|
||||||||
சிவஞான சித்தியார் பகுதி -2 |
||||||||
பரபக்கம்
சௌத்திராந்திகன் மத மறுதலை
அனைத்தினையும் உணர்ந்தானெம் இறைவ
னென்றிங் கறியாது புத்தநீ அறைந்தா யென்றும்,
அனைத்தினையும் அறிந்திடான் அளவி லாமை
ஒன்றொன்றா அனைத்தினையும் அறிந்தா னென்னின்,
அனைத்தினையும் அளவிறந்த தென்ன வேண்டா
அளவிலா ஞானத்தால் அறியின் ஞானம்,
அனைத்தினையும் அறியாது கணத்தில் தோன்றி
அழிதலால் அறிந்த மையின் றாகு மன்றே.
95
சிலபொருளை அறிந்தவற்றின் திறத்தே யொட்டிச்
சிந்திப்பன் எப்பொருளும் என்னிற் சென்று,
பலபொருளாய் ஒன்றுபல பேத மாகிப் பயின்றுவரு
மாதலாற் பார்க்கு மாறென்,
உலகுதனில் ஒருபொருளங் குணரும் போதின்
உற்றுணர்தல் ஆராய்தல் தௌ¤த லுண்டாய்,
நிலவுமத னால் உணர்வு பன்மை முன்பின்
நின்றிடா நின்பையெல்லாம் நினைப்ப தெங்கே.
96
முத்திநிலம் கண்டறங்கள் மொழிந்தா னாயின்
முதல் முழுதும் பொன்றிப்பின் மொழிந்த வண்ணம்,
ஒத்திடுந்தேன் நெய்கூட்டி உண்டிறந்தோன்
ஒருவன் உலகினில்வந் திதுதீதென் றுரைத்தால் ஒக்கும்,
செத்ததுபின் னென் றுரைக்கில் கதியில்
செல்லாத் தேரனுரை நீர்பெருகிச் சென்றா றாகும்,
அத்தினள வறியாதிக் கரையோர் தம்மை
யக்கரைக்கே செல்லவிடும் ஆசை யாமே.
97
நீர்போல நின்றுயிர்கட் களித்தி டாதே
நெருப்பாய துயர்ப்பிறப்பின் நிகழ்ந்து நின்று,
பாரோருக் களித்தபடி வலையிற் பட்ட
பலகலைமான் கண்டொருநீள் கலைபாய்ந் தோடி
நேரேசென் றவ்வலைக்கே நேர்ந்தா
லொக்கும் நீள்பாவக் குழியில்விழு நீர்மை யாகும்,
ஆரோவிங் கவனொப்பார் அறத்தை
யாக்கப் பிறந்தறமாக் கினனென்னில் அடங்க வாமே.
98
அலகிறந்த யோனிகளில் புகுந்த தெல்லாம்
அறத்தை அளித் திடவென்னில் அவற்றி னெல்லாம்,
நிலவுவது கன்மத்தா லாகு மன்றி
நினைந்ததோர் இச்சையினால் நிகழ்ந்தா னாகில்,
உலகுதனி லுள்ளோர்க்கும் அதுவே யாகும்
ஒருத்தி வயிற் றினிலிருந்தங் குதரந் தள்ளித்,
தலமதில்வந் தானென்னில் தாயைக்
கொன்றான் தருமத்தை யின்றெனக்குச் சாற்றி டேலே.
99
அரியினொடு நரிஉழுவை ஆதி யாக
ஆனபோ தறந் திரிந்து கோற லாதி,
பரிவினொடும் செய்தனனாம் இல்லை
யாகிற் பசிதனக்குத் தின்பதவன் பழுதை யோதான்,
கருதிலவன் பரதுக்க துக்க னாகிற்
கணவனிழந் தோர்கட்குங் கண்ணி குத்தித்,
திரியுமவர் துயரினுக்கும் இரங்கு வோன்றன்
செயலறத்துக் கழகியதாஞ் செப்புங் காலே.
100
ஒருபொருளைத் தேடிஅதற் குரையுந் தேடி
உரைப்பதன்முன் உணர்விறக்கும் உனக்கு நூலென்,
மருவிவருஞ் சந்தான வழியில் என்னில்
வாயுரைத்த தேயுரைத்து வழங்குமாகும்,
பெருகுவது கெட்டென்னில் அதுபோ
லாம்பின் பித்துரைத்த தறியாது பேதை சொல்லும்,
தருவது நூல் எப்பரிசு முதல்நடுவோ
டிறுதி தான் விருத்த மின்றியது சாற்றி டாயே.
101
முன்னாகப் பலஅறங்கள் பூரித்தெம் இறைவன்
முழு துணர்ந்திங் கருளினால் உயிர்கள் முத்தி அடையப்,
பின்னாகப் பிடகநூல் உரைத்தா னென்று
பேசினாய் இவன்முன்பு பேரறங்கள் புரிநூல்,
சொன்னரார் இவனைப்போன் முன்னொருவன்
என்னில் அவனுக்குச் சொன்னாரார் எனத்தொடர்ச்சியாகி,
அன்னாய்பின் அனவத்தைப் படுமொருவன்
இன்றாம் ஆரோஉன் பாழியிருப் பார்இதனை அறையே.
102
இந்நூலைச் சொன்னவன்தான் இங்கிருந்தா
னென்னில் இவனிருத்தி யேத்துமவன் எங்கிருந்தா னெவனோ,
அந்நூலோ குருவந்த அடைவுமுனக் கில்லை
அடைவுதரின் முடிவின்கண் அநாதி போதன்,
சொன்னானாம் அவையேதா கமங்க ளாகுஞ்
சுருக்கியூன் தவம்புரியச் சொல்லுவ தெல்லோரும்,
உன்நூல்கண் கழுவாதே உதிப்ப தன்முன்
புலாலோ டுண்பானோர் ஊன்பிரிய னுரைத்ததொரு நூலோ.
