LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக ஒவ்வொருவரும் சில சமுகத்தின் பழக்கவழக்கத்தினை ஏன் என்று கேட்காமல் பின்பற்றுகிறோம்.  சில தனி மனிதர்கள் அப்படிப்பட்ட நீண்ட நாளைய நடைமுறையை மாற்றி அமைக்க முனையும்போது அதை மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் கையாளவேண்டும்.  காரணம், தனி மனிதர்கள் மேல் உள்ள மக்களின் அபிப்பிராயங்கள் மாறும்போது, அரசியல் கட்சிகளை விரும்பாத தமிழர்கள் அதை சொல்பவரை பொறுத்து, சொல்லும் கட்சியை, அதன் கொள்கைகளைப் பொறுத்து தமிழ் கலாச்சாரம் சார்ந்த ஒரு இதுபோன்ற ஒரு முடிவை ஆதரிப்பதோ, ஆதரிக்காமல் போவதோ, தமிழ் சமுகத்திற்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும்.   சரி, சரியல்ல என்பதைத் தாண்டி, ஒரு கலாச்சாரம் சார்ந்த தமிழர்கள் வெகுவாக கொண்டாடுகிற ஒரு பண்டிகையை மாற்றியமைக்கும்போழுது அதற்கு சில வருடங்கள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை தயார் செய்து அதன்பின் பெரும்பாலான மக்களின் விருப்பத்தின் அடிப்படையில், புரிதலின் அடிப்படையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.  இல்லையெனில் தமிழ் சார்ந்த இப்படிப்பட்ட முடிவு சரியா என்பதைவிட அதை நடைமுறைப்படுத்திய விதம் சரியா என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியாது. இப்படிப்பட்ட முடிவுகளை, அரசியல்வாதி என்ற முத்திரை மட்டுமின்றி, தமிழ் அறிஞர்களை, மக்கள் விரும்பும் இலக்கியவாதிகளை, எழுத்தாளர்களை முன்னிறுத்தி மாற்றம்  செய்வது அங்கீகரிக்கக் கூடிய விதத்தில் அமையும்.  

இருப்பினும் கீழ்காணும் பலரது சிந்தனைகளை, கருத்துக்களை ஆராய்ந்து "எது உண்மையான தமிழ் புத்தாண்டு? " என்ற கேள்விக்கான பதிலை நீங்களே அறிந்துகொள்ளுங்கள்.

 

அதிமுக தலைவர், மேனாள் முதல்வர்  அவர்களின் செல்வி.ஜெயலலிதாவின் அறிக்கை:  

சித்திரை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு ஏன் அறிவித்தது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று விளக்கம் அளித்தார். சித்திரை மாத துவக்கம் தான் தமிழ்புத்தாண்டின் துவக்கம் என்பதற்கான இலக்கியங்களை மேற்கோள் காட்டி, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் புகார்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த தமிழ்ப் புத்தாண்டு தொடக்க விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை திருநாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். அதற்கான காரணங்கள் பல உள்ளன. சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர்கள் வழங்கப்படுகின்றன.இலக்கிய ஆதாரங்கள்: "சித்திரையே வா நம் வாழ்வில் முத்திரை பதிக்க வா' என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தினால், சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுக்குரிய பொருத்தமான நாள் என மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார். சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அகத்தியரின், "பன்னாயிரத்தில்' பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. "திண்ணிலை, மருப்பின் ஆடுதலை' என்று நக்கீரர் கூறியிருக்கிறார். இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார், முனைவர் ராசமாணிக்கனார். புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம் 

 

கொடுத்துள்ளார் கமலை ஞானப்பிரகாசர். நாமக்கல் கவிஞரும், "சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்' என்ற தன் வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத்தெரிவித்துள்ளார். கோடைக்காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது.கருணாநிதியே ஏற்பு: "தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் நாள்' என்று திடீரென அறிவித்த கருணாநிதியே, "சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படும்' என்று, தமிழ்ப் புத்தாண்டுக்கு பல முறை வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில், காவல் துறை குறித்த ஒரு வினாவிற்கு, 1990ம் ஆண்டில், பதிலளிக்கும்போது, சில காவல் அலுவலகங்கள் சித்திரை முதல் நாள் அமைய விருக்கின்றன, என்று பதில் அளித்தார். கைதிகளின் தண்டனை காலத்தைக் குறைப்பது குறித்து, 1990ம் ஆண்டு சட்டப்பேரவை விதி, 110ன்கீழ் அறிக்கை அளிக்கும் போது, "தமிழ்ப் புத்தாண்டு அன்று விடுதலை செய்யப்படுவர்' என்று தெரிவித்துள்ளார். அதாவது, சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த, 1935ம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பது எளிதில் பெறப்படும். கிறிஸ்துபிறப்பிற்கு, 30 ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்துகண்ட முடிவாகும் என்று மறைமலை அடிகளார் கூறியதாக, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில், சிறுவை நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.விளக்கம்: உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது, தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று ஒட்டுமொத்த எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டு உள்ள உண்மை என்று

 

பொத்தாம் பொதுவாகக்கூறி, தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக, சட்டத்தின் மூலம் கருணாநிதி மாற்றியமைத்தார். யார் கேட்டார் இந்தச் சட்டத்தை; இதனால் மக்களுக்கு என்ன பயன்? இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான காரணத்தை, பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நன்மாறன் கேட்டதற்கு, கருணாநிதி தெளிவுபடுத்தவில்லை.


