LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தேவாரப் பதிகங்கள்

ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி


7.51 திருவாரூர்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்

518     பத்திமையும் அடிமையையுங்
    கைவிடுவான் பாவியேன்
    பொத்தினநோ யதுவிதனைப்
    பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
    முத்தினைமா மணிதன்னை
    வயிரத்தை மூர்க்கனேன்
    எத்தனைநாட் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.     7.51.1
519     ஐவணமாம் பகழியுடை
    அடல்மதனன் பொடியாகச்
    செவ்வணமாந் திருநயனம்
    விழிசெய்த சிவமூர்த்தி
    மையணவு கண்டத்து
    வளர்சடையெம் மாரமுதை
    எவ்வணம்நான் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.     7.51.2
520    சங்கலக்குந் தடங்கடல்வாய்
    விடஞ்சுடவந் தமரர்தொழ
    அங்கலக்கண் தீர்த்துவிடம்
    உண்டுகந்த அம்மானை
    இங்கலக்கும் உடற்பிறந்த
    அறிவிலியேன் செறிவின்றி
    எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.     7.51.3
521    இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப்
    பிறந்தயர்வேன் அயராமே
    அங்ஙனம்வந் தெனையாண்ட
    அருமருந்தென் ஆரமுதை
    வெங்கனல்மா மேனியனை
    மான்மருவுங் கையானை
    எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.     7.51.4
522    செப்பரிய அயனொடுமால்
    சிந்தித்துந் தெரிவரிய
    அப்பெரிய திருவினையே
    அறியாதே அருவினையேன்
    ஒப்பரிய குணத்தானை
    இணையிலியை அணைவின்றி
    எப்பரிசு பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.     7.51.5
523    வன்னாகம் நாண்வரைவில்
    அங்கிகணை அரிபகழி
    தன்னாகம் உறவாங்கிப்
    புரமெரித்த தன்மையனை
    முன்னாக நினையாத
    மூர்க்கனேன் ஆக்கைசுமந்
    தென்னாகப் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.     7.51.6
524    வன்சயமாய் அடியான்மேல்
    வருங்கூற்றின் உரங்கிழிய
    முன்சயமார் பாதத்தால்
    முனிந்துகந்த மூர்த்திதனை
    மின்செயும்வார் சடையானை
    விடையானை அடைவின்றி
    என்செயநான் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.     7.51.7
525    முன்னெறிவா னவர்கூடித்
    தொழுதேத்தும் முழுமுதலை
    அந்நெறியை அமரர்தொழும்
    நாயகனை அடியார்கள்
    செந்நெறியைத் தேவர்குலக்
    கொழுந்தைமறந் திங்ஙனம்நான்
    என்னறிவான் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.     7.51.8
526    கற்றுளவான் கனியாய
    கண்ணுதலைக் கருத்தார
    உற்றுளனாம் ஒருவனைமுன்
    இருவர்நினைந் தினிதேத்தப்
    பெற்றுளனாம் பெருமையனைப்
    பெரிதடியேன் கையகன்றிட்
    டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.     7.51.9
527    ஏழிசையாய் இசைப்பயனாய்
    இன்னமுதாய் என்னுடைய
    தோழனுமாய் யான்செய்யுந்
    துரிசுகளுக் குடனாகி
    மாழையொண்கண் பரவையைத்தந்
    தாண்டானை மதியில்லா
    ஏழையேன் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.     7.51.10
528    வங்கமலி கடல்நஞ்சை
    வானவர்கள் தாமுய்ய
    நுங்கிஅமு தவர்க்கருளி
    நொய்யேனைப் பொருட்படுத்துச்
    சங்கிலியோ டெனைப்புணர்த்த
    தத்துவனைச் சழக்கனேன்
    எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.     7.51.11
529    பேரூரும் மதகரியின்
    உரியானைப் பெரியவர்தஞ்
    சீரூருந் திருவாரூர்ச்
    சிவனடியே திறம்விரும்பி
    ஆரூரன் அடித்தொண்டன்
    அடியன்சொல் அகலிடத்தில்
    ஊரூரன் இவைவல்லார்
    உலகவர்க்கு மேலாரே.     7.51.12

இது திருவொற்றியூரிற் சங்கிலிநாச்சியாருடன்
இருக்கும்போது வீதிவிடங்கப்பெருமானுடைய
திருவோலக்கதரிசன ஞாபகம்வர ஓதியருளிய பதிகம்.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.52 திருவாலங்காடு
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்

530    முத்தா முத்தி தரவல்ல
    முகிழ்மென் முலையா ளுமைபங்கா
    சித்தா சித்தித் திறங்காட்டுஞ்
    சிவனே தேவர் சிங்கமே
    பத்தா பத்தர் பலர்போற்றும்
    பரமா பழைய னூர்மேய
    அத்தா ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.     7.52.1
531    பொய்யே செய்து புறம்புறமே
    திரிவேன் றன்னைப் போகாமே
    மெய்யே வந்திங் கெனையாண்ட
    மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே
    பையா டரவம் அரைக்கசைத்த
    பரமா பழைய னூர்மேய
    ஐயா ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.     7.52.2
532    தூண்டா விளக்கின் நற்சோதீ
    தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
    பூண்டாய் எலும்பைப் புரமூன்றும்
    பொடியாச் செற்ற புண்ணியனே
    பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்
    பரமா பழைய னூர்மேய
    ஆண்டா ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.     7.52.3
533    மறிநேர் ஒண்கண் மடநல்லார்
    வலையிற் பட்டு மதிமயங்கி
    அறிவே அழிந்தே னையாநான்
    மையார் கண்ட முடையானே
    பறியா வினைக ளவைதீர்க்கும்
    பரமா பழைய னூர்மேய
    அறிவே ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.     7.52.4
534    வேலங் காடு தடங்கண்ணார்
    வலையுட் பட்டுன் நெறிமறந்து
    மாலங் காடி மறந்தொழிந்தேன்
    மணியே முத்தே மரகதமே
    பாலங் காடி நெய்யாடி
    படர்புன் சடையாய் பழையனூர்
    ஆலங் காடா உன்னுடைய
    அடியார்க் கடியேன் ஆவேனே.     7.52.5
535    எண்ணார் தங்கள் எயிலெய்த
    எந்தாய் எந்தை பெருமானே
    கண்ணாய் உலகங் காக்கின்ற
    கருத்தா திருத்த லாகாதாய்
    பண்ணா ரிசைக ளவைகொண்டு
    பலரும் ஏத்தும் பழையனூர்
    அண்ணா ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.     7.52.6
536    வண்டார் குழலி உமைநங்கை
    பங்கா கங்கை மணவாளா
    விண்டார் புரங்க ளெரிசெய்த
    விடையாய் வேத நெறியானே
    பண்டாழ் வினைகள் பலதீர்க்கும்
    பரமா பழைய னூர்மேய
    அண்டா ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.     7.52.7
537    பேழ்வா யரவி னணையானும்
    பெரிய மலர்மே லுறைவானுந்
    தாழா துன்றன் சரண்பணியத்
    தழலாய் நின்ற தத்துவனே
    பாழாம் வினைக ளவைதீர்க்கும்
    பரமா பழையனூர் தன்னை
    ஆள்வாய் ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.     7.52.8
538    எம்மான் எந்தை மூத்தப்பன்
    ஏழேழ் படிகால் எமையாண்ட
    பெம்மான் ஈமப் புறங்காட்டிற்
    பேயோ டாடல் புரிவானே
    பன்மா மலர்க ளவைகொண்டு
    பலரும் ஏத்தும் பழையனூர்
    அம்மா ஆலங் காடாவுன்
    அடியார்க் கடியேன் ஆவேனே.     7.52.9
539    பத்தர் சித்தர் பலரேத்தும்
    பரமன் பழைய னூர்மேய
    அத்தன் ஆலங் காடன்றன்
    அடிமைத் திறமே அன்பாகிச்
    சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச்
    சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்
    பத்தும் பாடி ஆடுவார்
    பரமன் அடியே பணிவாரே.     7.52.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்துவதாண்டவேசுவரர், தேவியார் - வண்டார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.53 திருக்கடவூர் மயானம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்

540    மருவார் கொன்றை மதிசூடி
    மாணிக் கத்தின் மலைபோல
    வருவார் விடைமேல் மாதோடு
    மகிழ்ந்து பூதப் படைசூழத்
    திருமால் பிரமன் இந்திரற்குந்
    தேவர் நாகர் தானவர்க்கும்
    பெருமான் கடவூர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.     7.53.1
541     விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
    மார்பர் வேத கீதத்தர்
    கண்ணார் நுதலர் நகுதலையர்
    கால காலர் கடவூரர்
    எண்ணார் புரமூன் றெரிசெய்த
    இறைவ ருமையோ ரொருபாகம்
    பெண்ணா ணாவர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.     7.53.2
542     காயும் புலியின் அதளுடையர்
    கண்டர் எண்டோ ட் கடவூரர்
    தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்
    தாமே யாய தலைவனார்
    பாயும் விடையொன் றதுவேறிப்
    பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
    பேய்கள் வாழும் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.    7.53.3
543     நறைசேர் மலரைங் கணையானை
    நயனத் தீயாற் பொடிசெய்த
    இறையா ராவர் எல்லார்க்கும்
    இல்லை யென்னா தருள்செய்வார்
    பறையார் முழவம் பாட்டோ டு
    பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்
    பிறையார் சடையார் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.     7.53.4
544     கொத்தார் கொன்றை மதிசூடிக்
    கோள்நா கங்கள் பூணாக
    மத்த யானை உரிபோர்த்து
    மருப்பும் ஆமைத் தாலியார்
    பத்தி செய்து பாரிடங்கள்
    பாடி ஆடப் பலிகொள்ளும்
    பித்தர் கடவூர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.    7.53.5
545    துணிவார் கீளுங் கோவணமுந்
    துதைந்து சுடலைப் பொடியணிந்து
    பணிமே லிட்ட பாசுபதர்
    *பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
    திணிவார் குழையார் புரமூன்றுந்
    தீவாய்ப் படுத்த சேவகனார்
    பிணிவார் சடையார் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.
    * பஞ்சவடியாவது மயிர்ப்பூணநூல். இது மாவிரதியரென்னும்
    உட்சமயத்தாரணிவது. மேலும் அவர்களணியுமணி எலும்பினாலாகிய
    மணிகள். இவற்றை மானக்கஞ்சாறநாயனார் புராணத்து 23-வது
    திருவிருத்தத்தானுமுணர்க.    7.53.6
546     காரார் கடலின் நஞ்சுண்ட
    கண்டர் கடவூர் உறைவாணர்
    தேரார் அரக்கன் போய்வீழ்ந்து
    சிதைய விரலா லூன்றினார்
    ஊர்தான் ஆவ துலகேழும்
    உடையார்க் கொற்றி யூராரூர்
    பேரா யிரவர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.     7.53.7
547     வாடா முலையாள் தன்னோடும்
    மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
    கோடார் கேழற் பின்சென்று
    குறுகி விசயன் தவமழித்து
    நாடா வண்ணஞ் செருச்செய்து
    ஆவ நாழி நிலையருள்செய்
    பீடார் சடையார் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.     7.53.8
548     வேழம் உரிப்பர் மழுவாளர்
    வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்
    ஆழி அளிப்பர் அரிதனக்கன்
    றானஞ் சுகப்பர் அறமுரைப்பர்
    ஏழைத் தலைவர் கடவூரில்
    இறைவர் சிறுமான் மறிக்கையர்
    பேழைச் சடையர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.     7.53.9
549     மாட மல்கு கடவூரில்
    மறையோ ரேத்தும் மயானத்துப்
    பீடை தீர அடியாருக்
    கருளும் பெருமா னடிகள்சீர்
    நாடி நாவ லாரூரன்
    நம்பி சொன்ன நற்றமிழ்கள்
    பாடு மடியார் கேட்பார்மேற்
    பாவ மான பறையுமே.     7.53.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.54 திருவொற்றியூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

550    அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன்
    அதுவும் நான்படப் பாலதொன் றானாற்
    பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
    பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன்
    வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்
    மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
    ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.    7.54.1
551     கட்ட னேன்பிறந் தேன்உனக் காளாய்
    காதற் சங்கிலி காரண மாக
    எட்டி னாற்றிக ழுந்திரு மூர்த்தி
    என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்
    பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்
    பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை
    ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.     7.54.2
552     கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே
    கட்டி யேபலர்க் குங்களை கண்ணே
    அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே
    அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்
    சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல
    வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி
    ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.     7.54.3
553     ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா
    லியாவ ராகிலென் அன்புடை யார்கள்
    தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற்
    சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்
    மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்
    கொள்வ தேகணக் குவழக் காகில்
    ஊன்று கோல்எனக் காவதொன் றருளாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.     7.54.4
554     வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்
    உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்
    சுழித்த லைப்பட்ட நீரது போலச்
    சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளங்
    கழித்த லைப்பட்ட நாயது போல
    ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை
    ஒழித்து நீயரு ளாயின செய்யாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.     7.54.5
555     மானை நோக்கியர் கண்வலைப் பட்டு
    வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்
    தேனை ஆடிய கொன்றையி னாய்உன்
    சீல முங்குண முஞ்சிந்தி யாதே
    நானும் இத்தனை வேண்டுவ தடியேன்
    உயிரொ டும்நர கத்தழுந் தாமை
    ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.     7.54.6
556     மற்றுத் தேவரை நினைந்துனை மறவேன்
    எஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன்
    பெற்றி ருந்து பெறாதொழி கின்ற
    பேதை யேன்பிழைத் திட்டதை அறியேன்
    முற்றும் நீஎனை முனிந்திட அடியேன்
    கடவ தென்னுனை நான்மற வேனேல்
    உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.     7.54.7
557     கூடினாய் மலை மங்கையை நினையாய்
    கங்கை ஆயிர முகம்உடை யாளைச்
    சூடி னாயென்று சொல்லிய புக்கால்
    தொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே
    வாடி நீயிருந் தென்செய்தி மனனே
    வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி
    ஊடி னாலினி ஆவதொன் றுண்டே
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.     7.54.8
558     மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய்
    மைந்த னேமணி யேமண வாளா
    அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
    அழையேற் போகுரு டாஎனத் தரியேன்
    முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்
    முக்க ணாமுறை யோமறை யோதீ
    உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.     7.54.9
559    ஓதம் வந்துல வுங்கரை தன்மேல்
    ஒற்றி யூருறை செல்வனை நாளும்
    ஞாலந் தான்பர வப்படு கின்ற
    நான்ம றையங்கம் ஓதிய நாவன்
    சீலந் தான்பெரி தும்மிக வல்ல
    சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த
    பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப்
    பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே.     7.54.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர்,
தேவியார் - வடிவுடையம்மை.

இது உன்னைப்பிரிந்துபோவதில்லையென்று சங்கிலி நாச்சியாருக்குச்
சூளுரைசெய்து மணந்துமகிழ்ந் திருக்கையில் திருவாரூர்
வீதிவிடங்கப்பெருமானுடய திருவோலக்கத் தரிசனஞ்செய்வதற்கின்றி
நெடுநாள் பிரிந்திருக்கின்றோமேயென்னும் ஞாபகமுண்டாகப்
பரமசிவத்தின் திருவிளையாட்டால் முன்கூறிய சூளுரையைமறந்து
திருவொற்றியூரெல்லையைக் கடந்தவளவில் நேத்திரங்களுக்கு
அபாவந்தோன்ற வருந்தித் துதிசெய்த பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.55 திருப்புன்கூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

560    அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத
    அவனைக் காப்பது காரண மாக
    வந்த காலன்றன் ஆருயி ரதனை
    வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
    எந்தை நீயெனை நமன்றமர் நலியின்
    இவன்மற் றென்னடி யானென விலக்குஞ்
    சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன்
    செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.     7.55.1
561     வைய கமுற்றும் மாமழை மறந்து
    வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
    உய்யக் கொள்கமற் றெங்களை என்ன
    ஒலிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
    பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
    பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ்
    செய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன்
    செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.     7.55.2
562     ஏத நன்னிலம் ஈரறு வேலி
    ஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்துக்
    கோத னங்களின் பால்கறந் தாட்டக்
    கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
    தாதை தாளற எறிந்ததண் டிக்குன்
    சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
    பூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன்
    பூம்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.     7.55.3
563     நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
    நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்
    கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
    கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்
    குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
    கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
    பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
    பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.    7.55.4
564     கோல மால்வரை மத்தென நாட்டிக்
    கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த
    ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
    அமரர் கட்கருள் புரிவது கருதி
    நீல மார்கடல் விடந்தனை உண்டு
    கண்டத் தேவைத்த பித்தநீ செய்த
    சீலங் கண்டுநின் றிருவடி அடைந்தேன்
    செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.     7.55.5
565     இயக்கர் கின்னரர் யமனொடு வருணர்
    இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
    மயக்கம் இல்புலி வானரம் நாகம்
    வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
    அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி அதனை
    அர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு
    திகைப்பொன் றின்றிநின் றிருவடி அடைந்தேன்
    செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.     7.55.6
566     போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப்
    பொழில்கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து
    பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத்
    தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட
    ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை
    நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த
    தீர்த்த னேநின்றன் றிருவடி அடைந்தேன்
    செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.     7.55.7
567     மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
    இருவர் நின்றிருக் கோயிலின் வாய்தல்
    காவ லாளரென் றேவிய பின்னை
    ஒருவ நீகரி காடரங் காக
    மானை நோக்கியோர் மாநடம் மகிழ
    மணிமு ழாமுழக் கஅருள் செய்த
    தேவ தேவநின் றிருவடி அடைந்தேன்
    செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.     7.55.8
568     அறிவி னால்மிக்க அறுவகைச் சமயம்
    அவ்வ வர்க்கங்கே ஆரருள் புரிந்து
    எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
    துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
    குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
    கோல வாளொடு நாளது கொடுத்த
    செறிவு கண்டுநின் றிருவடி அடைந்தேன்
    செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.     7.55.9
569    கம்ப மால்களிற் றின்னுரி யானைக்
    காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்
    செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்
    செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானை
    உம்பர் ஆளியை உமையவள் கோனை
    ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்
    தன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோ
    டைந்தும் வல்லவர் அருவினை இலரே.     7.55.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவலோகநாதர், தேவியார் - சொக்கநாயகியம்மை.

