|
|||||
எது உண்மையான தமிழ் புத்தாண்டு? |
|||||
எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை. தனி மனிதனாக ஒவ்வொருவரும் சில சமுகத்தின் பழக்கவழக்கத்தினை ஏன் என்று கேட்காமல் பின்பற்றுகிறோம். சில தனி மனிதர்கள் அப்படிப்பட்ட நீண்ட நாளைய நடைமுறையை மாற்றி அமைக்க முனையும்போது அதை மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் கையாளவேண்டும். காரணம், தனி மனிதர்கள் மேல் உள்ள மக்களின் அபிப்பிராயங்கள் மாறும்போது, அரசியல் கட்சிகளை விரும்பாத தமிழர்கள் அதை சொல்பவரை பொறுத்து, சொல்லும் கட்சியை, அதன் கொள்கைகளைப் பொறுத்து தமிழ் கலாச்சாரம் சார்ந்த ஒரு இதுபோன்ற ஒரு முடிவை ஆதரிப்பதோ, ஆதரிக்காமல் போவதோ, தமிழ் சமுகத்திற்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும். சரி, சரியல்ல என்பதைத் தாண்டி, ஒரு கலாச்சாரம் சார்ந்த தமிழர்கள் வெகுவாக கொண்டாடுகிற ஒரு பண்டிகையை மாற்றியமைக்கும்போழுது அதற்கு சில வருடங்கள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை தயார் செய்து அதன்பின் பெரும்பாலான மக்களின் விருப்பத்தின் அடிப்படையில், புரிதலின் அடிப்படையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இல்லையெனில் தமிழ் சார்ந்த இப்படிப்பட்ட முடிவு சரியா என்பதைவிட அதை நடைமுறைப்படுத்திய விதம் சரியா என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியாது. இப்படிப்பட்ட முடிவுகளை, அரசியல்வாதி என்ற முத்திரை மட்டுமின்றி, தமிழ் அறிஞர்களை, மக்கள் விரும்பும் இலக்கியவாதிகளை, எழுத்தாளர்களை முன்னிறுத்தி மாற்றம் செய்வது அங்கீகரிக்கக் கூடிய விதத்தில் அமையும். இருப்பினும் கீழ்காணும் பலரது சிந்தனைகளை, கருத்துக்களை ஆராய்ந்து "எது உண்மையான தமிழ் புத்தாண்டு? " என்ற கேள்விக்கான பதிலை நீங்களே அறிந்துகொள்ளுங்கள்.
அதிமுக தலைவர், மேனாள் முதல்வர் அவர்களின் செல்வி.ஜெயலலிதாவின் அறிக்கை: சித்திரை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு ஏன் அறிவித்தது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று விளக்கம் அளித்தார். சித்திரை மாத துவக்கம் தான் தமிழ்புத்தாண்டின் துவக்கம் என்பதற்கான இலக்கியங்களை மேற்கோள் காட்டி, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் புகார்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த தமிழ்ப் புத்தாண்டு தொடக்க விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை திருநாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். அதற்கான காரணங்கள் பல உள்ளன. சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர்கள் வழங்கப்படுகின்றன.இலக்கிய ஆதாரங்கள்: "சித்திரையே வா நம் வாழ்வில் முத்திரை பதிக்க வா' என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தினால், சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுக்குரிய பொருத்தமான நாள் என மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார். சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அகத்தியரின், "பன்னாயிரத்தில்' பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. "திண்ணிலை, மருப்பின் ஆடுதலை' என்று நக்கீரர் கூறியிருக்கிறார். இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார், முனைவர் ராசமாணிக்கனார். புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம்
