LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- மகுடபதி

சித்தப் பிரமை

                                    சித்தப் பிரமை

 செந்திருவைக் காண வேண்டுமென்று பங்கஜம் துடிதுடித்தான்.

     அவளுடைய ஆவலுக்கு இப்போது புதிய ஒரு காரணம் சேர்ந்து கொண்டது. அந்தக் காரணம் மகுடபதி தான்!

     அந்த நிமிஷத்தில் பங்கஜம் செந்திருவைப் பார்த்திருந்தால், அவளுடைய கஷ்டங்களைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தைகூடக் கேட்டிருக்கமாட்டாள். "அடி-பொல்லாத திருடி! உனக்குக் கதை பிடிக்காது. காதல் பிடிக்காது. கல்யாணம் பிடிக்காது என்று சொல்லிக் கொண்டிருந்தாயே? கன்னிப் பெண்ணாகவே இருந்து, பள்ளிக்கூட மிஸ்ட்ரஸ் வேலைக்குப் போவதாகச் சொன்னாயே? கடைசியில், இப்படிச் செய்தாய், பார்த்தாயா? சாதுவைப் போல் இருப்பவர்களை நம்பவே கூடாது; பொல்லாத கள்ளி!" என்று அவள் கன்னத்தை இடித்திருப்பாள். இன்னும் அவளுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு, "அடிபெண்ணே! செந்திரு! அவன் எப்படியடி இருப்பான்? முதன் முதலில் நீங்கள் எங்கே பார்த்துக் கொண்டீர்கள்? யார் முதலில் பேசியது? நீயா? அவனா? நீ என்ன சொன்னாய்? அவன் என்ன பதில் சொன்னான்? எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உன் தலையில் மூன்று குட்டுக் குட்டுவேன்!" என்று உண்மையாகவே தலையில் குட்டிக் காட்டியிருப்பாள்.

     இப்படியாகச் செந்திருவிடம் பேசவேண்டும், கேட்க வேண்டும் என்றெல்லாம் பங்கஜத்துக்கு ஆவல் பொங்கிற்று. மேலே நாவல் எழுதுவதற்குக்கூட அவளுக்கு ஓடவில்லை. நாவலாவது, மண்ணாங்கட்டியாவது? தன்னுடைய சிநேகிதி, இணைபிரியாத பள்ளிக்கூடத் தோழி - கதை, காதல் என்று பேசினால், பிடிக்காமல் முகத்தைச் சிணுக்கியவள் - அவள் அல்லவா இப்போது பெரிய கதாநாயகி ஆகிவிட்டாள்? செந்திருவுக்கு ஒரு காதலன் - அவளுக்காக அவன் தன் உயிரைக்கூடத் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறான்! என்ன அதிசயம்? செந்திருவை மட்டுமில்லை - மகுடபதியைப் பார்க்க வேண்டுமென்று கூடப் பங்கஜம் ரொம்பவும் ஆவல் கொண்டாள். அவன் எப்படி இருப்பான்? சிறு பிள்ளையாய், லட்சணமாய் இருப்பானா? மீசையும் கீசையுமாய்ப் பயங்கரமா யிருப்பானா? கிராப்புத் தலையா? குடுமியா? உச்சிக் குடுமியா? காந்திக் கட்சியைச் சேர்ந்தவன் என்றால், ஒருவேளை தாடி கூட வளர்த்துக் கொண்டிருப்பானோ? சீச்சீ! ஒரு நாளும் இராது. செந்திருவைப் போன்ற அழகியின் காதலுக்கு உகந்தவனாகத்தான் அவன் இருப்பான். எல்லாம் கொஞ்ச நேரத்தில் தெரிந்து போகிறது. அப்பாவும் போலீஸ் மாமாவுந்தான் செந்திருவைக் கையோடு கூட்டிக் கொண்டு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்களே? ஆனால் ஏன் இன்னும் அவர்கள் வரவில்லை?