சுந்தரமூர்த்திசுவாமிகள் திருப்புன்கூருக்கெழுந்தருளியபோது அந்தத்தலத்தார்
கண்டு தொழுது சுவாமீ! இங்கு நெடுநாளாக மழைபொழிதலின்றி
வருந்துகிறோம், ஆதலால் கிருபைபாலிக்கவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய,
மழைபொழிந்தால் சுவாமிக்கியாது தருவீர்களென்ன, அவர்கள் பன்னிரண்டு
வேலி நிலந்தருகிறோமென்னக் கிருபை கூர்ந்து இந்தப்பதிகமோதியருளலும்,
மழை அதிகமாய்ப்பெய்ய அவர்களுடையவேண்டுதலினால் மழை தணிந்து
பெய்யும்படிசெய்து முன்னமவர்கள் சொல்லிய பன்னிரண்டுவேலி நிலமேயன்றி
மீட்டும் பன்னிரண்டுவேலி நிலங்கொடுக்கப்பெற்றருளியது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.56 திருநீடூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

570    ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை
    ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக்
    கார தார்கறை மாமிடற் றானைக்
    கருத லார்புரம் மூன்றெரித் தானை
    நீரில் வாளை வரால்குதி கொள்ளும்
    நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப்
    பாரு ளார்பர வித்தொழ நின்ற
    பரம னைப்பணி யாவிட லாமே.     7.56.1
571     துன்னு வார்சடைத் தூமதி யானைத்
    துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப்
    பன்னு நான்மறை பாடவல் லானைப்
    பார்த்த னுக்கருள் செய்தபி ரானை
    என்னை இன்னருள் எய்துவிப் பானை
    ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப்
    புன்னை மாதவி போதலர் நீடூர்ப்
    புனித னைப்பணி யாவிட லாமே.     7.56.2
572     கொல்லும் மூவிலை வேலுடை யானைக்
    கொடிய காலனை யுங்குமைத் தானை
    நல்ல வாநெறி காட்டுவிப் பானை
    நாளும் நாம்உகக் கின்ற பிரானை
    அல்ல லில்லரு ளேபுரி வானை
    ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க்
    கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக்
    கூறி நாம்பணி யாவிட லாமே.     7.56.3
573     தோடு காதிடு தூநெறி யானைத்
    தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப்
    பாடு மாமறை பாடவல் லானைப்
    பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே
    ஆடு மாமயில் அன்னமோ டாட
    அலைபு னற்கழ னித்திரு நீடூர்
    வேட னாயபி ரானவன் றன்னை
    விரும்பி நாம்பணி யாவிட லாமே.     7.56.4
574     குற்ற மொன்றடி யாரிலர் ஆனாற்
    கூடு மாறத னைக்கொடுப் பானைக்
    கற்ற கல்வியி லும்மினி யானைக்
    காணப் பேணும வர்க்கெளி யானை
    முற்ற அஞ்சுந் துறந்திருப் பானை
    மூவ ரின்முத லாயவன் றன்னைச்
    சுற்று நீள்வயல் சூழ்திரு நீடூர்த்
    தோன்ற லைப்பணி யாவிட லாமே.     7.56.5
575     காடில் ஆடிய கண்ணுத லானைக்
    கால னைக்கடிந் திட்டபி ரானைப்
    பாடி ஆடும்பரி சேபுரிந் தானைப்
    பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத்
    தேடி மாலயன் காண்பரி யானைச்
    சித்த முந்தெளி வார்க்கெளி யானைக்
    கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க்
    கூத்த னைப்பணி யாவிட லாமே.     7.56.6
576     விட்டி லங்கெரி யார்கையி னானை
    வீடி லாதவி யன்புக ழானைக்
    கட்டு வாங்கந் தரித்தபி ரானைக்
    காதி லார்கன கக்குழை யானை
    விட்டி லங்குபுரி நூலுடை யானை
    வீந்த வர்தலை யோடுகை யானைக்
    கட்டி யின்கரும் போங்கிய நீடூர்க்
    கண்டு நாம்பணி யாவிட லாமே.     7.56.7
577     மாய மாய மனங்கெடுப் பானை
    மனத்து ளேமதி யாய்இருப் பானைக்
    காய மாயமும் ஆக்குவிப் பானைக்
    காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை
    ஓயு மாறுரு நோய்புணர்ப் பானை
    ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை
    வேய்கொள் தோள்உமைப் பாகனை நீடூர்
    வேந்த னைப்பணி யாவிட லாமே.     7.56.8
578     கண்ட முங்கறுத் திட்டபி ரானைக்
    காணப் பேணும வர்க்கெளி யானைத்
    தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத்
    துன்ப முந்துறந் தின்பினி யானைப்
    பண்டை வல்வினை கள்கெடுப் பானைப்
    பாக மாமதி யாயவன் றன்னைக்
    கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க்
    கேண்மை யாற்பணி யாவிட லாமே.     7.56.9
579    அல்லல் உள்ளன தீர்த்திடு வானை
    அடைந்த வர்க்கமு தாயிடு வானைக்
    கொல்லை வல்லர வம்மசைத் தானைக்
    கோல மார்கரி யின்னுரி யானை
    நல்ல வர்க்கணி யானவன் றன்னை
    நானுங் காதல்செய் கின்றபி ரானை
    எல்லி மல்லிகை யேகமழ் நீடூர்
    ஏத்தி நாம்பணி யாவிட லாமே.     7.56.10
580    பேரோர் ஆயிர மும்முடை யானைப்
    பேரி னாற்பெரி தும்மினி யானை
    நீரூர் வார்சடை நின்மலன் றன்னை
    நீடூர் நின்றுகந் திட்டபி ரானை
    ஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய்
    ஆத ரித்தழைத் திட்டவிம் மாலை
    பாரூ ரும்பர வித்தொழ வல்லார்
    பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே.     7.56.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோமநாதேசுவரர், தேவியார் - வேயுறுதோளியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.57 திருவாழ்கொளிபுத்தூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

581    தலைக்க லன்றலை மேல்தரித் தானைத்
தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக்
கொலைக்கை யானைஉரி போர்த்துகந் தானைக்
    கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை
    அலைத்த செங்கண்விடை ஏறவல் லானை
    ஆணை யால்அடி யேன்அடி நாயேன்
    மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர்
    மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.    7.57.1
582    படைக்கட் சூலம் பயிலவல் லானைப்
    பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானைக்
    கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
    காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
    சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்
    தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
    மடைக்கண்நீ லம்அலர் வாழ்கொளி புத்தூர்
    மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.    7.57.2
583    வெந்த நீறுமெய் பூசவல் லானை
    வேத மால்விடை ஏறவல் லானை
    அந்தம் ஆதிஅறி தற்கரி யானை
    ஆறலைத் தசடை யானைஅம் மானைச்
    சிந்தை யென்றடு மாற்றறுப் பானைத்
    தேவ தேவனென் சொல்முனி யாதே
    வந்தென் உள்ளம்புகும் வாழ்கொளி புத்தூர்
    மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.     7.57.3
584    தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத்
    தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப்
    படங்கொள் நாகம்அரை ஆர்த்துகந் தானைப்
    பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை
    நடுங்க ஆனைஉரி போர்த்துகந் தானை
    நஞ்சம் உண்டுகண் டங்கறுத் தானை
    மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்
    மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.    7.57.4
585    வளைக்கை முன்கைமலை மங்கை மணாளன்
    மார னார்உடல் நீறெழச் செற்றுத்
    துளைத்த அங்கத்தொடு தூமலர்க் கொன்றை
    தோலும்நூ லுந்துதைந் தவரை மார்பன்
    திளைக்குந் தெவ்வர் திரிபுரம் மூன்றும்
    அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
    வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்
    மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.     7.57.5.
586    திருவின் நாயகன் ஆகிய மாலுக்
    கருள்கள் செய்திடும் தேவர் பிரானை
    உருவி னானைஒன் றாவறி வொண்ணா
    மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்
    செருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று
    செங்கண் வேடனாய் என்னொடும் வந்து
    மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்
    மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.    7.57.6
587    எந்தை யைஎந்தை தந்தை பிரானை
    ஏத மாயஇடர் தீர்க்கவல் லானை
    முந்தி யாகிய மூவரின் மிக்க
    மூர்த்தி யைமுதற் காண்பரி யானைக்
    கந்தின் மிக்ககரி யின்மருப் போடு
    கார கில்கவ ரிம்மயிர் மண்ணி
    வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்
    மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.    7.57.7
588    தேனை ஆடிய கொன்றையி னானைத்
    தேவர் கைதொழுந் தேவர் பிரானை
    ஊனம் ஆயின தீர்க்க வல்லானை
    ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக்
    கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த
    கள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாய
    வான நாடனை வாழ்கொளி புத்தூர்
    மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.    7.57.8
589    காளை யாகி வரையெடுத் தான்றன்
    கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்
    மூளை போத ஒருவிரல் வைத்த
    மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப்
    பாளை தெங்கு பழம்விழ மண்டிச்
    செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்
    வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
    மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.     7.57.9
590    திருந்த நான்மறை பாடவல் லானைத்
    தேவர்க் குந்தெரி தற்கரி யானைப்
    பொருந்த மால்விடை ஏறவல் லானைப்
    பூதிப் பைபுலித் தோலுடை யானை
    இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்
    ஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம்
    மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர்
    மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.     7.57.10
591    மெய்யனை மெய்யின் நின்றுணர் வானை
    மெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம்
    பொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப்
    புனித னைப்புலித் தோலுடை யானைச்
    செய்ய னைவெளி யதிரு நீற்றில்
    திகழு மேனியன் மான்மறி ஏந்தும்
    மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர்
    மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.     7.57.11
592    வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்
    மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனென்
    றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்
    சடையன் காதலன் வனப்பகை அப்பன்
    நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்
    நங்கை சிங்கடி தந்தை பயந்த
    பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல்
    பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே.     7.57.12

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்,
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.58 திருக்கழுமலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

593    சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்
    தன்னருள் தந்தஎந் தலைவனை மலையின்
    மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை
    வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
    ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
    எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
    காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
    கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.    7.58.1
594    மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன்
    வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்
    சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன்
    துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை
    முத்தியும் ஞானமும் வானவர் அறியா
    முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்
    கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்
    கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.    7.58.2
595    திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்
    செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்
    ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன்
    உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்
    விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி
    விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்
    கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக்
    கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.    7.58.3
596    மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை
    வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
    பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப்
    பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்
    குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே
    பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்
    கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்
    கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.    7.58.4
597    குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங்
    கொடுமழு வாட்படைக் குழகனே என்றும்
    வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும்
    வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே
    பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்
    பசுபதி பதிவின விப்பல நாளுங்
    கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவுங்
    கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.     7.58.5
598    வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணி
    வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
    விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி
    வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே
    அரும்பினை அலரினை அமுதினைத் தேனை
    ஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங்
    கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்
    கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.     7.58.6
599    அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
    அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்
    முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை
    படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்
    புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை
    மின்னின துருவை என்னிடைப் பொருளைக்
    கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்
    கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.     7.58.7
600    நினைதரு பாவங்கள் நாசங்க ளாக
    நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை
    மலைதரு மலைமகள் கணவனை வானோர்
    மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப்
    புனைதரு புகழினை எங்கள தொளியை
    இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக்
    கனைதரு கருங்கடல் ஓதம்வந் துலவுங்
    கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.     7.58.8
601    மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப
    வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாயத்
    துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த
    உண்மை யெனுந்தக வின்மையை ஓரேன்
    பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப்
    பேரரு ளாளனைக் காரிருள் போன்ற
    கறையணி மிடறுடை அடிகளை அடியேன்
    கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.    7.58.9
602    செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும்
    விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்
    டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்
    அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங்
    கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்
    சடையன்றன் காதலன் பாடிய பத்துந்
    தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத்
    துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே.     7.58.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரியீசுவரர்,
தேவியார் - திருநிலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.59 திருவாரூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

603    பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானைப்
    போக முந்திரு வும்புணர்ப் பானைப்
    பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
    பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
    இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
    எம்மா னைஎளி வந்தபி ரானை
    அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
    ஆரூ ரானை மறக்கலு மாமே.     7.59.1
604    கட்ட மும்பிணி யுங்களை வானைக்
    காலற் சீறிய காலுடை யானை
    விட்ட வேட்கைவெந் நோய்களை வானை
    விரவி னால்விடு தற்கரி யானைப்
    பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை
    வாரா மேதவி ரப்பணிப் பானை
    அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
    ஆரூ ரானை மறக்கலு மாமே.     7.59.2
605    கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்
    கலைக்கெ லாம்பொரு ளாயுடன் கூடிப்
    பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்
    பகலுங் கங்குலும் ஆகிநின் றானை
    ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை
    உணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை
    ஆர்க்கின் றகட லைமலை தன்னை
    ஆரூ ரானை மறக்கலு மாமே.     7.59.3
606    செத்த போதினில் முன்னின்று நம்மைச்
    சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்
    வைத்த சிந்தைஉண் டேமனம் உண்டே
    மதிஉண் டேவிதி யின்பயன் உண்டே
    முத்தன் எங்கள்பி ரானென்று வானோர்
    தொழநின் றதிமில் ஏறுடை யானை
    அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை
    ஆரூ ரானை மறக்கலு மாமே.     7.59.4
607    செறிவுண் டேல்மனத் தாற்றெளி வுண்டேல்
    தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல்
    மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல்
    வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்
    பொறிவண் டாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றைப்
    பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை
    அறிவுண் டேஉட லத்துயிர் உண்டே
    ஆரூ ரானை மறக்கலு மாமே.     7.59.5
608    பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று
    பொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி
    மெள்ள நின்றவர் செய்வன எல்லாம்
    வாரா மேதவிர்க் கும்விதி யானை
    வள்ளல் எந்தமக் கேதுணை என்று
    நாள்நா ளும்அம ரர்தொழு தேத்தும்
    அள்ள லங்கழ னிப்பழ னத்தணி
    ஆரூ ரானை மறக்கலு மாமே.     7.59.6
609    கரியா னைஉரி கொண்டகை யானைக்
    கண்ணின் மேலொரு கண்ணுடை யானை
    வரியா னைவருத் தங்களை வானை
    மறையா னைக்குறை மாமதி சூடற்
    குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம்
    ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க்
    கரியா னைஅடி யேற்கெளி யானை
    ஆரூ ரானை மறக்கலு மாமே.     7.59.7
610    வாளா நின்று தொழும்அடி யார்கள்
    வான்ஆ ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்
    நாணா ளும்மலர் இட்டுவணங் கார்
    நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
    கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன்
    கிளைக்கெ லாந்துணை யாமெனக் கருதி
    ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன்
    ஆரூ ரானை மறக்கலு மாமே.     7.59.8
611    விடக்கை யேபெருக் கிப்பல நாளும்
    வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக்
    கடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன்
    கண்கு ழிந்திரப் பார்கையி லொன்றும்
    இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச்
    சடையா னைஉமை யாளையோர் பாகத்
    தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை
    ஆரூ ரானை மறக்கலு மாமே.     7.59.9
612    ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட
    உச்சிப் போதனை நச்சர வார்த்த
    பட்டி யைப்பக லையிருள் தன்னைப்
    பாவிப் பார்மனத் தூறுமத் தேனைக்
    கட்டி யைக்கரும் பின்றெளி தன்னைக்
    காத லாற்கடல் சூர்தடிந் திட்ட
    செட்டி யப்பனைப் பட்டனைச் செல்வ
    ஆரூ ரானை மறக்கலு மாமே.     7.59.10
613    ஓரூ ரென்றுல கங்களுக் கெல்லாம்
    உரைக்க லாம்பொரு ளாயுடன் கூடிக்
    காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை
    முடியன் காரிகை காரண மாக
    ஆரூ ரைம்மறத் தற்கரி யானை
    அம்மான் றன்றிருப் பேர்கொண்ட தொண்டன்
    ஆரூ ரன்னடி நாயுரை வல்லார்
    அமர லோகத் திருப்பவர் தாமே.     7.59.11

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.60 திருவிடைமருதூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

614    கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
    கைப்பர் பாழ்புக மற்றது போலப்
    பழுது நான்உழன் றுள்தடு மாறிப்
    படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
    அழுது நீயிருந் தென்செய்தி மனனே
    அங்க ணாஅர னேயென மாட்டா
    இழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய்
    இடைம ருதுறை எந்தைபி ரானே.     7.60.1
615    நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே
    நன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன்
    அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன்
    அஞ்சி னேன்நம னாரவர் தம்மை
    உரைப்பன் நானுன சேவடி சேர
    உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத
    இரைப்ப னேனுக்கோர் உய்வகை அருளாய்
    இடைம ருதுறை எந்தைபி ரானே.    7.60.2
616    புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்
    போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்
    என்னெ னக்கினி இற்றைக்கு நாளை
    என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய்
    முன்ன மேஉன சேவடி சேரா
    மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
    இன்னம் என்றனக் குய்வகை அருளாய்
    இடைம ருதுறை எந்தைபி ரானே.     7.60.3
617    முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய
    மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
    சிந்தித் தேமனம் வைக்கவும் மாட்டேன்
    சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன்
    அந்தி வெண்பிறை சூடும்எம் மானே
    ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
    எந்தை நீயெனக் குய்வகை அருளாய்
    இடைம ருதுறை எந்தைபி ரானே.    7.60.4
618    அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்
    ஐவ ரும்புர வாசற ஆண்டு
    கழித்துக் காற்பெய்து போயின பின்னைக்
    கடைமு றைஉனக் கேபொறை ஆனேன்
    விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை
    வேண்டேன் மானுட வாழ்க்கையீ தாகில்
    இழித்தேன் என்றனக் குய்வகை அருளாய்
    இடைம ருதுறை எந்தைபி ரானே.     7.60.5
619    குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக்
    கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக்
    கற்றி லேன்கலை கள்பல ஞானங்
    கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்
    பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்
    பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்
    எற்று ளேன்எனக் குய்வகை அருளாய்
    இடைம ருதுறை எந்தைபி ரானே.     7.60.6
620    கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக்
    குற்றஞ் செற்றம் இவைமுத லாக
    விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும்
    வேண்டில் ஐம்புலன் என்வசம் அல்ல
    நடுக்கம் உற்றதோர் மூப்புவந் தெய்த
    நமன்த மர்நர கத்திடல் அஞ்சி
    இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய்
    இடைம ருதுறை எந்தைபி ரானே.     7.60.7
621    ஐவ கையர் ஐயரவ ராகி
    ஆட்சி கொண்டொரு காலவர் நீங்கார்
    அவ்வ கையவர் வேண்டுவ தானால்
    அவர வர்வழி ஒழுகிநான் வந்து
    செய்வ கையறி யேன்சிவ லோகா
    தீவ ணாசிவ னேயெரி யாடீ
    எவ்வ கையெனக் குய்வகை அருளாய்
    இடைம ருதுறை எந்தைபி ரானே.     7.60.8
622    ஏழை மானுட இன்பினை நோக்கி
    இளைய வர்வயப் பட்டிருந் தின்னம்
    வாழை தான்பழுக் கும்நமக் கென்று
    வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக்
    கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம்
    போக மும்பொருள் ஒன்றறி யாத
    ஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய்
    இடைம ருதுறை எந்தைபி ரானே.     7.60.9
623    அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி
    ஐவ னஞ்சுமந் தார்த்திரு பாலும்
    இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல்
    இடைம ருதுறை எந்தைபி ரானை
    உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை
    உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள்
    நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி
    நாதன் சேவடி நண்ணுவர் தாமே.     7.60.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசுவரர், தேவியார் - நலமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.61 திருவேகம்பம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

624    ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
    ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்
    சீலந் தான்பெரி தும்முடை யானைச்
    சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
    ஏல வார்குழ லாள்உமை நங்கை
    என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
    கால காலனைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.     7.61.1
625    உற்ற வர்க்குத வும்பெரு மானை
    ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
    பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
    பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானை
    அற்ற மில்புக ழாள்உமை நங்கை
    ஆத ரித்து வழிபடப் பெற்ற
    கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.     7.61.2
626    திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்
    செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்
    கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
    காம னைக்கன லாவிழித் தானை
    வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
    மருவி யேத்தி வழிபடப் பெற்ற
    *பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
    *காமாட்சியம்மையால் பூசிக்கப்பட்ட ஏகாம்பர
    நாதரே பெரியகம்பர்.     7.61.3
627    குண்ட லந்திகழ் காதுடை யானைக்
    கூற்று தைத்த கொடுந்தொழி லானை
    வண்டலம் புமலர்க் கொன்றையி னானை
    வாள ராமதி சேர்சடை யானைக்
    கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
    கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற
    கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வறே.     7.61.4
628    வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
    வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
    அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
    அரும றையவை அங்கம்வல் லானை
    எல்லை யிற்புக ழாள்உமை நங்கை
    என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
    *நல்ல கம்பனை எங்கள் பிரானை
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
    *உருத்திரராற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானுக்கு
    நல்லகம்பனென்றுபெயர்.    7.61.5
629    திங்கள் தங்கிய சடையுடை யானைத்
    தேவ தேவனைச் செழுங்கடல் வளருஞ்
    சங்க வெண்குழைக் காதுடை யானைச்
    சாம வேதம் பெரிதுகப் பானை
    மங்கை நங்கை மலைமகள் கண்டு
    மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
    கங்கை யாளனைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.     7.61.6
630    விண்ண வர்தொழு தேத்தநின் றானை
    வேதந் தான்விரித் தோதவல் லானை
    நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
    நாளும் நாம்உகக் கின்றபி ரானை
    எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
    என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
    கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.     7.61.7
631    சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
    சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
    பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
    பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை
    அந்த மில்புக ழாள்உமை நங்கை
    ஆத ரித்து வழிபடப் பெற்ற
    கந்த வார்சடைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.     7.61.8
632    வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
    வாலி யபுரம் மூன்றெரித் தானை
    நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
    நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்
    பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
    பரவி யேத்தி வழிபடப் பெற்ற
    கரங்கள் எட்டுடைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.     7.61.9
633    எள்க லின்றி இமையவர் கோனை
    ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
    உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
    வழிபடச் சென்று நின்றவா கண்டு
    வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
    வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட
    *கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

    *திருமாலாற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப்
    பெருமானுக்கு கள்ளக்கம்பனென்றுபெயர்.    7.61.10
634    பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
    பெரிய எம்பெரு மானென்றெப் போதுங்
    கற்ற வர்பர வப்படு வானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
    கொற்ற வன்கம்பன் கூத்தனெம் மானைக்
    குளிர்பொ ழிற்றிரு நாவலா ரூரன்
    நற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார்
    நன்னெ றிஉல கெய்துவர் தாமே.     7.61.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர், தேவியார் - காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.62 திருக்கோலக்கா
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

