|
|||||
விளை நிலங்களா? விலை நிலங்களா? |
|||||
விளை நிலங்களா? விலை நிலங்களா? விளை நிலங்கள் தரிசு நிலங்களாகவும், விலை நிலங்களாகவும் மாறிவருவதால் தமிழகத்தில் பெரும்பாலான விவசாயிகள் விவசாய நிலங்களை நல்ல விலைக்கு விற்றுவிட்டு வேறு தொழிலுக்கு செல்வது அல்லது தொழிலே செய்யாமல் வீட்டில் உட்கார்ந்து ஒரு ரூபாய் அரிசியும், இலவச தொலைக்காட்சியும் பார்ப்பது அதிகரித்துள்ளது. நாகை விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களிடம் பேசும்போது இந்த விரக்தியான நிலையை காண முடிகிறது. காவிரி என்றைக்கு கர்நாடக தமிழ்நாட்டு அரசியல் ஆனதோ அன்றே விவசாயி காவிரி தண்ணீரில் இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். இரவு பகல் பாராது இந்தியாவிற்கு சோறு போட்ட விவசாயி, போராடிப் போராடி கலைத்து, வெறுத்து, தற்கொலை செய்து, எலிக்கறி சாப்பிட்டு, இனி விவசாயத்தை விட்டு வெளியேறுவதுதான் ஒரே வழி என்ற இறுதி முடிவிற்கு தள்ளப்பட்டுள்ளதை உணர முடிகிறது. இது இந்திய விவசாயத்தின் முக்கியமான தருணம். விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவதை தடுக்க அவர்களை உக்கப்படுத்தி உரிய திட்டங்களை அரசு செயல்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் விவசாயம் செய்ய மானியக் கொடுத்து ஆள் பிடிக்கும் நிலை ஏற்படும் என்பதில் வியப்பில்லை. இப்படியே விட்டால் விவசாய நிலங்கள் சுருங்கி, நம் எதிர்கால தலைமுறையினர் மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் நிலை வந்துவிடும் என்பதில் ஐயமில்லை.இந்த அவல நிலை உருவாக முக்கிய காரணங்கள் என்ன என்பதைப் பர்ப்ப்போம்.
1. மத்திய மாநில அரசாங்கங்களின் இலவச மற்றும் உடல் உழைப்பு இல்லாத சுலபமாக பணம் பண்ணும் திட்டங்கள்.
2. தமிழகம் அல்லாத மற்ற மாநிலத்தை சார்ந்த பணம் படைத்தவர்கள் விவசாய நிலங்களை கேட்ட விலைக்கு மேல் கொடுத்து வாங்கி முடக்கிப்போடுவது அல்லது பல கவர்ச்சி விளம்பரங்களை காண்பித்து வீட்டு மனைகளாக விற்பனை செய்வது.
3. விவசாயம் சிரமப்பட்டு செய்வதை விட, மற்ற தொழில் செய்வதில் அதிக வருவாய் பெரும் நிலை. விவசாயம் என்பது நிரந்தர வருமானம் இல்லாத, சிக்கல் நிரந்த தொழிலாக மாறியுள்ள சூழ்நிலை.
4. அடுத்த தலைமுறை விவசாயிகளின் குழந்தைகள் விவசாயத்தில் இருந்து விடுபட்டு பொறியியல் அல்லது மருத்துவ பட்டதாரிகளாக செல்லும் சமுதாய சுழல். 5. விவசாயம் என்பது கிராமத்தான் செய்யும் தொழிலாகவும், அதை ஒரு சமுதாயத்தின் மதிப்பிற்குரிய கல்வியாக/தொழிலாக உருவாக்காமல், பொறியியல், கணிப்பொறி வல்லுனரவது, வெளிநாடு செல்வது என்பது ஒரு புத்திசாலியான முடிவு என்ற சிந்தனையை பெற்றோர் மனதில் உருவாக்கியது. 6. மதிய/மாநில அரசாங்கங்களின் விவசாயத்தை மற்றும் அதை சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்தாத கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்கள். 7. பல்வேறு காரணங்களால் விவசாய கூலித் தொழிலாளர்களின் தட்டுப்பாடு. 8. விவசாய முலபொருட்கள் மற்றும் உரம் , பூச்சிக்கொல்லி ஆகியவற்றின் விலையேற்றம். 9. சந்திராயன் விடுவதற்கும், அணு விஞ்ஞானத்திற்கு கொடுக்கும் , பன்னாட்டு தொழில்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை விவசாயத்திற்கு கொடுக்காமல் போனது. 10. உலகமயமாக்கல் இந்தியாவில் வரும்பொழுது உள்ளூர் விவசாயத்தை பன்னாட்டு விவசாய நிறுவனங்களின் வியாபார நோக்கம் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளாமல் விட்டது.