103
முன்நூலும் வழிநூலும் சார்பு நூலும்
மூன்றாகும். உலகத்து மொழிந்த நூல்கள்,
இந்நூலில் உன்நூலிங் கெந்நூ லென்னில்
இந்நூல்கா ணென்நூலென் றியம்ப மாட்டாய்,
உன்நூலும் ஒருநூலாய் உரைப்ப தென்னே
உலட்டுநூல் பருத்திநூல் சிலம்பி நூல்கள்,
அந்நூலு மல்லாதே பொய்ந் நூல்
கொண்டிங் கறநோற்றுத் திரிந்தவா றழகி தாமே.
104
புத்தனவன் பொன்றக்கெட் டுப்போனா னென்று
போற்றுவதிங் காரைநீ பொய்த்தவஞ்செய் புத்தா,
செத்த வர்க்குச் சிலகிரியை செய்ய இங்குச்
செய்தவர்க்கும் புண்ணியமா மென்று செப்பின்,
நித்தமுயி ராதலாற் பலிக்குஞ் செய்தி
நினைந்துதரு வானுமுளன் உனக்கிவ்வா றில்லை,
வைத்தசுடர்த் தீபமற மாய்ந்தக்கா
லதற்கு மருவுதிரி நெய் கூட்டு மதிகேடுன் வழக்கே.
105
நூலுரைத்தான் ஒருவனுளன் என்றநுமா
னத்தால் நூல்கொண்டிங் கறிந்தாற்போல் நூலா நூலின்,
பாலுரைத்த பொருள்களெல்லாம் அநுமான
மென்னிற் பரலோக பாதாள லோகங்க ளொருசொல்,
லாலுரைத்த நூலின்றி அறையா யின்றேல்
அவையறிந்த படியெனுன தநுமான மன்றே,
மேலுரைக்கும் பிரமாண முனக்கில்லை
காட்சி யநுமானம் விட்டபொருள் விளக்குவதா கமமே.
106
எப்பொருளும் அநித்தமென இயம்பிடுவை
அநித்தம் இல்லதற்கோ உள்ளதற்கோ உளதிலதா னதற்கோ,
செப்பி டின்இல் லதற்கில்ல தென்று மில்லை
சென்றடைவ துள்ளதற்கேல் உள்ளதென்று முண்டாம்,
அப்படிதான் உளதிலதாம் அப்பொருளுக்
கென்னில் உளதிலதா காதிலதும் உள்ள தாகா,
திப்பொருளுக் கநித்தமிலை என்றொன்றைக்
காட்டாய் எனில்தோன்றும் பொருள்நின்றிங் கிறுதி யாமே.
107
அங்குரம்வித் தின்கேட்டில் தோன்றுமது போல
அனைத்துருவுங் கெட்டுவழி யாகு மென்னின்,
அங்கவற்றுக் காக்கக்கே டறைந்தா யெல்லாம்.
அநித்தமெனும் உரைமறந்தாய் அருகனுமா னாய்நீ,
இங்குமுளை யிலைமரமாய் எழுந்தீண்டிச்
செல்லா திறந்ததே எழுந்தபடி நில்லா தென்னின்,
மங்கியிடா தேபால தருணவிருத் தையாய்
வரும்வடிவு திரிந்து நின்று மாயுங் காணே.
108
உடல்பூத மெனில்ஒன்றுக் கொன்றுபகை
ஒன்றா வுதிரசுக் கிலமென்னின் மரத்தினுளுக் கல்லி,
னிடமாகத் தவளையுரு வந்தவா றியம்பாய்
இருவினைகா ணெனின்வினைக ளிரண் டுருவாய் நிற்கும்,
திடமாக வன்னமுரு வெனின்உண்ண
வுண்ணச் சென்றுவள ருங்காயந் தேயமுணர் வென்னின்,
மடவோனே அருவுணர்விங் கசேதனமாய்
உருவாய் வளராது வருமில்லா தெனின்மலர்வான் வருமே.
109
என்றுமிலா தொன்றின்றாய் வருமுருவம்
வித்தின் எழுரம்போ லெனின்வித்தி னுண்டாய்நின் றெழுங்காண்,
நின்றதேல் வித்தின்மரங் கண்டதில்லை
யென்னின் நெற்கமுகாய் நீளாது நெல்லாயே நீளும்,
ஒன்றிலொன்றங் கிலாமையினா லுதியாகா
ரணம்பெற் றுதிப்பதுகா ரியமதுவ முன்னதாகும்,
மன்றமதிக் கலைபோலக் கந்த மைந்து
மருவியுள தெனும்உரையும் மறந்தனையோ இன்றே.
110
உருவமெலாம் பூதவுபா தாய சுத்தாட்
டகவுருவ மென்னின் நீ உலவத்துக்கு,
மருவும்அன லோடுநீர் மண்கந்த மிரதம்
வன்னம்இலை வன்னிக்கு வளிநீர்மண் வாசந்,
தருமிரத மிலைநீர்க்குத் தழல்கால்மண்
கந்தந் தானில்லைத் தலத்தினுக்குச் சலமனல்கால் கூடி,
வருவதிலை இந்திரிய விடயமான
மாபூதங் களுமறியாய் மதிகெட்டாயே.