விளம்பர உத்தி: தமிழ்ப்புத்தாண்டை மாற்ற எடுத்த நடவடிக்கை தமிழை வளர்க்கவோ, தமிழுக்குச் சிறப்பு சேர்க்கவோ எடுத்த நடவடிக்கை என, எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. இது போன்ற நடவடிக்கை வியாபார, விளம்பர உத்தி. கருணாநிதி சொல்வதைப் போன்று, தமிழ் அறிஞர்கள் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தால், அண்ணாத்துரை நிறைவேற்றி இருப்பார்; ஏன் கருணாநிதி கூட நிறைவேற்றி இருப்பார். தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் மீது தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம். அதை தமிழர்கள் விரும்பவில்லை; எனவே அதை தமிழக அரசு மாற்றியது, என்றார்.

 

திமுக தலைவர் , மேனாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் அறிக்கை:  

‘’ பழைய கதை - மறந்துபோமோ? ‘’ என்ற தலைப்பிலான கடித அறிக்கை...

 

உடன்பிறப்பே,

அரசியலுக்காகவும் - சுய விளம்பரத்துக்காகவும் நான் தமிழ்ப் புத்தாண்டை மாற்றியதாக - தமிழறிஞர்களுக்கு விருது வழங்கிய விழாவில் என்னைப் பற்றிய அர்ச்சனையைத்தான் ஜெயலலிதா முழு நேரமும் பாடியிருக்கிறார். தை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதைச் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று ஜெயலலிதா மாற்றியிருக்கிறார். அதற்கு என்ன ஆதாரம் சொல்லியிருக்கிறார் என்றால், “சித்திரையே வா! நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா” என்று சொல்லும் மரபு இருக்கிற காரணத்தால் சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என தெய்வத்திரு மதுரை ஆதினம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்” என்று ஜெயலலிதா பேசியிருக்கிறார். மதுரை ஆதினம் குறிப்பிட்டு விட்டாராம்! எப்படிப்பட்ட ஆதாரம்?

 

சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு இதுதான் ஆதாரமா? மேலும் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க நாள் என்று நானே கடந்த காலத்தில் கூறியிருக்கிறேன் என்பதை ஜெயலலிதா ஆதாரமாகச் சொல்கிறார்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று தி.மு.கழக ஆட்சியில் 2008ஆம் ஆண்டு அறிவித்து அதனைச் சட்டமாக ஆக்கும் வரை - சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டாக அதிகாரப் பூர்வமாகக் கருதப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் சித்திரைத் திருநாள் தானே தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில் அப்படித்தானே அழைத்திருக்க முடியும்! “தை மாதம் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகச் சட்டத்தின் மூலம் மாற்றி அமைத்தார் கருணாநிதி. யார் கேட்டது இந்தச் சட்டத்தை? இந்தச் சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன்?” என்று ஜெயலலிதா பேசி யிருக்கிறார்.

 

தை திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை மாற்றி ஜெயலலிதா வந்ததும் வராததுமாக சித்திரைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் கொண்டு வந்தாரே, அவரிடம் யார் கேட்டது இந்தச் சட்டம் வேண்டும் என்று? அவர் மாற்றிய சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன்? என்று நாம் திருப்பிக் கேட்க முடியாதா? சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் அரசு விழாக்களுக்குத்தான் வழங்கப்படும். கட்சி நிகழ்ச்சிகளுக்குத் தரப்பட மாட்டாது. நடைபெற்றதோ அரசு விழா. 13ஆம் தேதி அங்கே நடைபெற்ற விழாவில் ஜெயலலிதா என்னென்ன பேசியிருக்கிறார்? அரசு விழாவில் பேசியதெல்லாம் எனக்காக செய்யப்பட்ட அர்ச்சனைகள்தான்!  முதலமைச்சர் என்றால் அதுவும் ஜெயலலிதா என்றால் எங்கே வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் பேசலாமா? தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மதுரையிலும், தஞ்சையிலும் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினார்களாம்! ஜெயலலிதா கூறியிருக்கிறார். தி.மு.கழக ஆட்சியில் சென்னையிலும், கோவையிலும் நடந்த உலகத் தமிழ் மாநாடு தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அல்லவா? கோவை மாநாட்டிற்குப் பெயரே தமிழ்ச் செம்மொழி மாநாடுதானே? தஞ்சையில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நடத்திய உலகத் தமிழ் மாநாட்டின் லட்சணம் என்ன என்பது தமிழர்களுக்குத் தெரியாதா? அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளிநாட்டுத் தமிழறிஞர்கள், கா.சிவத்தம்பி உட்பட எந்த அளவிற்கு அவமானப்படுத்தப் பட்டார்கள்? மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

 

23-8-2011 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பேசும்போதே, ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டைத் தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது” என்று கடுமையாகச் சாடியிருக்கிறார். பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா ஆதாரப் பூர்வமாக பேசுவதாக எண்ணிக் கொண்டு, “சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம்மாதத்தின் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராகும். உதாரணமாக, சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் சித்திரை ஆகும். இதே போன்று வைகாசி மாதம் பௌர்ணமி அன்று விசாகம் நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி ஆகும். இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த அடிப்படையிலேயே பெயர்கள் வைக்கப்பட்டன” என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதாவின் பேச்சு எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பார்க்கலாம்! தை மாதத்தில் பௌர்ணமி “பூசம்” நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்குப் பூசம் என்ற பெயர் உள்ளதா? மாசி மாதத்தில் பௌர்ணமி “மகம்” நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்கு மகம் என்று பெயர் இல்லையே? பங்குனி மாதத்தில் பௌர்ணமி “உத்திரம்” நட்சத்திரத்தில்தான் வரும்.

