சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சொல்லுதல் யார்க்கும் எளிய - யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம். (சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின். 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம். அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.
தேவநேயப் பாவாணர் உரை:
சொல்லுதல் யார்க்கும் எளிய-ஒரு வினையை இன்ன கருவியால் இன்னவாறு செய்து முடிக்கலாம் என்று வழி சொல்வது எவருக்கும் எளிதாம்; சொல்லிய வண்ணம் செயல் அரிய ஆம்-ஆனால், சொன்னவாறு அதைச் செய்து முடிப்பது பெரும்பாலார்க்கு அரிதாம். சொல்லுதலும் செய்தலும் சொல்வார் செய்வார் பன்மைபற்றிப் பன்மையாகிப் பன்மைவினை கொண்டன. ஏற்புழிக்கோடல் என்னும் உத்தியால், அரிது என்பது ஒரு சிலர் அரும்பாடு பட்டுச் செய்துமுடித்தலையும், பெரும்பாலார் எப்பாடு பட்டும் செய்ய முடியாமையையும் உணர்த்தும் என்று கொள்ளப் பெறும். இனி, எதிர் நிலை (அருத்தாபத்தி) யளவையால், ஒரோ ஒருவர்க்கு அது எளிதாக முடியும் என்பதும் அறியப்படும்.
கலைஞர் உரை:
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
சாலமன் பாப்பையா உரை:
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
Translation
Easy to every man the speech that shows the way;
Hard thing to shape one's life by words they say!.
Explanation
To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.