111
மருத்தெண்ணெய் தனின்மருந்து நின்றாற்
போல மறைந்தெட்டும் சூக்குமமாய் மருவு மென்னில்,
திருத்துமவன் மருந்தெண்ணெய் சேர்த்தாற்
போலச் சேர்ப்ப வன்வே றுண்டெல்லா வுருவும் எட்டும்,
பொருத்தியதே லொருதன்மை யாம்பொருள்க
ளொன்றின் குணமொன்றிற் புகாதறைகை பொருளறியாய் பூத,
உருப்பொருள்வே றுபாதாயப் பொருள்வேறு
காட்டா யுபாதாயம் பூதகுணங் குண குணியா முலகே.
112
அழிந்துணர்வை உணர்வுதரு மெனின்அழிந்த
தக்கா தாமுணர்விற் பொருள்வினைகள் அணையா வாகும்,
அழிந்திடுவ தாக்கியெனின் முன்னொருகா
லத்தே அறிவிரண்டு நில்லாதங் கறக்கே டின்றி,
அழிந்துணர்வை உணர்வுதரு மெனின்நித்தா
நித்தம் அடையும்உணர் வுக்கநித்த மாயே செல்லா,
தழிந்தெருவை ஆக்குவது போலாக்கு
மென்னின் ஆம்பொருள்வே றழிந்துசத்தி கிடந்தாக்கும் அவையே.
113
கேடிலாச் சந்தானத் தேபலிக்கு மென்று
கிளக்கும்நீ சந்தானம் நித்த மாகும்,
ஓடுநீர் போழிந்தா முணர்வொழுக்கை
மென்னின் ஒழுகுநீ ரிட்டதெல்லா முடன்கழிதல் போலத்
தேடுபொருள சீலம்பா வனைகுறிவிஞ்
ஞானஞ் சென்றவுணர் வோடேகு நின்றுணர்வின் ஏயா,
நீடுநீர் முன்னொழுகிக் கெடாதுநிறைந்
தோடு நிகழுணர்வுங் கேடின்றி நிறைந்து செலுங் காணே.
114
சந்தானங் காரணமோ காரியமோ இரண்டின்
தன்மை யதோ காரணமுங் காரியமும் நித்தம்,
வந்தாருஞ் சந்தானத் தொடர்ச்சியெனின்
அதற்கும் வருநித்தந் தோற்றக்கே டடை தலின்மற் றொன்றேல்,
ஐந்தான கந்தங்க ளன்றாய் நித்தம்
அடைபொருளாம் அறிவும்அறி வடைவு மின்றிச்,
சிந்தா முன் பின்னாகிப் பின்முன் னாகித்
திரிந்துவருந் திரிவறிந்து தேரா தேரே.
115
ஒருகாலத் துணர்வுகெட்டா மெனின்உதிப்பீ
றொன்றாம் ஒருபொருளின் திரிவுனக்குக் கால மானால்,
வருகால நிகழ் காலங் கழிகால மென்று
வழங்குவதென் பொருள்வரவு நிலைகழிவால் இன்றேல்,
திரிகாலம் செப்பிடாய் பொருட் செயலு மொன்றாம்
செயல்மூன்றும் ஒரகணத்தே சேரு மென்னில்,
தருகால மூன்றாகும் தாமரைநூ றிதழில்
தள்ளூசி யுங்கால மூன்றினையந் தருமே.
116
உணர்வுகா ரணமுணர்வுக் கென்னின்
நித்தம் உணர்வுக்குண் டாகிநின் றுணர்வையுதிப் பியாதிங்,
குணர்வுசந் தான விடத் தொழிந்தாற்
பின்னை யுண்டாகா துடலுணர்வுக் குபாதாக மென்னின்,
உணர்வுடலின் இடையறா துதிக்க வேண்டும்
உடலுணர்வின் வினையினால் உணர்வுதிக்கு மென்னில்,
உணர்வுவினை யுளதொடுங்கா துணர்வுதருஞ்
செய்தி உணர்வைவினை தரினொருவன் செயல்வினையின் றாமே.
117
வினையுணர்வு தரும்வினையை உணர்வுதரு
மென்றும் விளம்பின்நீ உணர்வுபோல் வினையி னுக்கு,
நினைவுவரும் ஒன் றையொன்று நிகழ்த்தி
டாபின் நிலையின்மை யானிகழ்த்திக் கெடுதல் செய்யா,
கனல்விறகில் பிறந்ததனைப் பொடிசெய்
தாற்போல் கருத்துவினை யிற்றோன்றிக் கழிக்கும்வினை யென்னின்,
முனமுணர்வு பிறந்தளவே வினைகெடுக்கும்
முன்பின் உதியாது முகிழ்நெருப்பின் விறகுதியா வாறே.
118
பேயுநர கரும்சரரும் பிரமருமாய் உலகிற்
பிதாமாதா ஆதார மொன்று மின்றிக்,
காயமொடு தாம்வருவர் என்றுரைப்பை காயங்
காரியமாய் வருதலினால் காரணமுண் டாகும்,
ஆயுமுணர் வோசுத்த அட்டகமோ கன்மம்
வடித் ததோ வடிவுசெய்து வைத்தாரும் உண்டோ,
ஆயுமுணர் வுண்டாகில் அறைந்திடாய்
உலகுக் காதிதுணை நிமித்தகா ரணமறிவ தறிவே.
119
உருவாகி கந்தங்கள் ஐந்துங் கூடி ஒருவன்வே
றொருவனிலை யென்றுரைக்கும் புத்தா,
உருவாதி ஐந்தினையும் உணர்பவன்வே றென்ன
உணரும்விஞ் ஞானமென்றாய் அஞ்ஞானம் உணர்ந்தவரார்,
உருவாதி பொருள்காட்டித் தனைக் காட்டும் சுடர்போல்
உணர்வுபிறி தினையுணர்த்தித் தனை யுணர்த்து மென்னின்,
உருவாதி பொருளினையும் சுடரினையும் காணும்
உலோசனம்போல் உணர்வுபொருள் உணர்வதுவே றுண்டே.
