற்
கொடியிடை யவளோடும்
ஆட லுகந்தானை
அதிசயம் இதுவென்று
நாடிய இன்றமிழால்
நாவல வூரன்சொல்
பாடல்கள் பத்தும்வல்லார்
தம்வினை பற்றறுமே.
7.085.10
திருக்கூடலையாற்றூரில், கொடிபோலும் இடையினையுடையவளாகிய உமாதேவியோடும், அருள் விளையாட்டை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, 'அவன் செய்த இச்செயல் அதிசயம்' என்று சொல்லி, ஆராய்ந்த இனிய தமிழால், திருநாவலூரனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்களது வினை, பற்றறக் கெடுதல் திண்ணம்.
திருச்சிற்றம்பலம்
7.085.திருக்கூடலையாற்றூர் பண் - புறநீர்மை திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. இது திருப்புறம்பயமென்னுந் தலத்தினின்று மெழுந்தருளித் திருக்கூடலையாற்றூருக்குச் சமீபமாகச்செல்லுகின்றவர், அந்தத் தலத்துக்குள் செல்லாமல், திருமுதுகுன்றை நோக்கிச்செல்லுங் கருத்தினராக, அந்தமார்க்கத்தில் பரமசிவம் ஒரு பிராமணராய் நிற்கக்கண்டு ஐயரே திருமுதுகுன்றுக்கு மார்க்கமெதுவென்ன, இந்தக் கூடலையாற்றூர் மார்க்கமாச் செல்லுகின்றதென்று சொல்லி வழிகாட்டிப் பின்செல்ல, சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்சென்று கூடலையாற்றூருக்குச் சமீபமாகச் சார்ந்தபோது பின்வந்த பிராமணர் மறையக்கண்டு அதிசயங்கொண்டு ஓதியபதிகம்.
சுவாமிபெயர் - நெறிகாட்டுநாயகர். தேவியார் - புரிகுழலாளம்மை.
862 வடியுடை மழுவேந்தி மதகரியுரி போர்த்துப் பொடியணி திருமேனிப் புரிகுழ லுமையோடும் கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில் அடிகள்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.085.1
கூர்மையையுடைய மழுப்படையை ஏந்தி, மதத்தையுடைய யானையினது தோலைப் போர்த்துக்கொண்டு, பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடும், கொடிகள் நாட்டிய உயர்ந்த மாடங்களையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற, திருநீற்றை யணிந்த பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
863 வையக முழுதுண்ட மாலொடு நான்முகனும் பையர வகலல்குற் பாவையொ டும்முடனே கொய்யணி மலர்ச்சோலைக் கூடலை யாற்றூரில் ஐயன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.085.2
உலகம் முழுதையும் உண்ட திருமாலோடும் பிரமதேவனோடும், அரவப் படம்போலும் அல்குலையுடைய, இளைய, பாவைபோலும் உமாதேவியோடும் உடனாகி, கொய்யப்படுகின்ற அழகிய பூக்களையுடைய சோலைகளையுடைய திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவன், இவ்வழியிடை என் முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃது என் ஏழைமை இருந்தவாறு!
864 ஊர்தொறும் வெண்டலைகொண் டுண்பலி யிடும்என்று வார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனே கூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்றூரில் ஆர்வன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.085.3
ஊர்தோறும் சென்று, வெள்ளிய தலையோட்டை ஏந்தி, 'பிச்சை இடுமின்' என்று இரந்துண்டு, கச்சணிந்த, மெல்லிய தனங்களையுடையவளாகிய உமாதேவியோடும் உடனாய், கூரிய முனையையுடைய மழுவை ஏந்திக்கொண்டு, திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற, பேரன்புடையனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
865 சந்தண வும்புனலுந் தாங்கிய தாழ்சடையன் பந்தண வும்விரலாள் பாவையொ டும்முடனே கொந்தண வும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில் அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.085.4
பிறை முதலிய பிறவற்றோடு அழகு பொருந்திய நீரையும் தாங்கியிருக்கின்ற, நீண்ட சடைமுடியையுடையவனாய், பந்தின்கண் பொருந்திய விரலை யுடையாளாகிய, பாவைபோலும் உமையோடும் உடனாகி, பூங்கொத்துக்கள் பொருந்திய சோலை சூழ்ந்த திருச்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற, அழகிய கருணையை யுடையவனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் போந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
866 வேதியர் விண்ணவரும் மண்ணவ ரும்தொழநற் சோதிய துருவாகிச் சுரிகுழ லுமையோடும் கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில் ஆதிஇவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.085.5
அந்தணரும், தேவரும், மக்களும் வணங்கி நிற்க, நல்ல ஒளியுருவமாய், சுரிந்த கூந்தலையுடைய உமாதேவியோடும் பூக்களில் மகரந்தத்தைக்கிண்டிய வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வன், இவ்வழி யிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
867 வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு முத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே கொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில் அத்தன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.085.6
தான் வல்லதாகிய வீணையோடும், வெள்ளிய முப்புரி நூலை அணிந்து, முத்துப்போலும் வெள்ளிய நகையினை யுடைய உமாதேவியோடும் உடனாகி, பூக்கள் கொத்தின்கண் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற எந்தை, இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
868 மழைநுழை மதியமொடு வாளர வுஞ்சடைமேல் இழைநுழை துகிலல்குல் ஏந்திழை யாளோடும் குழையணி திகழ்சோலைக் கூடலை யாற்றூரில் அழகன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.085.7
மேகத்தில் நுழைகின்ற சந்திரனையும், கொடிய பாம்பையும் சடைக்கண்வைத்து, நுண்ணிய இழைபொருந்திய உயர்ந்த உடையை அணிந்த அல்குலையும், தாங்கிய அணிகலங்களையும் உடைய உமாதேவியோடும் உடனாகி, தளிர்களது அழகு விளங்குகின்ற சோலைகளையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகன், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
869 மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும் பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக் குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில் அறவன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.085.8
வேதத்திற் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும், அத்தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும், பேய்க்கூட்டமும் சூழ்ந்திருக்க, பிறைபோலும் நெற்றியையுடைய உமாதேவியோடும், பூதப் படையோடும், திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃதே என் அறியாமை இருந்தவாறு!
870 வேலையின் நஞ்சுண்டு விடையது தான்ஏறிப் பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே கோலம துருவாகிக் கூடலை யாற்றூரில் ஆலன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.085.9
கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்டு விடையை ஊர்ந்து, பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமாதேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக்கொண்டு, திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான், இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் அறியாமை இருந்தவாறு!
871 கூடலை யாற்றூரிற் கொடியிடை யவளோடும் ஆட லுகந்தானை அதிசயம் இதுவென்று நாடிய இன்றமிழால் நாவல வூரன்சொல் பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே. 7.085.10
திருக்கூடலையாற்றூரில், கொடிபோலும் இடையினையுடையவளாகிய உமாதேவியோடும், அருள் விளையாட்டை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, 'அவன் செய்த இச்செயல் அதிசயம்' என்று சொல்லி, ஆராய்ந்த இனிய தமிழால், திருநாவலூரனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்களது வினை, பற்றறக் கெடுதல் திண்ணம்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 24 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|