635     புற்றில் வாளர வார்த்த பிரானைப்
    பூத நாதனைப் பாதமே தொழுவார்
    பற்று வான்துணை எனக்கெளி வந்த
    பாவ நாசனை மேவரி யானை
    முற்ற லார்திரி புரமொரு மூன்றும்
    பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக்
    கொற்ற வில்லங்கை ஏந்திய கோனைக்
    கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.    7.62.1
636    அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும்
    ஆய நம்பனை வேய்புரை தோளி
    தங்கு மாதிரு உருவுடை யானைத்
    தழல்ம திச்சடை மேற்புனைந் தானை
    வெங்கண் ஆனையின் ஈருரி யானை
    விண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங்
    கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங்
    கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.     7.62.2
637    பாட்ட கத்திசை யாகிநின் றானைப்
    பத்தர் சித்தம் பரிவினி யானை
    நாட்ட கத்தேவர் செய்கையு ளானை
    நட்ட மாடியை நம்பெரு மானைக்
    காட்ட கத்துறு புலியுரி யானை
    கண்ணோர் மூன்றுடை அண்ணலை அடியேன்
    கோட்ட கப்புன லார்செழுங் கழனிக்
    கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.    7.62.3
638    ஆத்தம் என்றெனை ஆளுகந் தானை
    அமரர் நாதனைக் குமரனைப் பயந்த
    வார்த்த யங்கிய முலைமட மானை
    வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த
    தீர்த்த னைச்சிவ னைச்செழுந் தேனைத்
    தில்லை அம்பலத் துள்நிறைந் தாடுங்
    கூத்த னைக்குரு மாமணி தன்னைக்
    கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.    7.62.4
639    அன்று வந்தெனை அகலிடத் தவர்முன்
    ஆள தாகஎன் றாவணங் காட்டி
    நின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த
    நித்தி லத்திரள் தொத்தினை முத்திக்
    கொன்றி னான்றனை உம்பர் பிரானை
    உயரும் வல்லர ணங்கெடச் சீறுங்
    குன்ற வில்லியை மெல்லிய லுடனே
    கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.     7.62.5
640    காற்றுத் தீப்புன லாகிநின் றானைக்
    கடவு ளைக்கொடு மால்விடை யானை
    நீற்றுத் தீயுரு வாய்நிமிர்ந் தானை
    நிரம்பு பல்கலை யின்பொ ருளாலே
    போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப்
    போக்கு வான்உயிர் நீக்கிடத் தாளாற்
    கூற்றைத் தீங்குசெய் குரைகழ லானைக்
    கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.    7.62.6
641    அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண்
    டமர ருக்கருள் வெளிப்படுத் தானைத்
    துன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த
    சோதி யைச்சுடர் போலொளி யானை
    மின்ற யங்கிய இடைமட மங்கை
    மேவும் ஈசனை வாசமா முடிமேற்
    கொன்றை யஞ்சடைக் குழகனை அழகார்
    கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.     7.62.7
642    நாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும்
    ஞான சம்பந்த னுக்குல கவர்முன்
    தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்குந்
    தன்மை யாளனை என்மனக் கருத்தை
    ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
    அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சுங்
    கோளி லிப்பெருங் கோயிலுள் ளானைக்
    கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.     7.62.8
643    அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக்
    கன்றி ரங்கிய வென்றியி னானைப்
    பரக்கும் பாரளித் துண்டுகந் தவர்கள்
    பரவி யும்பணி தற்கரி யானைச்
    சிரக்கண் வாய் செவி மூக்குயர் காயம்
    ஆகித் தீவினை தீர்த்தஎம் மானைக்
    குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ்
    கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.    7.62.9
644    கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக்
    கோலக் காவுளெம் மானைமெய்ம் மானப்
    பாட ரங்குடி அடியவர் விரும்பப்
    பயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன்
    நாடி ரங்கிமுன் அறியுமந் நெறியால்
    நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்
    காட ரங்கென நடம்நவின் றான்பாற்
    கதியும் எய்துவர் பதியவர்க் கதுவே.     7.62.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சத்தபுரீசுவரர், தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.63 நம்பி என்ற திருப்பதிகம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

645    மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி
    வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி
    கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி
    கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி
    செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
    திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
    எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.     7.63.1
646    திங்கள் நம்பிமுடி மேலடி யார்பால்
    சிறந்தநம் பிபிறந் தஉயிர்க் கெல்லாம்
    அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும்
    அமரர் நம்பிகும ரன்முதல் தேவர்
    தங்கள் நம்பிதவத் துக்கொரு நம்பி
    தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்
    எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.     7.63.2
647    வருந்த அன்றுமத யானை உரித்த
    வழக்கு நம்பிமுழக் குங்கடல் நஞ்சம்
    அருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த
    அருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம்
    புரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி
    பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி
    இருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.     7.63.3
648    ஊறு நம்பிஅமு தாஉயிர்க் கெல்லாம்
    உரிய நம்பிதெரி யம்மறை அங்கங்
    கூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றைக்
    குமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்துஞ்
    சீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி
    செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும்
    ஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.     7.63.4
649    குற்ற நம்பிகுறு காரெயில் மூன்றைக்
    குலைத்த நம்பிசிலை யாவரை கையிற்
    பற்று நம்பிபர மானந்த வெள்ளம்
    பணிக்கும் நம்பிஎனப் பாடுத லல்லால்
    மற்று நம்பிஉனக் கென்செய வல்லேன்
    மதியி லேன்படு வெந்துயர் எல்லாம்
    எற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.     7.63.5
650    அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய்
    ஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள்
    தெரித்த நம்பிஒரு சேவுடை நம்பி
    சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடந்
    தரித்த நம்பிசம யங்களின் நம்பி
    தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை
    இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.     7.63.6
651    பின்னை நம்பும்புயத் தான்நெடு மாலும்
    பிரமனும் என்றிவர் நாடியுங் காணா
    உன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமே
    உலகு நம்பிஉரை செய்யும தல்லால்
    முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி
    முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட
    தென்னை நம்பிஎம் பிரானாய நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.     7.63.7
652    சொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பி
    தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
    வல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்ய
    வருந்தி நம்பிஉனக் காட்செய கில்லார்
    அல்லல் நம்பிபடு கின்றதென் நாடி
    அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற
    இல்ல நம்பியிடு பிச்சைகொள் நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.     7.63.8
653    காண்டு நம்பிகழற் சேவடி என்றுங்
    கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை
    ஆண்டு நம்பியவர் முன்கதி சேர
    அருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பைத்
    தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத்
    திருத்து நம்பிபொய்ச் சமண்பொரு ளாகி
    ஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.     7.63.9
654    கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை
    கசிந்தவர்க் கிம்மையோ டம்மையில் இன்பம்
    பெருக்கும் நம்பி பெருகக் கருத்தா...
    ............ ............ ............ ...........
    ............ ............ ............ ...........     7.63.10

இச்செய்யுளின் பிற்பகுதி சிதைந்து போயிற்று.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.64 திருத்தினை நகர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

655    நீறு தாங்கிய திருநுத லானை
    நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
    கூறு தாங்கிய கொள்கையி னானைக்
    குற்றம் இல்லியைக் கற்றையஞ் சடைமேல்
    ஆறு தாங்கிய அழகனை அமரர்க்
    கரிய சோதியை வரிவரால் உகளுஞ்
    சேறு தாங்கிய திருத்தினை நகருட்
    சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.     7.64.1
656    பிணிகொள் ஆக்கை பிறப்பிறப் பென்னும்
    இதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள்
    துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள்நீ
    அஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதின்மூன்
    றணிகொள் வெஞ்சிலை யால்உகச் சீறும்
    ஐயன் வையகம் பரவிநின் றேத்துந்
    திணியும் வார்பொழில் திருத்தினை நகருட்
    சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.     7.64.2
657    வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால்
    மயல துற்றுவஞ் சனைக்கிட மாகி
    முடியு மாகரு தேலெரு தேறும்
    மூர்த்தி யைமுத லாயபி ரானை
    அடிகள் என்றடி யார்தொழு தேத்தும்
    அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனைச்
    செடிகொள் கான்மலி திருத்தினை நகருட்
    சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.     7.64.3
658    பாவ மேபுரிந் தகலிடந் தன்னிற்
    பலப கர்ந்தல மந்துயிர் வாழ்க்கைக்
    காவ என்றுழந் தயர்ந்துவீ ழாதே
    அண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி
    மாவின் ஈருரி உடைபுனைந் தானை
    மணியை மைந்தனை வானவர்க் கமுதைத்
    தேவ தேவனைத் திருத்தினை நகருட்
    சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.    7.64.4
659    ஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்
    டுடல்த ளர்ந்தரு மாநிதி இயற்றி
    என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும்
    இதுவும் பொய்யென வேநினை உளமே
    குன்று லாவிய புயமுடை யானைக்
    கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர்
    சென்றெ லாம்பயில் திருத்தினை நகருட்
    சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.     7.64.5
660    வேந்த ராயுல காண்டறம் புரிந்து
    வீற்றி ருந்தஇவ் வுடலிது தன்னைத்
    தேய்ந்தி றந்துவெந் துயருழந் திடுமிப்
    பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
    பாந்த ளங்கையில் ஆட்டுகந் தானைப்
    பரமனைக் கடற் சூர்தடிந் திட்ட
    சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட்
    சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.     7.64.6
661    தன்னில் ஆசறு சித்தமு மின்றித்
    தவ முயன்றவ மாயின பேசிப்
    பின்ன லார்சடை கட்டியென் பணிந்தாற்
    பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
    முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
    மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
    செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
    சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.     7.64.7
662    பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும்
    பலருங் கண்டழு தெழவுயிர் உடலைப்
    பிரிந்து போமிது நிச்சயம் அறிந்தாற்
    பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து
    கருந்த டங்கண்ணி பங்கனை உயிரைக்
    கால காலனைக் கடவுளை விரும்பிச்
    செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட்
    சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.     7.64.8
663    நமையெ லாம்பலர் இகழ்ந்துரைப் பதன்முன்
    நன்மை ஒன்றிலாத் தேரர்புன் சமணாஞ்
    சமய மாகிய தவத்தினார் அவத்தத்
    தன்மை விட்டொழி நன்மையை வேண்டில்
    உமையோர் கூறனை ஏறுகந் தானை
    உம்பர் ஆதியை எம்பெரு மானைச்
    சிமய மார்பொழில் திருத்தினை நகருட்
    சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.     7.64.9
664    நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து
    நீங்க லாமென்று மனத்தினைத் தெருட்டிச்
    சேடு லாம்பொழில் திருத்தினை நகருட்
    சிவக்கொ ழுந்தினைத் திருவடி யிணைதான்
    நாடெ லாம்புகழ் நாவலூ ராளி
    நம்பி வன்றொண்ட னூரன் உரைத்த
    பாட லாந்தமிழ் பத்திவை வல்லார்
    முத்தி யாவது பரகதிப் பயனே.     7.64.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருநந்தீசுவரர், தேவியார் - இளங்கொம்பம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.65 திருநின்றியூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

665    திருவும் வண்மையுந் திண்டிறல் அரசுஞ்
    சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு
    மருவு கோச்செங்க ணான்றனக் களித்த
    வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்
    பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப்
    பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
    தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித்
    திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே.     7.65.1
666    அணிகொள் ஆடையம் பூண்மணி மாலை
    அமுது செய்தமு தம்பெறு சண்டி
    இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல்
    ஈன்ற வன்றிரு நாவினுக் கரையன்
    கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற
    காத லின்னருள் ஆதரித் தடைந்தேன்
    திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ்
    செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.     7.65.2
667    மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி
    மூன்று நூறுவே தியரொடு நுனக்கு
    ஒத்த பொன்மணிக் கலசங்க ளேந்தி
    ஓங்கு நின்றியூர் என்றுனக் களிப்பப்
    பத்தி செய்தவப் பரசுரா மற்குப்
    பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன்
    சித்தர் வானவர் தானவர் வணங்குஞ்
    செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.     7.65.3
668    இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம்
    எழுந்து தன்முலைக் கலசங்க ளேந்திச்
    சுரபி பால்சொரிந் தாட்டிநின் பாதந்
    தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப்
    பரவி உள்கிவன் பாசத்தை அறுத்துப்
    பரம வந்துநுன் பாதத்தை அடைந்தேன்
    நிரவி நித்திலம் அத்தகு செம்பொன்
    அளிக்குந் தென்றிரு நின்றியூ ரானே.     7.65.4
669    வந்தோர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
    வான நாடுநீ ஆள்கென அருளிச்
    சந்தி மூன்றிலுந் தாபரம் நிறுத்திச்
    சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச்
    சிந்து மாமணி அணிதிருப் பொதியிற்
    சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
    செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்
    செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.     7.65.5
670    காது பொத்தரைக் கின்னரர் உழுவை
    கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயங்
    கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக்
    கோல ஆல்நிழற் கீழறம் பகர
    ஏதஞ் செய்தவர் எய்திய இன்பம்
    யானுங் கேட்டுநின் இணையடி அடைந்தேன்
    நீதி வேதியர் நிறைபுகழ் உலகில்
    நிலவு தென்றிரு நின்றியூ ரானே.     7.65.6
671    கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க
    நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே
    பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
    பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன்
    பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்
    பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்
    நீடு மாடங்கள் மாளிகை தோறும்
    நிலவு தென்றிரு நின்றியூ ரானே.     7.65.7
    இப்பதிகத்தில் 8-10ம் செய்யுட்கள் சிதைந்து போயின.     7.65.8-10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இலட்சுமிவரதர், தேவியார் - உலகநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.66 திருவாவடுதுறை
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

672    மறைய வனொரு மாணிவந் தடைய
    வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்
    கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற்
    கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
    இறைவன் எம்பெரு மானென்றெப் போதும்
    ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்
    அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன்
    ஆவ டுதுறை ஆதிஎம் மானே.     7.66.1
673    தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
    சித்தி ரப்பந்தர் சிக்கென இயற்றச்
    சுருண்ட செஞ்சடை யாயது தன்னைச்
    சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
    புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
    போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
    அருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
    ஆவ டுதுறை ஆதிஎம் மானே.     7.66.2
674    திகழும் மாலவன் ஆயிரம் மலரால்
    ஏத்து வானொரு நீண்மலர் குறையப்
    புகழி னாலவன் கண்ணிடந் திடலும்
    புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன்
    திகழும் நின்றிருப் பாதங்கள் பரவித்
    தேவ தேவநின் றிறம்பல பிதற்றி
    அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
    ஆவ டுதுறை ஆதிஎம் மானே.     7.66.3
675    வீரத் தாலொரு வேடுவ னாகி
    விசைத்தோர் கேழலைத் துரந்துசென் றணைந்து
    போரைத் தான்விச யன்றனக் கன்பாய்ப்
    புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன்
    வாரத் தாலுன நாமங்கள் பரவி
    வழிபட் டுன்றிற மேநினைந் துருகி
    ஆர்வத் தோடும்வந் தடியிணை அடைந்தேன்
    ஆவ டுதுறை ஆதிஎம் மானே.     7.66.4
676    ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ
    உன்னை உன்னிய மூவர்நின் சரணம்
    புக்கு மற்றவர் பொன்னுல காளப்
    புகழி னாலருள் ஈந்தமை அறிந்து
    மிக்க நின்கழ லேதொழு தரற்றி
    வேதி யாஆதி மூர்த்திநின் அரையில்
    அக்க ணிந்தஎம் மானுனை அடைந்தேன்
    ஆவ டுதுறை ஆதிஎம் மானே.     7.66.5
    இப்பதிகத்தில் 6-10ம் செய்யுட்கள் சிதைந்து போயின.     7.66.6-10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.67 திருவலிவலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

677    ஊனங் கைத்துயிர்ப் பாயுல கெல்லாம்
    ஓங்கா ரத்துரு வாகிநின் றானை
    வானங் கைத்தவர்க் கும்மளப் பரிய
    வள்ள லையடி யார்கள்தம் உள்ளத்
    தேனங் கைத்தமு தாகியுள் ளூறுந்
    தேச னைத்திளைத் தற்கினி யானை
    மானங் கைத்தலத் தேந்தவல் லானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.     7.67.1
678    பல்லடி யார்பணிக் குப்பரி வானைப்
    பாடியா டும்பத்தர்க் கன்புடை யானைச்
    செல்லடி யேநெருக் கித்திறம் பாது
    சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை
    நல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பை
    நானுறு குறையறிந் தருள்புரி வானை
    வல்லடி யார்மனத் திச்சை உளானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.     7.67.2
679    ஆழிய னாய்அகன் றேஉயர்ந் தானை
    ஆதியந் தம்பணி வார்க்கணி யானைக்
    கூழைய ராகிப்பொய் யேகுடிஓம்பிக்
    குழைந்து மெய்யடி யார்குழுப் பெய்யும்
    வாழியர்க் கேவழு வாநெறி காட்டி
    மறுபி றப்பென்னை மாசறுத் தானை
    மாழையொண் கண்ணுமை யைமகிழ்ந் தானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.     7.67.3
680    நாத்தான் உன்றிற மேதிறம் பாது
    நண்ணியண் ணித்தமு தம்பொதிந் தூறும்
    ஆத்தா னைஅடி யேன்றனக் கென்றும்
    அளவி றந்தபல தேவர்கள் போற்றுஞ்
    சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றித்
    துருவி மால்பிர மன்னறி யாத
    மாத்தா னைமாத் தெனக்குவைத் தானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.     7.67.4
681    நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
    கரசரும் பாடிய நற்றமிழ் மாலை
    சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
    தொண்ட னேன்அறி யாமை அறிந்து
    கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
    கழலடி காட்டியென் களைகளை அறுக்கும்
    வல்லியல் வானவர் வணங்க நின்றானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.     7.67.5
682    பாடுமா பாடிப் பணியுமா றறியேன்
    பனுவுமா பனுவிப் பரவுமா றறியேன்
    தேடுமா தேடித் திருத்துமா றறியேன்
    செல்லுமா செல்லச் செலுத்துமா றறியேன்
    கூடுமா றெங்ஙன மோவென்று கூறக்
    குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு
    வாடிநீ வாளா வருந்தலென் பானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.     7.67.6
683    பந்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப்
    படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச்
    சந்தித் ததிற லாற்பணி பூட்டித்
    தவத்தை ஈட்டிய தம்மடி யார்க்குச்
    சிந்தித் தற்கெளி தாய்த்திருப் பாதஞ்
    சிவலோ கந்திறந் தேற்றவல் லானை
    வந்திப் பார்தம் மனத்தினுள் ளானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.     7.67.7
684    எவ்வவர் தேவர் இருடிகள் மன்னர்
    எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்த
    அவ்வவர் வேண்டிய தேஅருள் செய்து
    அடைந்தவர்க் கேஇட மாகிநின் றானை
    இவ்வவர் கருணையெங் கற்பகக் கடலை
    எம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னை
    வவ்வியென் ஆவி மனங்கலந் தானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.     7.67.8
685    திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்றத்
    திறல ரக்கனைச் செறுத்ததும் மற்றைப்
    பெரிய நஞ்சமு துண்டதும் முற்றும்
    பின்னை யாய்முன்ன மேமுளைத் தானை
    அரிய நான்மறை அந்தணர் ஓவா
    தடிப ணிந்தறி தற்கரி யானை
    வரையின் பாவை மணாளனெம் மானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.     7.67.9
686    ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து
    நிறைக்க மாலுதி ரத்தினை ஏற்றுத்
    தோன்று தோண்மிசைக் களேபரந் தன்னைச்
    சுமந்த மாவிர தத்தகங் காளன்
    சான்று காட்டுதற் கரியவன் எளியவன்
    றன்னைத் தன்னி லாமனத் தார்க்கு
    மான்று சென்றணை யாதவன் றன்னை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.    7.67.10
687    கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங்
    கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்
    வலிவ லந்தனில் வந்துகண் டடியேன்
    மன்னும் நாவலா ரூரன்வன் றொண்டன்
    ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும்
    உள்ளத் தாலுகந் தேத்தவல் லார்போய்
    மெலிவில் வானுல கத்தவர் ஏத்த
    விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே.     7.67.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மனத்துணைநாதர், தேவியார் - மாழையங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.68 திருநள்ளாறு
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

688    செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்
    கரிய கண்டனை மால்அயன் காணாச்
    சம்பு வைத்தழல் அங்கையி னானைச்
    சாம வேதனைத் தன்னொப்பி லானைக்
    கும்ப மாகரி யின்னுரி யானைக்
    கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
    நம்ப னைநள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.     7.68.1
689    விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை
    வேத கீதனை மிகச்சிறந் துருகிப்
    பரசு வார்வினைப் பற்றறுப் பானைப்
    பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக்
    குரைக டல்வரை ஏழுல குடைய
    கோனை ஞானக் கொழுந்தினைத் தொல்லை
    நரைவிடை யுடையநல் லாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.    7.68.2
690    பூவில் வாசத்தைப் பொன்னினை மணியைப்
    புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச்
    சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத்
    தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக்
    காவி யங்கண்ணிப் பங்கனைக் கங்கைச்
    சடைய னைக்கா மரத்திசை பாட
    நாவில் ஊறும்நள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.     7.68.3
691    தஞ்சம் என்றுதன் தாளது வடைந்த
    பாலன் மேல்வந்த காலனை உருள
    நெஞ்சில் ஓர்உதை கொண்ட பிரானை
    நினைப்ப வர்மனம் நீங்ககில் லானை
    விஞ்சை வானவர் தானவர் கூடிக்
    கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும்
    நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.    7.68.4
692    மங்கை பங்கனை மாசிலா மணியை
    வான நாடனை ஏனமோ டன்னம்
    எங்கு நாடியுங் காண்பரி யானை
    ஏழை யேற்கெளி வந்தபி ரானை
    அங்கம் நான்மறை யால்நிறை கின்ற
    அந்த ணாளர் அடியது போற்றும்
    நங்கள் கோனைநள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.    7.68.5
693    கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்
    காம கோபனைக் கண்ணுத லானைச்
    சொற்ப தப்பொருள் இருளறுத் தருளுந்
    தூய சோதியை வெண்ணெய் நல்லூரில்
    அற்பு தப்பழ ஆவணங் காட்டி
    அடிய னாஎன்னை ஆளது கொண்ட
    நற்ப தத்தைநள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.     7.68.6
694    மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற
    மாய னைநால்வர்க் காலின்கீழ் உரைத்த
    அறவ னைஅம ரர்க்கரி யானை
    அமரர் சேனைக்கு நாயக னான
    குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
    கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
    நறைவி ரியும்நள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.     7.68.7
695    மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை
    மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
    வேத னைவேத வேள்வியர் வணங்கும்
    விமல னையடி யேற்கெளி வந்த
    தூதனைத் தன்னைத் தோழமை அருளித்
    தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
    நாத னைநள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.     7.68.8
696    இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை
    எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத்
    துலங்கு நீண்முடி ஒருபதுந் தோள்கள்
    இருப துந்நெரித் தின்னிசை கேட்டு
    வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த
    வள்ள லைப்பிள்ளை மாமதிச் சடைமேல்
    நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.     7.68.9
697    செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ்
    சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை
    மறந்து நான்மற்று நினைப்பதே தென்று
    வனப்ப கையப்பன் ஊரன்வன் றொண்டன்
    சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ்
    சிந்தையுள் ளுருகிச் செப்ப வல்லார்க்
    கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி
    இன்பவெள் ளத்துள் இருப்பர்க ளினிதே.     7.68.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியயீசுவரர்,
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.69 திருவடமுல்லைவாயில்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