கொடுத்துள்ளார் கமலை ஞானப்பிரகாசர். நாமக்கல் கவிஞரும், "சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்' என்ற தன் வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத்தெரிவித்துள்ளார். கோடைக்காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது.கருணாநிதியே ஏற்பு: "தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் நாள்' என்று திடீரென அறிவித்த கருணாநிதியே, "சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படும்' என்று, தமிழ்ப் புத்தாண்டுக்கு பல முறை வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில், காவல் துறை குறித்த ஒரு வினாவிற்கு, 1990ம் ஆண்டில், பதிலளிக்கும்போது, சில காவல் அலுவலகங்கள் சித்திரை முதல் நாள் அமைய விருக்கின்றன, என்று பதில் அளித்தார். கைதிகளின் தண்டனை காலத்தைக் குறைப்பது குறித்து, 1990ம் ஆண்டு சட்டப்பேரவை விதி, 110ன்கீழ் அறிக்கை அளிக்கும் போது, "தமிழ்ப் புத்தாண்டு அன்று விடுதலை செய்யப்படுவர்' என்று தெரிவித்துள்ளார். அதாவது, சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த, 1935ம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பது எளிதில் பெறப்படும். கிறிஸ்துபிறப்பிற்கு, 30 ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்துகண்ட முடிவாகும் என்று மறைமலை அடிகளார் கூறியதாக, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில், சிறுவை நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.விளக்கம்: உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது, தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று ஒட்டுமொத்த எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டு உள்ள உண்மை என்று
பொத்தாம் பொதுவாகக்கூறி, தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக, சட்டத்தின் மூலம் கருணாநிதி மாற்றியமைத்தார். யார் கேட்டார் இந்தச் சட்டத்தை; இதனால் மக்களுக்கு என்ன பயன்? இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான காரணத்தை, பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நன்மாறன் கேட்டதற்கு, கருணாநிதி தெளிவுபடுத்தவில்லை.
திமுக தலைவர் , மேனாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் அறிக்கை: ‘’ பழைய கதை - மறந்துபோமோ? ‘’ என்ற தலைப்பிலான கடித அறிக்கை...
உடன்பிறப்பே, அரசியலுக்காகவும் - சுய விளம்பரத்துக்காகவும் நான் தமிழ்ப் புத்தாண்டை மாற்றியதாக - தமிழறிஞர்களுக்கு விருது வழங்கிய விழாவில் என்னைப் பற்றிய அர்ச்சனையைத்தான் ஜெயலலிதா முழு நேரமும் பாடியிருக்கிறார். தை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதைச் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று ஜெயலலிதா மாற்றியிருக்கிறார். அதற்கு என்ன ஆதாரம் சொல்லியிருக்கிறார் என்றால், “சித்திரையே வா! நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா” என்று சொல்லும் மரபு இருக்கிற காரணத்தால் சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என தெய்வத்திரு மதுரை ஆதினம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்” என்று ஜெயலலிதா பேசியிருக்கிறார். மதுரை ஆதினம் குறிப்பிட்டு விட்டாராம்! எப்படிப்பட்ட ஆதாரம்?
சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு இதுதான் ஆதாரமா? மேலும் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க நாள் என்று நானே கடந்த காலத்தில் கூறியிருக்கிறேன் என்பதை ஜெயலலிதா ஆதாரமாகச் சொல்கிறார். தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று தி.மு.கழக ஆட்சியில் 2008ஆம் ஆண்டு அறிவித்து அதனைச் சட்டமாக ஆக்கும் வரை - சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டாக அதிகாரப் பூர்வமாகக் கருதப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் சித்திரைத் திருநாள் தானே தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில் அப்படித்தானே அழைத்திருக்க முடியும்! “தை மாதம் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகச் சட்டத்தின் மூலம் மாற்றி அமைத்தார் கருணாநிதி. யார் கேட்டது இந்தச் சட்டத்தை? இந்தச் சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன்?” என்று ஜெயலலிதா பேசி யிருக்கிறார்.
