சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் - தன்னை விழைந்தார்க்கு முன்இல்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ள புகழையும் கெடுக்கும் சூதுபோல்; வறுமை தருவது ஒன்று இல் - நல்குரவினைக் கொடுக்க வல்லது பிறிதொன்று இல்லை.(அத்துன்பங்கள் முன்னர்க் கூறுப. நல்வினைகளையும் நல்லினத்தையும் நீக்கித் தீவினைகளையும் தீயினத்தையும்கூட்டுதலால், 'சீர் அழிக்கும்' என்றார். வறுமைக்கு எல்லையாவர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
துன்பமாயின பலவற்றையுஞ் செய்து தலைமையை யழிக்கும் சூதுபோல வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை.
தேவநேயப் பாவாணர் உரை:
பல சிறுமை செய்து சீர் அழிக்கும் சூதின் - பல்வேறு இழிவுதருந்துன்பங்களைச் செய்து, உள்ள பெருமையையுங் கெடுக்கும் சூதாட்டத்தைப்போல; வறுமை தருவது ஒன்றுஇல் - கொடிய வறுமையைத் தரக்கூடியது வேறொன்றுமில்லை. நளன்போல் மக்களைவிட்டுப் பிரிவதும்,காதல் மனைவியைக் காட்டில் விட்டு நீங்குவதும் ; பாண்டவர் போல் மனைவியையும் பணையமாக வைத்திழப்பதும்; பகைவர் அவள் கூந்தலைப்பிடித்து அம்பலத்திற்கு இழுத்து வந்து மானக்கேடாய்ப் பேசி துகிலுரியப் பார்த்திருப்பதும், வென்றவர்க்கு அடிமையராகி மேலாடையைக் களைவதும், பல்வகைச் சிறுமைகளாம். சூது ஐம்பெருங் குற்றங்களுள் ஒன்றாதலாலும், அதையாடுவோர் தீயோரொடு சேர்த்து எண்ணப்படுவதாலும், தோற்றவர் நாட்டையும் செல்வத்தையும் இழத்தலாலும், 'சீரழிக்கும்' என்றார்.
கலைஞர் உரை:
பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.
Translation
Gaming brings many woes, and ruins fair renown;
Nothing to want brings men so surely down.
Explanation
Gaming brings many woes, and ruins fair renown;
Nothing to want brings men so surely down.There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.
Transliteration
Sirumai Palaseydhu Seerazhikkum Soodhin
Varumai Tharuvadhondru Il
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்