698    திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
    சீருடைக் கழல்களென் றெண்ணி
    ஒருவரை மதியா துறாமைகள் செய்து
    மூடியும் உறைப்பனாய்த் திரிவேன்
    முருகமர் சோலை சூழ்திரு முல்லை
    வாயிலாய் வாயினால் உன்னைப்
    பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.     7.69.1
699    கூடிய இலயம் சதிபிழை யாமைக்
    கொடியிடை உமையவள் காண
    ஆடிய அழகா அருமறைப் பொருளே
    அங்கணா எங்குற்றா யென்று
    தேடிய வானோர் சேர்திரு முல்லை
    வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
    பாடிய அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.     7.69.2
700    விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
    வெருவிட வேழமன் றுரித்தாய்
    செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
    வாயிலாய் தேவர்தம் மரசே
    தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்
    சங்கிலிக் காஎன்கண் கொண்ட
    பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.     7.69.3
701    பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டிசை பாட
அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
    அலவன்வந் துலவிட அள்ளல்
    செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
    வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
    பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
    பாசுப தாபரஞ் சுடரே.     7.69.4
702    சந்தன வேருங் காரகிற் குறடுந்
    தண்மயிற் பீலியுங் கரியின்
    தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
    கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
    வந்திழி பாலி வடகரை முல்லை
    வயிலாய் மாசிலா மணியே
    பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.     7.69.5
703    மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
    வள்ளலே கள்ளமே பேசிக்
    குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
    கொள்கையால் மிகைபல செய்தேன்
    செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
    திருமுல்லை வாயிலாய் அடியேன்
    பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.     7.69.6
704    மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
    வார்குழல் மாமயிற் சாயல்
    அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
    அருநடம் ஆடல றாத
    திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
    செல்வனே எல்லியும் பகலும்
    பணியது செய்வேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.     7.69.7
705    நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
    நாயினேன் தன்னையாட் கொண்ட
    சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்
    தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
    செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
    தேடியான் திரிதர்வேன் கண்ட
    பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.     7.69.8
706    மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
    மாணிதன் மேல்மதி யாதே
    கட்டுவான் வந்த காலனை மாளக்
    காலினால் ஆருயிர் செகுத்த
    சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
    செல்வனே செழுமறை பகர்ந்த
    பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.     7.69.9
707    சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
    சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
    டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
    டருளிய இறைவனே என்றும்
    நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்
    நாதனே நரைவிடை ஏறீ
    பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.     7.69.10
708    விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
    வெருவிட நீண்டஎம் மானைத்
    திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
    செல்வனை நாவலா ரூரன்
    உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும்
    உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
    நரைதிரை மூப்பும் நடலையு மின்றி
    நண்ணுவர் விண்ணவர்க் கரசே.     7.69.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - கொடியிடைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.70 திருவாவடுதுறை
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

709    கங்கை வார்சடை யாய்கண நாதா
    கால காலனே காமனுக் கனலே
    பொங்கு மாகடல் விடமிடற் றானே
    பூத நாதனே புண்ணியா புனிதா
    செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
    தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
    அங்க ணாஎனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.     7.70.1
710     மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை
    வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே
    கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற்
    கருத்த ழிந்துனக் கேபொறை ஆனேன்
    தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானே
    தேவ னேதிரு வாவடு துறையுள்
    அண்ண லேயெனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.     7.70.2
711     ஒப்பி லாமுலை யாளொரு பாகா
    உத்த மாமத்த மார்தரு சடையாய்
    முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே
    மூவ ருக்கருள் செய்யவல் லானே
    செப்ப ஆல்நிழற் கீழிருந் தருளுஞ்
    செல்வ னேதிரு வாவடு துறையுள்
    அப்ப னேயெனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.     7.70.3
712     கொதியி னால்வரு காளிதன் கோபங்
    குறைய ஆடிய கூத்துடை யானே
    மதியி லேன்உடம் பில்லடு நோயால்
    மயங்கி னேன்மணி யேமண வாளா
    விதியி னாலிமை யோர்தொழு தேத்தும்
    விகிர்த னேதிரு வாவடு துறையுள்
    அதிப னேயெனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.     7.70.4
713     வந்த வாளரக் கன்வலி தொலைத்து
    வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலே
    வெந்த வெண்பொடி பூசவல் லானே
    வேட னாய்விச யற்கருள் புரிந்த
    இந்து சேகர னேஇமை யோர்சீர்
    ஈச னேதிரு வாவடு துறையுள்
    அந்த ணாஎனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.     7.70.5
714     குறைவி லாநிறை வேகுணக் குன்றே
    கூத்த னேகுழைக் காதுடை யானே
    உறவி லேன்உனை அன்றிமற் றடியேன்
    ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
    சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
    செம்பொ னேதிரு வாவடு துறையுள்
    அறவ னேயெனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.     7.70.6
715    வெய்ய மாகரி ஈருரி யானே
    வேங்கை ஆடையி னாய்விதி முதலே
    மெய்ய னேஅடல் ஆழியன் றரிதான்
    வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா
    செய்ய மேனிய னேதிகழ் ஒளியே
    செங்க ணாதிரு வாவடு துறையுள்
    ஐய னேயெனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.     7.70.7
716     கோதி லாவமு தேஅருள் பெருகு
    கோல மேஇமை யோர்தொழு கோவே
    பாதி மாதொரு கூறுடை யானே
    பசுப தீபர மாபர மேட்டீ
    தீதி லாமலை யேதிரு வருள்சேர்
    சேவ காதிரு வாவடு துறையுள்
    ஆதி யேயெனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.     7.70.8
717     வான நாடனே வழித்துணை மருந்தே
    மாசி லாமணி யேமறைப் பொருளே
    ஏன மாவெயி றாமையும் எலும்பும்
    ஈடு தாங்கிய மார்புடை யானே
    தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே
    தேவ னேதிரு வாவடு துறையுள்
    ஆனை யேயெனை அஞ்சலென் றருளாய்
    ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.     7.70.9
718    வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும்
    வேரி மத்தமும் விரவிமுன் முடித்த
    இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை
    ஈச னைத்திரு வாவடு துறையுள்
    அண்ட வாணனைச் சிங்கடி யப்பன்
    அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால் உரைத்த
    தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள்
    சாத லும்பிறப் பும்மறுப் பாரே.     7.70.10

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.71 திருமறைக்காடு
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

719    யாழைப்பழித் தன்னமொழி
    மங்கையொரு பங்கன்
    பேழைச்சடை முடிமேற்பிறை
    வைத்தான்இடம் பேணில்
    தாழைப்பொழி லூடேசென்று
    பூழைத்தலை நுழைந்து
    வாழைக்கனி கூழைக்குரங்
    குண்ணும்மறைக் காடே.     7.71.1
720     சிகரத்திடை இளவெண்பிறை
    வைத்தான்இடந் தெரியில்
    முகரத்திடை முத்தின்னொளி
    பவளத்திரள் ஓதத்
    தகரத்திடை தாழைத்திரள்
    ஞாழற்றிரள் நீழல்
    மகரத்தொடு சுறவங்கொணர்ந்
    தெற்றும்மறைக் காடே.     7.71.2
721     அங்கங்களும் மறைநான்குடன்
    விரித்தானிடம் அறிந்தோம்
    தெங்கங்களும் நெடும்பெண்ணையும்
    பழம்வீழ்மணற் படப்பைச்
    சங்கங்களும் இலங்கிப்பியும்
    வலம்புரிகளும் இடறி
    வங்கங்களும் உயர்கூம்பொடு
    வணங்கும்மறைக் காடே.     7.71.3
722     நரைவிரவிய மயிர்தன்னொடு
    பஞ்சவடி மார்பன்
    உரைவிரவிய உத்தமனிடம்
    உணரல்லுறு மனமே
    குரைவிரவிய குலசேகரக்
    கொண்டற்றலை விண்ட
    வரைபுரைவன திரைபொருதிழிந்
    தெற்றும்மறைக் காடே.     7.71.4
723     சங்கைப்பட நினையாதெழு
    நெஞ்சேதொழு தேத்தக்
    கங்கைச்சடை முடியுடையவர்க்
    கிடமாவது பரவை
    அங்கைக்கடல் அருமாமணி
    உந்திக்கரைக் கேற்ற
    வங்கத்தொடு சுறவங்கொணர்ந்
    தெற்றும்மறைக் காடே.     7.71.5
724    அடல்விடையினன் மழுவாளினன்
    அலராலணி கொன்றைப்
    படருஞ்சடை முடியுடையவர்க்
    கிடமாவது பரவைக்
    கடலிடையிடை கழியருகினிற்
    கடிநாறுதண் கைதை
    மடலிடையிடை வெண்குருகெழு
    மணிநீர்மறைக் காடே.     7.71.6
725    முளைவளரிள மதியுடையவன்
    முன்செய்தவல் வினைகள்
    களைகளைந்தெனை ஆளல்லுறு
    கண்டன்னிடஞ் செந்நெல்
    வளைவிளைவயற் கயல்பாய்தரு
    குணவார்மணற் கடல்வாய்
    வளைவளையொடு சலஞ்சலங்கொணர்ந்
    தெற்றும்மறைக் காடே.     7.71.7
726     நலம்பெரியன சுரும்பார்ந்தன
    நங்கோனிடம் அறிந்தோம்
    கலம்பெரியன சாருங்கடற்
    கரைபொருதிழி கங்கைச்
    சலம்புரிசடை முடியுடையவர்க்
    கிடமாவது பரவை
    வலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந்
    தெற்றும்மறைக் காடே.     7.71.8
727     குண்டாடியுஞ் சமணாடியுங்
    குற்றுடுக்கையர் தாமுங்
    கண்டார்கண்ட காரணம்மவை
    கருதாதுகை தொழுமின்
    எண்டோ ளினன் முக்கண்ணினன்
    ஏழிசையினன் அறுகால்
    வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு
    மணிநீர்மறைக் காடே.     7.71.9
728    பாரூர்பல புடைசூழ்வள
    வயல்நாவலர் வேந்தன்
    வாரூர்வன முலையாள்உமை
    பங்கன்மறைக் காட்டை
    ஆரூரன தமிழ்மாலைகள்
    பாடும்மடித் தொண்டர்
    நீரூர்தரு நிலனோடுயர்
    புகழாகுவர் தாமே.     7.71.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மறைக்காட்டீசுவரர், தேவியார் - யாழைப்பழித்தநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.72 திருவலம்புரம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

729    எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன்
பனைக்கனிப் பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்
மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே.     7.72.1
730     புரமவை எரிதர வளைந்தவில் லினன்அவன்
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
அரவுரி இரந்தவன் இரந்துண விரும்பிநின்
றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே.     7.72.2
731     நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு ஏந்தியோர் கையினன்
ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
ளேறணி அடிகள்தம் இடம்வலம் புரமே.    7.72.3
732     கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிளந்
தெங்கொடு பனைபழம் படுமிடந் தேவர்கள்
தங்கிடும் இடந்தடங் கடற்றிரை புடைதர
எங்கள தடிகள்நல் இடம்வலம் புரமே.    7.72.4
733     கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன்
நெடுமதில் சிறுமையின் நிரவவல் லவனிடம்
படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந்
திடுமணல் அடைகரை இடம்வலம் புரமே.     7.72.5
734     கருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல்
நெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந்
திருங்கடல் அணைகரை இடம்வலம் புரமே.     7.72.6
735     நரிபுரி காடரங் காநடம் ஆடுவர்
வரிபுரி பாடநின் றாடும்எம் மான்இடம்
புரிசுரி வரிகுழல் அரிவையோர் பால்மகிழ்ந்
தெரியெரி யாடிதன் இடம்வலம் புரமே.     7.72.7
736     பாறணி முடைதலை கலனென மருவிய
நீறணி நிமிர்சடை முடியினன் நிலவிய
மாறணி வருதிரை வயலணி பொழிலது
ஏறுடை அடிகள்தம் இடம்வலம் புரமே.    7.72.8
737     சடசட விடுபெணை பழம்படும் இடவகை
படவட கத்தொடு பலிகலந் துலவிய
கடைகடை பலிதிரி கபாலிதன் இடமது
இடிகரை மணலடை இடம்வலம் புரமே.     7.72.9
738     குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர்
கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்
தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்
எண்டிசைக் கொருசுடர் இடம்வலம் புரமே.     7.72.10
739     வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்
இருங்குலப் பிறப்பர்தம் இடம்வலம் புரத்தினை
அருங்குலத் தருந்தமிழ் ஊரன்வன் றொண்டன்சொல்
பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே.     7.72.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வலம்புரநாதர், தேவியார் - வடுவகிர்க்கண்ணம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.73 திருவாரூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

740    கரையுங் கடலும் மலையுங்
    காலையும் மாலையும் எல்லாம்
    உரையில் விரவி வருவான்
    ஒருவன் உருத்திர லோகன்
    வரையின் மடமகள் கேள்வன்
    வானவர் தானவர்க் கெல்லாம்
    அரையனி ருப்பதும் ஆரூர்அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.     7.73.1
741     தனியனென் றெள்கி அறியேன்
    தம்மைப் பெரிது முகப்பன்
    முனிபவர் தம்மை முனிவன்
    முகம்பல பேசி மொழியேன்
    கனிகள் பலவுடைச் சோலைக்
    காய்க்குலை ஈன்ற கமுகின்
    இனிய னிருப்பதும் ஆரூர்அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.     7.73.2
742     சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன்
    தொடர்ந்தவர்க் குந்துணை அல்லேன்
    கல்லில் வலிய மனத்தேன்
    கற்ற பெரும்புல வாணர்
    அல்லல் பெரிதும் அறுப்பான்
    அருமறை ஆறங்கம் ஓதும்
    எல்லை இருப்பதும் ஆரூர்அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.     7.73.3
743     நெறியும் அறிவுஞ் செறிவும்
    நீதியும் நான்மிகப் பொல்லேன்
    மிறையுந் தறியும் உகப்பன்
    வேண்டிற்றுச் செய்து திரிவன்
    பிறையும் அரவும் புனலும்
    பிறங்கிய செஞ்சடை வைத்த
    இறைவன் இருப்பதும் ஆரூர்அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.     7.73.4
744    நீதியில் ஒன்றும் வழுவேன்
    நிட்கண் டகஞ்செய்து வாழ்வேன்
    வேதியர் தம்மை வெகுளேன்
    வெகுண்டவர்க் குந்துணை ஆகேன்
    சோதியிற் சோதிஎம் மானைச்
    சுண்ணவெண் ணீறணிந் திட்ட
    ஆதி இருப்பதும் ஆரூர்அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.     7.73.5
745     அருத்தம் பெரிதும் உகப்பேன்
    அலவலை யேன்அலந் தார்கள்
    ஒருத்தர்க் குதவியேன் அல்லேன்
    உற்றவர்க் குந்துணை அல்லேன்
    பொருத்தமே லொன்று மிலாதேன்
    புற்றெடுத் திட்டிடங் கொண்ட
    அருத்தன் இருப்பதும் ஆரூர்அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.     7.73.6
746     சந்தம் பலஅறுக் கில்லேன்
    சார்ந்தவர் தம்மடிச் சாரேன்
    முந்திப் பொருவிடை யேறி
    மூவுல குந்திரி வானே
    கந்தங் கமழ்கொன்றை மாலைக்
    கண்ணியன் விண்ணவ ரேத்தும்
    எந்தை இருப்பதும் ஆரூர்அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.     7.73.7
747     நெண்டிக் கொண்டேயுங் கிலாய்ப்பன்
    நிச்சய மேயிது திண்ணம்
    மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன்
    மெய்ப்பொரு ளன்றி உணரேன்
    பண்டங் கிலங்கையர் கோனைப்
    பருவரைக் கீழடர்த் திட்ட
    அண்டன் இருப்பதும் ஆரூர்அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.     7.73.8
748     நமர்பிறர் என்ப தறியேன்
    நான்கண்ட தேகண்டு வாழ்வேன்
    தமரம் பெரிதும் உகப்பன்
    தக்கவா றொன்றும் இலாதேன்
    குமரன் திருமால் பிரமன்
    கூடிய தேவர் வணங்கும்
    அமரன் இருப்பதும் ஆரூர்அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.     7.73.9
749    ஆசை பலஅறுக் கில்லேன்
    ஆரையும் அன்றி உரைப்பேன்
    பேசிற் சழக்கலாற் பேசேன்
    பிழைப்புடை யேன்மனந் தன்னால்
    ஓசை பெரிதும் உகப்பேன்
    ஒலிகடல் நஞ்சமு துண்ட
    ஈசன் இருப்பதும் ஆரூர்அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.     7.73.10
750    எந்தை இருப்பதும் ஆரூர்அவர்
    எம்மையும் ஆள்வரோ என்று
    சிந்தை செயுந்திறம் வல்லான்
    திருமரு வுந்திரள் தோளான்
    மந்த முழவம் இயம்பும்
    வளவயல் நாவலா ரூரன்
    சந்தம் இசையொடும் வல்லார்
    தாம்புகழ் எய்துவார் தாமே.     7.73.11

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.74 திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

751    மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
    வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
    அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
    அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
    சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
    என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை.    7.74.1
752    கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
    கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
    மாடுமா கோங்கமே மருதமே பொருது
    மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி
    ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்
    பழவினை உள்ளன பற்றறுத் தானை.     7.74.2
753    கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்
    கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப்
    புல்கியுந் தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும்
    போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
    செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத்
    தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை.    7.74.3
754    பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும்
    பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக்
    கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்
    கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
    எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை
    அருவினை உள்ளன ஆசறுத் தானை.     7.74.4
755    பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும்
    பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
    இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி
    எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே
    சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை
    உற்றநோய் இற்றையே உறவொழித் தானை.     7.74.5
756    புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும்
    பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
    அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி
    ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித்
    திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை
    இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை.    7.74.6
757    வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்
    வருடியும் வணக்கியும் மராமரம் பொருது
    கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
    காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
    விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை
    உலகறி பழவினை அறவொழித் தானை.    7.74.7
758    ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப்
    புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக்
    காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
    கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித்
    தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை
    அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை.    7.74.8
759    புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்
    பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப
    இலங்குமார் முத்தினோ டினமணி இடறி
    இருகரைப் பெருமரம் பீழந்துகொண் டெற்றிக்
    கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை
    மேலைநோய் இம்மையே வீடுவித் தானை.    7.74.9
760    மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி
    மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
    அங்கையான் கழலடி அன்றிமற் றறியான்
    அடியவர்க் கடியவன் தொழுவனா ரூரன்
    கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
    தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார்
    தவநெறி சென்றம ருலகம்ஆள் பவரே.     7.74.10

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.75 திருவானைக்கா
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