தை திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை மாற்றி ஜெயலலிதா வந்ததும் வராததுமாக சித்திரைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் கொண்டு வந்தாரே, அவரிடம் யார் கேட்டது இந்தச் சட்டம் வேண்டும் என்று? அவர் மாற்றிய சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன்? என்று நாம் திருப்பிக் கேட்க முடியாதா? சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் அரசு விழாக்களுக்குத்தான் வழங்கப்படும். கட்சி நிகழ்ச்சிகளுக்குத் தரப்பட மாட்டாது. நடைபெற்றதோ அரசு விழா. 13ஆம் தேதி அங்கே நடைபெற்ற விழாவில் ஜெயலலிதா என்னென்ன பேசியிருக்கிறார்? அரசு விழாவில் பேசியதெல்லாம் எனக்காக செய்யப்பட்ட அர்ச்சனைகள்தான்! முதலமைச்சர் என்றால் அதுவும் ஜெயலலிதா என்றால் எங்கே வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் பேசலாமா? தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மதுரையிலும், தஞ்சையிலும் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினார்களாம்! ஜெயலலிதா கூறியிருக்கிறார். தி.மு.கழக ஆட்சியில் சென்னையிலும், கோவையிலும் நடந்த உலகத் தமிழ் மாநாடு தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அல்லவா? கோவை மாநாட்டிற்குப் பெயரே தமிழ்ச் செம்மொழி மாநாடுதானே? தஞ்சையில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நடத்திய உலகத் தமிழ் மாநாட்டின் லட்சணம் என்ன என்பது தமிழர்களுக்குத் தெரியாதா? அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளிநாட்டுத் தமிழறிஞர்கள், கா.சிவத்தம்பி உட்பட எந்த அளவிற்கு அவமானப்படுத்தப் பட்டார்கள்? மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
23-8-2011 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பேசும்போதே, ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டைத் தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது” என்று கடுமையாகச் சாடியிருக்கிறார். பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா ஆதாரப் பூர்வமாக பேசுவதாக எண்ணிக் கொண்டு, “சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம்மாதத்தின் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராகும். உதாரணமாக, சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் சித்திரை ஆகும். இதே போன்று வைகாசி மாதம் பௌர்ணமி அன்று விசாகம் நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி ஆகும். இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த அடிப்படையிலேயே பெயர்கள் வைக்கப்பட்டன” என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதாவின் பேச்சு எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பார்க்கலாம்! தை மாதத்தில் பௌர்ணமி “பூசம்” நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்குப் பூசம் என்ற பெயர் உள்ளதா? மாசி மாதத்தில் பௌர்ணமி “மகம்” நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்கு மகம் என்று பெயர் இல்லையே? பங்குனி மாதத்தில் பௌர்ணமி “உத்திரம்” நட்சத்திரத்தில்தான் வரும்.
அந்த மாதத்திற்கு உத்திரம் என்று பெயர் இல்லை. 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லையே; இதற்கெல்லாம் முதலமைச்சர் நாளை சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் அறிக்கை படிப்பார் என்று நம்புவோமாக! சென்னைப் பல்கலைக் கழகத்தால் 1912ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பேரகராதியில் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். ஆனால் அவரே கூறியபடி அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் - முதலமைச்சர் ஜெயலலிதா புரவலராக இருந்த நேரத்தில் - வெளியிடப்பட்ட “வாழ்வியற் களஞ்சியம்” - தொகுதி 13 - பக்கம் 43இல் “ஆடிப்பட்டத்தில் தேடி விதைத்து உழைத்து உணவுப் பொருள்களைத் திரட்டிய மக்கள் உத்தராயணம் தொடக்கமுறும் தைத் திங்கள் முதல் நாளன்று நன்றியுணர்வுடன் மழைக்கும் வேளாண்மைப் பெருக்கத்திற்கும் காரணமான சூரியனை வழிபடுகின்றனர். “சங்கிராந்தி”யன்று கடவுளுக்குச் சிறப்பான வழிபாடுகள், விழாக்கள் ஆகியன செய்ய வேண்டுமென்று பிருகுசங்கிதை என்னும் நூல் கூறுகின்றது. ஒரு “தேவநாள்” என்பது ஒரு மானிட ஆண்டு என்றும், அத்தேவநாளின் பகற்பொழுதின் தொடக்கமே தை முதல் நாள் என்றும் அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படுகின்றது என்றும் ஆகமங் களிலிருந்து அறிய முடிகின்றது.” என்று கூறப்பட்டிருக்கிறது என்பதை அம்மையாருக்கு மிகவும் பிடித்த ஆகம உதாரணத்திலிருந்தே குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.