120
காயமுடன் இந்தியம் மனம்நான் என்று கதறுவாய்
காயம்உறக் கத்தறியா வாகும்,
வாயில்களும் அப்படியி லொன்றையொன்றங் கறியா
மனங்கணத்திற் கெடுங்கால மூன்றின்வர வறியா(து),
ஆயுமறி வாகியுடல் பொறிமனமூன் றறிந்தாங்
கவைநானல் லேனென்றும் அறிந்துமனத் தாலே,
ஏயுமொரு பொருள்கருதி இந்திரியப் பாலே
இசைவித்துக் காயத்தால் இயற்றுவதான் மாவே.
121
கழிந்தஉணர் வேபின்னும் யானறிந்தே னென்று
கருதலினவ் வுணர்வறிந்த தென்னின் முன்னே,
மொழிந்த மொழி நான்மொழிந்தே னென்றால்
வாய்தான் மொழிந்ததோ மொழிந்தவன்வே றானாற் போல,
எழுந்தவுணர் வெல்லாங்கொண் டியானறிந்தே
னென்ற தெதுஅதுகாண் உயிருணர்வால் வாக்கால் மற்றை,
ஒழிந்தகா யந்தன்னால் உணர்ந்துரைத்துச் செய்தங்
குணர்வினுக்கும் ஆதார மாய் நிற்கும் உயிரே.
122
இந்திரிய வீதிஎழுஞ் சித்தம் நெஞ்சத்
தெழுஞ்சித்த மென்றிரண்டு மொன்றுகெட்டே யொன்று,
வந்தெழுவ தெனில்கனவில் கண்டபடி நனவின்
வாய்திறவார் நனவு கண்ட படிகனவிற் காணார்,
அந்தனுரு வன்னங்க ளறிந்திடா னின்றேல்
அறிகனவும் இறந்துணர்வும் அழிந்துறக்கம் அடைந்தால்,
உந்துவதோர் சந்தான மில்லையுணர் வுதிப்ப
உயிர்கனவு நனவினையும் உணருங் காணே.
123
ஒருகாலத் தோரிடத்தில் ஒருணர்வேல் செவிதான்
ஒன்றுணரா திருசெவியும் உணரும் ஓசை,
ஒருகாலத் திரு கண்ணும் இருசெவியும் மனமும்
ஒருவனைக்கண் டவனுரை கேட் டுணர்ந்திடுமைம் பொறியும்,
ஒருகாலும் உணராவுள் உணர்வின்றிப் பொறிகள்
ஒன்றொன்றா வுணர்வதுள் ளுணர் வைந்தும் உணரா,
ஒருகாலும் பொறிவிகற்பித் துணராவுள் ளுணர்வுக்
குள்ளதுகாண் விகற்பமிரண் டும்முணர்வ துயிரே.
124
அருஉணர்வு மாய்ஆறும் மாறி மாறி அங்கங்கே
தோன்றியிடின் அகத்துநிலை யின்றி,
உருவினொடு பாலதரு ணவ்ருத்தா வத்தை உண்டாகா
துறக்கத்தின் உடல் தட்ட அழைப்ப,
வருவதுணர் வெங்கிருந்து நெஞ்சிலிருந் தென்னில்
வாயில்வினை யறிந்தெழுப்ப ஆயுஅறி யாதாம்,
திரியொழிய இடிஞ்சில்தொடத் தீபமெழா அடக்கஞ்
சென்ற பொழு தாலுணர்வு நின்றநிலை செப்பே.
125
இச்சைவெறுப் பியற்றலின்பத் துன்பம் ஞானம்
இவை யணவின் குறியாகும் இவற்றில் இச்சை,
நச்சிநுகர்ந் தொரு பழத்தின் இனங்கண்டு முன்பு
நான்நுகர்ந்த கனியினின மென்று நச்சல் பின்பு,
மெச்சவெறுப் பாதிகளும் இப்படியே யாகும்
இவைமுன்பும் பின்புமுணர்ந் திடுத லாலே,
நிச்சய கர்த் தாஒருவ னுளனென்று நல்லோர்
நிறுத்திடுவர் வெறுத்திடுவர் நின்னுடைய பொருளே.
126
எப்பொருட்டும் இரந்தரமாய் இடங்கொடுத்து நீங்கா
திருளொளிதா னன்றிஇரண் டினுக்குமிட வகையாய்,
ஒப் பில்குணஞ் சத்தமதாய் வாயுவாதி உதித்தொடுங்க
நிற்கும்வா னுயிர்முன்னே கொன்னோம்,
செப்பிடுங்கா லம்பொழுது நாளாதி யாகித்
திரிவிதமாய்த் தீமைநன்மை செய்யுந் திக்குத்,
தப்பில்குணக் குக்குடக்குத் தெற்குவடக் காதி
தானாகித் திரியாதே நின்றுபலந் தருமே.
127
காரியமாய் உலகெலாம் இருத்த லாலே கடாதிகள்போல்
காரியகர்த் தாவொருவன் வேண்டும்,
ஆரியமாய் அறம் பொருளோ டின்பவீ டெல்லாம்
அறைந்துயிர்கட் கறிவுசெயல் அளிப்பதுநூல் அந்நூல்,
கூரியராய் உள்ளவர்கள் ஓதஓதிக் கொண்டுவர
லான்முன்னே குற்ற மின்றிச்,
சீரியபே ரறிவுடையோன் செப்ப வேண்டும்
செயலினுக்குங் கரிவேண்டுஞ் சிவனுளனென் றறியே.