761    மறைகள் ஆயின நான்கும்
    மற்றுள பொருள்களு மெல்லாந்
    துறையுந் தோத்திரத் திறையுந்
    தொன்மையும் நன்மையு மாய
    அறையும் பூம்புனல் ஆனைக்
    காவுடை ஆதியை நாளும்
    இறைவன் என்றடி சேர்வார்
    எம்மையும் ஆளுடை யாரே.     7.75.1
762    வங்கம் மேவிய வேலை
    நஞ்செழ வஞ்சர்கள் கூடித்
    தங்கள் மேல்அட ராமை
    உண்ணென உண்டிருள் கண்டன்
    அங்கம் ஓதிய ஆனைக்
    காவுடை ஆதியை நாளும்
    எங்கள் ஈசனென் பார்கள்
    எம்மையும் ஆளுடை யாரே.    7.75.2
763    நீல வண்டறை கொன்றை
    நேரிழை மங்கையோர் திங்கள்
    சால வாளர வங்கள்
    தங்கிய செஞ்சடை எந்தை
    ஆல நீழலுள் ஆனைக்
    காவுடை ஆதியை நாளும்
    ஏலு மாறுவல் லார்கள்
    எம்மையும் ஆளுடை யாரே.    7.75.3
764    தந்தை தாயுல குக்கோர்
    தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
    பந்த மாயின பெருமான்
    பரிசுடை யவர்திரு வடிகள்
    அந்தண் பூம்புனல் ஆனைக்
    காவுடை ஆதியை நாளும்
    எந்தை என்றடி சேர்வார்
    எம்மையும் ஆளுடை யாரே.     7.75.4
765    கணைசெந் தீயர வந்நாண்
    கல்வளை யுஞ்சிலை யாகத்
    துணைசெய் மும்மதில் மூன்றுஞ்
    சுட்டவ னேயுல குய்ய
    அணையும் பூம்புனல் ஆனைக்
    காவுடை ஆதியை நாளும்
    இணைகொள் சேவடி சேர்வார்
    எம்மையும் ஆளுடை யாரே.     7.75.5
766    விண்ணின் மாமதி சூடி
    விலையிலி கலன்அணி விமலன்
    பண்ணின் நேர்மொழி மங்கை
    பங்கினன் பசுவுகந் தேறி
    அண்ண லாகிய ஆனைக்
    காவுடை ஆதியை நாளும்
    எண்ணு மாறுவல் லார்கள்
    எம்மையும் ஆளுடை யாரே.     7.75.6
767    தார மாகிய பொன்னித்
    தண்டுறை ஆடி விழுத்தும்
    நீரில் நின்றடி போற்றி
    நின்மலா கொள்ளென ஆங்கே
    ஆரங் கொண்டவெம் மானைக்
    காவுடை ஆதியை நாளும்
    ஈரம் உள்ளவர் நாளும்
    எம்மையும் ஆளுடை யாரே.     7.75.7
768    உரவம் உள்ளதோர் உழையின்
    உரிபுலி அதளுடை யானை
    விரைகொள் கொன்றையி னானை
    விரிசடை மேற்பிறை யானை
    அரவம் வீக்கிய ஆனைக்
    காவுடை ஆதியை நாளும்
    இரவும் எல்லியும் பகலும்
    ஏத்துவார் எமையுடை யாரே.     7.75.8
769    வலங்கொள் வாரவர் தங்கள்
    வல்வினை தீர்க்கும் மருந்து
    கலங்கக் காலனைக் காலாற்
    காமனைக் கண்சிவப் பானை
    அலங்கல் நீர்பொரும் ஆனைக்
    காவுடை ஆதியை நாளும்
    இலங்கு சேவடி சேர்வார்
    எம்மையும் ஆளுடை யாரே.     7.75.9
770    ஆழி யாற்கருள் ஆனைக்
    காவுடை ஆதிபொன் னடியின்
    நீழ லேசர ணாக
    நின்றருள் கூர நினைந்து
    வாழ வல்லவன் றொண்டன்
    வண்டமிழ் மாலைவல் லார்போய்
    ஏழு மாபிறப் பற்று
    எம்மையும் ஆளுடை யாரே.     7.75.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சம்புகேசுவரர்,
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.76 திருவாஞ்சியம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

771    பொருவ னார்புரி நூலர்
    புணர்முலை உமையவ ளோடு
    மருவ னார்மரு வார்பால்
    வருவதும் இல்லைநம் அடிகள்
    திருவ னார்பணிந் தேத்துந்
    திகழ்திரு வாஞ்சியத் துறையும்
    ஒருவ னார்அடி யாரை
    ஊழ்வினை நலிய வொட்டாரே.     7.76.1
772    தொறுவில் ஆனிள ஏறு
    துண்ணென இடிகுரல் வெருவிச்
    செறுவில் வாளைகள் ஓடச்
    செங்கயல் பங்கயத் தொதுங்கக்
    கறுவி லாமனத் தார்கள்
    காண்டகு வாஞ்சியத் தடிகள்
    மறுவி லாதவெண் ணீறு
    பூசுதல் மன்னுமொன் றுடைத்தே.    7.76.2
773    தூர்த்தர் மூவெயி லெய்து
    சுடுநுனைப் பகழிய தொன்றாற்
    பார்த்த னார்திரள் தோள்மேற்
    பன்னுனைப் பகழிகள் பாய்ச்சித்
    தீர்த்த மாமலர்ப் பொய்கைத்
    திகழ்திரு வாஞ்சியத் தடிகள்
    சாத்து மாமணிக் கச்சங்
    கொருதலை பலதலை யுடைத்தே.    7.76.3
774    சள்ளை வெள்ளையங் குருகு
    தானது வாமெனக் கருதி
    வள்ளை வெண்மலர் அஞ்சி
    மறுகியோர் வாளையின் வாயில்
    துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத்
    துறைமல்கு வாஞ்சியத் தடிகள்
    வெள்ளை நுண்பொடிப் பூசும்
    விகிர்தமொன் றொழிகிலர் தாமே.     7.76.4
775    மைகொள் கண்டர்எண் டோ ளர்
    மலைமக ளுடனுறை வாழ்க்கைக்
    கொய்த கூவிள மாலை
    குலவிய சடைமுடிக் குழகர்
    கைதை நெய்தலங் கழனி
    கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்
    பைதல் வெண்பிறை யோடு
    பாம்புடன் வைப்பது பரிசே.     7.76.5
776    கரந்தை கூவிள மாலை
    கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
    பரந்த பாரிடஞ் சூழ
    வருவர்நம் பரமர்தம் பரிசால்
    திருந்து மாடங்கள் நீடு
    திகழ்திரு வாஞ்சியத் துறையும்
    மருந்த னார்அடி யாரை
    வல்வினை நலிய வொட்டாரே.     7.76.6
777    அருவி பாய்தரு கழனி
    அலர்தரு குவளையங் கண்ணார்
    குருவி யாய்கிளி சேப்பக்
    குருகினம் இரிதரு கிடங்கிற்
    பருவ ரால்குதி கொள்ளும்
    பைம்பொழில் வாஞ்சியத் துறையும்
    இருவ ராலறி யொண்ணா
    இறைவன தறைகழல் சரணே.     7.76.7
778    களங்க ளார்தரு கழனி
    அளிதரக் களிதரு வண்டு
    உளங்க ளார்கலிப் பாடல்
    உம்பரில் ஒலித்திடுங் காட்சி
    குளங்க ளானிழற் கீழ்நற்
    குயில்பயில் வாஞ்சியத் தடிகள்
    விளங்கு தாமரைப் பாதம்
    நினைப்பவர் வினைநலி விலரே.     7.76.8
779    வாழை யின்கனி தானும்
    மதுவிம்மு வருக்கையின் சுளையுங்
    கூழை வானரந் தம்மிற்
    கூறிது சிறிதெனக் குழறித்
    தாழை வாழையந் தண்டாற்
    செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
    ஏழை பாகனை யல்லால்
    இறையெனக் கருதுத லிலமே.     7.76.9
780    செந்நெ லங்கலங் கழனித்
    திகழ்திரு வாஞ்சியத் துறையும்
    மின்ன லங்கலஞ் சடையெம்
    இறைவன தறைகழல் பரவும்
    பொன்ன லங்கனல் மாடப்
    பொழிலணி நாவலா ரூரன்
    பன்ன லங்கனல் மாலை
    பாடுமின் பத்தரு ளீரே.     7.76.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுகவாஞ்சிநாதர்,
தேவியார் - வாழவந்தநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.77 திருவையாறு
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

781    பரவும் பரிசொன் றறியேன்நான்
    பண்டே உம்மைப் பயிலாதேன்
    இரவும் பகலும் நினைந்தாலும்
    எய்த நினைய மாட்டேன்நான்
    கரவில் அருவி கமுகுண்ணத்
    தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
    அரவந் திரைக்கா விரிக்கோட்டத்
    தையா றுடைய அடிகளோ.     7.77.1
782    எங்கே போவே னாயிடினும்
    அங்கே வந்தென் மனத்தீராய்ச்
    சங்கை யொன்றும் இன்றியே
    தலைநாள் கடைநாள் ஒக்கவே
    கங்கை சடைமேற் கரந்தானே
    கலைமான் மறியுங் கனல்மழுவுந்
    தங்குந் திரைக்கா விரிக்கோட்டத்
    தையா றுடைய அடிகளோ.     7.77.2
783    மருவிப் பிரிய மாட்டேன்நான்
    வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன்
    பருவி விச்சி மலைச்சாரற்
    பட்டை கொண்டு பகடாடிக்
    குருவி ஓப்பிக் கிளிகடிவார்
    குழன்மேல் மாலை கொண்டோ ட்டந்
    தரவந் திரைக்கா விரிக்கோட்டத்
    தையா றுடைய அடிகளோ.     7.77.3
784    பழகா நின்று பணிசெய்வார்
    பெற்ற பயனொன் றறிகிலேன்
    இகழா துமக்காட் பட்டோ ர்க்கு
    வேக படமொன் றரைச்சாத்தி
    குழகா வாழைக் குலைத்தெங்கு
    கொணர்ந்து கரைமேல் எறியவே
    அழகார் திரைக்கா விரிக்கோட்டத்
    தையா றுடைய அடிகளோ.     7.77.4
785    பிழைத்த பிழையொன் றறியேன்நான்
    பிழையைத் தீரப் பணியாயே
    மழைக்கண் நல்லார் குடைந்தாட
    மலையும் நிலனுங் கொள்ளாமைக்
    கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங்
    கழனி மண்டிக் கையேறி
    அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்
    தையா றுடைய அடிகளோ.     7.77.5
786    கார்க்கொள் கொன்றைச் சடைமேலொன்
    றுடையாய் விடையாய் கையினால்
    மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய்
    முன்னீ பின்னீ முதல்வன்நீ
    வார்க்கொள் அருவி பலவாரி
    மணியும் முத்தும் பொன்னுங்கொண்
    டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்
    தையா றுடைய அடிகளோ.     7.77.6
787    மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப்
    பற்றி உலகம் பலிதேர்வாய்
    சிலைக்கொள் கணையால் எயிலெய்த
    செங்கண் விடையாய் தீர்த்தன்நீ
    மலைக்கொள் ளருவி பலவாரி
    மணியும் முத்தும் பொன்னுங்கொண்
    டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்
    தையா றுடைய அடிகளோ.     7.77.7
788    போழும் மதியும் புனக்கொன்றைப்
    புனல்சேர் சென்னிப் புண்ணியா
    சூழும் அரவச் சுடர்ச்சோதீ
    உன்னைத் தொழுவார் துயர்போக
    வாழு மவர்கள் அங்கங்கே
    வைத்த சிந்தை உய்த்தாட்ட
    ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத்
    தையா றுடைய அடிகளோ.     7.77.8
789    கதிர்கொள் பசியே ஒத்தேநான்
    கண்டேன் உம்மைக் காணாதேன்
    எதிர்த்து நீந்த மாட்டேன்நான்
    எம்மான் றம்மான் றம்மானே
    விதிர்த்து மேகம் மழைபொழிய
    வெள்ளம் பரந்து நுரைசிதறி
    அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்
    தையா றுடைய அடிகளோ.     7.77.9
790    கூசி அடியார் இருந்தாலுங்
    குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
    தேச வேந்தன் திருமாலும்
    மலர்மேல் அயனுங் காண்கிலாத்
    தேச மெங்குந் தெளித்தாடத்
    தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும்
    வாசந் திரைக்கா விரிக்கோட்டத்
    தையா றுடைய அடிகளோ.     7.77.10
791    கூடி அடியார் இருந்தாலுங்
    குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
    ஊடி இருந்தும் உணர்கிலேன்
    உம்மைத் தொண்டன் ஊரனேன்
    தேடி யெங்குங் காண்கிலேன்
    திருவா ரூரே சிந்திப்பன்
    ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத்
    தையா றுடைய அடிகளோ.     7.77.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொற்சோதியீசுவரர், தேவியார் - அறம் வளர்த்த நாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.78 திருக்கேதாரம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்

792    வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங்
கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே.     7.78.1
793    பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளும் நாளாலறம் உளவே
அறிவானிலும் அறிவானல நறுநீரொடு சோறு
கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே.     7.78.2
794    கொம்பைப்பிடித் தொருக்காலர்கள் இருக்கால்மலர் தூவி
நம்பன்னமை ஆள்வானென்று நடுநாளையும் பகலுங்
கம்பக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவிச்
செம்பொற்பொடி சிந்துந்திருக் கேதாரமெ னீரே.     7.78.3
795    உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத் திழப்பார்களுஞ் சிலர்கள்
வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர் மதிமாந்திய மாந்தர்
சழக்கேபறி நிறைப்பாரொடு தவமாவது செயன்மின்
கிழக்கேசல மிடுவார்தொழு கேதாரமெ னீரே.     7.78.4
796    வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழுந் தாதே
நாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி
ஆளாயுய்ம்மின் அடிகட்கிடம் அதுவேயெனில் இதுவே
கீளோடர வசைத்தானிடங் கேதாரமெ னீரே.     7.78.5
797    தளிசாலைகள் தவமாவது தம்மைப்பெறி லன்றே
குளியீருளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரி
தெளியீருளஞ் சீபர்ப்பதந் தெற்குவடக் காகக்
கிளிவாழையொண் கனிகீறியுண் கேதாரமெ னீரே.     7.78.6
798    பண்ணின்றமிழ் இசைபாடலின் பழவேய்முழ வதிரக்
கண்ணின்னொளி கனகச்சுனை வயிரம்மவை சொரிய
மண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண் டெறியக்
கிண்ணென்றிசை முரலுந்திருக் கேதாரமெ னீரே.     7.78.7
799    முளைக்கைப்பிடி முகமன்சொலி முதுவேய்களை இறுத்துத்
துளைக்கைக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவி
வளைக்கைப்பொழி மழைகூர்தர மயில்மான்பிணை நிலத்தைக்
கிளைக்கமணி சிந்துந்திருக் கேதாரமெ னீரே.     7.78.8
800    பொதியேசுமந் துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர்
மதிமாந்திய வழியேசென்று குழிவீழ்வதும் வினையாற்
கதிசூழ்கடல் இலங்கைக்கிறை மலங்கவரை அடர்த்துக்
கெதிபேறுசெய் திருந்தானிடங் கேதாரமெ னீரே.     7.78.9
801    நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவன் அடியார்களுக் கடியானடித் தொண்டன்
தேவன்றிருக் கேதாரத்தை ஊரன்னுரை செய்த
பாவின்தமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே.     7.78.10

இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கேதாரேசுவரர், தேவியார் - கேதாரேசுவரியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.79 திருப்பருப்பதம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்

802    மானும்மரை இனமும்மயில் இனமுங்கலந் தெங்குந்
தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களைப் பருகிப்
பூமாமரம் உரிஞ்சிப்பொழி லூடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழல்துயில் சீபர்ப்பத மலையே.     7.79.1
803    மலைச்சாரலும் பொழிற்சாரலும் புறமேவரும் இனங்கள்
மலைப்பாற்கொணர்ந் திடித்தூட்டிட மலங்கித்தன களிற்றை
அழைத்தோடியும் பிளிறீயவை அலமந்துவந் தெய்த்துத்
திகைத்தோடித்தன் பிடிதேடிடுஞ் சீபர்ப்பத மலையே.     7.79.2
804    மன்னிப்புனங் காவல்மட மொழியாள்புனங் காக்கக்
கன்னிக்கிளி வந்துகவைக் கோலிக்கதிர் கொய்ய
என்னைக்கிளி மதியாதென்று எடுத்துக்கவண் ஒலிப்பத்
தென்னற்கிளி திரிந்தேறிய சீபர்ப்பத மலையே.     7.79.3
805    மையார்தடங் கண்ணாள்மட மொழியாள்புனங் காக்கச்
செவ்வேதிரிந் தாயோவெனப் போகாவிட விளிந்து
கைபாவிய கவணால்மணி எறியஇரிந் தோடிச்
செவ்வாயன கிளிபாடிடுஞ் சீபர்ப்பத மலையே.     7.79.4
806    ஆனைக்குலம் இரிந்தோடித்தன் பிடிசூழலிற் றிரியத்
தானப்பிடி செவிதாழ்த்திட அதற்குமிக இரங்கி
மானக்குற அடல்வேடர்கள் இலையாற்கலை கோலித்
தேனைப்பிழிந் தினிதூட்டிடுஞ் சீபர்ப்பத மலையே.     7.79.5
807    மாற்றுக்களி றடைந்தாயென்று மதவேழங்கை யெடுத்தும்
ஊற்றித்தழல் உமிழ்ந்தும்மதம் பொழிந்தும்முகஞ் சுழியத்
தூற்றத்தரிக் கில்லேனென்று சொல்லிஅயல் அறியத்
தேற்றிச்சென்று பிடிசூழறுஞ் சீபர்ப்பத மலையே.     7.79.6
808    அப்போதுவந் துண்டீர்களுக் கழையாதுமுன் னிருந்தேன்
எப்போதும்வந் துண்டாலெமை எமர்கள்சுழி யாரோ
இப்போதுமக் கிதுவேதொழில் என்றோடியக் கிளியைச்
செப்பேந்திள முலையாள்எறி சீபர்ப்பத மலையே.     7.79.7
809    திரியும்புரம் நீறாக்கிய செல்வன்றன கழலை
அரியதிரு மாலோடயன் றானும்மவர் அறியார்
கரியின்னினம் ஓடும்பிடி தேனுண்டவை களித்துத்
திரிதந்தவை திகழ்வாற்பொலி சீபர்ப்பத மலையே.     7.79.8
810    ஏனத்திரள் கிளைக்கஎரி போலமணி சிதறத்
தீயென்றவை மலைச்சாரலிற் றிரியுங்கர டீயும்
மானும்மரை இனமும்மயில் மற்றும்பல வெல்லாந்
தேனுண்பொழில் சோலைமிகு சீபர்ப்பத மலையே.     7.79.9
811    நல்லாரவர் பலர்வாழ்தரு வயல்நாவல வூரன்
செல்லல்லுற அரியசிவன் சீபர்ப்பத மலையை
அல்லலவை தீரச்சொன தமிழ்மாலைகள் வல்லார்
ஒல்லைச்செல உயர்வானகம் ஆண்டங்கிருப் பாரே.     7.79.10

இத்தலம் வடநாட்டிலுள்ளது. இது ஸ்ரீசைலம் என்றும்
மல்லிகார்ச்சுனம் என்றும் பெயர்பெறும்.
சுவாமிபெயர் - பருவதநாதர், தேவியார் - பருவதநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.80 திருக்கேதீச்சரம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்

812    நத்தார்புடை ஞானம்பசு ஏறிந்நனை கவிழ்வாய்
மத்தம்மத யானைஉரி போர்த்தமழு வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேற்
செத்தாரெலும் பணிவான்றிருக் கேதீச்சரத் தானே.     7.80.1
813    சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறைக் கீளுங்
கடமார்களி யானைஉரி அணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற்
திடமாஉறை கின்றான்றிருக் கேதீச்சரத் தானே.     7.80.2
814    அங்கம்மொழி அன்னாரவர் அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்
பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேற்
செங்கண்ணர வசைத்தான்றிருக் கேதீச்சரத் தானே.     7.80.3
815    கரியகறைக் கண்டனல்ல கண்மேலொரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும் மாதோட்டநன் னகருட்
பரியதிரை எறியாவரு பாலாவியின் கரைமேற்
றெரியும்மறை வல்லான்றிருக் கேதீச்சரத் தானே.     7.80.4
816    அங்கத்துறு நோய்களடி யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்
பங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேற்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே.     7.80.5
817    வெய்யவினை யாயஅடி யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்
பையேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற்
செய்யசடை முடியான்றிருக் கேதீச்சரத் தானே.     7.80.6
818    ஊனத்துறு நோய்களடி யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடல் மாதோட்டநன் னகரிற்
பானத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயி றணிந்தான்றிருக் கேதீச்சரத் தானே.     7.80.7
819    அட்டன்னழ காகவரை தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில் மாதோட்டநன் னகரிற்
பட்டவரி நுதலாளொடு பாலாவியின் கரைமேற்
சிட்டன்நமை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே.     7.80.8
820    மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் னகரிற்
பாவம்வினை யறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல்
தேவன்னெனை ஆள்வான்றிருக் கேதீச்சரத் தானே.     7.80.9
821    கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருட்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித் தொண்டனுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே.     7.80.10

இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கேதீசுவரர், தேவியார் - கௌரியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.81 திருக்கழுக்குன்றம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்

822    கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே
நின்ற பாவம் வினைகள் தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடங்
கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.     7.81.1
823    இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்
நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி
கறங்கு வெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே.     7.81.2
824    நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்
தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே.     7.81.3
825    வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை
முளிறி லங்குமழு வாளன் முந்தி உறைவிடம்
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம்மதம் மூன்றுடைக்
களிறி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.     7.81.4
826    புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப் படையன் எந்தை பிரானிடம்
முலைகள் உண்டு தழுவிக் குட்டி யொடுமுசுக்
கலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே.     7.815
827    மடமு டைய அடியார் தம்மனத் தேஉற
விடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன்
படமு டைய அரவன் றான்பயி லும்மிடங்
கடமு டைய புறவில் தண்கழுக் குன்றமே.     7.81.6
828    ஊன மில்லா அடியார் தம்மனத் தேஉற
ஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிடந்
தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடியே
கான மஞ்சை உறையுந் தண்கழுக் குன்றமே.     7.81.7
829    அந்த மில்லா அடியார் தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே
கந்தம் நாறும் புறவில் தண்கழுக் குன்றமே.     7.81.8
830    பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன் றானுறை யும்மிடம்
மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை
குழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே.     7.81.9
831    பல்லில் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடம்
கல்லில் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை
மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினாற்
சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே.     7.81.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதகிரியீசுவரர், தேவியார் - பெண்ணினல்லாளம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.82 திருச்சுழியல்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்