 

அந்த மாதத்திற்கு உத்திரம் என்று பெயர் இல்லை. 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லையே; இதற்கெல்லாம் முதலமைச்சர் நாளை சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் அறிக்கை படிப்பார் என்று நம்புவோமாக! சென்னைப் பல்கலைக் கழகத்தால் 1912ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பேரகராதியில் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். ஆனால் அவரே கூறியபடி அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் - முதலமைச்சர் ஜெயலலிதா புரவலராக இருந்த நேரத்தில் - வெளியிடப்பட்ட “வாழ்வியற் களஞ்சியம்” - தொகுதி 13 - பக்கம் 43இல் “ஆடிப்பட்டத்தில் தேடி விதைத்து உழைத்து உணவுப் பொருள்களைத் திரட்டிய மக்கள் உத்தராயணம் தொடக்கமுறும் தைத் திங்கள் முதல் நாளன்று நன்றியுணர்வுடன் மழைக்கும் வேளாண்மைப் பெருக்கத்திற்கும் காரணமான சூரியனை வழிபடுகின்றனர். “சங்கிராந்தி”யன்று கடவுளுக்குச் சிறப்பான வழிபாடுகள், விழாக்கள் ஆகியன செய்ய வேண்டுமென்று பிருகுசங்கிதை என்னும் நூல் கூறுகின்றது. ஒரு “தேவநாள்” என்பது ஒரு மானிட ஆண்டு என்றும், அத்தேவநாளின் பகற்பொழுதின் தொடக்கமே தை முதல் நாள் என்றும் அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படுகின்றது என்றும் ஆகமங் களிலிருந்து அறிய முடிகின்றது.” என்று கூறப்பட்டிருக்கிறது என்பதை அம்மையாருக்கு மிகவும் பிடித்த ஆகம உதாரணத்திலிருந்தே குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.

 

2004ஆம் ஆண்டு, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து, அவரே அணிந்துரையும் வழங்கியுள்ள “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி” - நான்காம் மடலம் - மூன்றாம் பாகம் - 111வது பக்கத்தில் “தை” என்பதற்கு பொருள் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு பேச்சு தயாரித்துக் கொடுத்தவர்கள் அந்த நூலையாவது வாங்கி அம்மையாரிடம் காட்டியிருக்கலாம் அல்லது அவர்களே படித்துப் பார்த்திருக்கலாம். அந்த நூலில் தை என்பதற்குப் பொருளாக “தமிழாண்டின் தொடக்க மாதம்” (first month of Tamil era); திருவள்ளுவராண்டின் தொடக்க மாதம் என்றுள்ளது. மேலும் அங்கேயே இச் “சுறவ” மாதமே தமிழாண்டின் தொடக்கம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது. அதுபோலவே “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி” - மூன்றாம் மடலம் - இரண்டாம் பாகம் நூலும் அம்மையாரின் அணிந்துரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. அங்கேயும் சித்திரை என்பதற்குப் பொருளாக தமிழாண்டின் முதல் மாதமாகக் கருதப்படும் “மேழம்” என்று கூறிவிட்டு - “சுறவமே” தமிழாண்டின் தொடக்கம்; மேழத்தைக் கொள்வது பொருத்தமன்று என்று எழுதியுள்ளார்கள். சுறவம் என்றால் தை மாதம்; மேழம் என்றால் சித்திரை மாதமாகும்.

 

மேலும் ஜெயலலிதா பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பேசும்போது, “1935ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில், “திருவள்ளுவர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்பது எளிதிற் பெறப்படும். கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்” என மறைமலை அடிகளார் கூறியதாக ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில் சிறுவை நச்சினார்க்கினியன் கூறியிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அல்ல, 31 ஆண்டுகளுக்கு முன்புதான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதுதான் மறைமலை அடிகளாரின் கருத்துமாகும். அந்தக் கருத்தைத் தான் அரசு ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருகின்றது. இதைத்தான் மறைமலை அடிகளாரின் மகனும், மறைமலையடிகள் வரலாற்றினை நமக்குத் தொகுத்து வழங்கியவருமான மறை. திருநாவுக்கரசு, “மறைமலை அடிகளின் கருத்துப்படி திருவள்ளுவர் கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் முற்பட்டவர்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அது மாத்திரமல்ல; அம்மையார் குறிப்பிட்டுள்ள 1981ஆம் ஆண்டு மதுரையில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முன்னின்று நடத்திய ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டினையொட்டிய மலரினை என் வீட்டிலே உள்ள நூலகத்திலிருந்து தேடிப்பிடித்து சிறுவை நச்சினார்க்கினியன் எழுதிய கட்டுரை 407ஆம் பக்கத்தில் வந்ததை முழுவதும் படித்தேன்.

