தொலைபேசி மீரான் எழுதிய “சொல்வதைக் கேளுங்கள்”நூல் வெளியீட்டு விழா செய்தி,தினத் தந்தி நாளிதழில் 11.03-2013 அன்று வெளிவந்துள்ளது.. அந்த நிகழ்ச்சியில் பா.ஜா.க. மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் சிறப்புரையாற்றி இருக்கிறார்.
அதில் சில நல்ல செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார். “மகளிர் தினம்” என்ற சிறப்பு மேலை நாட்டின் இறக்குமதி. இந்தியாவிற்குத் தேவையற்ற ஒரு நிகழ்வு. மேலை நாட்டில் தோன்றிய மதங்கள், பெண்களுக்கு ஆத்மா இருப்பதாகவே ஒப்புக்கொள்ளவில்லை. அங்கெல்லாம் தொடக்கத்தில் அரசாட்சிகளில் மத குருமார்கள் ஆட்சியே நடைபெற்றது.
பெண் என்பவள் ஆணுக்குத் துணை புரியத்தான். அவள் சுதந்திரமாகச் செயல்பட உரிமையில்லை என்பது அவர்களது நம்பிக்கை. எனவே மதத் தலைமையும் அரசாட்சியும் மகளிரை அடக்கி ஆண்டன.
1920 – ம் ஆண்டுதான் அமெரிக்கா பெண்களுக்கு ஓட்டுரிமை தந்தது. 1928 – ம் ஆண்டுதான் இங்கிலாந்து பெண்களுக்கு ஓட்டுரிமை தந்தது. 1971 - ம் ஆண்டுதான் சுவிட்சர்லாந்து பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கியது. இன்று கூட வாடிகன் நகரில் பெண்கள் பொதுவாழ்வில் பங்கு பெற உரிமையில்லை. 1950 –ம் ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை பற்றிய முடிவிற்கு வந்துவிட்டோம்.
பாரத மண்ணில் பெண்களில் படித்தறிந்த புலவர்கள் இருந்திருக்கின்றனர். போர்க் காலத்தில் வீராங்கனைகளாகப் பெண்கள் பணியாற்றி இருக்கிறார்கள். பெண்ணுக்குப் பெயரே இல்லத்தரசிதான். இது இந்தியர்களின் பெருமை. எனவே நாம் மேலை நாட்டவர்களைபோல பெண் உரிமைப் போராட்டம் நடத்தத் தேவையில்லை. நம் பாரத்தின் பழைய பெண் உரிமைகளை மீட்டுக் கொண்டு வந்தாலே நாம் வெற்றி பெற்றவர்களாவோம்” என அற்புதமான தகவல்களைத் திரட்டித் தந்திருக்கிறார் இல.கணேசன்.
வாக்குரிமை இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருப்பது போலவும், மேற்கத்திய நாடுகளில் முந்தா நாள் இரவு முடிந்து நான்காம் நாள் பகலில்தான் தரப்பட்டது போலவும் அவர் சொல்லும் கண்டுபிடிப்பிற்கு பாரதத்தாய் வாழ்த்துச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
தமிழகத்தில் குடவோலை முறையில் ஆட்சி அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுத்த செய்தி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதற்குச் சில ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் வாக்களிக்கும் உரிமை அங்கு வாழ்ந்த ஒட்டு மொத்த ஆண்களுக்குக் கூட கிடையாது. மேல்மட்ட சில உயர்சாதி ஆண்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். இல.கணேசனுக்கே இது தெரியும். தெரியாதது போல காட்டிக் கொள்வது அவரது குணம். இதை ஒப்புக் கொள்வது நம்முடைய மனம். இதுதான் விதி.
கற்றறிந்த புலவர்களில் பெண்கள் இருந்தனர். உண்மை. ஆனால் அந்தப் பெண்மணிகள்கூட,
“எவ்வழி ஆடவர் நல்லவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!”
இப்படித்தான் சொன்னார்கள். ஆண்கள் நன்றாக இருந்தால்தான் நாங்கள் நன்றாக இருப்போம். இப்படிச் சொன்ன புலவர் சங்க இலக்கியத்தில் உண்டு. “தையல் சொல் கேளேல்” – சொன்னது பெண் புலவர். சொன்னதன் பொருள் பெண்பிள்ளை பேச்சை கேட்காதே.
புலவர்களில் உயர் கருத்தைச் சொன்னவர்கள் இருக்கலாம். ஆனாலும் கூட ஆணாதிக்கத்தை மனதார ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்னவர்கள்தாம் அவர்களும்.
ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் இருந்தார்கள் என்று சொல்லி வைத்திருக்கிறார். எப்படி இருந்திருக்கிறார்கள் ? அரசர் அமர்ந்திருப்பார். அரசி அருகில் அமர்ந்திருப்பாள். இதைத்தான் அதிகாரம் என்று சொல்கிறாரா? அப்படியானால் இப்படியும் ஒரு காட்சியை நினைத்துப் பார்க்க வேண்டி இருக்கிறது.