128
மரங்களுயி ரல்லவென்று மறுத்துச் சொன்னாய்
வாடுதல்பூ ரித்தலால் மரங்களுயி ராகும்,
திரங்குநீர் பெறாதொ ழியிற் பெறிற்சிரத்தை சேரும்
சீவனல எனினுலகில் சீவ னெல்லாம்,
உரங்கொள்வ தூண்பெறிற் சோரும் ஊன்பெரு றாவேல்
உலர்ந்தமர நீர்பெற்றா லுய்யாதுள் ளுயிர்கள்,
கரத்சினை முட்டைகட்கு வாயிலின்று வாயில்
கண்டிலதேற் பூத்துக்காய்த் தெழல்மரங்கள் உயிரே.
129
ஒருமரத்தின் உயிரொன்றேல் கொம்பொசித்து நட்டால்
உய்யுமுயிர் முன்றுபல வாமோ வென்னில்,
கருமரத்தின் வித்துவேர் கொம்புகொடி கிழங்கு
கண்கலந்து கொள்ளு முயிர் அண்டம் வேர்ப்புத்,
தருபிறப்புச் சராயுசங்கள் சநந மும்பெற் றாற்போல்
தானடையும் உற்பிச்சம் தலநடவா வென்னில்,
பெருநிலத்தில் காலிலார் நடப்பரோ பேதாய்
பிறப்பின்விதம் அநேகங்காண் பேசுங் காலே.
130
தின்னுமது குற்றமிலை செத்ததெனும் புத்தா
தின்பை யெனக் கொன்றுனக்குத் தீற்றினர்க்குப் பாவம்,
மன்னுவதுன் காரணத்தால் தின்னா தார்க்கு
வதைத்தொன்றை இடாமையினால் வதைத்தவர்க்கே பாவம்,
என்னிலுனை யூட்டினர்க்குப் பாவஞ் சேர
என்னதவம் புரிகின்றாய் புலால்கடவுட் கிடாயோ,
உன்னுடலம் அசுசியென நாணி வேறோர்
உடலுண்ணில் அசுசியென உணர்ந்திலைகாண் நீயே.
131
குடைநிழலும் கண்ணாடிச் சாயையும்போல்
பிறப்புக் கொள்ளும்உணர் வென்னல்கா ரணமழிய அழியும்,
அடை நிழல்போல் கந்தமைந்தும் அழியுமுனக்
கிங்கே அவையழிந்தால் அருங்கதியின் அணையுமுணர் வின்றாம்,
இடைகனவில் எழுமுணர்வு நனவுணர்வா னாற்போல்
எழுமுணர்வு கன்மத்தால் நினைந்துகதி யென்னில்,
மிடைசினையும் அந்தனுமுட் டையுமுயிர்விட்
டக்கான் மேவுவதென் பிறப்பினுடல் விடாது கன்ம வுணர்வே.
132
ஐந்துகந்தம் சந்தானத் தழிதல்பந்த துக்கம் அறக்
கெடுகை முத்தியின்பம் என்றறைந்தாய் கந்தம்,
ஐந்துமழிந்தால்முத்தி அணைபவர்யா ரென்ன
அணைபவர்வே றில்லை யென்றாய் ஆர்க்குமுத்தி யின்பம்,
ஐந்திலுணர் வினுக்கென்னில் அழியாத உணர்வுண்
டாகவே அவ்விடத்தும் உருவாதி கந்தம்,
ஐந்துமுள வாமதுவும் பந்த மாகி அரந்தை
தரும் முத்தியின்பம் அறிந்திலைகாண் நீயே.
13
அநாதிமுத்த னாய்ப்பரனாய் அசலனா யெல்லா
அறிவு தொழில் அநுக்கிரக முடையஅரன் கன்மம்,
நுனாதிகமற் றொத்தவிடத் தேசத்தி நிபாத
நுழைவித்து மலங்களெல்லாம் நுங்க நோக்கி,
மனாதிகர ணங்களெல்லாம் அடக்கித் தன்னை
வழிபடுநல் லறிவருளி மாக்கருணைக் கையால்,
இனாத பிறப் பினில்நின்று மெடுத்து மாறா
இன்ப முத்திக் கேவைப்பன் எங்கள்முத்தி யிதுவே.