 

அதில் அம்மையார் குறிப்பிட்ட பகுதி 408ஆம் பக்கத்தில் இருந்தாலும், 407ஆம் பக்கத்திலே அவரே என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது தமிழகத்தின் நெடுநாளைய பழமொழி. சூரியன் சுற்றும் நிலையின் கணக்கினைக் கொண்டு, அந்நாளில் தை முதல் ஆனி ஈறாக ஒரு பகுதியும் ஆடி முதல் மார்கழி ஈறாக மற்றொரு பகுதியும் விளங்கின. ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலம் இருள் நிலை கொண்டது. தை முதல் ஆனி ஈறாகக் கொண்ட காலம் பகல் நிலை கொண்டது. ஆண்டின் இரவுக் காலமாகிய ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலத்தில் - அதாவது ஆடிக் காற்றிலும், அடுத்துள்ள ஐப்பசி மழையிலும், மார்கழிப் பனியிலும் குளிரிலும் இடர்ப்படும்பொழுது மக்கள் உள்ளத்தில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கை ஒலி பேரொலியாய்க் கேட்கிறது. இந்த இரவு நிலை மாறிப் பகல்நிலை பெற்றுப் பயன் தரும் தைப் பிறப்பு நாளைப் புத்தாண்டின் புனித நாளாய், பிறப்பு நாளாய்ப் பழந்தமிழர் கொண்டாடி வந்தனர். இன்றுங்கூட, தைப் பிறப்பைத் தனிப் பெருஞ்சிறப்பாகத் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆகவே நாம் தைத் திங்களையே ஆண்டின் முதல் திங்களாய்க் கணக்கெடுத்துச் செயற்படுத்துவோம்’’ - என்று அவரே எழுதியிருப்பதை அம்மை யாருக்குப் பேச்சு எழுதிக் கொடுத்தவர்கள் பார்க்க மறந்து விட்டார்களா? அல்லது பார்த்து விட்டு அம்மையார் மாட்டிக் கொண்டு விழிக்கட்டும் என்று மறைத்து விட்டார்களா?

 

திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லாத்  தமிழறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால் - தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திட கழக அரசு முடிவு செய்துள்ளது என்று 23-1-2008 அன்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. 1-2- 2008 அன்று சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதேநிலை தொடருமேயானால் தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை எப்படி கொடுக்கலாம்? அது கருணாநிதி செய்து கொண்ட சுய விளம்பரம், அரசியலுக்காகச் செய்து கொண்ட ஏற்பாடு என்று சொன்னாலும் சொல்லக் கூடும். ஏனென்றால் செம்மொழி என்றாலே, அம்மையாருக்கு  அவ்வளவு பாசம்! எட்டிக்காய் தின்றது போல! ஆட்சிக்கு வந்த முதல் நாள் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தையே தூக்கி வெளியிலே போட்டவர் ஜெயலலலிதா. இன்றளவும் அந்த நூலகத்திற்கு இடம் கொடுத்தபாடில்லை. சென்னைத் தீவுத் திடலில் 6.3.2006 அன்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சோனியாகாந்தி, ‘மத்தியிலே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்பட்டவுடன் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்திருக்கிறோம். அதன்மூலம் வரலாற்றுப் புகழ்மிக்க தமிழ்மொழிக்கு பாரம்பரியமும் கலாச்சாரப் பெருமையும் தரக்கூடிய மிகப்பெரிய தகுதியினை இந்திய அரசு தந்திருக்கிறது. தமிழ் மொழியைச் செம்மொழியாக்கிய அந்த வரலாற்றுச் சாதனையின் முழுப் பெருமையும் பங்கும் கருணாநிதியே சாரும். தமிழைச் செம்மொழியாக்குவதில் அவரது பங்கு மகத்தான ஒன்று என்பதை இந்த மேடையிலே  நான் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்’ - என்று பாராட்டினார். இப்படியெல்லாம் இவனுக்குப் பாராட்டுக் கிடைக்கலாமா என்ற வயிற்றெரிச்சல் காரணமாகத்தான் தேடித் தேடிப் பார்த்து கழக ஆட்சியில் நம்மால் செய்யப்பட்ட சாதனைகளையெல்லாம் மாற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டுள்ளார். அதிலே ஒன்றுதான் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு நாளை மாற்றுகின்ற செயலாகும்.

 