     இவ்விதமெல்லாம் பங்கஜம் இரவு பத்து மணி சுமாருக்குத் தன்னுடைய அறையில் தனிமையாக உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் மற்ற எல்லாரும் இரவுச் சாப்பாடு முடிந்து படுத்துக் கொண்டு விட்டார்கள். பங்கஜம் மட்டும், நாவல் எழுதப் போவதாகச் சொல்லிவிட்டுத் தன்னுடைய அறைக்கு வந்தாள். அவள் மேஜையின் மேல் மூடியிட்ட விளக்கும், விரித்த காகிதமும், பேனாவும் இருந்தன. ஆனால், காகிதத்தின் தலைப்பில்.

 

நாற்பத்தேழாம் அத்தியாயம்

மாய மனிதன்

என்று போட்டிருந்ததைத் தவிர, அதன் கீழே ஒரு வரிகூட எழுதப்படவில்லை.

     கடிகாரத்தின் மணி பத்து டாண், டாண் என்று அடித்த போது, வாசலில் வண்டிச் சத்தம் கேட்டது. பங்கஜம் அவசரமாக விரைந்து வாசற் பக்கம் சென்றாள். சாலையில் நின்ற மோட்டாரிலிருந்து அவளுடைய தகப்பனார் இறங்கி வருவதைக் கண்டாள். வேறு ஒருவரும் வண்டியிலிருந்து இறங்கவில்லை. காரிலிருந்தபடியே போலீஸ் மாமா "குட் நைட்" என்றார். வண்டி போய் விட்டது. 

     அய்யாசாமி முதலியார் பங்களா வாசலுக்கு வந்ததும், பங்கஜம் அவர் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, "என்ன சேதி, அப்பா! செந்திருவைப் பார்த்தீர்களா? எங்கே பார்த்தீர்கள்? எப்படி இருக்கிறாள்? சௌக்கியமா யிருக்கிறாளா? ஏன் அவளை அழைத்து வரவில்லை? அவர்கள் விடமாட்டேன் என்று சொல்லிவிட்டார்களா? என்ன பேசாமல் இருக்கிறீர்களே? ஒன்றும் சொல்லவே மாட்டேன் என்கிறீர்களே?" என்று சரமாரியாய் கேள்விகளைப் பொழிந்தாள்.

     "நீ இடங் கொடுத்தால்தானே அம்மா, நான் பேசலாம்? எல்லாம் சாவகாசமாய்ச் சொல்கிறேன். உன்னுடைய அறைக்குப் போகலாம் வா!" என்றார் அய்யாசாமி முதலியார்.

     "இதை மாத்திரம் சொல்லி விடுங்கள். அப்புறம் அனுஷ்டானம் செய்து சாப்பிட்டுவிட்டு எல்லாம் விவரமாய்ச் சொல்லலாம். செந்திருவைப் பார்த்தீர்களா?" என்று பங்கஜம் பரபரப்புடன் கேட்டாள்.

     "சௌக்கியந்தான் - ஒரு மாதிரியாக. அனுஷ்டானம் சாப்பாடு எல்லாம் ஆகிவிட்டன. அம்மாவை எழுப்ப வேண்டாம். உன் அறைக்குப் போகலாம், வா! எல்லாம் விவரமாய்ச் சொல்கிறேன்" என்றார் முதலியார்.

     இருவரும் பங்கஜத்தின் அறைக்குப் போனார்கள். முதலியார் ஈஸிசேரில் சாய்ந்து கொண்டார். அவர் அருகில் ஒரு சின்ன நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு பங்கஜம் உட்காந்தாள். 

     "என்ன, அப்பா, ஒரு மாதிரியா 'சௌக்கியம்' என்கிறீர்களோ? ரொம்பக் கவலையாயிருக்கிறதே!" என்றாள்.

     "நாம் கவலைப்பட்டு அவளுக்கு ஒன்றும் செய்வதற்கில்லை, அம்மா! எல்லாம் தலையில் எழுதின எழுத்துப்படிதானே நடக்கும்! பாவம், மருதாசலக் கவுண்டர் எவ்வளவோ உத்தமமான மனுஷர், அவர் குடும்பம் ஏன் இப்படி துரதிஷ்டமாகப் போக வேண்டும்!"