134
3. யோகாசாரன் மதம் (135 -137 )
போதமே பொருளாய்த் தோன்றும் பொருளதாய் எழலாற் போதம்
வாதனை அதனாற்கூடி வருதலால் வடிவிலாமை
ஆதலாற் கனவே போலும் சகமுள தறிவே யாமென்(று)
ஓதினான் ஓதா னாய உணர்வினால் யோகா சாரன். 135
யோகாசாரன் மத மறுதலை
போதமுந் தவிர வேறோர் வாதனை புகன்றாய் போதம்
வாதனை இரண்டுண் டென்னாய் போதவா தனையும் என்னிற்
காதலாற் பொருளி னோடு கலந்தபின் எழுங்க ருத்தாம்
வாதனை கனவு கண்ட பொருளின்மேல் வருங்க கருத்தே. 136
அறிவதே பொருள தாயின் அகம்சடம் என்ன வேண்டும்
பிறிபொரு ளாகும் பேதித் திதம்பிர பஞ்ச மென்னில்
உறுபொருள் உருவந் தோய்ந்தால் உணர்வு மவ்வுருவாய் நிற்கும். 137
4. மாத்தியமிகன் மதம் (138 -140 )
அவயவம் பொருளாய்த் தோன்றும் அவயவம் ஒழிந்தாற் பின்னை,
இவைபொரு ளென்ன வேறொன் றிலாமையாற் பொருள்கள் இன்றாம்,
அவைபொருள் இலாமை யாலே அறிவுமின் றாகு மென்று,
நவைதரு மொழியி னாலே நவிலுமாத் தியமி கன்றான். 138
மாத்தியமிகன் மத மறுதலை
கடத்தினில் அவயவங்கள் படத்தினில் புகாமற் காத்தும்,
படத்தினில் அவயவங்கள் கடத்தினிற் புகாமற் கொண்டும்,
இத்தினில் நிற்கும் ஆகும் அவயவி இரண்டுங் கூடி,
உடைத்தொரு பொருளுண் டாகப் பொருளுமுண் டுணர்வும் உண்டே. 139
கருவியும் ஔ¤யும் வேறு கருதிடுங் கருத்தும் நிற்கப்
பொருள்புண ராமை யாலே போதம்வந் தெழுவ தின்றாம்
மருவிடம் பொருளுண் டாக வந்தெழும் புந்தி யானால்
பொருளுள தாகு மாகப் போதமும் உள்ள தாமே. 140
5. வைபாடிகன் மதம் (141 -142 )
அரிசனம் நூறு கூட வருணம்வந் தெழுந்தாற் போல
விரிசகம் பொருள்கள் ஞானம் விரவிட மேவித் தோன்றும்
தெரிசன மிதுவே யென்று தௌ¤ந்திடும் தேரர் வீடு
பரிவொடும் அடைவீ ரென்று பகரும்வை பாடி கன்றான். 141
வைபாடிகன் மத மறுதலை
பொருளது புறம்ப தாகும் போதம்அந் தரம தாகும்
தெருளிடின் இரண்டுஞ் சென்று சேர்ந்திடு மாற தின்றாம்
அருவுணர் உருவ ஞேய மாதலி னாலுங் கூடா
உருவரு வுடைய வைபா டிகற்கினி மாற்றம் இன்றே. 142
6. நிகண்டவாதி மதம் (143 -164 )
வாச மாமலர் அசோகு பேணிமறை நீதி யோடுமலை யுந்தவத்(து),
ஆசை யாலுடை அகன்று மாசினை அடைந்தில் வாழ்தரும் அறத்தினில்,
பாச மானது தவிர்ந்து பண்டிபட வுண்டு பாயினொடு பீலிமேல்,
நேச மாயவை தரித்துளோர் களின் நிகண்ட வாதியை நிகழ்த்துவாம். 143
ஈறி லாதன அநந்த ஞானமுதல் எண்கு ணங்களெனும் ஒண்குணம்,
மாறி லாதமதி மேவு சீதமென மன்னி வானவர் வணங்கவே,
வேறு லாவுகுண ஞான ஆவரணி யாதி எட்டினையும் விட்டசீர்,
ஏறு பான்மையுடை நீடு வாழ்அருகன் எங்க ளுக்கிறைவன் என்றனன். 144
கருவி கண்படு தொடக்கொ ழிந்துவரு கால மூன்றின் நிகழ் காரியம்,
பெருக நின்றொரு கணத்தி லேஉணர் பெருந்த வக்கடவுள் பீடினால்,
மருவி நின்றுவழி பட்ட வர்க்கும்மலை வுற்ற வர்க்கும்மனம் ஒத்திடும்,
குரிசி லெங்களிறை யென்று பின்னும்நிகழ் குற்ற மின்மையது கூறுவான். 145
பசித்தல் தாகபய செற்ற மோடுவகை மோக சிந்தனை பழித்தனோய்,
நசித்தல் வேர்வினொடு கேத மோடுமதம் வேண்ட லீண்டதி சயித்தலும்,
புசிப்பு வந்திடு பிறப்பு றக்க மிவை விட்டொ ரண்ணகுண பூதனாய்,
வசித்த வன்னுலகின் மேலி ருந்தொருசொல் இகல னுக்கருளும் என்றனன். 146
அந்த வாய்மொழியி னால்அவன்சரண மாதி யோகமுதலானநூல்,
இந்த மாநிலம் மயங்கி டாதவகை இங்கி யம்பினன் இதப்பொருள்,
வந்த காலமுயிர் தம் தன்மிஅறம் மற்றும் விண்மருவு புற்கலம்,
பந்தம் வீட்டினொ டநாதியா யிவை படைப்ப தின்றியுள பத்துமே. 147
நிற்ற லோடுதலை போதல் அன்மையை நிகழ்த்து நீடுவேதி ரேகமும்,
உற்ற தாம்இவை கணத்தி லேமருவி உள்ள வாபுரியு மாறுதான்,
கற்ற காலமள வெய்தி வாழுமுயிர் காய மேவிநிறை வானதே,
பெற்று வேறுவரு தன்மை நேரறிவு பெற்ற தாகியுள பேசிலே. 148
பரந்து மீதுதரு மாத்தி காயம்அழி வித்(து) அநித்தமது பண்ணிடும்,