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா? தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா? என்ற கேள்வியை எழுப்பி, “நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையல்ல உனக்குப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே அறிவுக்கொவ்வாத அறுபதாண்டுக் கணக்கு தரணியாண்ட தமிழருக்குத் தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்று பாட்டிலே பாடி வைத்த பாவேந்தர் பாரதிதாசன், என்னுடைய சுய விளம்பரத்திற்காக அவர் பாடியதா இக்கவிதை! தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில், அ.தி.மு.க. அரசு திருவள்ளுவர் ஆண்டினை என்ன செய்யப் போகிறது? தி.மு.கழக ஆட்சியில்தான் 1969இல் திருவள்ளுவர் ஆண்டு ஈராயிரம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. 1972இல் கழக ஆட்சியில் நடைபெற்றபோதுதான் திருவள்ளுவர் ஆண்டு என்பதை ஏற்று, அரசு இனிமேல் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் மற்றும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங்களிலும் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. ஏன் இன்றளவும் கழக நாளிதழ் “முரசொலி”யின் முகப்பில் “திருவள்ளுவர் ஆண்டு 2043” என்றுதான் எழுதப்பட்டுள்ளது. எனவே திருவள்ளுவர் ஆண்டு தொடங்கும் தை முதல் நாள்தான் தமிழர்க்குப் புத்தாண்டு நாள். மலேசியா நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் தை முதல் நாளையே தங்களது புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார், “முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடி னார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தி வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனதிலும் புதுமை, புதிய பச்சரிசியைப் பொங்குவார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்” - என்று விளக்கியிருக்கிறார். முதலமைச்சர் ஜெயலலிதா தன் பேச்சுக்கு ஆதாரமாக விஞ்ஞான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு, சித்திரை மாதம் வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அதற்கு விடையளிப்பது போல, சௌதி மன்னர் பல்கலைக் கழக லேசர் துறை பேராசிரியர் விஞ்ஞானி டாக்டர் வ. மாசிலாமணி “தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்ற தலைப்பில் எழுதியுள்ள நீண்டதொரு கட்டுரையில், “ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகச் சூழலில், கிராமத்து வானியல் விஞ்ஞானிகளின் கணக்குப்படி தைத் திங்கள் வையத்திற்கு எல்லாம் புத்துணர்வு கிட்டும் மாதம் என்று சரியாகவே கணக்கிட்டிருக்கிறார்கள். அதனால்தான் மார்கழி கடைசி நாள் பழையனவும், சோம்பலும் கழியும் போகியாகவும் தை முதல் நாளை சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கலாகவும் கொண்டாடியிருக்கிறார்கள். ......

 

சூரியன் தென்கோடி சென்று நின்று திரும்பி நம்மையெல்லாம் நோக்கும் நாள்தான் உலக உயிர்கள் புத்துணர்ச்சி பெறும் நாள். அந்த நாள் ஜனவரி 14. அந்த நாளைக் கொண்டு துவங்குவது தான் வானியல் வழியான சரியான ஆண்டுத் துவக்கம். ஜனவரி 14க்கு அதாவது தை முதல் நாளுக்கு இத்துணை சிறப்பு இருக்கிறது. இந்தக் கட்டுரை படிக்கும் விஞ்ஞான ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள். “இண்டர்நெட்” போய் perhelion என்று தட்டுங்கள். கட்டாயம் புத்தாண்டுக்கு தைத் திங்களே பொருத்தம் என்பீர்கள்” -என்று விளக்கியிருக்கிறார். எனவே தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் துவக்கம் என்பதை மாற்றி சித்திரை என்று ஜெயலலிதா அறிவித்துள்ள செயல் வழக்கம் போலவே அவருடைய காழ்ப்புணர்ச்சி, கழக அரசு நடைமுறைப் படுத்திய செயல்களுக்கெல்லாம் ஊறு தேட முற்படுகின்ற சூழ்ச்சிகளிலே ஒன்றே தவிர வேறல்ல! தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்கள் முதல் நாள் என்று நான் சுய விளம்பரத்திற்காகச் செய்தேனா? அல்லது அதை மாற்றி சித்திரைத் திங்கள் என்று தற்போது அறிவிக்கும் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சுய விளம்பரத்திற்காகச் செய்கிறாரா என்பதை; பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தை என்று மில்லாமல் இப்போது புதிதாக தி.மு.க.வினரையும் முன்னாள் முதலமைச்சரையும் ஏசிப் பேசி அரசியலுக்காகப் பயன்படுத்தியுள்ள அநாகரிகச் செயல் குறித்து ஜெயலலிதாவின் கும்பல்தான் விளக்க வேண்டும்!

 

அன்புள்ள,

மு.க.

 

தமிழ் ஆர்வலர்களின் கருத்து: 

 

தமிழ் ஆண்டு (திருவள்ளுவராண்டு)

க.தில்லைக்குமரன் 

 

காலத்தின் அருமை

நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர்.

’நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும்

வாளது உணர்வார்ப் பெறின்’

என்கிற குறள் மூலமும், காலம் அறிதல் என்கிற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையை வள்ளுவம் உணர்த்துகிறது.

நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர்.

60 நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று 6 சிறு பொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று 6 பெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர். காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைப் பொதுவான ஆண்டுக்கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது, வருத்தம் தருகிறது.

 

இன்றைய நிலை

இன்னாளில் வழக்கில் உள்ள ‘பிரபவ முதல் அட்சய’ வரை உள்ள 60 ஆண்டுகளில் ஒன்று கூட தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை.  அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாகவும் இல்லை, பல்லாயிரமாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழினத்தின் காலத்தை வரையறுக்கவும் முடியவில்லை.

இந்த இழிநிலையைப் போக்கத் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்  தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் ஆராய்ந்தார்கள். இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

அவர்கள் எடுத்த முடிவுகள்

திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2011 + 31 = 2042)  என்று அந்நாளில் முடிவு செய்தனர். கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்; புதன் = அறிவன்; சனி = காரி.

தமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும்  நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேற்கண்ட விவரங்கள் மறைமலை நகரில் வாழ்ந்து வரும் திரு வ. வேம்பையன் அவர்களின் கட்டுரையிலிருந்து எடுத்தது. கடந்த 30 ஆண்டுகளாக இவர் திருவள்ளுவராண்டைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கடும் முயற்சி எடுத்துவருகிறார். 1967 இல் ஆட்சிக்கு வந்தபோதோ அல்லது 1971 இல் பெரும் வெற்றி பெற்றபோதோ முழு வீச்சில் அரசு சட்டத்துடன் நடைமுறைப்படுத்தி இருந்தால் கடந்த 40 ஆண்டுகளில் நாம் வெற்றி பெற்றிருப்போம். ஒன்று தமிழாண்டு திருவள்ளுவராண்டு யாராலும் மாற்ற முடியாத படி (எப்படி இன்று ‘தமிழ்நாடு’ என்ற பெயரை யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியாதோ) வழக்கத்தில் வந்து நிலைத்து இருக்கும்.

