பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங்: இலங்கைத் தமிழர்களின் நிலை மீது மத்திய அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர் பகுதியில் நிரந்தர அமைதி ஏற்பட அரசியல் தீர்வுதான் ஒரே வழி. இது தொடர்பாக அந்த நாட்டில் உள்ள தமிழர் தலைவர்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களுக்கு சமஉரிமை, சுயமதிப்பு, மரியாதை கிடைப்பதை உறுதிப்படுத்த இலங்கை அரசை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தும், என்று கூறினார்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ள தீர்மானம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து மேற்சொன்ன மன்மோகன் சிங்கின் உரையில் எதுவுமே இல்லாத நிலையில், “ இலங்கைத் தமிழர் நிலைமை தொடர்பான உங்கள் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை; அரசியல் தீர்வுக்காகக் கவலை கொள்ளும் மத்திய அரசு, முதலில் இலங்கை போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்காகத்தான் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆனால், இந்த விஷயத்தில் இந்தியா இதுவரை எந்த நிலையும் எடுக்காதது ஏன்? இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்; இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஈடுபாட்டுடன் அக்கறை காட்டவில்லை,” என்று மாநிலங்களவை திமுக தலைவர் திருச்சி சிவா, மாநிலங்களவை அதிமுக தலைவர் டாக்டர் வா. மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா ஆகியோர் கூறினர்.
ஆனால், “இவ்வாறு குறுக்கிடுவது அவை விதிகளுக்கு எதிரானது'' என்றார் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி..
ஆனாலும், “பிரதமர் பதில் அளிக்கக் கடமைப்பட்டுள்ளார்; அவர் இந்தியாவின் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்'' என்று மூவரும் குரல் கொடுத்தனர். மாநிலங்களவையில் சில நிமிடங்கள் இதனால் வழக்கமான அமளி நிலவியது.
|