832    ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும்
வானாய்வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின்
தேனாதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல்
நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே.     7.82.1
833    தண்டேர்மழுப் படையான்மழ விடையான்எழு கடல்நஞ்
சுண்டேபுரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்காத்
திண்டேர்மிசை நின்றானவன் உறையுந்திருச் சுழியல்
தொண்டேசெய வல்லாரவர் நல்லார்துயர் இலரே.     7.82.2
834    கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேற்றக்
கொவ்வைத்துவர் வாயார்குடைந் தாடுந்திருச் சுழியல்
தெய்வத்தினை வழிபாடுசெய் தெழுவாரடி தொழுவார்
அவ்வத்திசைக் கரசாகுவர் அலராள்பிரி யாளே.    7.82.3
835    மலையான்மகள் மடமாதிட மாகத்தவள் மற்றுக்
கொலையானையின் உரிபோர்த்தவெம் பெருமான்றிருச் சுழியல்
அலையார்சடை யுடையானடி தொழுவார்பழு துள்ளம்
நிலையார்திகழ் புகழால்நெடு வானத்துயர் வாரே.     7.82.4
836    உற்றான்நமக் குயரும்மதிச் சடையான்புலன் ஐந்துஞ்
செற்றார்திரு மேனிப்பெரு மானூர்திருச் சுழியல்
பெற்றான்இனி துறையத்திறம் பாமைத்திரு நாமங்
கற்றாரவர் கதியுட்செல்வர் ஏத்தும்மது கடனே.     7.82.5
837    மலந்தாங்கிய பாசப்பிறப் பறுப்பீர்துறைக் கங்கைச்
சலந்தாங்கிய முடியான்அமர்ந் திடமாந்திருச் சுழியல்
நிலந்தாங்கிய மலராற்கொழும் புகையால்நினைந் தேத்துந்
தலந்தாங்கிய புகழாம்மிகு தவமாஞ்சது ராமே.     7.82.6
838    சைவத்தசெவ் வுருவன்றிரு நீற்றன்னுரு மேற்றன்
கைவைத்தொரு சிலையால்அரண் மூன்றும்மெரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய குழகன்றிருச் சுழியல்
மெய்வைத்தடி நினைவார்வினை தீர்தல்லெளி தன்றே.    7.82.7
839    பூவேந்திய பீடத்தவன் றானும்மடல் அரியுங்
கோவேந்திய வினையத்தொடு குறுகப்புகல் அறியார்
சேவேந்திய கொடியானவன் உறையுந்திருச் சுழியல்
மாவேந்திய கரத்தான்எம சிரத்தான்றன தடியே.     7.82.8
840    கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்விச்
செண்டாடுதல் புரிந்தான்திருச் சுழியற்பெரு மானைக்
குண்டாடிய சமண்ஆதர்கள் குடைச்சாக்கியர் அறியா
மிண்டாடிய அதுசெய்தது வானால்வரு விதியே.     7.82.9
841    நீரூர்தரு நிமிலன்றிரு மலையார்க்கயல் அருகே
தேரூர்தரும் அரக்கன்சிரம் நெரித்தான்றிருச் சுழியல்
பேரூரென உரைவானடி பெயர்நாவலர் கோமான்
ஆரூரன தமிழ்மாலைபத் தறிவார்துயர் இலரே.     7.82.10

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இணைத்திருமேனிநாதர், தேவியார் - துணைமாலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.83 திருவாரூர்
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்

842    அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி
முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென்றிரு வாரூர்புக்
கெந்தை பிரானாரை யென்றுகொல் எய்துவதே.     7.83.1
843    நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதுந்
துன்று மலரிட்டுச் சூழும் வலஞ்செய்து
தென்றல் மணங்கமழுந் தென்றிரு வாரூர்புக்
கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே.     7.83.2
844    முன்னை முதற்பிறவி மூதறி யாமையினாற்
பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழியச்
செந்நெல் வயற்கழனித் தென்றிரு வாரூர்புக்
கென்னுயிர்க் கின்னமுதை என்றுகொல் எய்துவதே.     7.83.3
845    நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆருயிரைக்
கொல்ல நினைப்பனவுங் குற்றமும் அற்றொழியச்
செல்வ வயற்கழனித் தென்றிரு வாரூர்புக்
கெல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே.     7.83.4
846    கடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன்
சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்றலைவாய்
அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர்புக்
கிடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே.     7.83.5
847    சூழொளி நீர்நிலந்தீத் தாழ்வளி ஆகாசம்
வானுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள்
ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்புக்
கேழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே.     7.83.6
848    கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த
வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமராச்
செம்பொனை நன்மணியைத் தென்றிரு வாரூர்புக்
கென்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே.     7.83.7
849    ஆறணி நீண்முடிமேல் ஆடர வஞ்சூடிப்
பாறணி வெண்டலையிற் பிச்சைகொள் நச்சரவன்
சேறணி தண்கழனித் தென்றிரு வாரூர்புக்
கேறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே.     7.83.8
850    மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்
அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடுந்
திண்ணிய மாமதில்சூழ் தென்றிரு வாரூர்புக்
கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே.     7.83.9
851    மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரை
நன்னெடுங் காதன்மையால் நாவலர் கோன்ஊரன்
பன்னெடுஞ் சொல்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார்
பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே.     7.83.10

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.84 திருக்கானப்பேர்
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்

852    தொண்ட ரடித்தொழலுஞ் சோதி இளம்பிறையுஞ்
    சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும்
    புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள்
    பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமருங்
    கொண்ட லெனத்திகழுங் கண்டமும் எண்டோ ளுங்
    கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்
    கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன்
    கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.     7.84.1
853    கூத லிடுஞ்சடையுங் கோளர வும்விரவுங்
    கொக்கிற குங்குளிர்மா மந்தமும் ஒத்துனதாள்
    ஓத லுணர்ந்தடியார் உன்பெரு மைக்குநினைந்
    துள்ளுரு காவிரசும் ஓசையைப் பாடலும்நீ
    ஆத லுணர்ந்தவரோ டன்பு பெருத்தடியேன்
    அங்கையின் மாமலர்கொண் டென்கண தல்லல்கெடக்
    காத லுறத்தொழுவ தென்றுகொ லோவடியேன்
    கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.     7.84.2
854    நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை
    நற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனைத்
    தேனிடை இன்னமுதை மற்றத னிற்றெளிவைத்
    தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை
    வானிடை மாமதியை மாசறு சோதியனை
    மாருத மும்மனலும் மண்டல மும்மாய
    கானிடை மாநடனென் றெய்துவ தென்றுகொலோ
    கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.     7.84.3
855    செற்றவர் முப்புரம்அன் றட்ட சிலைத்தொழிலார்
    சேவக முந்நினைவார் பாவக முந்நெறியுங்
    குற்றமில் தன்னடியார் கூறும் இசைப்பரிசுங்
    கோசிக மும்மரையிற் கோவண மும்மதளும்
    மற்றிகழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதை
    மாமலை மங்கையுமை சேர்சுவ டும்புகழக்
    கற்றன வும்பரவிக் கைதொழல் என்றுகொலோ
    கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.     7.84.4
856    கொல்லை விடைக்கழகுங் கோல நறுஞ்சடையிற்
    கொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகே
    முல்லை படைத்தநகை மெல்லிய லாளொருபால்
    மோகம் மிகுத்திலங்குங் கூறுசெய் யெப்பரிசுந்
    தில்லை நகர்ப்பொதுவுற் றாடிய சீர்நடமுந்
    திண்மழு வுங்கைமிசைக் கூரெரி யும்மடியார்
    கல்ல வடப்பரிசுங் காணுவ தென்றுகொலோ
    கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.     7.84.5
857    பண்ணு தலைப்பயனார் பாடலும் நீடுதலும்
    பங்கய மாதனையார் பத்தியும் முத்தியளித்
    தெண்ணு தலைப்பெருமான் என்றெழு வாரவர்தம்
    ஏசற வும்மிறையாம் எந்தையை யும்விரவி
    நண்ணு தலைப்படுமா றெங்ஙனம் என்றயலே
    நைகிற என்னைமதித் துய்யும்வண் ணமருளுங்
    கண்ணு தலைக்கனியைக் காண்பதும் என்றுகொலோ
    கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.     7.84.6
858    மாவை உரித்ததள்கொண் டங்கம் அணிந்தவனை
    வஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனை
    மூவர் உருத்தனதாம் மூல முதற்கருவை
    மூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப்
    பாவக மின்றிமெய்யே பற்று மவர்க்கமுதைப்
    பால்நறு நெய்தயிரைந் தாடு பரம்பரனைக்
    காவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோ
    கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.     7.84.7
859    தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்
    தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ்
    சுண்டத னுக்கிறவா தென்றும் இருந்தவனை
    ஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணரா
    அண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும்
    ஆதியை மேதகுசீர் ஓதியை வானவர்தங்
    கண்டனை அன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோ
    கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.     7.84.8
860    நாதனை நாதமிகுத் தோசைய தானவனை
    ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை
    மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும்
    பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
    தூதனை என்றனையாள் தோழனை நாயகனைத்
    தாழ்மக ரக்குழையுந் தோடும் அணிந்ததிருக்
    காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ
    கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.     7.84.9
861    கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப்
    பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால்
    உன்னி மனத்தயரா உள்ளுரு கிப்பரவும்
    ஒண்பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன்
    பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார்
    பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ
    மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும்
    மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே.     7.84.10

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே காளையார் கோயில்.
சுவாமிபெயர் - காளைநாதேசுவரர், தேவியார் - பொற்கொடியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.85 திருக்கூடலையாற்றூர்
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்

862    வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடுங்
கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்
அடிகளிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.     7.85.1
863    வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும்
பையர விளவல்குற் பாவையொ டும்முடனே
கொய்யணி மலர்ச்சோலைக் கூடலை யாற்றூரில்
ஐயனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.     7.85.2
864    ஊர்தொறும் வெண்டலைகொண் டுண்பலி இடுமென்று
வார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனே
கூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்றூரில்
ஆர்வனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.    7.85.3
865    சந்தண வும்புனலுந் தாங்கிய தாழ்சடையன்
பந்தண வும்விரலாள் பாவையொ டும்முடனே
கொந்தண வும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே.     7.85.4
866    வேதியர் விண்ணவரும் மண்ணவ ருந்தொழநற்
சோதிய துருவாகிச் சுரிகுழல் உமையோடுங்
கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில்
ஆதியிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.     7.85.5
867    வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே
கொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
அத்தனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.    7.85.6
868    மழைநுழை மதியமொடு வாளர வஞ்சடைமேல்
இழைநுழை துகிலல்குல் ஏந்திழை யாளோடுங்
குழையணி திகழ்சோலைக் கூடலை யாற்றூரில்
அழகனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.    7.85.7
869    மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில்
அறவனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.    7.85.8
870    வேலையின் நஞ்சுண்டு விடையது தானேறிப்
பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே
கோலம துருவாகிக் கூடலை யாற்றூரில்
ஆலனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.     7.85.9
871    கூடலை யாற்றூரிற் கொடியிடை யவளோடும்
ஆடலு கந்தானை அதிசயம் இதுவென்று
நாடிய இன்றமிழால் நாவல வூரன்சொற்
பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே.     7.85.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெறிகாட்டுநாயகர், தேவியார் - புரிகுழலாளம்மை.

இது திருப்புறம்பயமென்னுந் தலத்தினின்று மெழுந்தருளித் திருக்கூடலையாற்றூருக்குச்
சமீபமாகச்செல்லுகின்றவர், அந்தத் தலத்துக்குள் செல்லாமல், திருமுதுகுன்றை
நோக்கிச்செல்லுங் கருத்தினராக, அந்தமார்க்கத்தில் பரமசிவம் ஒரு பிராமணராய்
நிற்கக்கண்டு ஐயரே திருமுதுகுன்றுக்கு மார்க்கமெதுவென்ன, இந்தக் கூடலையாற்றூர்
மார்க்கமாச் செல்லுகின்றதென்று சொல்லி வழிகாட்டிப் பின்செல்ல, சுந்தரமூர்த்தி
சுவாமிகள் முன்சென்று கூடலையாற்றூருக்குச் சமீபமாகச் சார்ந்தபோது
பின்வந்த பிராமணர் மறையக்கண்டு அதிசயங்கொண்டு ஓதியபதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.86 திருவன்பார்த்தான்பனங்காட்டூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்

872    விடையின்மேல் வருவானை
    வேதத்தின் பொருளானை
    அடையில்அன் புடையானை
    யாவர்க்கும் அறியொண்ணா
    மடையில்வா ளைகள்பாயும்
    வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
    சடையிற்கங்கை தரித்தானைச்
    சாராதார் சார்பென்னே.    7.86.1
873    அறையும்பைங் கழலார்ப்ப
    அரவாட அனலேந்திப்
    பிறையுங்கங் கையுஞ்சூடிப்
    பெயர்ந்தாடும் பெருமானார்
    பறையுஞ்சங் கொலிஓவாப்
    படிறன்றன் பனங்காட்டூர்
    உறையுமெங்கள் பிரானாரை
    உணராதார் உணர்வென்னே.     7.86.2
874    தண்ணார்மா மதிசூடித்
    தழல்போலுந் திருமேனிக்
    கெண்ணார்நாண் மலர்கொண்டங்
    கிசைந்தேத்தும் அடியார்கள்
    பண்ணார்பா டல்அறாத
    படிறன்றன் பனங்காட்டூர்ப்
    பெண்ணாணா யபிரானைப்
    பேசாதார் பேச்சென்னே.    7.86.3
875    நெற்றிக்கண் ணுடையானை
    நீறேறுந் திருமேனிக்
    குற்றமில் குணத்தானைக்
    கோணாதார் மனத்தானைப்
    பற்றிப்பாம் பரையார்த்த
    படிறன்றன் பனங்காட்டூர்ப்
    பெற்றொன்றே றும்பிரானைப்
    பேசாதார் பேச்சென்னே.    7.86.4
876    உரமென்னும் பொருளானை
    உருகிலுள் ளுறைவானைச்
    சிரமென்னுங் கலனானைச்
    செங்கண்மால் விடையானை
    வரம்முன்ன மருள்செய்வான்
    வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
    பரமன்எங் கள்பிரானைப்
    பரவாதார் பரவென்னே.     7.86.5
877    எயிலார்பொக் கம்எரித்த
    எண்டோ ள்முக் கண்இறைவன்
    வெயிலாய்க்காற் றெனவீசி
    மின்னாய்த்தீ எனநின்றான்
    மயிலார்சோ லைகள்சூழ்ந்த
    வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
    பயில்வானுக் கடிமைக்கட்
    பயிலாதார் பயில்வென்னே.     7.86.6
878    மெய்யன்வெண் பொடிபூசும்
    விகிர்தன்வே தமுதல்வன்
    கையில்மான் மழுவேந்திக்
    காலன்கா லம்அறுத்தான்
    பைகொள்பாம் பரையார்த்த
    படிறன்றன் பனங்காட்டூர்
    ஐயன்எங் கள்பிரானை
    அறியாதார் அறிவென்னே.    7.86.7
879    வஞ்சமற்ற மனத்தாரை
    மறவாத பிறப்பிலியைப்
    பஞ்சிச்சீ றடியாளைப்
    பாகம்வைத் துகந்தானை
    மஞ்சுற்ற மணிமாட
    வன்பார்த்தான் பனங்காட்டூர்
    நெஞ்சத்தெங் கள்பிரானை
    நினையாதார் நினைவென்னே.    7.86.8
880    மழையானுந் திகழ்கின்ற
    மலரோனென் றிருவர்தாம்
    உழையாநின் றவருள்க
    உயர்வானத் துயர்வானைப்
    பழையானைப் பனங்காட்டூர்
    பதியாகத் திகழ்கின்ற
    குழைகாதற் கடிமைக்கட்
    குழையாதார் குழைவென்னே.     7.86.9
881    பாரூரும் பனங்காட்டூர்ப்
    பவளத்தின் படியானைச்
    சீரூருந் திருவாரூர்ச்
    சிவன்பேர்சென் னியில்வைத்த
    ஆரூரன் அடித்தொண்டன்
    அடியன்சொல் அடிநாய்சொல்
    ஊரூரன் உரைசெய்வார்
    உயர்வானத் துயர்வாரே.     7.86.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர், தேவியார் - அமிர்தவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.87 திருப்பனையூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்

882    மாடமாளிகை கோபுரத்தொடு
    மண்டபம்வள ரும்வளர்பொழில்
    பாடல் வண்டறையும்
    பழனத் திருப்பனையூர்த்
    தோடுபெய்தொரு காதினிற்குழை
    தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்
    றாடு மாறுவல்லார்
    அவரே அழகியரே.     7.87.1
883    நாறுசெங்கழு நீர்மலர்
    நல்லமல்லிகை சண்பகத்தொடு
    சேறுசெய் கழனிப்
    பழனத் திருப்பனையூர்
    நீறுபூசிநெய் யாடிதன்னை
    நினைப்பவர்தம் மனத்தனாகிநின்
    றாறு சூடவல்லார்
    அவரே அழகியரே.     7.87.2
884    செங்கண்மேதிகள் சேடெறிந்து
    தடம்படிதலிற் சேலினத்தொடு
    பைங்கண் வாளைகள்
    பாய்பழனத் திருப்பனையூர்த்
    திங்கள்சூடிய செல்வனாரடி
    யார்தம்மேல்வினை தீர்ப்பராய்விடி
    லங்கிருந் துறைவார்
    அவரே அழகியரே.     7.87.3
885    வாளைபாய மலங்கிளங்கயல்
    வரிவராலுக ளுங்கழனியுள்
    பாளையொண் கமுகம்
    புடைசூழ் திருப்பனையூர்த்
    தோளுமாகமுந் தோன்றநட்டமிட்
    டாடுவாரடித் தொண்டர்தங்களை
    ஆளு மாறுவல்லார்
    அவரே அழகியரே.     7.87.4
886    கொங்கையார்பல ருங்குடைந்
    தாடநீர்க்குவ ளைமலர்தர
    பங்கயம் மலரும்
    பழனத் திருப்பனையூர்
    மங்கைபாகமும் மாலோர்பாகமுந்
    தாமுடையவர் மான்மழுவினோ
    டங்கைத் தீயுகப்பார்
    அவரே அழகியரே.     7.87.5
887    காவிரிபுடை சூழ்சோணாட்டவர்
    தாம்பரவிய கருணையங்கடலப்
    பாவிரி புலவர்
    பயிலுந் திருப்பனையூர்
    மாவிரிமட நோக்கிஅஞ்ச
    மதகரியுரி போர்த்துகந்தவர்
    ஆவில்ஐந் துகப்பார்
    அவரே அழகியரே.     7.87.6
888    மரங்கள்மேல்மயி லாலமண்டப
    மாடமாளிகை கோபுரத்தின்மேல்
    திரங்கல்வன் முகவன்
    புகப்பாய் திருப்பனையூர்த்
    துரங்கன்வாய்பிளந் தானுந்தூமலர்த்
    தோன்றலுமறி யாமற்றோன்றிநின்
    றரங்கில் ஆடவல்லார்
    அவரே அழகியரே.     7.87.7
889    மண்ணெலாம்முழ வம்மதிர்தர
    மாடமாளிகை கோபுரத்தின்மேற்
    பண்ணி யாழ்முரலும்
    பழனத் திருப்பனையூர்
    வெண்ணிலாச் சடைமேவிய
    விண்ணவரொடு மண்ணவர்தொழ
    அண்ணலாகி நின்றார்
    அவரே அழகியரே.     7.87.8
890    குரக்கினங்குதி கொள்ளத்தேனுகக்
    குண்டுதண்வயற் கெண்டைபாய்தரப்
    பரக்குந் தண்கழனிப்
    பழனத் திருப்பனையூர்
    இரக்கமில்லவர் ஐந்தொடைத்தலை
    தோளிருபது தாள்நெரிதர
    அரக்கனை அடர்த்தார்
    அவரே அழகியரே.     7.87.9
891    வஞ்சிநுண்ணிடை மங்கைபங்கினர்
    மாதவர்வள ரும்வளர்பொழில்
    பஞ்சின் மெல்லடியார்
    பயிலுந் திருப்பனையூர்
    வஞ்சியும்வளர் நாவலூரன்
    வனப்பகையவ ளப்பன்வன்றொண்டன்
    செஞ்சொற் கேட்டுகப்பார்
    அவரே அழகியரே.     7.87.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சவுந்தரேசர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.88 திருவீழிமிழலை
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்