நிரந்து கீழதரு மாத்தி காயமது நித்த மாய்மிக நிறுத்திடும்,
புரந்த புண்ணிய மிதற்கு நன்மைபுகல் பாவ மானவது தீமையே,
தரும்பொ ருட்கிடம தாகும் வானமிகு புற்க லன்களவை சாற்றுவாம். 149
ஏணும் ஒன்றுடைய வாகி எங்கும்அணு வாய்இரும்புகல் மரங்களும்,
பூணும் அங்குருவெ லாமு மாகுமிவை புற்க லப்பொருள்கள் என்னலாம்,
காணும் அங்கறு வகைத்தொ ழில்களவை கட்டு விட்டநெறி கன்மமேல்,
மாண நின்றுவரு மாறி மாறிமுன் வகைந்த துண்டுவிட மாட்சியே. 150
நிகண்டவாதி மத மறுதலை
அருகனுக் கனந்த ஞான மாதி ஆதி யாகவே
பெருக நிற்றல் சீதம்மா மதிக்க டைந்த பெற்றியேல்
ஒருவும் இட்ட ஒப்பவன் னுயிர்த்தி றத்தி னுள்ளபின்
மருவு மிக்க குற்றம்மேல் அறத்தின் மன்னி னானெனில். 151
அறத்தின் மன்னு வித்தவன் ஒருத்த னாய்அவன் அறத்
திறத்தி னிற்றல் மற்றொருத்த னால்வி ளைந்த செய்தியாம்
மறத்தின் அற்ற வர்க்கெலாம் வணக்கம் உன்இறைக்குமேற்
பிறக்குமிங் கவத்தை கொண்ட தாரை யின்று பேசிடே. 152
கருவிதன் தொடக்கொ ழிந்து கண்டு வாழு மென்றியேல்
உருவு கொண்டு நின்ற தென்னில் உண்டுதான் மநாதிகள்
ஒருவி நின்ற தென்னில் அத்த மொன்றையும் உணர்ந்திடான்
பொருள்தெ ரிந்து போகை கால மொன்றிலே புணர்ந்திடான். 153
ஆர்வ கோப மானவை அடைந்தொ றுப்ப வர்க்கெலாம்
சேர்வ தின்மை செப்பில்இன்று சீவன் மேவு காயமால்
ஒரு மன்னர் போலவே உயிர்க்க ளித்த லென்றியேல்
ஏர்கொள் பொன்எ யிலிடத் திருத்தல் பெற்ற தென்கொலோ. 154
சொல்ல தொன்று கொண்டிகலின் ஆத்தன் நாடவேசொலின்
இல்லை யாம் மநாதிதான் இயம்பு மாற தெங்ஙனே
நல்ல வாம் மநாதிதான் அவர்க்கு நாட வேயிலை
ஒல்லை ஊமர் ஊமருக் குரைத்த வாற தொக்குமே. 155
இன்ப பூமி சேரிகலில் நாதன் இவ்வி ருநிலத்
துன்பம்அங் குணர்ந்தி டாமை இங்கு வந்த சொல்லிடான்
இன்ப பூமி யில்இருந் திருந்தி யாவும் எய்திடில்
துன்ப பூமி யாமுணர்ந்து சொல்ல வல்ல தில்லையே. 156
நிறைந்து காய மோடு சீவன் நின்ற தாகில் இவ்வுடல்
குறைந்த போது தானும் இத்தொ டொக்கவே குறைந்திடும்
இறந்து போகும் இக்கடம் இறந்த போது நீர்குடத்(து)
உறைந்து டைந்தி டக்குடம் உலர்ந்த வாற தொக்குமே. 157
கண்டநூல் தருந்தன் மாத்தி காய மோட தன்மமும்
உண்டு மீது கீழ்உலாவி உற்று நின்றி டப்பொருள்
கொண்ட தென்னில் அத்தமிவ் விரண்டு தன்மை கூடிடா
வண்டு புட்கள் போலெனின் வழங்கி டாக ணத்திலே. 158
நீடு பாவ புண்ணி யங்க ளால்நிரய வானகம்
கூடு வேர்கள் இன்று நின்று கூட்டு வோர்கள் இன்மையின்
ஓடு மாக ணைத்தி றத்தின் உற்றவா றுரைத்தியேல்
வீடு மாக ணைக்கு நாடும் வில்லி போல வேண்டுமே. 159
ஏண தொன்று புற்கலத்தின் எய்து மென்னின் நாசமே
காண லாகும் அக்கடம் கழிந்த தன்மை இல்லவை
பூண வேண்டும் மேலுறும் பொருத்த மின்மை யொன்றினின்
மாணவே அணுப்பொருள் நிகண்ட வாதி வைத்ததே. 160
ஆறு காரி யங்கள்மாற வேத வங்க ளாமெனின்
மாறி வாணி கஞ்செயா திருக்க வந்தி டாதனம்
ஈறி லாத வூழதென்னின் எங்கு முள்ள தூழதே
பேறு காரி யம்விடப் பிறப்ப தில்லை பேசிலே. 161
உடல்வ ருந்தல் மாதவஙகள் உறுதி யென்று ரைத்திடில்
படவ ருந்து நோயினோர்கள் படர்வர் பொன்னெ யில்எனாய்
திடவே ருந்த இன்பம்இச்சை செய்தல் செய்தியேல்
கெடஅரிந்தி டாய்உன் நாசி கேடில் இன்பம் உன்னியே. 162
பூர்வ கன்மம் அற்றிடப் புசித்த பின்பு பொன்னெயில்
நேர்வ தென்னின் அக்கன் மத்து நிச்சய மிலாமையில்
தீர்வ தின்மை தீரியின்வாயில் சேர்வ தின்மை தெண்கடல்
நீர்வ றந்த பின்புபூஞை மீன ருந்த நின்றதே. 163
கூறு கூவல் மன்னும்அக் குடம் குறித்து நீள்கரை
ஏற லுற்ற தன்மை நீ ஒருத்த ரின்றி ஏறுதல்
வேறொ ருத்தன் அக்குடத்தை மீது நின்றெ டுக்கவே
ஏற லுற்ற தன்மையில் சிவன்தி றத்து நின்றிடே. 164
7. ஆசீவகன் மதம் (165 -180)