11. மாநிலங்களின் தண்ணீர் தேவையை ஒரு முக்கியமான தேசிய பிரச்சினையாக கருதி, இந்திய நலன் சார்ந்த முடிவுகளை எடுக்காமல், இதை அரசியலாக்கி ஒரு மாநில சிந்தையுடன் பார்ப்பது.
12. ஒரு தலைவனாக, அடுத்த தலைமுறைக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டிய நீண்டகால திட்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது. 13. விவசத்தில் அரசியல் நுழைந்து அவர்களை ஓட்டு அரசியலுக்குள் இழுத்தது. விவசாயிகள் ஒற்றுமையாக இல்லாமல் அவர்களை கட்சி விவசாயிகளாக பிரித்து வைத்தது. 14. விவசாய வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டவுடன் உரிய விவசாய எந்திரங்களை உருவாக்கி விவசாயத்தை பாதுகாக்காமல் விட்டது.
15. இவை எல்லாவற்றையும்விட வள்ளுவனின் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு அவர் பின் செல்வார் என்ற குறளை மறந்து, விவசாயிகளை எல்லோர் பின்னாலும் ஓடவிட்டது. வழக்கம்போல் இதுவும் அரசாங்கத்தின் வேலை என்று விட்டு விடாமல், படித்த இளைஞர்களும், விவசாய குடும்பங்களில் இருந்து வந்த இளைஞர்களும், விவசாய நிலங்களை விற்றுவிடாமல், வீடு மனைகளாக மாற அனுமதிக்காமல், நமக்கு தெரிந்த விவசாயிகளை வைத்து நம் வீட்டிற்கு தேவையான விவசாய பொருட்களை நாமே விளைவிப்பது. இன்றைய மாடர்ன் விவசாய முறைகளை பின்பற்றாமல நம்மாழ்வார் போன்றவர்கள் சொல்லும் இயற்கை விவசாயத்தை உற்சாகப்படுத்தி அதில் முதலீடு செய்து விவசாய நிலங்கள் வியாபாரிகளுக்கு கை மாறாமல் பார்த்துக்கொள்ளலாம்.
வருங்காலத்தில் விவசாய நிலம் தங்கத்தை விட மதிப்பு மிக்கதாக மாறும் என்பதை உணர்ந்து விவசாயத்தை தொடர்ந்து செய்யவேண்டும். மேலும் உலகம் முழுதும் இன்று நம் இந்தியன் தாத்தாக்கள் கோவணம் கட்டி செய்த விவசாயம் இயற்கை விவசாயம் (Organic Farming) என்ற பெயரில் ஒரு மதிப்பு மிக்க ஒன்றாகி அதில் விளையும் பொருட்களின் விலை மாடர்ன் விவசாய பொருட்களின் விலையை விட அதிகமாக விற்கிறது. இன்றும் கிராமத்தில் சாதரணமாக வீட்டு தோட்டத்தில் விளையும் இந்த இயற்கை பொருட்கள் இன்று இந்த படித்தவர்களுக்கு ஒரு ஹை டெக் பொருளாக organic products என்ற பெயரில் விற்கபடுகிறது. இன்று மருத்துவர்களுக்கு பல நோய்களுக்கான காரணங்களும் தெரியவில்லை. இவ்விதமான பல்வேறு சிக்கல்களின் இருந்து விடுபட நம் பாரம்பரிய விவசாய முறைககுக்கு மாறுவதும் அவசியமாகும்.
விவசாய அறிஞர்கள், படித்தவர்கள், விவசாய சங்கங்கள், சேவை அமைப்புகள் , விவசாயமற்ற இந்தியாவின் எதிகாலம் எப்படி ஒரு இக்கட்டான நிலையில் இருக்கும் என்பதை உணர்ந்து, அரசாங்கங்களின் விவசாய கொள்கை முடிவுகளை, நம் விவசாய நலன் சார்ந்தவைகளாக மாற்ற தொடர்ந்து குரல் கொடுப்பதும் அவசியமாகும். வாருங்கள் விவசாயத்தை காப்போம்!!!!!!!!!!
|
|||||
by Swathi on 22 Nov 2011 4 Comments | |||||
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|