திருத நாட்டு மன்னனுக்கு (திருதராஷ்டிரன்) கண் தெரியாது. அது ஒரு குற்றமல்ல. அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மகாராணிக்குக் கண் தெரியும். ஆனால் தெரிந்த கண்ணோடு அமரவில்லை. ஒரு பட்டுத் துணி எடுத்து கண்ணில் கட்டிக்கொண்டு குருட்டுப் பார்வையோடு அமர்ந்திருந்தார். இதைத்தான் பெண்கள் அரசாட்சி அதிகாரம் என்று இல.கணேசன் சொல்கிறாரா?
பாண்டிய நாட்டிலே, பூதப்பாண்டியன் இறந்துவிடுகிறான். அவனுடைய மனைவி மகாராணி கதறி அழுகின்றாள். என்னால் கொடூரமாக வதைபடும் விதவையாக வாழ முடியாது. பதிலாக உடன்கட்டை ஏறி தீவைத்து ஒரேடியாக வெந்து செத்துப் போகிறேன் என்று புறநானூற்றில் புலம்புகிறாள். இந்த மகாராணியைத்தான் பெண் அரசியல் அதிகாரம் பெற்றவர் என்கிறாரா?
சிலப்பதிகாரத்திலே பாண்டிய மன்னன் செத்துவிடுகிறான். பாண்டிமாதேவி தரையில் படுத்து உடன் செத்துவிடுகிறாள். இது நீதிக்காக நடந்த மரணம் என்று சப்பைக்கட்டு கட்டினாலும் கணவன் செத்தால் செத்து விடுவதுதான் பத்தினித்தனம் என்கிற பின்னணிக் கதையும் தெரிந்துவிடுகிறது.
ஜான்சி ராணி இல்லையா?, ரஸியா சுல்தானா இல்லையா?, ராணி மங்கம்மா இல்லையா?, தமிழச்சி வேலுநாச்சி இல்லையா? இவர்களெல்லாம் புராணம் நடந்த புராண காலத்தவர் இல்லை. இல.கணேசன் போன்றோர் மொழியில் சொல்வதானால், மிலேச்ச பாரசீகக் காரனும், பன்றிக்கறி தின்ற வெள்ளையனும் பாரததாயின் மீது வந்து அமர்ந்துவிட்டான் என்று சொல்லக்கூடிய இந்தக் கால கட்டத்தவர். அதாவது, ஆங்கிலம், பார்சி படித்த காலத்தில் தோன்றிய மறப் பெண்மணிகள்.
வாடிகன் நகரில் பெண்களுக்கு பொதுவாழ்வில் இன்று கூடப் பங்கில்லை. வருந்தத்தக்கதுதான். காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் உயர் பொறுப்புகள் வகிக்கும் பெண்களைப்போல, பூரி சங்கர மடத்தில் தலைமைப் பீடத்தில் சங்கராச்சாரினியைப் போல ஸ்ரீ ரங்கம் பிரதிவாதி அதிபயங்கர மாதாயினியைப் போல வாட்டிகனில் பெண்களுக்கு முக்கியத்துவம் தராமல் விட்டுவிட்டார்கள். இல. கணேசன் சொல்வதில் நியாயம் இருக்கிறது.
விஸ்வாமித்திரர் ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார். அது எவ்வளவு பெரிய குற்றம். இந்திர ஆசனத்திற்கு அடியில் தீப்பிடிக்கிறது. தாங்கமுடியாத இந்திரன் மேனகையை அழைக்கிறான். டூ பீஸ் ஆடைகட்டி முனிவனின் தவத்தைக் கலைக்க அனுப்பி வைக்கிறான். முதல் கிளப் டான்ஸ் அப்போதுதான் ஆரம்பித்தது. முனிவர்களை மயக்காத காலத்தில் இந்திரன் அரசவையில் free டான்ஸ் ஆட வேண்டும். இந்த மாதிரி நமது புராணத்துப் பெண்களைத்தானா நமது பெண்களுக்கு உதாரணமாக இருக்கச் சொல்கிறார்?
சுருக்கமாக ஒன்று. 1947 – சுதந்திரம் பெற்ற பின்னால் நமது ஜனநாயகம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் வட மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற ஒரு பெண்மணியை கணவர் இறந்த சிதையில் உயிருடன், சம்பிராதாயச் சடங்குகளை நிறைவேற்றி ஊர்கூட்டி கட்டாயப்படுத்தி உடன்கட்டை ஏற வைத்தார்கள்.
இதைக் கண்டித்த மீடியாக்களை, காஞ்சிப் பெரியவாள் முதல் மடாதிபதிகளில் பலர், இல. கணேசன் இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உட்பட ”இது இந்து தர்ம நடவடிக்கை. இதற்குள் அன்னியர்கள் தலையிடாதீர்கள்” என அறிக்கை விட்டார்கள். இல.கணேசன் இந்தப் பெருமைக்குரியவர்களை நமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தச் சொல்கிறார்.
நாமும் கூறிக் கொள்கிறோம் “இது அவரது இல்லத்திலிருந்தே தொடங்கட்டும்.
Author:guruparathesigavaithiyar.blogspot.com
|