 

என் கருத்து

அறிஞர்களும் சான்றோர்களும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்தாலும் ஒரு சாரார் இதை மறுத்து வழக்கமான சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகப் பாவித்து வருகிறார்கள். இவர்கள் தமிழ் ஆண்டுகள் என்கிற பெயரில் வழங்கி வரும் வடமொழிப் பெயர்களையும் ஏற்றுக் கொண்டு வருவது வருத்தத்தைத் தருகிறது. தமிழருக்கென ஒரு தொடராண்டு கொண்டுவருவதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தமிழ் முதல்  திங்கள் ’தை’யா அல்லது ’சித்திரை’யா என்பதுதான் குழப்பம். தமிழ்ப் பேசும் அனைத்து தரப்பினருக்கும் வடமொழிப் பெயரை மாற்றுவதிலும் மாற்றுக் கருத்தேதுமிருக்க வாய்ப்பில்லை.

திருவள்ளுவரின் காலத்தை கி.மு.31 என்று கணித்ததில்தான் குழப்பம் வருகிறது. திருவள்ளுவர் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்ததற்கு வாய்ப்பில்லை என்று மேலை நாட்டுத் தமிழறிஞர்கள் நிலை நாட்டுகிறார்கள். அதில் முக்கியமானவர் செக்கோசுலேவியாவில் பிறந்த பெரும் தமிழறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் அவர்களாவார். இவர் மொழியின் அடிப்படையில் தமிழ் நூல்களின் காலத்தை ஆய்ந்து திருக்குறள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்கிற நூலில் நிறுவியுள்ளார். அவர் ஏன் அப்படி கூறுகிறார்.

 


தமிழ் புத்தாண்டு

 சுப.நற்குணன்,மலேசியா.

 

முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு

தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர்.


மாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்கள் முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.

கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.

உரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.


அதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.


யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.


அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.

 

தமிழர் கண்ட கால அளவீடு

பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை. திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள். பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.

 

சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது. சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி"எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

 

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும். இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர்.

 

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல்) 


காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும். பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது. இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.

 

சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன. தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:-

 

1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" நற்றிணை

 

2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" குறுந்தொகை

 

3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" புறநாநூறு

 

4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" ஐங்குறுநூறு

 

5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" கலித்தொகை

 

தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன. இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே. இப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

 

'பத்தன்று நூறன்று பன்னூ றன்று

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''

 

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.

 

தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும்.

சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு

தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது. அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார். அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

 

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார். 'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா?  என வேண்டி நின்றார்.

 

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார். அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.

 

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக, இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

 

மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள்:

தை முதல் தேதியே தமிழர் புத்தாண்டு. இப்பதிவின் இறுதியில் தமிழர்கள் தை முதல் நாளையே தமிழ் ஆண்டாகக் கொண்டாடியதற்கான கல்வெட்டுச் சான்றும் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி.ஐயா பழசெல்வராஜு அவர்கள்.

சித்திரை முதல் தேதியில் தமிழ் ஆண்டு துவங்காது. ஏன்?

தைத்திங்கள் முதல் நாள் தமிழர் புத்தாண்டு என்பதை அறிவியலில் அடிப்படையிலேயே நம் தமிழ் முன்னோர்கள் அமைத்தனர்.

ஆம், தைத் திங்கள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம்.

ஆதவனின் உதயம்!

ஆதவன் கிழக்கில் உதிப்பதாகப் பொதுவாக நாம் சொன்னாலும், ஆதவனின் உதயம், காலத்தைப் பொருத்து, சற்றே சரிந்து, தென்கிழக்காகவோ, அல்லது வடக்கிழக்காகவோ தான் அமையும்.

ஆதவன் தமிழ்மண்ணுக்கு மிக அருகில் உதிக்கும் நாள் தைத்திங்கள் முதல் நாள்! அதுவே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்!

தைத்திங்கள் முதல் நாள் மட்டுமே ஆதவன் தென்கிழக்குக் கோடியில் தமிழ் மண்ணுக்கும், தமிழர்களுக்கும் மிக அருகில் உதிக்கிறான்! இந்நாளையே தமிழ்ப் புத்தாண்டு என்று பண்டையத் தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்!

இந்நாளுக்கு அடுத்த நாள், ஆதவனின் வடகிழக்கு நோக்கிய பயணம் தொடங்குகின்றது! இதை ஆரியர்கள் சமற்கிருதத்தில் 'உத்தராயணம்' என்று குறிப்பார்கள்.

தை இரண்டாம் நாளிலிருந்து (உத்தராயணமாக) வடகிழக்கே பயணிக்கும் ஆதவன்,

சித்திரை முதல்நாள் நேர் கிழக்கே உதிக்கிறான்!