2004ஆம் ஆண்டு, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து, அவரே அணிந்துரையும் வழங்கியுள்ள “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி” - நான்காம் மடலம் - மூன்றாம் பாகம் - 111வது பக்கத்தில் “தை” என்பதற்கு பொருள் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு பேச்சு தயாரித்துக் கொடுத்தவர்கள் அந்த நூலையாவது வாங்கி அம்மையாரிடம் காட்டியிருக்கலாம் அல்லது அவர்களே படித்துப் பார்த்திருக்கலாம். அந்த நூலில் தை என்பதற்குப் பொருளாக “தமிழாண்டின் தொடக்க மாதம்” (first month of Tamil era); திருவள்ளுவராண்டின் தொடக்க மாதம் என்றுள்ளது. மேலும் அங்கேயே இச் “சுறவ” மாதமே தமிழாண்டின் தொடக்கம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது. அதுபோலவே “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி” - மூன்றாம் மடலம் - இரண்டாம் பாகம் நூலும் அம்மையாரின் அணிந்துரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. அங்கேயும் சித்திரை என்பதற்குப் பொருளாக தமிழாண்டின் முதல் மாதமாகக் கருதப்படும் “மேழம்” என்று கூறிவிட்டு - “சுறவமே” தமிழாண்டின் தொடக்கம்; மேழத்தைக் கொள்வது பொருத்தமன்று என்று எழுதியுள்ளார்கள். சுறவம் என்றால் தை மாதம்; மேழம் என்றால் சித்திரை மாதமாகும்.
மேலும் ஜெயலலிதா பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பேசும்போது, “1935ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில், “திருவள்ளுவர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்பது எளிதிற் பெறப்படும். கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்” என மறைமலை அடிகளார் கூறியதாக ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில் சிறுவை நச்சினார்க்கினியன் கூறியிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அல்ல, 31 ஆண்டுகளுக்கு முன்புதான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதுதான் மறைமலை அடிகளாரின் கருத்துமாகும். அந்தக் கருத்தைத் தான் அரசு ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருகின்றது. இதைத்தான் மறைமலை அடிகளாரின் மகனும், மறைமலையடிகள் வரலாற்றினை நமக்குத் தொகுத்து வழங்கியவருமான மறை. திருநாவுக்கரசு, “மறைமலை அடிகளின் கருத்துப்படி திருவள்ளுவர் கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் முற்பட்டவர்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அது மாத்திரமல்ல; அம்மையார் குறிப்பிட்டுள்ள 1981ஆம் ஆண்டு மதுரையில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முன்னின்று நடத்திய ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டினையொட்டிய மலரினை என் வீட்டிலே உள்ள நூலகத்திலிருந்து தேடிப்பிடித்து சிறுவை நச்சினார்க்கினியன் எழுதிய கட்டுரை 407ஆம் பக்கத்தில் வந்ததை முழுவதும் படித்தேன்.
