சிவகாசி : சிவகாசி அருகே நேற்று பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 38 பேர் உடல் கருகி பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆலையில் பட்டாசுகள் வெடித்தபடியே இருந்ததால் மூன்று கி.மீ சுற்றளவில் உள்ள கிராம மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து ஆர்.ஆர்.நகர் செல்லும் சாலையில் உள்ளது முதலிப்பட்டி கிராமம். அங்கு ஓம்சக்தி பயர் ஒர்க்ஸ் என்ற பெரிய பட்டாசு ஆலை உள்ளது. பால் பாண்டி என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். ஆலையில் 45 சிறு சிறு அறைகள் இருந்தன. தீபாவளி விற்பனைக்காக பேன்சி ரக வெடிகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வந்தது. வேலையில்லா திடட்டமே இல்லாத சிவகாசியில் நடந்த இந்த துயர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
|