என்உயி ரதற்குப் போல எவர்க்கும்ஒத் திருப்பன் என்று
தன்னுயிர் வருந்தத் தானும் தலையினைப் பறித்துப் பார்மேல்
மன்உயிர் எவற்றி னுக்கும் வருந்தவே அறங்கள் சொல்லும்
அன்னதோர் வாய்மை ஆசீ வகன்அம ணர்களிற் கூறும். 165
வரம்பிலா அறிவன் ஆதி வைத்தநூற் பொருள்கள் தாமும்
நிரம்பவே அணுக்கள் ஐந்து நிலம்புனல் தீகால் சீவன்
பரந்திவை நின்ற பான்மை பாரது கடினம் சீதம்
தரும்புனல் சுடும்தீ வாயுச் சலித்திடும் உயிர்போதத் தாம். 166
பார்புனல் பரக்கும் கீழ்மேல் படர்ந்திடும் தேயு வாயுச்
சேர்வது விலங்கின் உள்ளம் அவற்றொடும் சேரும் வேறு
சார்வது பெற்ற போது சார்ந்தஅப் பொருளின் தன்மை
நேர்வது மாகி நிற்கும் இதுபொருள் நிகழ்த்து மாறே. 167
உணர்தரா அணுக்கள் நான்கும் ஒன்றுகெட் டொன்ற தாகர
புணர்தரா ஒன்றில் புக்கொன் றாயினும் பொருந்தி வாழும்
அணைதரா புதிய வந்திங் கழிதரா பழைய வான
இணைதரா ஒன்றொன் றாகி மாறுதல் ஒன்றும் இன்றே. 168
கொண்டுமுன் விரித்தல் நீட்டல் குறுக்குதல் குவித்தல் ஊன்றல்,
உண்டுதின் றுலர்த்தல் மீட்டல் உடைத்திடல் ஒன்றும் ஒண்ணா,
விண்டுபின் புறம்பும் போகும் வேறுநின் றுள்ளு மேவும்,
பண்டுமின் றென்றும் எங்கும் பரந்தொரு தன்மைப் பாலே. 169
கண்ணினில் காண வொண்ணா சனித்தந்தக் கன்மத் தாலே
நண்ணிடும் உருக்க ளாகி நின்றபின் நரரோ காண்பார்
விண்ணினில் தேவர் காண்பர் ஓரணு மிக்க நான்காய்
எண்ணிய பொருள்க ளெல்லாம் இசைவதென் றியம்புமின்னே. 170
ஒன்றினை ஒருவி மூன்றங் குற்றிடா திரண்டு விட்டு
நின்றிடா திரண்டு கூடும் நெறிநிலம் நான்கு நீர்மூன்(று)
இன்றிரண் டழல்கா லொன்றாய் இசைந்திடும் பூமி யிவ்வா
றென்றுநீர் தீகா லாகி ஈண்டுவ தென்றி யம்பும். 171
வெண்மைநன் பொன்மை செம்மை நீல்கழி வெண்மை பச்சை
உண்மையிவ் வாறின் உள்ளும் கழிவெண்மை ஓங்கு வீட்டின்
வண்மைய தாகச் சேரும் மற்றவை உருவம் பற்றி
உண்மையவ் வொட்டுத்தீட்டுக் கலப்பினில் உணரும் என்றான். 172
பேறிழ விடையூ றின்பம் பிரிவிலா திருக்கை மற்றும்
வேறொரு நாட்டிற் சேறல் விளைந்திடு மூப்புச் சாதல்
கூறிய எட்டும் முன்னே கருவினுட் கொண்ட தாகும்
தேறி ஊழிற் பட்டுச் செல்வதிவ் வுலகம் என்றான். 173
புண்ணிய பாவம் என்னும் இரண்டணுப் பொருந்த வைத்தே
எண்ணிய இவற்றி னோடும் ஏழென எங்க ளோடு
நண்ணிய ஒருவன் கூறும் ஞானமிவ் வாற தென்று
கண்ணிய கருத்தி னோர்கள் கதியினைக் காண்பர் என்றான். 174
ஆசீவகன் மத மறுதலை
வாராநெறி வீடானயின் மண்மேல் அவன் வந்து
தாராமையின் நூலானது தானோஉள தின்றாம்
சேராமையில் அணுவானவை ஐந்தும்ஒரு தேயத்(து)
ஓரானொரு காலத்தினில் ஒன்றாமுணர் வின்றாம். 175
இருபான்மையர் இவர்மண்டலர் செம்போதகர் என்றே
வருபான்மையர் இவர்மண்டலர் மண்மேல்வரு நூலும்
தருபான்மையர் எனின்நீதல மதில்வாழ்பவர் தம்போல்
ஒருபான்மையின் உளராகுவர் உணராதுரை செய்தாய். 176
உயிரானவை உடல்தீண்டிடல் ஒட்டுக்கலப் பெய்தும்
பயில்வால்உணர் வெய்தும்மெனும் மொழியானவை பழுதாம்
துயிலார்தரு மவர்பாலகர் தொடரார்அறி வினைநீ
செயிரார்தரும் உரையேதரும் அதுவோஉன செயலே. 177
அணுவானவை கீழ்மேல்உள வானால்அவ யவமும்
நணுகாவென லாமேவரின் நாசம்அவை யெய்தும்
அணுகாவெனின் இறைதொள்ளைகொள் ஆகம்முள வாகும்
துணிவாலிவை கலவாபல தொகையாம்வகை இலவாம். 178
மிகையாம்அணு உளவாகையின் அவையாம்மிக வென்னில்
தொகைநாலிடை அறலால்அவை தொகுமாறில வாகும்
பகையாகையின் மிசைதாழ்மையின் நிலையாவகை பண்ணும்
நகையாம்உரை கழியாயிரம் அவைதூணென நண்ணா. 179
கூடாஅணு அறியாமையின் வளிகூட்டுதல் கூறின்
நாடாவளி அணுவானவை நணுகச்செயும் அவரை
நீடாவினை தன்னாலெனின் நினைவின்றது இன்றாம்
தேடாயொரு வனைநீஇவை செய்வானுள னென்றே. 180
பரபக்கம் |
||||||||
by C.Malarvizhi on 27 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|