     "என்ன, அப்பா, அவளுக்கு? சொல்ல மாட்டேன் என்கிறீர்களே? அந்தக் கடுதாசி அவள் எங்கிருந்து எழுதினாளாம்?"

     "அந்தக் கடுதாசைப் பற்றி நாம் காபரா அடைந்ததெல்லாம் வீண்..."

     "அப்படியா?"

     "ஆமாம், இன்று காலையில் நாங்கள் இங்கிருந்து கிளம்பியதிலிருந்து நடந்ததை எல்லாம் சொல்லி விடுகிறேன், கேள். நானும், ராவ்பகதூரும் நேரே சிங்கமேட்டுக்குப் போனோம். செந்திருவின் சித்தப்பா ஊரில்தான் இருந்தார். அவரோடு கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டரும் இருந்தார். கள்ளிப்பட்டிக் கவுண்டர் ரொம்பப் பொல்லாதவர் என்று எல்லோரும் செல்வதுண்டு. ஆனால், ஒரு பொல்லாத்தனத்தையும் நாங்கள் காணவில்லை. பேரூருக்குக்கூட வந்திருந்து என்னுடைய உபந்நியாசத்தை அவர் கேட்டாராம்."

     "செந்திரு இப்போது சிங்கமேட்டிலேதான் இருக்கிறாளா, அப்பா? நானாவது போய்ப் பார்க்கலாமா?"

     "இதற்குள் அவசரப்படுகிறாயே? எங்களை ரொம்பவும் மரியாதையுடன் வரவேற்று உபசாரம் செய்தார்கள். செந்திருவின் விஷயத்தை எப்படிக் கேட்பது என்று நாங்கள் தயங்கிக் கொண்டிருக்கையில், கள்ளிப்பட்டிக் கவுண்டரே அந்தப் பேச்சை எடுத்து விட்டார். 'நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். இந்தக் கடிதம் விஷயமாகத் தான் வந்திருக்கிறீர்கள்!' என்று ஒரு கடிதத்தை எடுத்துப் போட்டார். அது செந்திருவின் கடிதந்தான். குழந்தை! உன்னுடைய ஞாபக சக்தி சில விஷயங்களில் அபாரமாயிருக்கிறது. கிட்டத்தட்ட நீ எழுதிக் காட்டினபடியே இருந்தது" என்று சொல்லி, முதலியார் பங்கஜத்தைப் பெருமையுடன் பார்த்தார்.

     "இருக்கட்டும், அப்பா! செந்திருவைப் பார்த்தீர்களா, இல்லையா?"

     "அதுதானே, சொல்லப் போகிறேன்? கேட்டுக் கொண்டே வா. கள்ளிப்பட்டிக் கவுண்டர் பிறகு என்ன சொன்னார் தெரியுமா? எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. 'இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறது ஒரு மாதிரி உண்மை தான். அந்தப் பெண்ணை ஜெயிலில்தான் வைத்திருக்கிறது. நீங்கள் விடுதலை செய்து கொண்டு போவதாயிருந்தால் ரொம்ப சந்தோஷம். நாங்கள் குறுகே நிற்கவில்லை. அதனால் ஏதாவது விபரீதம், உயிர்ச்சேதம் நேர்ந்தால் மட்டும் எங்களைப் பொறுப்பாக்காதீர்கள்! அந்தப் பெண்ணை விடுதலை செய்துகொண்டு போக நீங்கள் இரண்டு பேர் போதாது என்று எனக்குத் தோன்றுகிறது. இன்னும் ஏழெட்டுப் பலசாலிகளான மனிதர்களாவது வேண்டும். அப்புறம் உங்கள் இஷ்டம்' என்று கள்ளிப்பட்டிக் கவுண்டர் சொன்னார். அவர் சொன்னதின் அர்த்தம் எங்களுக்குத் தெரிந்ததும், ரொம்பவும் துக்கம் உண்டாயிற்று."

     பங்கஜம் வியப்புடனும் பயத்துடனும் "என்ன, அப்பா அவர் சொன்னதின் அர்த்தம்? எனக்குப் புரியவில்லையே?" என்றாள்.