892    நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்
    நான்மறைக்கிட மாயவேள்வியுள்
    செம்பொ னேர்மடவாரணி
    பெற்ற திருமிழலை
    உம்பரார்தொழு தேத்தமாமலை
    யாளொடும்முட னேஉறைவிடம்
    அம்பொன் வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.     7.88.1
893    விடங்கொள்மாமிடற் றீர்வெள்ளைச்சுருளொன்
    றிட்டுவிட்ட காதினீரென்று
    திடங்கொள் சிந்தையினார்
    கலிகாக்குந் திருமிழலை
    மடங்கல்பூண்டவி மானம்மண்மிசை
    வந்திழிச்சிய வானநாட்டையும்
    அடங்கல் வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.    7.88.2
894    ஊனைஉற்றுயிர் ஆயினீரொளி
    மூன்றுமாய்த்தெளி நீரோடானஞ்சின்
    தேனை ஆட்டுகந்தீர்
    செழுமாடத் திருமிழலை
    மானைமேவிய கையினீர்மழு
    வேந்தினீர்மங்கை பாகத்தீர்விண்ணில்
    ஆன வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.    7.88.3
895    பந்தம்வீடிவை பண்ணினீர்படி
    றீர்மதிப்பிதிர்க் கண்ணியீரென்று
    சிந்தை செய்திருக்குஞ்
    செங்கையாளர் திருமிழலை
    வந்துநாடகம் வானநாடியர்
    ஆடமாலயன் ஏத்தநாடொறும்
    அந்தண் வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.     7.88.4
896    புரிசைமூன்றையும் பொன்றக்குன்றவில்
    லேந்திவேதப் புரவித்தேர்மிசைத்
    திரிசெய் நான்மறையோர்
    சிறந்தேத்துந் திருமிழலைப்
    பரிசினாலடி போற்றும்பத்தர்கள்
    பாடியாடப் பரிந்துநல்கினீர்
    அரிய வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.    7.88.5
897    எறிந்தசண்டி இடந்தகண்ணப்பன்
    ஏத்துபத்தர்கட் கேற்றம்நல்கினீர்
    செறிந்த பூம்பொழில்
    தேன்துளிவீசுந் திருமிழலை
    நிறைந்தஅந்தணர் நித்தநாடொறும்
    நேசத்தாலுமைப் பூசிக்கும்மிடம்
    அறிந்து வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.     7.88.6
898    பணிந்தபார்த்தன் பகீரதன்பல
    பத்தர்சித்தர்க்குப் பண்டுநல்கினீர்
    திணிந்த மாடந்தொறுஞ்
    செல்வம்மல்கு திருமிழலை
    தணிந்தஅந்தணர் சந்திநாடொறும்
    அந்திவானிடு பூச்சிறப்பவை
    அணிந்து வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.    7.88.7
899    பரந்தபாரிடம் ஊரிடைப்பலி
    பற்றிப்பார்த்துணுஞ் சுற்றமாயினீர்
    தெரிந்த நான்மறை
    யோர்க்கிடமாய திருமிழலை
    இருந்துநீர்தமி ழோடிசைகேட்கும்
    இச்சையாற்காசு நித்தல்நல்கினீர்
    அருந்தண் வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.     7.88.8
900    தூயநீரமு தாயவாறது
    சொல்லுகென்றுமைக் கேட்கச்சொல்லினீர்
    தீயராக் குலையாளர்
    செழுமாடத் திருமிழலை
    மேயநீர்பலி ஏற்றதென்னென்று
    விண்ணப்பஞ்செய் பவர்க்குமெய்ப்பொருள்
    ஆய வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.     7.88.9
901    வேதவேதியர் வேதநீதியர்
    ஓதுவார்விரி நீர்மிழலையுள்
    ஆதி வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுகென்று
    நாதகீதம்வண் டோ துவார்பொழில்
    நாவலூரன்வன் றொண்டன்நற்றமிழ்
    பாதம் ஓதவல்லார்
    பரனோடு கூடுவரே.     7.88.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.89 திருவெண்பாக்கம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்

902    பிழையுளன பொறுத்திடுவர்
    என்றடியேன் பிழைத்தக்காற்
    பழியதனைப் பாராதே
    படலமென்கண் மறைப்பித்தாய்
    குழைவிரவு வடிகாதா
    கோயிலுளா யேயென்ன
    உழையுடையான் உள்ளிருந்து
    உளோம்போகீர் என்றானே.     7.89.1
903    இடையறியேன் தலையறியேன்
    எம்பெருமான் சரணமென்பேன்
    அடையுடையன் நம்மடியான்
    என்றவற்றைப் பாராதே
    விடையுடையான் விடநாகன்
    வெண்ணீற்றன் புலியின்றோல்
    உடையுடையான் எனையுடையான்
    உளோம்போகீர் என்றானே.     7.89.2
904    செய்வினையொன் றறியாதேன்
    திருவடியே சரணென்று
    பொய்யடியேன் பிழைத்திடினும்
    பொறுத்திடநீ வேண்டாவோ
    பையரவா இங்கிருந்தா
    யோவென்னப் பரிந்தென்னை
    உய்யஅருள் செய்யவல்லான்
    உளோம்போகீர் என்றானே.     7.89.3
905    கம்பமருங் கரியுரியன்
    கறைமிடற்றன் காபாலி
    செம்பவளத் திருவுருவன்
    சேயிழையோ டுடனாகி
    நம்பியிங்கே இருந்தீரே
    என்றுநான் கேட்டலுமே
    உம்பர்தனித் துணையெனக்கு
    உளோம்போகீர் என்றானே.     7.89.4
906    பொன்னிலங்கு நறுங்கொன்றை
    புரிசடைமேற் பொலிந்திலங்க
    மின்னிலங்கு நுண்ணிடையாள்
    பாகமா எருதேறித்
    துன்னியிரு பால்அடியார்
    தொழுதேத்த அடியேனும்
    உன்னதமாய்க் கேட்டலுமே
    உளோம்போகீர் என்றானே.     7.89.5
907    கண்ணுதலாற் காமனையுங்
    காய்ந்ததிறற் கங்கைமலர்
    தெண்ணிலவு செஞ்சடைமேல்
    தீமலர்ந்த கொன்றையினான்
    கண்மணியை மறைப்பித்தாய்
    இங்கிருந்தா யோவென்ன
    ஒண்ணுதலி பெருமானார்
    உளோம்போகீர் என்றானே.    7.89.6
908    பார்நிலவு மறையோரும்
    பத்தர்களும் பணிசெய்யத்
    தார்நிலவு நறுங்கொன்றைச்
    சடையனார் தாங்கரிய
    கார்நிலவு மணிமிடற்றீர்
    இங்கிருந்தீ ரேயென்ன
    ஊரரவம் அரைக்கசைத்தான்
    உளோம்போகீர் என்றானே.    7.89.7
909    வாரிடங்கொள் வனமுலையாள்
    தன்னோடு மயானத்துப்
    பாரிடங்கள் பலசூழப்
    பயின்றாடும் பரமேட்டி
    காரிடங்கொள் கண்டத்தன்
    கருதுமிடந் திருஒற்றி
    யூரிடங்கொண் டிருந்தபிரான்
    உளோம்போகீர் என்றானே.    7.89.8
910    பொன்னவிலுங் கொன்றையினாய்
    போய்மகிழ்க்கீ ழிருவென்று
    சொன்னஎனைக் காணாமே
    சூளறவு மகிழ்க்கீழே
    என்னவல்ல பெருமானே
    இங்கிருந்தா யோவென்ன
    ஒன்னலரைக் கண்டாற்போல்
    உளோம்போகீர் என்றானே.     7.89.9
911    மான்றிகழுஞ் சங்கிலியைத்
    தந்துவரு பயன்களெல்லாந்
    தோன்றஅருள் செய்தளித்தாய்
    என்றுரைக்க உலகமெலாம்
    ஈன்றவனே வெண்கோயில்
    இங்கிருந்தா யோவென்ன
    ஊன்றுவதோர் கோலருளி
    உளோம்போகீர் என்றானே.     7.89.10
912    ஏராரும் பொழில்நிலவு
    வெண்பாக்கம் இடங்கொண்ட
    காராறும் மிடாற்றானைக்
    காதலித்திட் டன்பினொடுஞ்
    சீராருந் திருவாரூர்ச்
    சிவன்பேர்சென் னியில்வைத்த
    ஆரூரன் தமிழ்வல்லார்க்
    கடையாவல் வினைதானே.     7.89.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது.
சுவாமிபெயர் - வெண்பாக்கத்தீசுவரர், தேவியார் - கனிவாய்மொழியம்மை.

இது திருவொற்றியூரில் சங்கிலிநாச்சியாருக்குக் கூறிய சபதத்தை
மறந்து திருவாரூருக்குச் செல்லுங்கருத்தினால், திருவொற்றியூரெல்லையைக்
கடந்த அளவில் பார்வைமறைய அவ்வண்ணமேயெழுந்தருளி
வெண்பாக்கத்திற்சென்று ஆலயத்துக்குளடைந்து தரிசித்துக்
கோயிலிலிருக்கின்றீரோவென்ன, பரமசிவம் ஊன்றுகோலொன்றருளிச்செய்து
நாம் கோயிலுலிருக்கிறோம் நீர் போமென்று அருளிச்செய்தபோது ஓதிய பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.90 கோயில்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்

913    மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே
    மனனேநீ வாழும் நாளுந்
    தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில்
    இடும்போது தடுத்தாட் கொள்வான்
    கடுத்தாடுங் கரதலத்திற் றமருகமும்
    எரிஅகலுங் கரியபாம்பும்
    பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.    7.90.1
914    பேராது காமத்திற் சென்றார்போல்
    அன்றியே பிரியா துள்கிச்
    சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன்
    னடிவீழுந் திருவி னாரை
    ஓராது தருமனார் தமர்செக்கில்
    இடும்போது தடுத்தாட் கொள்வான்
    பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.    7.90.2
915    நரியார்தங் கள்ளத்தாற் பக்கான
    பரிசொழிந்து நாளும் உள்கிப்
    பிரியாத அன்பராய்ச் சென்றுமுன்
    அடிவீழுஞ் சிந்தை யாரைத்
    தரியாது தருமனார் தமர்செக்கில்
    இடும்போது தடுத்தாட் கொள்வான்
    பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.    7.90.3
916    கருமையார் தருமனார் தமர்நம்மைக்
    கட்டியகட் டறுப்பிப் பானை
    அருமையாந் தன்னுலகந் தருவானை
    மண்ணுலகங் காவல் பூண்ட
    உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா
    மன்னவரை மறுக்கஞ் செய்யும்
    பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.     7.90.4
917    கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல்
    வெண்மதியக் கண்ணி யானை
    உருமன்ன கூற்றத்தை உருண்டோ ட
    உதைத்துகந் துலவா இன்பம்
    தருவானைத் தருமனார் தமர்செக்கில்
    இடும்போது தடுத்தாட் கொள்வான்
    பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.    7.90.5
918    உய்த்தாடித் திரியாதே உள்ளமே
    ஒழிகண்டாய் ஊன்கண் ஓட்டம்
    எத்தாலுங் குறைவில்லை என்பர்காண்
    நெஞ்சமே நம்மை நாளும்
    பைத்தாடும் அரவினன் படர்சடையன்
    பரஞ்சோதி பாவந் தீர்க்கும்
    பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.    7.90.6
919    முட்டாத முச்சந்தி மூவா
    யிரவர்க்கு மூர்த்தி என்னப்
    பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார்
    பாவமும் வினையும் போக
    விட்டானை மலையெடுத்த இராவணனைத்
    தலைபத்தும் நெரியக் காலால்
    தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.     7.90.7
920    கற்றானுங் குழையுமா றன்றியே
    கருதுமா கருத கிற்றார்க்
    கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண்
    உள்ளமே நம்மைநாளுஞ்
    செற்றாட்டித் தருமனார் தமர்செக்கில்
    இடும்போது தடுத்தாட் கொள்வான்
    பெற்றேறிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.     7.90.8
921    நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ்
    செய்மனமே நம்மை நாளுந்
    தாடுடைய தருமனார் தமர்செக்கில்
    இடும்போது தடுத்தாட் கொள்வான்
    மோடுடைய சமணர்க்கும் முடையுடைய
    சாக்கியர்க்கும் மூடம் வைத்த
    பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.    7.90.9
922    பாரூரும் அரவல்குல் உமைநங்கை
    யவள்பங்கன் பைங்கண் ஏற்றன்
    ஊரூரன் தருமனார் தமர்செக்கில்
    இடும்போது தடுத்தாட் கொள்வான்
    ஆரூரன் தம்பிரான் ஆரூரன்
    மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்
    பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற்
    றம்பலத்தே பெற்றா மன்றே.     7.90.10

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.91 திருவொற்றியூர்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்

923    பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே
ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே.     7.91.1
924    பந்துங் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்
உந்துந் திரைவாய் ஒற்றி யூரே.     7.91.2
925    பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்
உகளுந் திரைவாய் ஒற்றி யூரே.     7.91.3
926    என்ன தெழிலும் நிறையுங் கவர்வான்
புன்னை மலரும் புறவிற் றிகழுந்
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்
உன்னப் படுவான் ஒற்றி யூரே.     7.91.4
927    பணங்கொள் அரவம் பற்றிப் பரமன்
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி
வணங்கும் இடைமென் மடவார் இட்ட
உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே.     7.91.5
928    படையார் மழுவன் பால்வெண் ணீற்றன்
விடையார் கொடியன் வேத நாவன்
அடையார் வினைகள் அறுப்பான் என்னை
உடையான் உறையும் ஒற்றி யூரே.     7.91.6
929    சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன் வினையை வீட்ட
நன்று நல்ல நாதன் நரையே
றொன்றை உடையான் ஒற்றி யூரே.     7.91.7
930    கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப் படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவுந் திரைவாய் ஒற்றி யூரே.     7.91.8
931    பற்றி வரையை எடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே.    7.91.9
932    ஒற்றி யூரும் அரவும் பிறையும்
பற்றி யூரும் பவளச் சடையான்
ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாடக் கழியும் வினையே.     7.91.10

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.92 திருப்புக்கொளியூர் அவிநாசி
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்

933    எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாயென் றுன்னையே உள்குகின் றேனுணர்ந் துள்ளத்தாற்
புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.     7.92.1
934    வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ
ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே
பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணியெ னைக்கிறி செய்ததே.     7.92.2
935    எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்காற்
கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பாரிலை
பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே
எங்கோ னேயுனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.     7.92.3
936    உரைப்பார் உரையுகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.     7.92.4
937    அரங்காவ தெல்லா மாயிடு காடது வன்றியுஞ்
சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளி யூரவி நாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே.     7.92.5
938    நாத்தா னும்உனைப் பாடலன் றிநவி லாதெனாச்
சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளி யூரவி நாசியே
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே.     7.92.6
939    மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறஞ்
சந்திகள் தோறுஞ் சலபுட்பம் இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.     7.92.7
940    பேணா தொழிந்தேன் உன்னைய லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி யூரவி நாசியே
காணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே.     7.92.8
941    நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே.     7.92.9
942    நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி யூரவி நாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே.     7.92.10

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அவிநாசியப்பர், தேவியார் - பெருங்கருணைநாயகி.

இது முதலையுண்டபிள்ளையை அழைப்பித்தபதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.93 திருநறையூர்ச்சித்தீச்சரம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்

943    நீரும் மலரும் நிலவுஞ் சடைமேல்
ஊரும் அரவம் உடையான் இடமாம்
வாரும் அருவி மணிபொன் கொழித்துச்
சேரும் நரையூர்ச் சித்தீச் சரமே.     7.93.1
944    அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்
வளைக்கை மடவார் மடுவிற் றடநீர்த்
திளைக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே.    7.93.2
945    இகழுந் தகையோர் எயில்மூன் றெரித்த
பகழி யொடுவில் லுடையான் பதிதான்
முகிழ்மென் முலையார் முகமே கமலந்
திகழும் நறையூர்ச் சித்தீச் சரமே.     7.93.3
946    மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம்
நறக்கொள் கமலம் நனிபள் ளியெழத்
திறக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே.     7.93.4
947    முழுநீ றணிமே னியன்மொய் குழலார்
எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம்
கழுநீர் கமழக் கயல்சேல் உகளுஞ்
செழுநீர் நறையூர்ச் சித்தீச் சரமே.     7.93.5
948    ஊனா ருடைவெண் டலையுண் பலிகொண்
டானார் அடலே றமர்வான் இடமாம்
வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த்
தேனார் நறையூர்ச் சித்தீச் சரமே.     7.93.6
949    காரூர் கடலில் விடமுண் டருள்செய்
நீரூர் சடையன் நிலவும் இடமாம்
வாரூர் முலையார் மருவும் மறுகில்
தேரூர் நறையூர்ச் சித்தீச் சரமே.     7.93.7
950    கரியின் உரியுங் கலைமான் மறியும்
எரியும் மழுவும் உடையான் இடமாம்
புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள்
தெரியும் நறையூர்ச் சித்தீச் சரமே.     7.93.8
951    பேணா முனிவன் பெருவேள் வியெலாம்
மாணா மைசெய்தான் மருவும் இடமாம்
பாணார் குழலும் முழவும் விழவிற்
சேணார் நறையூர்ச் சித்தீச் சரமே.     7.93.9
952    குறியில் வழுவாக் கொடுங்கூற் றுதைத்த
எறியும் மழுவாட் படையான் இடமாம்
நெறியில் வழுவா நியமத் தவர்கள்
செறியும் நறையூர்ச் சித்தீச் சரமே.     7.93.10
953    போரார் புரமெய் புனிதன் அமருஞ்
சீரார் நறையூர்ச் சித்தீச் சரத்தை
ஆரூ ரன்சொல் லிவைவல் லவர்கள்
ஏரார் இமையோர் உலகெய் துவரே.     7.93.11

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.94 திருச்சோற்றுத்துறை
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்

954    அழல்நீர் ஒழுகி யனைய சடையும்
உழையீ ருரியும் உடையான் இடமாம்
கழைநீர் முத்துங் கனகக் குவையுஞ்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.     7.94.1
955    பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் இடமாம்
இண்டை கொண்டன் பிடைய றாத
தொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே.     7.94.2
956    கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியுஞ்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.     7.94.3
957    பளிக்குத் தாரை பவள வெற்பிற்
குளிக்கும் போல்நூற் கோமாற் கிடமாம்
அளிக்கும் ஆத்தி அல்லான் மதுவந்
துளிக்குஞ் சோலைச் சோற்றுத் துறையே.     7.94.4
958    உதையுங் கூற்றுக் கொல்கா விதிக்கு
வதையுஞ் செய்த மைந்தன் இடமாம்
திதையுந் தாதுந் தேனுஞ் ஞிமிறுந்
துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே.     7.94.5
959    ஓதக் கடல்நஞ் சினையுண் டிட்ட
பேதைப் பெருமான் பேணும் பதியாம்
சீதப் புனலுண் டெரியைக் காலுஞ்
சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே.     7.94.6
960    இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப்
புறங்காட் டாடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றந் திருவென் றின்ன
துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே.     7.94.7
961    காமன் பொடியாக் கண்ணொன் றிமைத்த
ஓமக் கடலார் உகந்த இடமாம்
தேமென் குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பார் சோற்றுத் துறையே.     7.94.8
962    இலையால் அன்பால் ஏத்து மவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்
தலையாற் றாழுந் தவத்தோர்க் கென்றுந்
தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே.     7.94.9
963    சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள்
முற்றா மதிசேர் முதல்வன் பாதத்
தற்றார் அடியார் அடிநாய் ஊரன்
சொற்றான் இவைகற் றார்துன் பிலரே.     7.94.10

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.95 திருவாரூர்
பண் - செந்துருத்தி
திருச்சிற்றம்பலம்