சித்திரை இரண்டாம் நாளிலிருந்து தொடர்ந்து (உத்தராயணமாக) வடகிழக்கே பயணிக்கும் ஆதவன்,

ஆடி முதல்நாள், வடகிழக்குப் பயணத்தின் எல்லை முடிவை அடைகின்றான்!

ஆடி இரண்டாம் நாளிலிருந்து ஆதவன் (தக்கிணாயணமாக) தென்கிழக்கே பயணிக்கும் ஆதவன்

ஐப்பசி முதல்நாள் மீண்டும் நேர் கிழக்கே உதிக்கிறான்!

ஐப்பசி இரண்டாம் நாளிலிருந்து தொடர்ந்து (தக்கிணாயணமாக) தென்கிழக்கே பயணிக்கும் ஆதவன்,

தை முதல் நாள், தன் தென்கிழக்குப் பயணத்தின் எல்லையான தமிழ்மண்ணுக்கு மிக அருகில் வந்து, தமிழ்ப் புத்தாண்டைத் தொடங்கி வைக்கிறான்!

நேர்-கிழக்கில் உதிப்பது ஆண்டுக்கு இருமுறை மட்டுமே!

சித்திரை 1 மற்றும் ஐப்பசி 1 என்று ஆண்டில் இருமுறை மட்டுமே ஆதவனின் உதயம் சரியான நேர்கிழக்கே அமையும்.

தை முதல் நாள் தொடங்கி, ஆதவன் வட(கிழக்கு) நோக்கி பயணிக்கும்போது (உத்தராயணம்) வரும் முதல் நேர்கிழக்குப் புள்ளிதான் சித்திரைத் திருநாள்.

வடகிழக்குப் பயணத்தின் கடைசிப் புள்ளி தான் ஆடி.

மீண்டும் தென்கிழக்கு நோக்கி வரும்வழியில், இரண்டாவதுமுறை வரும் நேர்கிழக்குப் புள்ளிதான் ஐப்பசி.

தொடர்ந்து பயணித்துத் தன் தமிழ்ச் சொந்தங்களுக்கு மிக அருகில் வரும்நாள் தை முதல் நாள். தமிழ்ப் புத்தாண்டு நாள். ஒரு தமிழ் ஆண்டின் கதை இதுதான்.

சூரியன் சரியாக முதன் முறை நேர்கிழக்கு வரும் நாள் சித்திரை1 (In Astronomy science it is called Equinox)

அப்புறம் வரும் extreme வடகிழக்கு point தான் #ஆடி1 .... (solstice)

மறுபடியும் நேர்கிழக்குக்கு வரும் #ஐப்பசி1 (equinox)

Going to extreme தென்கிழக்கு is #தை1 (solistice)

இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் தமிழ் முன்னோர்கள், தமிழ் மண்ணுக்கு மிக அருகில் உள்ள தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்றது தூய அறிவியல்.

தை (winter solstice) - தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் பொங்கல்.சித்திரை (equinox) - ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு, ஆடிப்பெருக்கு, ஐப்பசி (equinox)-

நமது அடுத்த தமிழ்த் தலைமுறைக்கு நமது மரபுகளை நிறுவி, ஆரிய வெற்றுச் சடங்குகளைத் துரத்தி, தமிழனின் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்.

———————————

இப்பதிவுக்குப் பின்னூட்டமாக, ஐயா பழசெல்வராஜூ அவர்கள், தமிழர்கள் புத்தாண்டு தைத்திங்கள் ஒன்று என்பதற்கான ஒரு கல்வெட்டு ஆதாரத்தைப் பின்னூட்டமாகத் தந்திருந்தார்கள். அதை அப்படியே மீள்பதிவு செய்கிறேன்.

பழசெல்வராஜூ ஐயாவுக்கு மிக்க நன்றி! சரியான நேரத்தில், சரியான ஆவணத்தைத் தந்துள்ளார்கள்.

“தமிழர்கள் புத்தாண்டு தை முதல் தேதியா அல்லது சித்திரை முதல் தேதியா?” என்ற கேள்விக்கு, ‘ரத்தினச் சுருக்கமான' பதில் தரவேண்டும் என்று “தை முதல் தேதி” என்று பதில் தந்த உடனேயே திரு. வெங்கடேஷ் ராஜரத்தினம் என்பவர், ‘ஆதாரம்?’ என்று சுவற்றிலடித்த பந்துபோல் வேகமாகப் பதில் வினா எழுப்பினார்.

உடனே, இதைப்போன்றதொரு கேள்விக்குத் தந்த பதிலை உடனே மீள்பதிவு செய்தேன்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை! தமிழ் ஆண்டுப் பெயர்கள் சமற்கிருதத்தில் இருக்க வாய்ப்பே இல்லை!

சித்திரை மாதம் துவங்குவதாகக் கூறப்படும் தமிழ் ஆண்டு 60 பெயர்களும் ஆரியப் பெயர்கள் என்பதால் அவை சத்தியமாகத் தமிழ் ஆண்டுகளின் பெயர்களாக இருக்க சாத்தியம் இல்லை.