     "நீ வீணாக வருத்தப்படாதே, பங்கஜம்! விதிக்கு யார் என்ன செய்யலாம்? உன் சிநேகிதிக்குச் சித்தப் பிரமை; அதுவும் ரொம்பக் கடுமையான பிரமை!..."

     "இல்லவே இல்லை; இருக்கவே இருக்காது" என்று கத்தினாள் பங்கஜம்.

     "இல்லாமலிருந்தால் நல்லதுதான்; ஆனால், இருக்கிறதை இல்லையென்று எப்படிச் சொல்லமுடியும்?"

     "அவர்கள் சொன்னதுதானே? நீங்கள் நேரில் பார்க்கவில்லையே?"

     "இப்படிக் கேட்பாய் என்று எனக்குத் தெரியும். ஆகையினால்தான், கள்ளிப்பட்டிக் கவுண்டர் 'நேரில் காட்டிவிடுகிறேன்' என்று சொன்னபோது நான் சரி என்றேன். ராவ்பகதூர் பிள்ளைக்குக் கூட அவ்வளவு இஷ்டமில்லை. 'இவர்கள் சொல்கிறது போதாதா? நாம் திரும்பிவிடலாம்' என்றார், நான் தான் போய்ப் பார்த்து விடலாம் என்று வற்புறுத்தினேன். மருதாசலக் கவுண்டருக்கும் எனக்கும் இருந்த சிநேகிதத்தைச் சொல்லி, அந்தப் பெண்ணை கண்ணாலேயாவது பார்த்துவிட்டு வரலாம் என்றேன். பார்க்காமல் போனால், நீ என்னை இலேசில் விடமாட்டாய் என்றும் சொல்லி வைத்தேன். மத்தியானம் சாப்பிட்ட பிறகு எல்லோருமாகக் கிளம்பினோம்..."

     "எங்கே கிளம்பினீர்கள்? அப்படியானால், செந்திரு சிங்கமேட்டில் இல்லையா?"

     "பத்து நாளைக்கு முன்பு வரையில் சிங்கமேட்டில் தான் இருந்தாளாம். ஒரு நாளைக்குத் திடீரென்று கிளம்பி ஒருவருக்கும் தெரியாமல் கோயமுத்தூருக்கு ஓடி வந்திருக்கிறாள். ஓடி வந்த இடத்தில் உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள். அந்தச் சமயம் மட்டும் நாம் ஊரில் இருந்திருந்தால் இவ்வளவு தடபுடல் ஏற்பட்டிராது..."

     "என்ன, அப்பா, சொல்கிறீர்கள்? சித்தப் பிரமையோடேயா இந்த ஊருக்கு வந்தாள்?"

     "ஆமாம், குழந்தை, ஆமாம்! அந்தச் சமயம் அவ்வளவு அதிகம் இல்லையாம். வீட்டில் சாதாரணமாய் நடமாட விட்டிருந்தார்களாம். ஒருவரும் கவனிக்காத சமயம் பார்த்து வீட்டை விட்டுக் கிளம்பி விட்டாளாம். பெரியண்ணன் என்கிற அவர்களுடைய வீட்டு வேலைக்காரன் அவளைத் தேடிக் கொண்டு கிளம்பி வந்து, ரயில்வே ஸ்டேஷனில் அவள் ரயில் ஏறுகிற சமயத்தில் கண்டுபிடித்தானாம். இரண்டு பேருமாக இந்த ஊருக்கு வந்தார்களாம். இங்கே சிங்கமேட்டுக் கவுண்டர் வீட்டிற்கு மெதுவாகத் தாஜா பண்ணி அவளை அழைத்துக் கொண்டு போனானாம் அந்தப் பெரியண்ணன். வீட்டின் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, அந்த வீட்டிலேயே அவள் இராத்திரி இருக்க வேண்டுமென்று சொன்னதுந்தான், கத்தியை எடுத்து அவனைக் குத்திவிட்டாளாம்...!"

by C.Malarvizhi   on 01 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.