அதில் அம்மையார் குறிப்பிட்ட பகுதி 408ஆம் பக்கத்தில் இருந்தாலும், 407ஆம் பக்கத்திலே அவரே என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது தமிழகத்தின் நெடுநாளைய பழமொழி. சூரியன் சுற்றும் நிலையின் கணக்கினைக் கொண்டு, அந்நாளில் தை முதல் ஆனி ஈறாக ஒரு பகுதியும் ஆடி முதல் மார்கழி ஈறாக மற்றொரு பகுதியும் விளங்கின. ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலம் இருள் நிலை கொண்டது. தை முதல் ஆனி ஈறாகக் கொண்ட காலம் பகல் நிலை கொண்டது. ஆண்டின் இரவுக் காலமாகிய ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலத்தில் - அதாவது ஆடிக் காற்றிலும், அடுத்துள்ள ஐப்பசி மழையிலும், மார்கழிப் பனியிலும் குளிரிலும் இடர்ப்படும்பொழுது மக்கள் உள்ளத்தில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கை ஒலி பேரொலியாய்க் கேட்கிறது. இந்த இரவு நிலை மாறிப் பகல்நிலை பெற்றுப் பயன் தரும் தைப் பிறப்பு நாளைப் புத்தாண்டின் புனித நாளாய், பிறப்பு நாளாய்ப் பழந்தமிழர் கொண்டாடி வந்தனர். இன்றுங்கூட, தைப் பிறப்பைத் தனிப் பெருஞ்சிறப்பாகத் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆகவே நாம் தைத் திங்களையே ஆண்டின் முதல் திங்களாய்க் கணக்கெடுத்துச் செயற்படுத்துவோம்’’ - என்று அவரே எழுதியிருப்பதை அம்மை யாருக்குப் பேச்சு எழுதிக் கொடுத்தவர்கள் பார்க்க மறந்து விட்டார்களா? அல்லது பார்த்து விட்டு அம்மையார் மாட்டிக் கொண்டு விழிக்கட்டும் என்று மறைத்து விட்டார்களா?
திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால் - தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திட கழக அரசு முடிவு செய்துள்ளது என்று 23-1-2008 அன்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. 1-2- 2008 அன்று சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதேநிலை தொடருமேயானால் தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை எப்படி கொடுக்கலாம்? அது கருணாநிதி செய்து கொண்ட சுய விளம்பரம், அரசியலுக்காகச் செய்து கொண்ட ஏற்பாடு என்று சொன்னாலும் சொல்லக் கூடும். ஏனென்றால் செம்மொழி என்றாலே, அம்மையாருக்கு அவ்வளவு பாசம்! எட்டிக்காய் தின்றது போல! ஆட்சிக்கு வந்த முதல் நாள் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தையே தூக்கி வெளியிலே போட்டவர் ஜெயலலலிதா. இன்றளவும் அந்த நூலகத்திற்கு இடம் கொடுத்தபாடில்லை. சென்னைத் தீவுத் திடலில் 6.3.2006 அன்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சோனியாகாந்தி, ‘மத்தியிலே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்பட்டவுடன் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்திருக்கிறோம். அதன்மூலம் வரலாற்றுப் புகழ்மிக்க தமிழ்மொழிக்கு பாரம்பரியமும் கலாச்சாரப் பெருமையும் தரக்கூடிய மிகப்பெரிய தகுதியினை இந்திய அரசு தந்திருக்கிறது. தமிழ் மொழியைச் செம்மொழியாக்கிய அந்த வரலாற்றுச் சாதனையின் முழுப் பெருமையும் பங்கும் கருணாநிதியே சாரும். தமிழைச் செம்மொழியாக்குவதில் அவரது பங்கு மகத்தான ஒன்று என்பதை இந்த மேடையிலே நான் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்’ - என்று பாராட்டினார். இப்படியெல்லாம் இவனுக்குப் பாராட்டுக் கிடைக்கலாமா என்ற வயிற்றெரிச்சல் காரணமாகத்தான் தேடித் தேடிப் பார்த்து கழக ஆட்சியில் நம்மால் செய்யப்பட்ட சாதனைகளையெல்லாம் மாற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டுள்ளார். அதிலே ஒன்றுதான் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு நாளை மாற்றுகின்ற செயலாகும்.
சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா? தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா? என்ற கேள்வியை எழுப்பி, “நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையல்ல உனக்குப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே அறிவுக்கொவ்வாத அறுபதாண்டுக் கணக்கு தரணியாண்ட தமிழருக்குத் தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்று பாட்டிலே பாடி வைத்த பாவேந்தர் பாரதிதாசன், என்னுடைய சுய விளம்பரத்திற்காக அவர் பாடியதா இக்கவிதை! தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில், அ.தி.மு.க. அரசு திருவள்ளுவர் ஆண்டினை என்ன செய்யப் போகிறது? தி.மு.கழக ஆட்சியில்தான் 1969இல் திருவள்ளுவர் ஆண்டு ஈராயிரம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. 1972இல் கழக ஆட்சியில் நடைபெற்றபோதுதான் திருவள்ளுவர் ஆண்டு என்பதை ஏற்று, அரசு இனிமேல் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் மற்றும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங்களிலும் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. ஏன் இன்றளவும் கழக நாளிதழ் “முரசொலி”யின் முகப்பில் “திருவள்ளுவர் ஆண்டு 2043” என்றுதான் எழுதப்பட்டுள்ளது. எனவே திருவள்ளுவர் ஆண்டு தொடங்கும் தை முதல் நாள்தான் தமிழர்க்குப் புத்தாண்டு நாள். மலேசியா நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் தை முதல் நாளையே தங்களது புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார், “முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடி னார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தி வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனதிலும் புதுமை, புதிய பச்சரிசியைப் பொங்குவார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்” - என்று விளக்கியிருக்கிறார். முதலமைச்சர் ஜெயலலிதா தன் பேச்சுக்கு ஆதாரமாக விஞ்ஞான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு, சித்திரை மாதம் வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அதற்கு விடையளிப்பது போல, சௌதி மன்னர் பல்கலைக் கழக லேசர் துறை பேராசிரியர் விஞ்ஞானி டாக்டர் வ. மாசிலாமணி “தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்ற தலைப்பில் எழுதியுள்ள நீண்டதொரு கட்டுரையில், “ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகச் சூழலில், கிராமத்து வானியல் விஞ்ஞானிகளின் கணக்குப்படி தைத் திங்கள் வையத்திற்கு எல்லாம் புத்துணர்வு கிட்டும் மாதம் என்று சரியாகவே கணக்கிட்டிருக்கிறார்கள். அதனால்தான் மார்கழி கடைசி நாள் பழையனவும், சோம்பலும் கழியும் போகியாகவும் தை முதல் நாளை சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கலாகவும் கொண்டாடியிருக்கிறார்கள். ......
சூரியன் தென்கோடி சென்று நின்று திரும்பி நம்மையெல்லாம் நோக்கும் நாள்தான் உலக உயிர்கள் புத்துணர்ச்சி பெறும் நாள். அந்த நாள் ஜனவரி 14. அந்த நாளைக் கொண்டு துவங்குவது தான் வானியல் வழியான சரியான ஆண்டுத் துவக்கம். ஜனவரி 14க்கு அதாவது தை முதல் நாளுக்கு இத்துணை சிறப்பு இருக்கிறது. இந்தக் கட்டுரை படிக்கும் விஞ்ஞான ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள். “இண்டர்நெட்” போய் perhelion என்று தட்டுங்கள். கட்டாயம் புத்தாண்டுக்கு தைத் திங்களே பொருத்தம் என்பீர்கள்” -என்று விளக்கியிருக்கிறார். எனவே தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் துவக்கம் என்பதை மாற்றி சித்திரை என்று ஜெயலலிதா அறிவித்துள்ள செயல் வழக்கம் போலவே அவருடைய காழ்ப்புணர்ச்சி, கழக அரசு நடைமுறைப் படுத்திய செயல்களுக்கெல்லாம் ஊறு தேட முற்படுகின்ற சூழ்ச்சிகளிலே ஒன்றே தவிர வேறல்ல! தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்கள் முதல் நாள் என்று நான் சுய விளம்பரத்திற்காகச் செய்தேனா? அல்லது அதை மாற்றி சித்திரைத் திங்கள் என்று தற்போது அறிவிக்கும் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சுய விளம்பரத்திற்காகச் செய்கிறாரா என்பதை; பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தை என்று மில்லாமல் இப்போது புதிதாக தி.மு.க.வினரையும் முன்னாள் முதலமைச்சரையும் ஏசிப் பேசி அரசியலுக்காகப் பயன்படுத்தியுள்ள அநாகரிகச் செயல் குறித்து ஜெயலலிதாவின் கும்பல்தான் விளக்க வேண்டும்!