 

தமிழர் புத்தாண்டுக் குழப்பம்!!! – சில விளக்கங்கள்!

https://www.facebook.com/TamilSaivites/photos/a.209238915815725/426191394120475/?type=3

 

தமிழ்ப் புத்தாண்டு- விக்கிப்பீடியா

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81

 

நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு – பாவேந்தர் பாரதிதாசன்- வி.இ. குகநாதன்

 

புத்தாண்டு பந்தாட்டம்

https://thamizhmani2012.blogspot.com/2013/01/blog-post_8707.html
 

தமிழ் புத்தாண்டு - பாரதிதாசன் கருத்தும் , மாற்று கருத்தும்

http://www.pichaikaaran.com/2012/04/blog-post_13.html
 
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து புதிய சட்டமியற்ற வேண்டும் - ராமதாஸ்

https://www.dailythanthi.com/News/State/2021/12/01170513/The-first-day-of-Thai-should-be-declared-as-the-Tamil.vpf

 

இருவேறு கருத்துகளை தொகுத்து சிந்திக்கவும், உண்மை காணவும் , ஒத்த கருத்துடன் ஒரு திசையில் பயணிக்கவும், விரைவில் குழப்பம் நீங்கி தமிழர்களுக்கு ஒரு புத்தாண்டு பயன்பாட்டில் தொடரவும் வேண்டும் என்ற நோக்கில் தொகுக்கப்பட்டதே இந்த கட்டுரை.

-இலக்கியன் 

by Swathi   on 15 Apr 2012  6 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
21-Apr-2020 17:31:58 Mohan said : Report Abuse
திருக்குறள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்கிற நூலில் நிறுவியுள்ளார். நல்ல சொல்லுவான், அதையும் நீங்க நம்புங்க. அப்பறம், திருவள்ளுவர் கிருத்துவனு சொல்லுவான் அதையும் நம்ம்புக.
 
15-Apr-2020 09:41:18 சாமியப்பா said : Report Abuse
சங்க இலக்கிய மேற்கோள்கள் அனைத்தும் தைமாத குளிர்ர்ச்சி பொருந்திய குளத்தைக் குறிப்பன, இதில் எவ்விடத்தில் தைப்புத்தாண்டு ர்எனக் குறிப்பிடப்படுகிறது. பாரதிதாசன் சொல்லிட்டாரு. அவர் உயர் தமிழைப்பற்றிப் பாடியவர் ஆராய்ச்சியாளர் அன்று.
 
11-Dec-2019 08:13:29 அறிவுக்கரசி said : Report Abuse
மேலே உள்ள கருத்துக்கள் எதையுமே நான் படிக்கவில்லை. என் கருத்து ,தை மாதமே தமிழ் முதல்மாதம்.ஏன் என்றால் தமிழனின் தொழில் விவசாயம், அதனால் தன் தோட்டத்தில் விளைந்த அரிசி, காய்கள்,பழங்கள், பூக்கள், அனைத்தையும் புத்தாண்டில் பூமாதேவி என்று சொல்லபடும் இயற்க்கைக்கு படைக்கிறார்கள். வரும் ஆண்டில் இதுபோன்ற விளைச்சல் இருக்கவேண்டும் என்று .தமிழர்களின் பண்டிகைகள் அனைத்தும் இயற்கை வழிபாடாகத்தான் இருக்கும். ஏன் சித்திரை முதல்நாள் எந்த விசேசமும் எங்களுக்கு தாத்தா பாட்டி சொல்லி குடுக்கவில்லை ,முதல்மாதம் என்றால் ஏதாவது சொல்லியிருப்பார்களே?
 
05-Jun-2019 17:25:02 சோதிடப்புலவர் said : Report Abuse
பண்டைத்தமிழர் வியாழ வருடங்கள் என்னும் 60 வருடச் சுழற்சி முறையைப் பின்பற்றி வந்தனர் என்றும் திடீரென எங்கிருந்தோ வந்த ஆரியம் அழித்து ஒழித்ததாகவும் கட்டுரையாசிரியர் குழப்புகிறார். அவருக்குப் புத்தி நெத்திவரை வந்து பொட்டுன்னு கீழே உதிர்ந்து விட்டது. ஆரியரும் நாம் தான்.சமஸ்கிருதம் நம்முடைத்தே. தமிழாண்டுத் தொடக்கம் சித்திரையே. எல்லாத் தமிழ் மாதங்களுக்கும் தனித்துவம் உண்டு. தெய்வீகத்தைக் கழித்து விட்டு காலக் கணக்கை ஆய்பவர்க்குக் குழப்பமே மிஞ்சும்!
 
16-Apr-2019 20:08:33 சந்திர மௌலி said : Report Abuse
ந்ல்ல கட்டுரை..ஆனால் இரு வேறு கருத்து தொடக்கம் எங்கே என்று ஆராய்ந்தால் உண்மை புலப்படும் ...வடுகர் மற்றும் பிற மொழி பேசுவோர் தமிழை எப்பொழுதும் உயர்த்தி பிடிப்பதில்லை..பதிலாக குளப்பி விடுவது அவர்கள் இயல்பு..படிக்காசு புலவர் இதை நன்றாக எடுத்துரைபார் ....கலைஞர் எப்பொழுதுமே சுயநலம் கொண்டவர் ....ஜெயலலிதா அவர்களோ கலைஞர் எது செய்தாலும் எதிர்பார்...இவர்கள் இருவரும் நமது முதலமைச்சர்களாய் இருந்து இறந்தது நமது துரதிஷ்டம்...தமிழ் அறிந்தவர்களுக்கு என் கருத்து விளங்கும்...நன்றி
 
15-Apr-2012 18:59:22 வேல் said : Report Abuse
நல்ல கட்டுரை. "நலிந்தோருக்கு நாளும் கிழமையும் இல்லை" என்ற சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.