லண்டன், ஆக.6:
ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் மேரி கோம். இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.திங்கள்கிழமை நடைபெற்ற மகளிர் 51 கிலோ ஃபிளை வெயிட் பிரிவு காலிறுதிச் சுற்றில் மேரி கோம் 15-6 என்ற புள்ளிகள் கணக்கில் டுனீசியாவின் மரோவோ ரஹாலியை தோற்கடித்தார். ஒலிம்பிக்கில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ள மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றுள்ள ஒரே இந்திய வீராங்கனையான மேரி கோம், முதல் சுற்றிலேயே 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றார். இரண்டாவது சுற்றில் தொடர்ந்து அபாரமாக ஆடிய மேரி கோம் அந்த சுற்றிலும் 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.இதை தொடர்ந்து அபாரமாக விளையாடி வெற்றியை பெற்றார். குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதி வரை முன்னேறுபவர்களுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படும். அதன்படி இப்போது மேரி கோமுக்கும் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை மேரி கோம் பெற்றுள்ளார்.
|