அன்புள்ள, மு.க.
தமிழ் ஆர்வலர்களின் கருத்து:
தமிழ் ஆண்டு (திருவள்ளுவராண்டு)
காலத்தின் அருமை நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர். ’நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும் வாளது உணர்வார்ப் பெறின்’ என்கிற குறள் மூலமும், காலம் அறிதல் என்கிற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையை வள்ளுவம் உணர்த்துகிறது. நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60 நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று 6 சிறு பொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று 6 பெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர். காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைப் பொதுவான ஆண்டுக்கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது, வருத்தம் தருகிறது.
இன்றைய நிலை இன்னாளில் வழக்கில் உள்ள ‘பிரபவ முதல் அட்சய’ வரை உள்ள 60 ஆண்டுகளில் ஒன்று கூட தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாகவும் இல்லை, பல்லாயிரமாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழினத்தின் காலத்தை வரையறுக்கவும் முடியவில்லை. இந்த இழிநிலையைப் போக்கத் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் ஆராய்ந்தார்கள். இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள். அவர்கள் எடுத்த முடிவுகள் திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2011 + 31 = 2042) என்று அந்நாளில் முடிவு செய்தனர். கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்; புதன் = அறிவன்; சனி = காரி. தமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. மேற்கண்ட விவரங்கள் மறைமலை நகரில் வாழ்ந்து வரும் திரு வ. வேம்பையன் அவர்களின் கட்டுரையிலிருந்து எடுத்தது. கடந்த 30 ஆண்டுகளாக இவர் திருவள்ளுவராண்டைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கடும் முயற்சி எடுத்துவருகிறார். 1967 இல் ஆட்சிக்கு வந்தபோதோ அல்லது 1971 இல் பெரும் வெற்றி பெற்றபோதோ முழு வீச்சில் அரசு சட்டத்துடன் நடைமுறைப்படுத்தி இருந்தால் கடந்த 40 ஆண்டுகளில் நாம் வெற்றி பெற்றிருப்போம். ஒன்று தமிழாண்டு திருவள்ளுவராண்டு யாராலும் மாற்ற முடியாத படி (எப்படி இன்று ‘தமிழ்நாடு’ என்ற பெயரை யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியாதோ) வழக்கத்தில் வந்து நிலைத்து இருக்கும்.
என் கருத்து அறிஞர்களும் சான்றோர்களும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்தாலும் ஒரு சாரார் இதை மறுத்து வழக்கமான சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகப் பாவித்து வருகிறார்கள். இவர்கள் தமிழ் ஆண்டுகள் என்கிற பெயரில் வழங்கி வரும் வடமொழிப் பெயர்களையும் ஏற்றுக் கொண்டு வருவது வருத்தத்தைத் தருகிறது. தமிழருக்கென ஒரு தொடராண்டு கொண்டுவருவதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தமிழ் முதல் திங்கள் ’தை’யா அல்லது ’சித்திரை’யா என்பதுதான் குழப்பம். தமிழ்ப் பேசும் அனைத்து தரப்பினருக்கும் வடமொழிப் பெயரை மாற்றுவதிலும் மாற்றுக் கருத்தேதுமிருக்க வாய்ப்பில்லை. திருவள்ளுவரின் காலத்தை கி.மு.31 என்று கணித்ததில்தான் குழப்பம் வருகிறது. திருவள்ளுவர் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்ததற்கு வாய்ப்பில்லை என்று மேலை நாட்டுத் தமிழறிஞர்கள் நிலை நாட்டுகிறார்கள். அதில் முக்கியமானவர் செக்கோசுலேவியாவில் பிறந்த பெரும் தமிழறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் அவர்களாவார். இவர் மொழியின் அடிப்படையில் தமிழ் நூல்களின் காலத்தை ஆய்ந்து திருக்குறள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்கிற நூலில் நிறுவியுள்ளார். அவர் ஏன் அப்படி கூறுகிறார்.
|
|||||
by Swathi on 15 Apr 2012 6 Comments | |||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|