964    மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
    பிறரை வேண்டாதே
    மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
    முகத்தால் மிகவாடி
    ஆளா யிருக்கும் அடியார் தங்கள்
    அல்லல் சொன்னக்கால்
    வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
    வாழ்ந்து போதீரே.     7.95.1
965    விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
    விரும்பி ஆட்பட்டேன்
    குற்ற மொன்றுஞ் செய்த தில்லை
    *கொத்தை ஆக்கினீர்
    எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
    நீரே பழிப்பட்டீர்
    மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
    வாழ்ந்து போதீரே.
    *விச்சை - வித்தையென்பதுபோல் கொச்சை - கொத்தை எனநின்றது.    7.95.2
966    அன்றில் முட்டா தடையுஞ் சோலை
    ஆரூர் அகத்தீரே
    கன்று முட்டி உண்ணச் சுரந்த
    காலி யவைபோல
    என்றும் முட்டாப் பாடும் அடியார்
    தங்கண் காணாது
    குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால்
    வாழ்ந்து போதீரே.     7.95.3
967    துருத்தி உறைவீர் பழனம் பதியாச்
    சோற்றுத் துறையாள்வீர்
    இருக்கை திருவா ரூரே உடையீர்
    மனமே எனவேண்டா
    அருத்தி யுடைய அடியார் தங்கள்
    அல்லல் சொன்னக்கால்
    வருத்தி வைத்து மறுமை பணித்தால்
    வாழ்ந்து போதீரே.     7.95.4
968    செந்தண் பவளந் திகழுஞ் சோலை
    இதுவோ திருவாரூர்
    எந்தம் அடிகேள் இதுவே ஆமா
    றுமக்காட் பட்டோ ர்க்குச்
    சந்தம் பலவும் பாடும் அடியார்
    தங்கண் காணாது
    வந்தெம் பெருமான் முறையோ வென்றால்
    வாழ்ந்து போதீரே.     7.95.5
969    தினைத்தா ளன்ன செங்கால் நாரை
    சேருந் திருவாரூர்ப்
    புனைத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப்
    புரிபுன் சடையீரே
    தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து
    தங்கண் காணாது
    மனத்தால் வாடி அடியார் இருந்தால்
    வாழ்ந்து போதீரே.     7.95.6
970    ஆயம் பேடை அடையுஞ் சோலை
    ஆரூர் அகத்தீரே
    ஏயெம் பெருமான் இதுவே ஆமா
    றுமக்காட் பட்டோ ர்க்கு
    மாயங் காட்டிப் பிறவி காட்டி
    மறவா மனங்காட்டிக்
    காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்
    வாழ்ந்து போதீரே.     7.95.7
971    கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்
    கலந்த சொல்லாகி
    இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை
    இகழா தேத்துவோம்
    பழிதா னாவ தறியீர் அடிகேள்
    பாடும் பத்தரோம்
    வழிதான் காணா தலமந் திருந்தால்
    வாழ்ந்து போதீரே.     7.95.8
972    பேயோ டேனும் பிரிவொன் றின்னா
    தென்பர் பிறரெல்லாங்
    காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ
    கருதிக் கொண்டக்கால்
    நாய்தான் போல நடுவே திரிந்தும்
    உமக்காட் பட்டோ ர்க்கு
    வாய்தான் திறவீர் திருவா ரூரீர்
    வாழ்ந்து போதீரே.     7.95.9
973    செருந்தி செம்பொன் மலருஞ் சோலை
    இதுவோ திருவாரூர்
    பொருந்தித் திருமூ லத்தா னம்மே
    இடமாக் கொண்டீரே
    இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை
    இகழா தேத்துவோம்
    வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்
    வாழ்ந்து போதிரே.     7.95.10
974    காரூர் கண்டத் தெண்டோ ள் முக்கண்
    கலைகள் பலவாகி
    ஆரூர்த் திருமூ லத்தா னத்தே
    அடிப்பே ராரூரன்
    பாரூர் அறிய என்கண் கொண்டீர்
    நீரே பழிப்பட்டீர்
    வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்
    வாழ்ந்து போதீரே.     7.95.11

காஞ்சீபுரத்தில் ஆலந்தானெனும் பதிகமோதி ஒருகண்பெற்று,
இந்தத்தலத்தில் இந்தப்பதிகமோதி மற்றொரு கண்ணும் பெற்றது.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.96 திருவாரூர்ப்பரவையுண்மண்டளி
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

975    தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள்
காவாயே கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்
காவாவென் பரவையுண் மண்டளி யம்மானே.     7.96.1
976    பொன்னானே புலவர்க்கு நின்புகழ் போற்றலாம்
தன்னானே தன்னைப் புகழ்ந்திடுந் தற்சோதி
மின்னானே செக்கர் வானத் திளஞாயி
றன்னானே பரவையுண் மண்டளி யம்மானே.     7.96.2
977    நாமாறா துன்னையே நல்லன சொல்லுவார்
போமாறென் புண்ணியா புண்ணியம் ஆனானே
பேய்மாறாப் பிணமிடு காடுகந் தாடுவாய்க்
காமாறென் பரவையுண் மண்டளி யம்மானே.     7.96.3
978    நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக்
காக்கின்றாய் கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
வாக்கென்னும் மாலைகொண் டுன்னை என்மனத்
தார்க்கின்றேன் பரவையுண் மண்டளி யம்மானே.     7.96.4
979    பஞ்சேரும் மெல்லடி யாளையோர் பாகமாய்
நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே
நெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரை
அஞ்சேலென் பரவையுண் மண்டளி யம்மானே.     7.96.5
980    அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும்
பெம்மானே பேரரு ளாளன் பிடவூரன்
தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
அம்மானே பரவையுண் மண்டளி யம்மானே.     7.96.6
981    விண்டானே மேலையார் மேலையார் மேலாய
எண்டானே எழுத்தொடு சொற்பொருள் எல்லாமுன்
கண்டானே கண்டனைக் கொண்டிட்டுக் காட்டாயே
அண்டானே பரவையுண் மண்டளி யம்மானே.     7.96.7
982    காற்றானே கார்முகில் போல்வதோர் கண்டத்தெங்
கூற்றானே கோல்வளை யாளையோர் பாகமாய்
நீற்றானே நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்
ஆற்றானே பரவையுண் மண்டளி யம்மானே.     7.96.8
983    செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாத
கடியேன்நான் கண்டதே கண்டதே காமுறுங்
கொடியேன்நான் கூறுமா றுன்பணி கூறாத
அடியேன்நான் பரவையுண் மண்டளி யம்மானே.     7.96.9
984    கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி யம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.     7.96.10

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.97 திருநனிபள்ளி
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

985    ஆதியன் ஆதிரை யன்அயன் மால்அறி தற்கரிய
சோதியன் சொற்பொரு ளாய்ச்சுருங் காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர்தங் கோனுல கத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.     7.97.1
986    உறவிலி ஊன மிலிஉண ரார்புரம் மூன்றெரியச்
செறுவிலி தன்னினை வார்வினை யாயின தேய்ந்தழிய
அறவில கும்மரு ளான்மரு ளார்பொழில் வண்டறையும்
நறவிரி கொன்றையி னான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.     7.97.2
987    வானுடை யான்பெரி யான்மனத் தாலும்நினைப் பரியான்
ஆனிடை ஐந்தமர்ந் தான்அணு வாகியோர் தீயுருக்கொண்
டூனுடை இவ்வுட லம்ஒடுங் கிப்புகுந் தான்பரந்தான்
நானுடை மாடெம் பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.     7.97.3
988    ஓடுடை யன்கல னாவுடை கோவண வன்உமையோர்
பாடுடை யன்பலி தேர்ந்துண்ணும் பண்புடை யன்பயிலக்
காடுடை யன்னிட மாமலை ஏழுங் கருங்கடல்சூழ்
நாடுடை நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.     7.97.4
989    பண்ணற் கரிய தொருபடை ஆழி தனைப்படைத்துக்
கண்ணற் கருள்புரிந் தான்கரு தாதவர் வேள்விஅவி
உண்ணற் கிமையவ ரையுருண் டோ ட உதைத்துகந்து
நண்ணற் கரிய பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.     7.97.5
990    மல்கிய செஞ்சடை மேல்மதி யும்மர வும்முடனே
புல்கிய ஆரணன் எம்புனி தன்புரி நூல்விகிர்தன்
மெல்கிய விற்றொழி லான்விருப் பன்பெரும் பார்த்தனுக்கு
நல்கிய நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.     7.97.6
991    அங்கமோ ராறவை யும்அரு மாமறை வேள்விகளும்
எங்கும் இருந்தந் தணர்எரி மூன்றவை ஓம்புமிடம்
பங்கய மாமுகத் தாளுமை பங்கன் உறைகோயில்
செங்கயல் பாயும் வயற்றிரு ஊர்நனி பள்ளியதே.     7.97.7
992    திங்கட் குறுந்தெரி யற்றிகழ் கண்ணியன் நுண்ணியனாய்
நங்கட் பிணிகளை வான்அரு மாமருந் தேழ்பிறப்பும்
மங்கத் திருவிர லால்அடர்த் தான்வல் லரக்கனையும்
நங்கட் கருளும் பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.     7.97.8
993    ஏன மருப்பினொ டும்மெழில் ஆமையும் பூண்டுகந்து
வான மதிளர ணம்மலை யேசிலை யாவளைத்தான்
ஊனமில் காழிதன் னுள்ளுயர் ஞானசம் பந்தற்கன்று
ஞானம் அருள்புரிந் தான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.     7.97.9
994    காலமும் நாழிகை யுந்நனி பள்ளி மனத்தினுள்கி
கோலம தாயவ னைக்குளிர் நாவல ஊரன்சொன்ன
மாலை மதித்துரைப் பார்மண் மறந்துவா னோருலகிற்
சாலநல் லின்பமெய் தித்தவ லோகத் திருப்பவரே.     7.97.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நற்றுணையப்பர், தேவியார் - பர்வதராசபுத்திரி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.98 திருநன்னிலத்துப்பெருங்கோயில்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

995    தண்ணியல் வெம்மையி னான்றலை
    யிற்கடை தோறும்பலி
    பண்ணியல் மென்மொழி யார்இடக்
    கொண்டுழல் பண்டரங்கன்
    புண்ணிய நான்மறை யோர்முறை
    யாலடி போற்றிசைப்ப
    நண்ணிய நன்னிலத் துப்பெருங்
    கோயில் நயந்தவனே.     7.98.1
996    வலங்கிளர் மாதவஞ் செய்மலை
    மங்கையோர் பங்கினனாய்ச்
    சலங்கிளர் கங்கைதங் கச்சடை
    யொன்றிடை யேதரித்தான்
    பலங்கிளர் பைம்பொழில் தண்பனி
    வெண்மதி யைத்தடவ
    நலங்கிளர் நன்னிலத் துப்பெருங்
    கோயில் நயந்தவனே.     7.98.2
997    கச்சிய னின்கருப் பூர்விருப்
    பன்கரு திக்கசிவார்
    உச்சியன் பிச்சையுண் ணியுல
    கங்களெல் லாமுடையான்
    நொச்சியம் பச்சிலை யான்நுரை
    தீர்புன லாற்றொழுவார்
    நச்சிய நன்னிலத் துப்பெருங்
    கோயில் நயந்தவனே.     7.98.3
998    பாடிய நான்மறை யான்படு
    பல்பிணக் காடரங்கா
    ஆடிய மாநடத் தானடி
    போற்றியென் றன்பினராய்ச்
    சூடிய செங்கையி னார்பல
    தோத்திரம் வாய்த்தசொல்லி
    நாடிய நன்னிலத் துப்பெருங்
    கோயில் நயந்தவனே.     7.98.4
999    பிலந்தரு வாயினொ டுபெரி
    தும்வலி மிக்குடைய
    சலந்தரன் ஆகம் இருபிள
    வாக்கிய சக்கரமுன்
    நிலந்தரு மாமகள் கோன்நெடு
    மாற்கருள் செய்தபிரான்
    நலந்தரு நன்னிலத் துப்பெருங்
    கோயில் நயந்தவனே.     7.98.5
1000    வெண்பொடி மேனியி னான்கரு
    நீல மணிமிடற்றான்
    பெண்படி செஞ்சடை யான்பிர
    மன்சிரம் பீடழித்தான்
    பண்புடை நான்மறை யோர்பயின்
    றேத்திப்பல் கால்வணங்கும்
    நண்புடை நன்னிலத் துப்பெருங்
    கோயில் நயந்தவனே.     7.98.6
1001    தொடைமலி கொன்றைதுன் றுஞ்சடை
    யன்சுடர் வெண்மழுவாட்
    படைமலி கையன்மெய் யிற்பகட்
    டீருரிப் போர்வையினான்
    மடைமலி வண்கம லம்மலர்
    மேல்மட வன்னம்மன்னி
    நடைமலி நன்னிலத் துப்பெருங்
    கோயில் நயந்தவனே.     7.98.7
1002    குளிர்தரு திங்கள்கங் கைகுர
    வோடரக் கூவிளமும்
    மிளிர்தரு புன்சடை மேலுடை
    யான்விடை யான்விரைசேர்
    தளிர்தரு கோங்குவேங் கைதட
    மாதவி சண்பகமும்
    நளிர்தரு நன்னிலத் துப்பெருங்
    கோயில் நயந்தவனே.     7.98.8
1003    கமர்பயில் வெஞ்சுரத் துக்கடுங்
    கேழற்பின் கானவனாய்
    அமர்பயில் வெய்திய ருச்சுன
    னுக்கருள் செய்தபிரான்
    தமர்பயில் தண்விழ வில்தகு
    சைவர் தவத்தின்மிக்க
    நமர்பயில் நன்னிலத் துப்பெருங்
    கோயில் நயந்தவனே.     7.98.9
1004    கருவரை போலரக் கன்கயி
    லைம்மலைக் கீழ்க்கதற
    ஒருவிர லாலடர்த் தின்னருள்
    செய்த உமாபதிதான்
    திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை
    வன்றிகழ் செம்பியர்கோன்
    நரபதி நன்னிலத் துப்பெருங்
    கோயில் நயந்தவனே.     7.98.10
1005    கோடுயர் வெங்களிற் றுத்திகழ்
    கோச்செங்க ணான்செய்கோயில்
    நாடிய நன்னிலத் துப்பெருங்
    கோயில் நயந்தவனைச்
    சேடியல் சிங்கிதந் தைசடை
    யன்றிரு வாரூரன்
    பாடிய பத்தும்வல் லார்புகு
    வார்பர லோகத்துள்ளே.     7.98.11

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.99 திருநாகேச்சரம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

1006    பிறையணி வாணு தலாள்உமை
    யாளவள் பேழ்கணிக்க
    நிறையணி நெஞ்சனுங் கநீல
    மால்விடம் உண்டதென்னே
    குறையணி குல்லைமுல் லைஅளைந்
    துகுளிர் மாதவிமேற்
    சிறையணி வண்டுகள் சேர்திரு
    நாகேச் சரத்தானே.     7.99.1
1007    அருந்தவ மாமுனி வர்க்கரு
    ளாகியோர் ஆலதன்கீழ்
    இருந்தற மேபுரி தற்கியல்
    பாகிய தென்னைகொலாங்
    குருந்தய லேகுர வம்மர
    வின்னெயி றேற்றரும்பச்
    செருந்திசெம் பொன்மல ருந்திரு
    நாகேச் சரத்தானே.     7.99.2
1008    பாலன தாருயிர் மேற்பரி
    யாது பகைத்தெழுந்த
    காலனை வீடுவித் துக்கருத்
    தாக்கிய தென்னைகொலாங்
    கோல மலர்க்குவ ளைக்கழு
    நீர்வயல் சூழ்கிடங்கிற்
    சேலொடு வாளைகள் பாய்திரு
    நாகேச் சரத்தானே.     7.99.3
1009    குன்ற மலைக்கும ரிகொடி
    யேரிடை யாள்வெருவ
    வென்றி மதகரி யின்னுரி
    போர்த்தது மென்னைகொலாம்
    முன்றில் இளங்கமு கின்முது
    பாளை மதுவளைந்து
    தென்றல் புகுந்துல வுந்திரு
    நாகேச் சரத்தானே.     7.99.4
1010    அரைவிரி கோவணத் தோடர
    வார்த்தொரு நான்மறைநூல்
    உரைபெரு கவ்வுரைத் தன்று
    உகந்தருள் செய்ததென்னே
    வரைதரு மாமணி யும்வரைச்
    சந்தகி லோடுமுந்தித்
    திரைபொரு தண்பழ னத்திரு
    நாகேச் சரத்தானே.     7.99.5
1011    தங்கிய மாதவத் தின்றழல்
    வேள்வியி னின்றெழுந்த
    சிங்கமும் நீள்புலி யுஞ்செழு
    மால்கரி யோடலறப்
    பொங்கிய போர்புரிந் துபிளந்
    தீருரி போர்த்ததென்னே
    செங்கயல் பாய்கழ னித்திரு
    நாகேச் சரத்தானே.     7.99.6
1012    நின்றவிம் மாதவத் தையொழிப்
    பான்சென் றணைந்துமிகப்
    பொங்கிய பூங்கணை வேள்பொடி
    யாக விழித்தலென்னே
    பங்கய மாமலர் மேன்மது
    வுண்டுவண் தேன்முரலச்
    செங்கயல் பாய்வயல் சூழ்திரு
    நாகேச் சரத்தானே.     7.99.7
1013    வரியர நாண தாகமா
    மேரு வில்லதாக
    அரியன முப்புரங் கள்ளவை
    யாரழ லூட்டலென்னே
    விரிதரு மல்லிகை யும்மலர்ச்
    சண்பக மும்மளைந்து
    திரிதரு வண்டுபண் செய்திரு
    நாகேச் சரத்தானே.     7.99.8
1014    அங்கியல் யோகுதன் னையழிப்
    பான்சென் றணைந்துமிகப்
    பொங்கிய பூங்கணை வேள்பொடி
    யாக விழித்தலென்னே
    பங்கய மாமலர் மேல்மது
    வுண்டுபண் வண்டறையச்
    செங்கயல் நின்றுக ளுந்திரு
    நாகேச் சரத்தானே.     7.99.9
1015    குண்டரைக் கூறையின் றித்திரி
    யுஞ்சமண் சாக்கியப்பேய்
    மிண்டரைக் கண்டதன் மைவிர
    வாகிய தென்னைகொலோ
    தொண்டிரைத் துவணங் கித்தொழில்
    பூண்டடி யார்பரவுந்
    தெண்டிரைத் தண்வயல் சூழ்திரு
    நாகேச் சரத்தானே.     7.99.10
1016    கொங்கணை வண்டரற் றக்குயி
    லும்மயி லும்பயிலுந்
    தெங்கணை பூம்பொழில் சூழ்திரு
    நாகேச் சரத்தானை
    வங்கம் மலிகடல் சூழ்வயல்
    நாவலா ரூரன்சொன்ன
    பங்கமில் பாடல்வல் லாரவர்
    தம்வினை பற்றறுமே.     7.99.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர்,
தேவியார் - குன்றமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.100 திருநொடித்தான்மலை
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

1017    தானெனை முன்படைத் தானத
    றிந்துதன் பொன்னடிக்கே
    நானென பாடலந் தோநாயி
    னேனைப் பொருட்படுத்து
    வானெனை வந்தெதிர் கொள்ளமத்
    தயானை அருள்புரிந்து
    ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்
    தான்மலை உத்தமனே.     7.100.1
1018    ஆனை உரித்த பகைஅடி
    யேனொடு மீளக்கொலோ
    ஊனை உயிர்வெருட் டிஒள்ளி
    யானை நினைந்திருந்தேன்
    வானை மதித்தம ரர்வலஞ்
    செய்தெனை ஏறவைக்க
    ஆனை அருள்புரிந் தான்நொடித்
    தான்மலை உத்தமனே.     7.100.2
1019    மந்திரம் ஒன்றறி யேன்மனை
    வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
    சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந்
    தொண்டனெனை
    அந்தர மால்விசும் பில்அழ
    கானை அருள்புரிந்த
    துந்தர மோநெஞ்ச மேநொடித்
    தான்மலை உத்தமனே.     7.100.3
1020    வாழ்வை உகந்தநெஞ் சேமட
    வார்தங்கள் வல்வினைப்பட்
    டாழ முகந்தவென் னைஅது
    மாற்றி அமரரெல்லாஞ்
    சூழ அருள்புரிந் துதொண்ட
    னேன்பரம் அல்லதொரு
    வேழம் அருள்புரிந் தான்நொடித்
    தான்மலை உத்தமனே.     7.100.4
1021    மண்ணுல கிற்பிறந் துநும்மை
    வாழ்த்தும் வழியடியார்
    பொன்னுல கம்பெறு தல்தொண்ட
    னேனின்று கண்டொழிந்தேன்
    விண்ணுல கத்தவர் கள்விரும்
    பவெள்ளை யானையின்மேல்
    என்னுடல் காட்டுவித் தான்நொடித்
    தான்மலை உத்தமனே.     7.100.5
1022    அஞ்சினை ஒன்றிநின் றுஅலர்
    கொண்டடி சேர்வறியா
    வஞ்சனை யென்மன மேவைகி
    வானநன் னாடர்முன்னே
    துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட
    னேன்பர மல்லதொரு
    வெஞ்சின ஆனைதந் தான்நொடித்
    தான்மலை உத்தமனே.     7.100.6
1023    நிலைகெட விண்ணதி ரநில
    மெங்கும் அதிர்ந்தசைய
    மலையிடை யானையே றிவழி
    யேவரு வேன்எதிரே
    அலைகட லால்அரை யன்அலர்
    கொண்டுமுன் வந்திறைஞ்ச
    உலையணை யாதவண் ணம்நொடித்
    தான்மலை உத்தமனே.     7.100.7
1024    அரவொலி ஆகமங் கள்அறி
    வாரறி தோத்திரங்கள்
    விரவிய வேதஒ லிவிண்ணெ
    லாம்வந் தெதிர்ந்திசைப்ப
    வரமலி வாணன்வந் துவழி
    தந்தெனக் கேறுவதோர்
    சிரமலி யானைதந் தான்நொடித்
    தான்மலை உத்தமேனே.     7.100.8
1025    இந்திரன் மால்பிர மன்னெழி
    லார்மிகு தேவரெல்லாம்
    வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த
    யானை அருள்புரிந்து
    மந்திர மாமுனி வர்இவ னாரென
    எம்பெருமன்
    நந்தமர் ஊரனென் றான்நொடித்
    தான்மலை உத்தமனே.     7.100.9
1026    ஊழிதோ றூழிமுற் றுமுயர்
    பொன்னொடித் தான்மலையைச்
    சூழிசை யின்கரும் பின்சுவை
    நாவல ஊரன்சொன்ன
    ஏழிசை இன்றமி ழால்இசைந்
    தேத்திய பத்தினையும்
    ஆழி கடலரை யாஅஞ்சை
    யப்பர்க் கறிவிப்பதே.
    * நொடித்தான்மலையென்பது - கயிலைமலை.    7.100.10

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.