இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் ஒரு காதல் கதையைப் படமாக்கத் திட்டமிட்டார். இதில் சிம்புவும், த்ரிஷாவும் நடிக்க ஒப்பந்தம் ஆனார்கள்.
இப்படத்துக்கு அலைவரிசை என டைட்டிலும் வைத்தனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக சொல்லப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்தக் காரணமும் சொல்லப்படாமலேயே படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், சிம்புவை வைத்து செல்வராகவன் ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து தனுஷ் மேலும் கூறியதாவது, அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி சிம்பு நடிக்க இருக்கிறார். இந்தப் படம் மிக சிறப்பானதாக அமையும். சிம்பு, மிகச்சிறந்தவரிடமிருந்து கற்றுக்கொள்ள தயாராகுங்கள். சகோதரர்களுக்கு வாழ்த்துகள். என்று தனுஷ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய படத்தின் நடிகை, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கவில்லை. ஏற்கெனவே ஒப்பந்தம் ஆன த்ரிஷாவும், யுவனும் படத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|