இண்டர்போல் அமைப்பின் பிரசாரத் தூதராக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச அளவில் நடைபெறும் ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், கள்ளநோட்டு கும்பல், இணையதள மோசடி மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக இண்டர்போல் அமைப்பு துப்பறிந்து, மேற்படி குற்றங்களை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த அமைப்பின் பிரசாரத் தூதர்களாக பிரபல ஹாலிவுட் அதிரடி மன்னன் ஜாக்கி சான், கால்பந்தாட்ட வீரர் லியோனெல் மெசி, பார்முலா ஒன் கார் பந்தய வீரர்களான ஃபெர்ணான்டோ அலோன்சோ மற்றும் கிமி ரெய்க்கோனென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தற்போது பாலிவுட் கதாநாயகனும் உலகம் முழுவதும் பிரபலமான நடிகருமான ஷாருக் கானை மற்றுமொரு பிரசாரத் தூதராக இண்டர்போல் நியமித்துள்ளது.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஷாருக் கான், இண்டர்போலின் பிரசாரத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதை நான் மிகச் சிறந்த கவுரவமாக கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
|